வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

January 18, 2012

தமிழ்த்தேசியவாதம் : பன்மைத்துவம் மற்றும் உள்ளார்ந்த - வெளியகற்றும் தன்மை



முன்னைய பதிவுகள்
* தமிழ்த்தேசிய உணர்வும் தமிழ்த்தேசியமும்
* தமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறையும் தகமை விருத்தியும் பிரயோக வடிவமும்

'தமிழ்த்தேசிய உணர்வும் தமிழ்த்தேசியமும்' , 'தமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறையும் தகமை விருத்தியும் பிரயோக வடிவமும்' ஆகிய இரண்டு பதிவுகள் தொடர்பாகவும் சில நண்பர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள். பெருமளவான விடயங்களை ஒரே பதிவில் சுருக்க முற்படுகின்றேன் என்பதைக் குறையாகத் தெரிவித்திருந்தார்கள். சுட்ட முற்படும் பல்வேறு விடயங்களை விரிவாக்கித் தனித்தனிப் பதிவுகளாக இடலாம் என்பது அவர்களது கருத்தாயிருந்தது. கடந்த இரண்டு பதிவுகளும் வெறும் சட்டகங்களே என்பதை கட்டுரையின் இறுதிப்பகுதியில் தெரிவித்திருந்தேன். அவற்றை விரிவாக்கிச் செல்ல வேண்டியது பல்வேறு துறை சார்ந்தவர்களின் பணியாகவே இருக்க முடியும். நான் கவனப்படுத்த முற்பட்ட விடயம் தமிழ்த்தேசியவாதம் என்பது தனியே அரசியல் கோரிக்கை மட்டுமல்ல என்பது மட்டுமல்லாது, அக்கோரிக்கை சார்ந்து செயற்படுபவர்கள் அதன் ஆழத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதுவுமே. தேசியவாதக் கோரிக்கையின் உள்ளடகத்தை அல்லது அது உள்ளடங்கும் பகுதிகளை - அதன் சட்டகத்தின் எல்லைகளை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமானது. மேலும், அக்கோரிக்கை கடந்த காலங்களில் ஏற்படுத்தி பாதிப்புக்கள் எவை? அக்கோரிக்கையின் சில நடைமுறைகளால் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய தரப்புக்கள் எவை? என்பது போன்ற விடயங்களை மிகத்தெளிவாக வரையறை செய்யும் போதே அதன் ஆரோக்கியமான திசைவழியைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும். இவ்வகையான தீர்மானங்களுக்கு வராமல், 70 களில் அல்லது 80 களில் இருந்திருக்கக்கூடிய விடயத்தைத் தூசு தட்டி எடுத்து, காவுவது நிச்சயமாகக் சரியான அறுவடையைத் தரப்போவதில்லை. அதுமாத்திரமன்றி, குறித்த அரசியல் கோரிக்கைக்குள்ள உண்மையான தேவையையும் காரணங்களையும் படிப்படியாக இல்லாததாக்கும் சூழலை உண்டு பண்ணும் என்பதை உணர்ந்து கொள்ளாவிடின், நாம் வரலாற்றில் இருந்து எதையும் படிக்கைவில்லை என்றே கருத வேண்டும்.

Applicable form and Diversity

இக்காலத்தைய தமிழ்த்தேசியவாதத்தின் பிரயோக வடிவம் 'ஒரே நேரத்தில் Deconstructive அணுகுமுறையும் Constructive அணுகுமுறையும் தமது பிரயோக நடைமுறையாகக் கொண்டிருக்க வேண்டிய சந்தர்ப்பத்தை 'உலக சிந்தனை போக்கு' உருவாக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த முரணியக்கமே பின்- காலனித்துவ தேசங்களது - தற்காலத் தேசியவாதத்தின் ஆரோக்கியமான பண்பாக இருக்க முடியும்.' என்றவாறு கடந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வகையான விடயங்களில் Deconstructive அணுகுமுறையும் எவ்வகையான விடயங்களில் Constructive அணுகுமுறையும் பின்பற்றப்பட வேண்டும் என்பது தொடர்பாக மேலும் மேலும் சிந்திக்க வேண்டியுள்ளது. இப்புரிதலுக்கு வர முன்னதாக 'அரசு' வடிவத்தின் தோற்றம், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான உலக அதிகார ஒழுங்கின் வரலாறு, பின்-காலனித்துவ காலப்பகுதியில் இனத்துவ முரண்பாடுகள் - தீர்வுகள் போன்ற விடயங்களில் பரந்தளவான தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது. ஏற்கனவே, முதல் கட்டுரையில் குறிப்பிட்டது போன்று, அரசு சீர்திருத்தம் (state reformation) என்ற எல்லைக்குள் இயங்கி வருபவர்கள் 'கட்டவிழ்ப்பு' (Deconstruction) என்பதை எவ்வாறு அணுக முற்படுகின்றார்கள் என்ற தெளிவை ஏற்படுத்திக் கொள்ளும் போதே தேசிய அரசுருவாக்கம் (nation state formation) என்ற வெளியில் இயங்க முற்படுபவர்கள் , பின் - நவீன கால சிந்தனைப் போக்குகளை உள்வாங்கி - தமது பிரயோக வடிவத்தை மெருகூட்டலாம் என்ற தெளிவிற்கு வர முடியும். தமிழ்த்தேசியவாதத்தைக் கட்டவிழ்ப்பதென்பது (Deconstruction) அதனை - உள்ளக அடையாளங்கள் சார்ந்து சுக்குநூறாக்கி பிளவுபடுத்துவதல்ல. மாறாக, கட்டவிழ்ப்பின் மூலம் அதனை ஜனநாயகப்படுத்துவது அல்லது மீளொழுங்கிற்கான புதிய நிபந்தனைகளை உருவாக்கிக் கொள்வது என்றும் பொருள்படும். இச்செயற்பாடு, தமிழ்த்தேசியவாத்தை கீழிருந்து மேலாக (Bottom - up) அதன் உண்மையான தேவை சார்ந்து கட்டியெழுப்பும் என்று நிச்சயமாகவே கூற முடியும். கீழிருந்து மேலாக தேசியவாத்தின் அடிப்படையான அம்சங்களில் இருந்து அதைக் கட்டியெழுப்பும் போது - நிச்சயமாக அரசியல் கோரிக்கைக்குரிய தனியான செயற்பாட்டியக்கம் தேவைப்படப்போவதில்லை. மாறாக, அதன் அங்கமான ஒவ்வொருவருமே அரசியல் கோரிக்கையின்பாலான தீவிரத்துடனும் தமது கருத்தியலுக்கான தெளிவுடனும் இருப்பார்கள். தவறான அரசியல் பிரதிநித்துவ சக்திகள் ஊடுருவ முடியாத ஆரோக்கியமான வெளிகளைக் கட்டமைக்கும். தமிழ்த்தேசியவாதத்தைக் கட்டவிழ்ப்பதை தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களே முன்வைக்க வேண்டும். அவ்வெளியை தாம் 'வெளியார்' (Outsider) என்று கருதுபவர்களோ அல்லது தமிழ்த்தேசியவாத எதிர்ச்சக்திகள் என்று கருதுபவர்களோ கையகப்படுத்துவதை அனுமதிக்கும் போது, அடையாள அரசியலை அதன் நன்மையான பக்கத்திற்கு மாறாக தீமையான பக்கத்தில் எதிர்கொள்ள நேரிடும் என்ற தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது. கட்டவிழ்ப்பு என்பது ஒருவித சமூகம் சார்ந்த Re - engineering செயற்பாடென்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. தமிழில் கட்டவிழ்ப்பு சார்ந்து ஏற்படுத்தப்பட்டுள்ள எதிர்மறையான பிம்பத்தை மாற்றியமைப்பதனூடாகவே இவ்விடயம் சார்ந்து சாதகமான புரிதலை ஏற்படுத்த முடியும்.

இலங்கையில், தமிழ்த்தேசியம் என்ற சட்டகத்திற்குள் வரக்கூடியவர்கள் அல்லது குறித்த சட்டகத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் சமூகங்கள் எவை என்பது தொடர்பானதுமான புரிதலை மேம்படுத்த வேண்டியுள்ளது. முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்கள் சார்ந்த புரிதலை கடந்த 30 ஆண்டுகளில் வளர்த்துள்ளோம்? இன்று தமிழ்த்தேசியக் கோரிக்கையை முன்னெடுப்பவர்கள் மேற்படி சமூகங்கள் சார்ந்து எவ்வகையான நிலைப்பாடுகளில் உள்ளார்கள்? அதற்கு எவ்வகையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டிருக்கின்றது? போன்ற விடயங்கள் தொடர்பாக எவ்விதமான தயக்கமுமற்று உரையாட வேண்டியுள்ளது. எமக்கருகில் உள்ள தமிழ்நாட்டிலும் உலகச்சிந்தனைப் போக்கிலும் சமகாலத்தில் உரையாடப்படும் விடயங்களை வெறுமனே எமது அரசியல் கோரிக்கையை பலவீனமாக்கும் செயற்பாடுகள் என்று நிராகரித்துவிட்டு நகருபவர்கள் தமிழ்த்தேசியம் தொடர்பான அக்கறையற்றவர்கள் என்றே கருத வேண்டும்.

Inclusive Nationalism, Exclusive Nationalism and Third Space

கடந்த பதிவுகளில் குறிப்பிட்டது போன்று தேசியவாதம் இயங்கும் முறையை நாம் தெளிவாக இனங்கண்டுகொள்ள வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேசியவாதம் முற்போக்கான வடிவில் இயங்குவதில்லை. சமூகத்தின் அடையாள உறுதியாக்கம் நிகழ்ந்த போது - அதன் வெளிப்பாட்டு வடிவமாகவே இக்கோரிக்கை முதன்மை பெற்றிருக்க முடியும். வரலாற்றுப் போக்கில், தமிழ்த்தேசியம் என்ற அடையாள உறுதியாக்கம் ஒற்றை பரிமாணமானதல்ல. பல்வேறுபட்ட வாழ்முறைகளினது வித்தியாசங்களது கூட்டிணைவினால் உருவாகிய அடையாள உறுதியாக்கம். தேவைகள் - அரசியல் கோரிக்கைகள் போன்றவற்றால் உருவாகியிருக்கக்கூடியது. தொடர்ச்சியான இயக்கத்தில் ஒற்றை பரிமாணத்தை முதன்மைப்படுத்த எத்தனிக்கும். உலகில் உள்ள அனைத்துத் தேசியவாதங்களினது தவிர்க்க முடியாத பிற்போக்காமன பாத்திரமே இதுதான். ஒருகட்டத்தில் ஒற்றைப் பரிமாணத்தை அடையும் தேசியவாதம் - அதே மூர்க்கத்தோடு மேலிருந்து கீழாக இயங்கத் தொடங்கும். இதன் போது ஒவ்வாமைகளுடனும் தனித்துவங்களுடமிருக்கின்ற சமூகங்களை தனது பரப்பிற்குள் அபகரித்துக் கொள்வது மாத்திரமன்றி - தனது கோரிக்கைகளையும் ஒற்றை அடையாளத்தையும் வித்தியாசங்களை மறுத்துத் திணிக்கத் தொடங்கும் தன்மை கொண்டது. அதற்கான கருத்தியல் ரீதியான நியாயத்தை, பிரயோகிப்பவர்களுக்குக் கொடுக்கக்கூடியது. அதை இயக்க முற்படுபவர்களது கைகளைத் தாண்டி தானாக - மூர்க்கமாக இயங்கும் வல்லமை தேசியவாதத்திடம் உண்டு. தேசியவாதத்தைக் கையாளுபவர்கள் இப்புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமானது. இவ்வகையான புரிதலற்றவர்கள் எக்காலத்திலும் தேசியவாத்தைக் கையாள முற்படக்கூடாது.

இன்றுள்ள சூழலில், தமிழ்த்தேசியவாத உணர்வையும் அதன் வெளிப்பாட்டையும் மறுக்க முடியாத நிலமை உள்ளது. இன்றுள்ள தமிழ்த்தேசியவாதக்கூறுகளின் கணிசமான பகுதி, சிங்கள பெருந்தேசியவாதத்தின் எதிர்வினையென்பதை மறுக்க முடியாது. ஆக, தேசியவாத்தை 'உள்வாங்கும்' தன்மை கொண்டதாக எவ்வாறு கட்டியமைக்க முடியும் என்ற பகுதிக்குள் புக வேண்டியுள்ளது. பன்மைத்துவக்கூறுகள் நிரம்பியதாக - போதுமானளவு ஜனநாயக வெளிகள் நிரம்பியதாக எவ்வாறு வளர்த்துச் செல்ல முடியும் என்ற வகையிலும் சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது. தேசியவாதம், தன்னைச் சிதைத்துக் கொண்டும் நகர வேண்டியதன் அவசியமும், தேசியவாத்தின் முதன்மைக் குணாம்சமே வெளியொதுக்கல் செய்வதுதான் என்பதும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டாயிற்று.

ஒருவரது அரசியல் நிலைப்பாடுகளை தெளிவாக வரையறை செய்து அணுக முடியாது. அரசியல் நிலைப்பாடுகள் நிறமாலை (spectrum) போன்றது. வெவ்வேறு கற்றைகளுக்குள் அலைந்து திரியும் தன்மை கொண்டது. தீவிர தமிழ்த்தேசிய நிலைப்பாட்டு வரையறைக்குள் தம்மை நிலைநிறுத்திக் கொள்பவர்கள் எதிர் தீவிர தமிழ்த்தேசிய எதிர்ப்பு வரையறைக்குள் தம்மை நிலைநிறுத்திக் கொள்பவர்கள் என்ற இருவகை அரசியல் நிலைகளை வைத்துக் கொண்டுதான் சகலதையும் பார்க்க வேண்டிய துரதிஸ்டவசமான நிலையில் உள்ளோம். எவ்வாறிருப்பினும், அரசியல் அக்கறை குறைந்த - அரசியல் அக்கறை தொடர்பில் தமது நிலைப்பாடுகளை குறித்த எல்லைக்குட்படுத்திக் கொண்ட 'மூன்றாவது தரப்பு' எப்போதும் பெருமளவான எண்ணிக்கையாக இருந்து கொண்டேயிருக்கும். அதாவது, மேற்கூறிய இரண்டு தரப்புக்களையும் இரண்டு எதிரெதிர் புள்ளிகளில் நிலைநிறுத்துவோமேயாக இருந்தால் இடையில் உள்ள ஏராளமான புள்ளிகளில் அலைவுறுவோரின் எண்ணிக்கையே அதிகமானது. கறுப்பு - வெள்ளை பிரதேசங்களில் இயங்கும் - எவருடைய வெற்றியும் கறுப்பும் வெள்ளையும் அல்லாத சாம்பல் வெளியில் உள்ளவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது, தனது கருத்தியல் வெற்றி பெற வேண்டும் என்று உண்மையாகவே நினைக்கும் தரப்பு - சாம்பல் வெளிகளை வெற்றி கொள்வதைப் பற்றிய அக்கறையுடன் செயற்படும். அதற்கு மாறாக, வெளியொதுக்கலுடன் கூடிய மனதுடன் இயங்கும் தரப்பிற்குத் தனது கருத்தியல் சார்ந்த அக்கறையை விட - வெறுமனே தனது இருப்பு சார்ந்த அக்கறையே அதிகமானதாக இருக்கும்.

இன்று, தம்மை தமிழ்த்தேசியத்தின் காவலர்களாகவும் பிரதிநிதிகளாகவும் கருதிக்கொள்ளகூடிய பலர் மூன்றாவது வெளியை வெல்வதை விடுத்து, அவ்வெளியை முற்றாக தமிழ்த்தேசியத்தில் சட்டகத்தில் இருந்து அந்நியப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது. இதனாலேயே, தேசியவாத்தின் அடிப்படைக் குணாம்சத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டே அதனை கையிலெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். உண்மையான செயற்பாட்டாளனுக்கே, பல தரப்புக்களையும் வெற்றி கொள்ள வேண்டியதன் அவசியமும் - அதன் தேவையும் புரியக்கூடியதாக இருக்கும். தமிழ்மக்கள் சார்ந்து அக்கறை உள்ளவர்கள் நிச்சயமாக பல்வேறு தரப்புக்களையும் வெற்றி கொள்வதைப் பற்றி யோசிக்கத் தொடங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் போன்று ஈழத்தமிழர்களும் - அதே பாணியில் 'வெளியொதுக்கலுடன்' கூடிய அரசியலை முன்னிறுத்தி வருவது ஆபத்தானது. முற்றுமுழுதாக தமிழ்நாட்டு அரசியலில் இருந்து வேறுபட்ட - ரத்தமும் சதையுமான அரசியல் நம்முடையது. 'வெளியொதுக்கல்' அணுகுமுறையால் நாம் எதனையும் அடைய முடியாது. எம்மிடம் இருக்க வேண்டியது மற்றைய தரப்புக்களை வெல்லும் நோக்குடன் கூடிய அணுகுமுறையே. கறாரான - அல்லது தெளிவான வரையறைகளுடன் கூடிய உரையாடல்கள் நிகழ்வது பிரச்சனையல்ல. ஆனால், அவை மற்றைய தரப்புக்களை களத்தில் இருந்து அகற்றுவதில் போய் முடிவடையக்கூடாது.

கடந்த காலங்களில் தேசியவாதம் தொடர்பான ஏராளம் உரையாடல்கள் தமிழிலேயே நடைபெற்றிருந்தது. தேசியவாதத்தின் சரி / பிழை தொடர்பாக போதுமான உரையாடல்கள் நடைபெற்றுள்ளதாகவே கருத வேண்டும். ஆயினும், அவற்றில் பெரும்பாலானவை ஒரு கருத்தியலின் உருவாக்கம் தொடர்பாகவும் நிபந்தனைகள் தொடர்பாகக விசேட கவனத்தைச் செலுத்தவில்லை. ஒரு கருத்தியலை அக்கருத்தியலின் தோற்றம் - பின்னணி - சூழல் போன்றவற்றுடன் இணைத்து பார்க்கப்பட வேண்டியது மிக அவசியமான நிபந்தனையாகும். உதாரணமாக மேற்கத்தைய இடதுசாரிகளின் தேசியவாதம் தொடர்பான பார்வைகள், பின்னவீன நிபந்தனைகளுடன் கூடிய தேசியவாதம் தொடர்பான பார்வைகள், பின் காலனித்துவ கால பார்வைகள் என்று பலவிதமாக வகைப்படுத்த முடியும். ஈழத்தமிழ் தேசியவாதத்தின் நிபந்தனைகளை சரியாகப் பட்டியலிடும் போது - அதன் பிரயோக வடிவம் சார்ந்து சரியான வரையறைகளுக்கு வர முடியும். வெறுமனே அமெரிக்கா, சீனா, இந்தியா என்ற அரசியல் அதிகார ஒழுங்குநிபந்தனைகளை முன்வைத்து மாத்திரம் பேசுவதில் நிறைய போதாமைகள் உண்டு. அடையாள அரசியலின் எழுச்சி, பின்னவீன - பின்காலனித்துவ கருத்தியல் தொடர்ச்சி, இறையாண்மை நோக்கிய பயணம், தேசியவாதத்தின் சக பயணிகள் போன்ற பல்வேறு நிபந்தனைகளையும் இணைத்தே இன்றைய ஈழத்தமிழ்த்தேசியவாத்தின் பிரயோக வடிவத்தை மீள்வரையறை செய்ய முடியும்.

January 12, 2012

தமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறையும் தகமை விருத்தியும் பிரயோக வடிவமும்


முன்னைய பதிவு : தமிழ்த்தேசிய உணர்வும் தமிழ்த்தேசியமும்

இலங்கை அரசியல் கணித - சமன்பாட்டின் அடிப்படையிலும் இன்றைய அரசியல் சூழ்நிலையிலும் தமிழ்மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய உணர்வு மழுங்கடிக்கப்படப்போவதில்லை. உணர்வுத்தளத்தில் அது தொடர்ச்சியாகக் கூர்மைப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கும். "தமிழ்த்தேசிய உணர்வும் தமிழ்த்தேசியமும்" என்ற பதிவில் கூறியுள்ளது போன்று அவ்வுணர்வுக்கான காரணிகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டேயிருக்கும் என்பது மாத்திரமல்லாது அக்காரணிகள் மேலும் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியங்களே அதிகமுள்ளன. அதுமாத்திரமன்றி மெய்நிகர் வெளியில் புலம்பெயர் தமிழ்மக்களுடனும் தமிழ்நாட்டு மக்களுடனுமான ஊடாட்டம் இவ்வுணர்வைத் தொடர்ச்சியாகத் தக்க வைத்தபடியேயிருக்கும். இவ்விடத்தில், இத்தளத்தில் செயற்படுபவர்களுக்கு இருவகையான தெரிவுகள் உண்டு. முதலாவது, தமிழ்த்தேசியத்தை நிராகரிப்பவர்கள் - தீவிர தமிழ்த்தேசிய உணர்விற்கான காரணிகளையும் தேவைகளையும் கண்டடைந்து அவற்றை நிவர்த்தி செய்யும் செயற்பாடுகளை முன்னெடுப்பது. இரண்டாவது தமிழ்த்தேசிய உணர்வையும் அவற்றின் நியாயப்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு, அதன் முற்போக்கான பாத்திரத்தை உறுதி செய்வது. இதில், முதலாவது செயற்பாட்டுவெளி பெரும்பாலும் இலங்கை அரசு கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாகவே சாத்தியபடுத்தக்கூடியது. முதலாவதன் அடிப்படையில் தீர்வை விரும்புபவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலும் சிங்கள அதிகாரக் கட்டமைப்பிற்குள்ளும்தான் பெருமளவில் தொழிற்பட வேண்டியுள்ளது. இரண்டாவது தளத்தில் செயற்பட விரும்புபவர்களுக்கான செயற்பாட்டுவெளி பெரும்பாலும் தமிழ்பேசும் சமூகங்கள் மத்தியிலானது. தவிர்க்க முடியாமல் அவ்வுணர்வை ஏற்றுக் கொண்டே செயற்பட முடியும்.

இக்கட்டுரையில் கவனப்படுத்தவிரும்பும் பகுதி இரண்டாவது செயற்பாட்டுவெளியுடன் தொடர்புள்ளது. தமிழ்த்தேசிய உணர்வை அதன் நியாயப்பாடுகளுடன் ஏற்றுக்கொண்டு, அவ்வுணர்வை முற்போக்கான திசைவழி நகர்த்துவதன் அவசியம் தொடர்பாக நீண்ட உரையாடல்களை நிகழ்த்த வேண்டியுள்ளது. காயங்களும் தேவைகளும் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்படும் போது அவை வன்மமாக வெளிப்படும். அவற்றின் வெளிப்பாடு வன்முறையாகவும் அடிப்படைவாதத் தன்மை கொண்டதாகவுமே அமையும். இன்றுள்ள தமிழ்த்தேசிய உணர்வை - நிர்மானுசன் குறிப்பிடும் நிலைத்து நிற்றல் (Survival), சுதந்திரம் (Freedom), நல்வாழ்வு (Well being), அடையாளம் (Identity) ஆகிய அம்சங்கள் உள்ளடங்கிய அடைவாக மாற்றுவது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழ்த்தேசியம் என்ற பொதுமைப்படுத்திய கருத்தியலின் ஊடாக அணுகுவதின் போதாமைகளை உணர்ந்து கொண்டும் வெவ்வேறு தளங்களில் அணுக வேண்டியதன் தேவையை உணர்ந்து கொண்டும் செயற்பட வேண்டியது அவசியமானது.

தமிழ்த்தேசிய உணர்வினது முற்போக்கான திசைவழியைத் தீர்மானிப்பதற்கு முன்னால், தமிழ் பேசும் சமூகங்களது இன்றைய நிலையின் குறுக்குவெட்டுப்பரப்பை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. கடந்த பதிவில் தமிழ்பேசும் சமூகங்கள், கடந்த 30 வருடங்களில் மாற்றம் பெற்று வந்த முறை ஓரளவு சுட்டப்பட்டிருந்தது. அதேநேரம், தமிழ்பேசும் சிறுபான்மைச் சமூகங்கள் என்றளவில் வைத்து தமிழ்பேசும் மக்களை அணுகிவிட முடியாது. தமிழ் பேசும் மக்கள் என்ற பதம் இன்று மூன்று தேசிய இனங்களைக் கொண்ட கட்டமைப்பே என்ற உணர்வுடனேயே, அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக யோசிக்க முடியும். அதே போன்று 1990 களுக்குப் பின்னரான உலக ஒழுங்கும் தொழில்நுட்ப வளர்ச்சியும் - முதலீட்டிய விரிவாக்கமும் 'அரசு' கட்டமைப்புக்களுக்கு வழங்கியிருக்கும் பாத்திரம் தொடர்பான புரிதல்களை மேலும் வளர்த்துச் செல்ல வேண்டியுள்ளது. முதலீட்டிய விரிவாக்கத்தின் 'உள்ளூர் முகவர்' என்ற பாத்திரத்தை ஏற்றுக் கொண்டுள்ள அரசுகளுக்கு அமெரிக்கா தலமையிலான 'நிலையான' உலக ஒழுங்கும் தொழில்நுட்பமும் - வழங்கியுள்ள அதிகாரமும் அதன் சட்டபூர்வ தன்மையும் (legitimacy) அதனை உறுதிசெய்யும் நோக்கில் உலகமெங்கும் உருவாக்கிவிட்டுள்ள என்.ஜி.ஓ செயற்பாட்டுகளும் இணைந்து உருவாக்கியுள்ள புதிய அதிகார ஒழுங்கு தொடர்பான புரிதல்களின் மத்தியிலேயே, நாம் இலங்கையில் 'தமிழ்' செயற்பாடுகளை மீள்வரையறை செய்ய வேண்டியுள்ளது.

தமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறையும் (praxis) தகமை விருத்தியும் (capacity building) பிரயோக வடிவமும் (applicable form)

தமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறை (praxis)

வாழ்வியல் நடைமுறையில், தமிழ்த்தேசியவாதத்தின் பிரயோகவடிவத்தைத் தீர்மானிக்கும் மக்கள் கூட்டத்தினரிடையே - தமிழ்த்தேசியவாதமானது எவ்வாறான நிலமையில் உள்ளது என்பது அதன் முற்போக்கான பிரயோகவடிவத்திற்கு மிக முக்கியமான அம்சமாகும். அதாவது இனவரைவியல் (Ethnography) அடிப்படையிலான நோக்கில், அதன் வாழ்வுமுறை எத்தகையது என்ற அம்சம், அதன் பிரயோகவடிவத்தின் முற்போக்கான அம்சத்தைத் தீர்மானிமானிக்கும் முக்கியமான காரணியெனலாம். பண்பாட்டு மானிடவியல் (Cultural Anthropology) துறையின் எழுச்சியில் உருவாகிய ஆய்வுகள் போராட்டத்தின் தேவைகள் - போக்குகளின் அடிப்படையாக இனவரையிலையும் அதனூடான வாழ்வியல் நடைமுறையையும் முன்வைக்கின்றன. இவ்வடிப்படைகளைத் தெளிவாக இனங்காணும் போதே, அதன் பிரயோகவடிவத்தைத் தீர்மானிக்கும் போது - பிற்போக்குக் கூறுகளை உதிர்த்து வெளியேறுதல் தொடர்பான உரையாடலுக்குள் உள்நுழைய முடியும். பிற்போக்கான கூறுகளை 'உரித்து' வெளியேறுவதென்பதை விட, அவற்றை 'உதிர்த்து' வெளியேறுதல் என்ற சொற்பிரயோகத்தைக் கவனிக்க. அதாவது முற்போக்கான பிரயோகம் என்பது சடுதியான திணிப்பின் மீதாக அல்லாமல் இயல்பான பரிணாமமாக (Organic evolution) இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது அவசியமானது.

சடங்குகளும் வழிபாடுகளும், கலை - கலாச்சார வெளிப்பாடு, மருத்துவ அறிவும் உணவுப் பழக்கவழக்கமும், தொழிற்கலைகள், விளையாட்டுக்கள் என்ற ஆறு விடயங்கள் சார்ந்த ஆய்வுகள் மிக அவசியமானவை. மேற்கூறிய ஆறு வகை மாதிரிகளூம் நாட்டாரியல், தொன்மங்கள், பாடல்கள், சொல் விளையாட்டுக்கள், கட்டுக்கதைகள் என்று ஏராளமான வகைகளாகப் பிரிக்கப்படக்கூடியவை. இவை ஒவ்வொன்றினதும் பயன்பாடும் நடைமுறையும் இன்று சமூகத்தில் எத்தகையவையாக உள்ளன? எவ்வகையான விடயங்களை சமூகங்கள் தூக்கியெறிந்துவிட்டு நகர்ந்திருக்கின்றன போன்ற விடயங்களை நாம் தமிழ்த்தேசியவாதத்தின் பிரயோக வடிவத்தைத் தீர்மானிக்கும் போது உள்வாங்கி வைத்திருக்க வேண்டியது அவசியமானது. சடங்குகள் வழிபாடுகள் எவ்வாறான வளர்ச்சிக்கு உட்பட்டு வந்திருக்கின்றன? ஆன்மீகத்தில் நிகழ்ந்த சமஸ்ஹிருதமயமாக்கல் எவ்வாறான விளைவுகளைக் கொடுத்துள்ளது? தமிழ்த்தேசியவாதத்தின் கலை - கலாச்சார வெளிபாடுகள் எவை? வெவ்வேறு சாதிகள், பிரதேசம் சார்ந்த மக்களிடையே எவ்வாறான வகைகளில் வித்தியாசப்பட்டிருந்தது? பிரதேச ரீதியாக மாறுபட்டிருந்த உணவுப் பழக்க வழக்கங்கள் என்ன? தமிழ் சமூகங்கள் கொண்டிருந்த மருத்துவ அறிவு எத்தகையது? எவ்வாறான தொழிற்கலைகள் அதன் உள்ளடக்கத்தில் இருந்தன? எவ்வகையான விளையாட்டுக்கள் காணப்பட்டன? எவ்வாறான சட்ட முறைமை சமூகங்கள் மத்தியில் பின்பற்றப்பட்டது? உறவுமுறைகள் சமூக உறவுகளில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்பது போன்ற ஏராளமான விடயங்கள் - உள்ளடக்கம் சார்ந்ததுதான் தமிழ்த்தேசியம். பல்வேறு வித்தியாசங்களின் - பன்மைத்துவ வெளிப்பாடுகளின் கூட்டு ஒன்றிணைவாகவே தமிழ்த்தேசியம் உருவாகியிருக்க வேண்டும்.

தமிழ்த்தேசியவாதம் : தகமை விருத்தி (capacity building)

வாழ்வியல் நடைமுறை என்ற விடயத்திற்கு அடுத்ததாக தமிழ் சாணக்கியனின் 'தகமை விருத்தி' தொடர்பான விடயத்திற்கு வருவோம். வாழ்வியல் நடைமுறையில் இருந்து உருவாகும் சமூகக்குழுக்கள் பெருமளவான உரையாடல்கள் மத்தியில் உருவாக்கும் சமூக நிறுவனங்களே 'தகமை விருத்தியின்' அடிப்படையாக அமைய முடியும். ஐரோப்பிய நாடுகளில் இன்று தனி மனிதனுக்கும் அரசிற்கும் உள்ள உறவென்பது சடுதியாக ஏற்பட்டதல்ல. அதன் வளர்ச்சியான நூற்றாண்டுகால பரிணாம வளர்ச்சி. ஏகப்பட்ட படிநிலைகளையும் படிப்படியான மாற்றங்களையும் கொண்டது. ஜனநாயக ரீதியாக உருவாக்கப்படும் சமூக நிறுவனங்களே தேசியவாத அரசியலின் அடிக்கட்டுமானமாக அமையும். இலங்கை தமிழ்பேசும் சமூகங்களில் கூட்டு வேலைத்திட்டங்களுடன் கூடிய சமூக நிறுவனங்களாக கோயில்களைத் தவிர வேறெவற்றையும் காட்ட முடியாத துரதிஸ்டவசமான சூழலை யுத்தம் எமக்குத் தந்துள்ளது. ஆன்மீகத்தேவையின் பூர்த்தியைத் தாண்டிய சமூக நிறுவனங்கள், எமது சமூகத்தில் எவ்வளவு தூரம் இயங்கிவருகின்றன என்ற பட்டியலிட முயற்சித்தால் அவற்றின் விளைவு பூச்சியமாகவே இருக்க முடியும். இலங்கை அரசு கட்டமைப்பிற்குள் இயங்கி வரும் பாடசாலைகளும் இதர அரச நிறுவனங்களுமே இன்று தமிழ் மக்களுடைய நிறுவனங்களாக எஞ்சிப் போயுள்ளன. சமூக நிறுவனங்களின் பெருக்கம் வகைதொகையற்று நிகழ வேண்டிய தருணமிது. வாசிகசாலைகளும் விளையாட்டுக் கழகங்களும் தம்மை வேகப்படுத்திக் கொள்ள வேண்டும். 1996 ஆம் ஆண்டிற்குப் பின்னர் யுத்தத்தைச் சந்திக்காத யாழ்ப்பாணத்தில் கூட எவ்வகையான சமூக நிறுவனங்களும் மக்கள் சார்ந்து தோற்றம் பெறவில்லை என்னும் நிலையில், யுத்தத்தால் முழுமையாக துடைத்து அழிக்கப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் சிவில் சமூகமும் சமூக நிறுவனங்களும் எவ்வாறு தொழிற்படும் என்று எதிர்பார்க்க முடியும்?

சின்னஞ்சிறிய சமூக நிறுவனங்களுடைய உருவாக்கத்தின் பின்னரே அரசு கட்டமைப்பிற்கு மாற்றிடான சமுக நிறுவனங்கள் உருவாக முடியும். உதாரணமாக, இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் அமுல்படுத்த யோசிக்கப்படுகின்றதெனில், அதனை முழுமையாக ஆய்வு செய்து அவறிற்கு மாற்றீடான திட்டங்களை முன்வைக்கும் வல்லமையைப் பெற்றுக் கொள்ளும் அளவிற்குத் தகமை விருத்திச் செயற்பாடுகள் அவசியமானவை. வெறுமனே தேசியவாதத்தை அரசியல் பரப்பிற்குள் சுருக்கும் போது - அவ்விடயத்தை எதிர்ப்பதென்ற ஒரே தெரிவே எம்மிடமிருக்கும் என்பது துரதிச்டவசமானது. புலம்பெயர் சமூகம் இலங்கையில் செயற்பட முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வெறுமனே அரசிற்குச் சார்பான கோரிக்கையல்ல. அக்கோரிக்கையில் தமிழ்த்தேசியவாத்தின் ஆரோக்கியமான எதிர்காலமும் தங்கியுள்ளது என்ற புரிதலை வளர்க்க வேண்டியுள்ளது.

தமிழ்த்தேசியவாதம் : பிரயோக வடிவம் (applicable form)

இன்றைய தமிழ்த்தேசியக் கோரிக்கை என்பது வானத்தில் இருந்து குதித்த விடயமல்ல. அக்கோரிக்கை வெறுமனே தமிழ் அடையாளம் சார்ந்த அரசியல் கோரிக்கையுமல்ல. சமூகத்தின் அடையாள உறுதியாக்கம் நிகழ்ந்த போது - அதன் வெளிப்பாட்டு வடிவமாகவே இக்கோரிக்கை முதன்மை பெற்றிருக்க முடியும். இன்று அதன் உள்ளடக்கங்கள் தொடர்பான புரிதல்கள் அற்று வெறுமனே கோரிக்கையை காவித்திருவதென்பது, உயிரற்ற உடலை அலங்கரித்து கொண்டு திரிவதைப் போன்ற செயற்பாடன்றி வேறெதுவும் இல்லை. மேலும், மேற்கூறிய 'வாழ்வியல் நடைமுறை' மற்றும் 'தகமை விருத்தி' ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டே பிரயோக வடிவம் தொடர்பான தீர்மானத்திற்கு வர முடியும். இவற்றின் அடிப்படையிலேயே சரியான பிரயோக வடிவத்தைத் தீர்மானிக்க முடியும். இப்பிரயோக வடிவத்தின் கூறுகள், ஏற்கனவேயான வரலாற்றுப் போக்கில் எஞ்சிய கூறுகளை தற்காலத்தைய சிந்தனைக்கூறுகளின் உதவி கொண்டு செப்பனிட்டபடி நகர வேண்டியுள்ளது. இது, மிகவும் சவாலான பணியென்பதை யாராலும் மறுக்க முடியாது.

வரலாற்றுப் போக்கில், தமிழ்த்தேசியம் என்ற அடையாள உறுதியாக்கம் ஒற்றை பரிமாணமானதல்ல. பல்வேறுபட்ட வாழ்முறைகளினது வித்தியாசங்களது கூட்டிணைவினால் உருவாகிய அடையாள உறுதியாக்கம். அதேநேரம், அரசியல் ரீதியான தேவைகள் அவ்வுறுதியாக்கத்தை விரவுபடுத்தியோ அல்லது இயல்பான வளர்ச்சிக்கு மாற்றாகவோ ஒன்றிணைத்திருக்கக்கூடும். பண்பாட்டுப் போக்கில் கீழிருந்து மேலான செயற்பாடாக இருக்க வேண்டிய பொறிமுறையைக் கொண்டது. அடையாள உறுதியாக்கம் மேன்மேலும் இறுக்கமாகி ஒற்றை பரிமாணத்தை அடையும் போதும் - அது மேலிருந்து கீழாக இயங்க எத்தனிக்கும் போதும் வன்முறையாக மாறிவிடுகின்றது. பிரயோக வடிவத்தைத் தீர்மானிக்கும் போது, இவ்வகையான வித்தியாசங்கள் அனுமதிக்கப்பட்ட வெளியாக - சமத்துவ ரீதியானதாக இருக்கும் போதே அது தனது முற்போக்கான பாத்திரத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

ஏற்கனவே கூறியபடிக்கு, 'இறையாண்மை அடைவுடன் கூடிய - இன்றைய அரசு வடிவத்தில் உள்ள தேசியவாதத்தின் பிரயோக வடிவம்' இற்கும் 'இறையாண்மைக்கான நகர்வுடன் கூடிய காலபகுதியில் தேசியவாதத்தின் பிரயோக வடிவம்' ஆகிய இரண்டு விடயங்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டியது அவசியமானது. முன்னையதில் தேசியவாதம் - இறையாண்மையான அரசை அமைத்ததன் பின்னணியில் தனது அடையாள உறுதியாக்கத்தை சிதறடிக்கும் பண்பைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகின்றது. 'அரசு' 'குடிமகன்/ள்' என்ற உறவு வித்தியாசங்களை பெருக்கத்தில் மேன்மை பெற வேண்டியது அவசியமானது. ஆயினும், இரண்டாவது வகையான இறையாண்மைக்கான நகர்வுடன் கூடிய காலப்பகுதியில் உள்ள தேசியவாதச் சிந்தனைகளின் நகர்வோ இக்காலப்பகுதியில் மிகவும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. அச்சிந்தனை முறை இரண்டுவகையாக கட்டமைக்கப்பட வேண்டியுள்ளது. அடையாள உறுதியாக்கங்களை முன்வைத்து நகர வேண்டிய அதேவேளை அதே அடையாள உறுதியாக்கம் காரணமாக நிகழும் பன்மைத்துவ மறுப்பை சிதறடித்தவாறு - தன்னை ஜனநாயகப்படுத்திக் கொண்டும் முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. அடையாள அரசியல் சிந்தனைப் போக்குகளின் எழுச்சியும் பெண்கள், தலித்துக்கள், இதர சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பாக எழுந்துள்ள கருத்தியல்களும் ஏற்கனவேயான ஒற்றைப்படையான உறுதியாக்கங்களை உடைக்கக்கோருபவை. அதாவது, ஒரே நேரத்தில் Deconstructive அணுகுமுறையும் Constructive அணுகுமுறையும் தமது பிரயோக நடைமுறையாகக் கொண்டிருக்க வேண்டிய சந்தர்ப்பத்தை 'உலக சிந்தனை போக்கு' உருவாக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த முரணியக்கமே பின்- காலனித்துவ தேசங்களது - தற்காலத் தேசியவாதத்தின் ஆரோக்கியமான பண்பாக இருக்க முடியும்.

[ இக்கட்டுரையை பிறிதொரு சந்தர்ப்பத்தில் மேலும் விரிவாக்கி எழுத முயற்சிக்கின்றேன். வாழ்வியல் நடைமுறையும் (praxis) தகமை விருத்தியும் (capacity building) பிரயோக வடிவமும் (applicable form) என்ற விடயங்கள் சார்ந்து அரசியல் பரப்பிற்கு வெளியேயுள்ள புலமையாளர்களும் துறை சார் தொழில் அறிஞர்களும் சிந்திக்க வேண்டிய தருணமிது. நான் இங்கே சுருக்கமாகக் கொடுத்திருப்பது வெறும் சட்டகமே (framework). இவ்விடயத்தை வளர்த்துச் செல்ல வேண்டிய பணி சகலருக்குமானது. ]

மேற்குறித்த பதிவிற்கான அடிப்படை 'அ. மார்க்ஸ் பிராண்டு பின்நவீனத்துவ அரசியல்: வித்தியாசங்களின் பெருக்கமா? காலனியக் கழிவுகளின் கூட்டுத் தொகையா?' என்ற வளர்மதியின் கட்டுரையே.

January 05, 2012

தமிழ்த்தேசியவாதம் : வெற்று உணர்வும் கருத்தியல் தளமும்

தமிழ்த்தேசிய போராட்டத்திற்குச் சமாந்தரமாக உள்ளேயும் வெளியேயும் நீணடகாலமாகப் பயணித்த நிலாந்தனுடைய நேர்காணல் வல்லினம் இணைய இதழில் பிரசுரமாகியிருந்தது. நீண்டகாலமாக பிரச்சனைகளுக்கு அண்மையில் இருந்தவர் என்ற ரீதியிலும் பிரச்சனைகளை கோட்பாட்டு ரீதியில் அணுகக்கூடியவர் என்ற ரீதியிலும் நிலாந்தனுடைய நீண்ட மௌனத்திற்குப் பின்பான கருத்து வெளிப்பாட்டைத் தொடர்ந்து நீண்ட உரையாடலை ஆரம்பித்திருக்க வேண்டிய தருணம் தவறவிடப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. நிலாந்தனுடைய கருத்துக்களுடைய தீவிர விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம், குறைந்தபட்சம் பயணிக்க வேண்டிய திசையையாவது அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். தமிழ் அடையாளம் சார்ந்த எதிர்புணர்வுகள் முற்றுமுழுதாக புலிகளுடைய அணுகுமுறையாக இலங்கை அரசாங்கத்தால் முத்திரை குத்தப்பட்டு, ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுவரும் தருணத்தில் இந்நேர்காணல் பிரசுரமாகியுள்ளது. அதேநேரம், கருத்தியல் தளத்தில் அதிகார நிழலுக்கு வெளியே முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழ் அடையாளம் சார்ந்த எதிர்ப்புணர்வுகள் - தமீழீழ விடுதலைப் புலிகள் யுத்தம் மூலம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் - புலிகளது தொடர்ச்சியாக பொதுமைப்படுத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டு வரும் வேளையில், நிலாந்தனுடைய நேர்காணல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

இலங்கை அரசு கட்டமைப்பின் 'அனுமதிப்பு' வெளிக்குள் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் அடையாளம் சார்ந்த எதிர்ப்புணர்வுகள் தொடர்பாக நிலாந்தன் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவை பெரும்பாலும் அரசு சீர்திருத்தவாதத்துடன் (state reformation) உடன் தொடர்புள்ளவை. இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஏராளமான அரச சார்பற்ற நிறுவனங்களும், கிறிஸ்தவ மிஷனரிகளும் அக்கறை கொண்டிருக்கும் வெளிகளில் பேசுவதற்கு வகை தொகையற்றோர் உள்ளார்கள். அதுமட்டுமன்றி, அவ்வெளிகளிலேயே தாராண்மைவாதப் பொருளாதார (Liberal economy) நலனுடன் தொடர்புள்ளவர்களும் செயற்பட்டு வருகின்றார்கள். ஏன் சில பாராளுமன்ற இடதுசாரிகள் - இடதுசாரிச் செயற்பாட்டாளர்கள் கூட அவ்வெளிகளில் இயங்கி வருவது வெளிப்படையானது. இங்கு கவனப்படுத்தப்பட வேண்டிய பகுதி 'அரசு சீர்திருத்தம்' (state reformation) என்ற எல்லையைத் தாண்டி - தமிழ் அடையாளம் சார்ந்து அல்லது தமிழ்த்தேசிய அரசியல் தொடர்பாக நிலாந்தன் கூற முற்படும் விடயமே. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் ஈடுபட்டதில் இருந்து 2009 இல் நிகழ்ந்த மனிதப் பேரவலம் வரை சாட்சியாக இருந்த நிலாந்தன் - இத்துணை அனுபவத்திற்குப் பின்னரும், தீவிர ஒடுக்குமுறைப் பிரதேசத்தில் வசித்தவாறு - 'அரசு சீர்திருத்தம்' (State Reformation) என்ற அரசியல் செயற்பாட்டு வெளியைத் தாண்டிச் சென்று தனது கருத்தை ஏன் முன்வைக்கின்றார் என்பதை தீவிர உரையாடலுக்கு உட்படுத்த வேண்டியது அவசியமானது. காலத்தின் தேவையும் கூட.

தேசியஇனம் (national community), தேசம் (nation), இறையாண்மை நோக்கிய அதன் அபிசாலைகள் (Its (nation's) earning towards sovereignty), ஏற்கனவேயான கட்டமைப்பில் இறையாண்மையின் போதாமையை உணரும் தருணம் (The moment of realizing the lack of sovereignty in the prevailing state formation or structure), இறையாண்மை நோக்கிய பயணம் (towards sovereignty), தேசிய அரசுருவாக்கம் (nation state formation) போன்ற விடயங்களை இணைத்து அடுத்த கட்டத்திற்குச் செல்லும் போதே இக்கட்டுரை பூரணமடையும் என்றாலும், கட்டுரையின் விரிவுக்கு அஞ்சி நிலாந்தனுடைய ஒரு விடயத்தை மாத்திரம் தொட்டுச் செல்லலாம். ( 'தமிழ் சிவில் சமூகத்தின் வேண்டுகோளும் அதன் அடிப்படைகளும்' என்ற கட்டுரையில் மேலும் பல விடயங்களைத் தொட்டுச் செல்ல முயற்சிக்கின்றேன். அதற்கான அடிப்படையாக இக்கட்டுரையை வளர்த்துச் செல்லலாம். )


தமிழ் தேசிய உணர்வு முன்னரை விட கூர்மையடைந்திருக்கிறது என்பதே கள யதார்த்தம். - நிலாந்தன்

தமிழ் அடையாளச் செயற்பாடுகள் 1983 - 2009

மொழியை மையமாகக் கொண்ட புறக்கணிப்புக்களும் அடக்குமுறைகளையும் அவற்றின் மீதான எதிர்ப்புணர்வுகளையும் வரைபடத்திற்குள் கொண்டு வருவோமாக இருந்தால், அவ்வரைபடம் பெருமளவு மாற்றங்களைக் கண்டிருக்கின்றது என்பதை கவனப்படுத்த வேண்டும். 1983 இல் பல்வேறுபட்ட இயக்கங்களும் தமிழ்த்தேசிய அரசியல் பிரதேசங்களை அல்லது அவர்களின் செயற்பாட்டு வெளிகளை வரையறை செய்ய முயற்சித்த போது, சில கருத்து மாறுபாடுகளுக்கு அப்பாலும் - மொழி ரீதியான ஒன்றிப்புடன் முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களையும் தமிழ்த்தேசிய வரையறைக்குள் உள்வாங்கிக் கொண்டதன் நியாயப்பாடுகளையும் யதார்த்தையும் பரிசீலனை செய்வதை விடவும் இன்றைய நிலையில் குறித்த சமூகங்கள் எவ்வகையான வரையறைக்குள் வரப்போகின்றார்கள் என்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டியது மிக அவசியமானது. இடைபட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள், அரசியல் செயற்பாடுகள், கோட்பாட்டு உருவாக்கங்கள், அடையாள உறுதியாக்கங்கள் - சமூக அசைவியக்கம் காரணமாகவும் முஸ்லிம் மற்றும் மலைய சமூகங்கள் தனித்தேசிய இனம் என்ற திசையில் பயணிக்கத் தொடங்கி நீண்ட காலமாகிவிட்டது என்பதை நிச்சயமாக தமிழ்த்தேசிய அரசியற் செயற்பாட்டாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. இன்றைய திகதியில், தமிழ்த்தேசியம் என்ற குடுவையில் இட்டு சகல சமூகங்களையும் குலுக்க முடியாது. இன்றைய நிலையில் தமிழ்த்தேசியச் செயற்பாடுகள் மொழி ரீதியான வரையறுப்புக்களுடன் நகர வேண்டிய தேவையிருப்பினும் கூட குறித்த தேசிய இனங்களை தமிழ்த்தேசியத்திற்குச் சமாந்தரமான நேச இனங்களாகவே அணைத்துச் செல்ல முடியும். தமது பூரண இறையாண்மையுடன் கூடிய அரசுருவாக்கம் (state formation) என்ற புள்ளியை நோக்கி தமது அரசியல் செயற்பாடுகளை குறித்த இனங்கள் நகர்த்தாத போதிலும், தனித்துவமுடைய தேசிய இனங்கள் (nation) என்ற கட்டம்வரைக்குமான அவர்களது பயணத்தை மறுக்க முடியாது. ( இதற்கான வலுவான காரணிகளை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பதிவு செய்ய முடியும். )

2009 இற்குப் பின்னரான தமிழ்த்தேசியம்

2009 மே இற்குப் பின்னர் தமிழ்த்தேசியத்தின் நிலை எத்தகையது என்பதை கோட்பாட்டு ரீதியில் வரையறை செய்ய வேண்டியது அவசியமானது. அரசு சீர்திருத்தம் (state reformation) என்ற வரையறையுடன் இயங்க முயற்சிப்பவர்களே, கவனம் கொள்ள வேண்டிய பகுதி என்ற நிலையில், அவ்வெல்லையைத் தாண்டி இயங்க முயற்சிப்பவர்கள் நிச்சயமாக கவனத்திற்கு உட்படுத்த வேண்டிய பகுதி இதுவாகும். நிலாந்தன் கூறுவது போன்று தமிழ் தேசிய உணர்வு முன்னரை விடக் கூர்மையடைந்திருப்பதே உண்மை. அதாவது, உணர்வுத்தளத்தில் - பிரக்ஞாபூர்வமாக தமிழ்த்தேசியம் முன்னரைவிடக் கூர்மையடைந்துள்ளது என்று மாத்திரமே கூற முடியும். தமிழ்ப்பிரதேசங்களில் உள்ள இராணுவப்பிரசன்னமும், அடையாள - நினைவு அழிப்புச் செயற்பாடுகளும், சுமுக நிலை தோற்றுவிக்கப்படாத நிலமையும், பாதுகாப்பற்ற உணர்வும், தமிழ் இனவழிப்பு மனவடுவுமாகச் சேர்ந்து தமிழ்த்தேசிய உணர்வை மேலும் கூர்மையாக்கியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. சிங்கள மையவாத அரசின் பன்மைத்துவ மறுப்புச் செயற்பாடுகளும் ஜனநாயக மறுப்பும் - அதனை நடைமுறைப்படுத்திவரும் அரச இயந்திரமும் சிறுபான்மை மக்கள் மனங்களில் தோற்றுவித்துள்ள அச்ச நிலமை தமிழ்த்தேசியத்தை மேன்மேலும் கூர்மைப்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்திற்கிடமில்லை. இக்காரணிகள், இந்நிலப்பரப்புக்களைத் தாண்டிப் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ்நாட்டிலும் தமிழ்த்தேசிய உணர்வைத் தொற்றவைத்துள்ளது. ஒருவகையில், இன்றுள்ள தமிழ்த்தேசிய உணர்வான் 'பெரும்பகுதி' சிங்களத் தேசியவாத நடைமுறையின் எதிர்வெளிப்பாடே தவிர, தமிழ் மக்களது நடைமுறை வாழ்வியலின் வாழ்க்கைமுறையுடன் (praxis) உடன் தொடர்புடையதல்ல என்பதை கவனப்படுத்த வேண்டியுள்ளது. கருத்தியல்களின் அசைவியக்கம் என்பது, குறித்த கருத்தியல்களின் தேவையை வலியுறுத்தும் மக்கள் சமூகத்தின் வாழ்க்கைமுறையுடன் (praxis) இணைத்துப் பார்க்கப்பட வேண்டியது அவசியமானது. உணர்வுத்தளத்திலான கருத்தியல்களும் - கருத்தொருமிப்புக்களும், உணர்வுத்தளத்தில் மாத்திரம் இயங்க முயற்சிக்கும் போது அவை நிச்சயமாக வெளியொதுக்கல்களை மேற்கொள்ளத் தொடங்கும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வெளியொதுக்கல்கள், குறித்த கருத்தியல்களின் 'உள்ளடக்கத்தை' (contents) பன்மைத்துவத்திற்கு (diversity) எதிராகவும் ஜனநாயக மறுப்பிற்குச் சார்பாகவுமான புள்ளியை நோக்கிக் கொண்டு செல்லும்.

நிலாந்தன் தனது நேர்காணலில் இன்றைய தமிழ்த்தேசியவாதத்தினை இருகூறாக்கி அணுக முற்படுகின்றார். முதலாவதாக தமிழ்த்தேசியத்தின் இன்றைய நிலையை சரியாக அடையாளம் காண்கின்றார். உணர்வுத்தளத்தில் - நில வரையறைகளைத் தாண்டிய அதன் வியாபகத்தைக் கூறியிருக்கின்றார். அதன் மறுக்கவியலாத யதார்த்தத்தையும் தெளிவுபடுத்தியுள்ளார். இரண்டாவதாக இன்றைய தமிழ்த்தேசிய உணர்வு நிலையின் பிரயோக வடிவம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் ஓரளவிற்குத் தொட்டுச் சென்றிருக்கின்றார். இரண்டாவது பகுதியை இன்னும் விரிவாக அவர் முன்வைத்திருக்கலாம். மிக முக்கியமாக தேசியவாதத்தின் பிரயோக வடிவத்தை வெறுமனே பொதுமைப்படுத்தி அணுகிவிட முடியாது.

இவ்விடயத்தை இரண்டாக வகுத்து அணுகும் போது நிச்சயமாக தமிழ்த்தேசியத்தின் பிரயோக வடிவம் தொடர்பான சரியான புள்ளிகளுக்கு வந்தடைய முடியும்.
* இறையாண்மை அடைவுடன் கூடிய - இன்றைய அரசு வடிவத்தில் உள்ள தேசியவாதத்தின் பிரயோக வடிவம்
* இறையாண்மைக்கான நகர்வுடன் கூடிய காலபகுதியில் தேசியவாதத்தின் பிரயோக வடிவம்

ஏற்கனவே கூறியபடி, இறையாண்மையுடன் தொடர்புடைய விடயங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம். ஆயினும், தேசியவாத்தின் பிரயோக வடிவத்தின் எல்லைகள் தொடர்பான புரிதலுக்கு நிச்சயமாக இறையாண்மை தொடர்பான ஓரளவிற்கான புரிதல் தேவைப்படுகின்றது. இங்கே, அழுத்தம் கொடுக்க விரும்பும் தேசியவாதத்தின் 'praxis' என்பதுவும் நிலாந்தனுடைய கருதுகோளிற்குச் சமாந்தரமாகப் பயணிப்பதே. அரசியல் கோட்பாட்டுத் தளத்தில் அது 'பிரயோக வடிவம்' என்ற சொல்லுடன் பொருந்தி வந்தாலும் - அத்தளத்திற்கு வெளியே முக்கியமாகப் பண்பாட்டு தளத்தில் 'praxis' என்ற சொல்லே அதிகம் பொருந்திவரும் போல் தோன்றுகின்றது. ( அரசியல் செயற்பாட்டுத்தளத்தில் தமிழ் சாணக்கியன் குறிப்பிடும் தகமை விருத்தி (capacity building) என்ற சொல்லும் இதற்குச் சமாந்தரமானதாகவே கருதுகின்றேன். )

[ இன்றைய தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் வல்லமையானது புலம்பெயர் தேசத்தவர்களிடமும் தமிழ்நாட்டு ஈழ விடுதலை ஆதரவாளர்களிடமும் தான் காணப்படுகின்றது என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இக்கருத்து மிகத்தவறானது. தவறானது மாத்திரமல்லாது, ஈழத்தில் தமிழ்த்தேசிய அரசியலை சரியான திசைவழி நகர்த்துவதற்கு உதவப்போவதில்லை என்பது மாத்திமல்லாது, தடையாகவும் இருக்கும். குறிப்பிட்ட நிலப்பரப்புடன் தொடர்புள்ள - அந்நிலப்பரப்பைத் தமது வாழ்நிலை ஆதாரமாகக் கொண்டுள்ளவர்களது செயல்வடிவத்தைப் பலப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பது மாத்திரமே, நிலப்பரப்புடன் தொடர்பில் இல்லாதவர்களது பாத்திரமாக அமைய முடியும். அல்லது, பதட்டமான காலக்கட்டப்பகுதியில், குறித்த சமூக மக்கள் முன்னெடுக்கப்போகும் போராட்டங்களுக்கான ஆதாரங்களைப் பலப்படுத்துவதிலும் - உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலான செயற்பாடுகளையும் மாத்திரமே முன்னெடுக்கலாம். கட்டுரையின் இறுதிப்பகுதி, மேற்கூறியவற்றுக்கான காரணங்களைத் தெளிவுபடுத்தும். ]

இறையாண்மை அடைவுடன் கூடிய - இன்றைய அரசு வடிவத்தில் உள்ள தேசியவாதத்தின் பிரயோக வடிவம்

1983 இல் இருந்ததைப் போன்றல்லாமல் தேசிய அரசியல் செயற்பாடுகளின் நிகழ்த்துகை வெகுவாக மாறிவிட்டிருக்கின்றது. இரண்டால் உலகப்போரிற்குப் பிறபட்ட காலப்பகுதியில் இருந்து சோவியத் யூனியன் உடைவு வரையான காலப்பகுதி தேசிய அரசுருவாக்கச் செய்ற்பாடுகளுக்குச் சாதகமான காலப்பகுதியாயிருந்தன. மேற்கு மைய உலகம் 1990 களில் கண்களை மூடிக் கொண்டது. அக்காலப்பகுதியில் உருவாக்கப்பட்டிருந்த தேசிய அரசுகளும் - மக்கள்நல அரசு (welfare state) என்ற அவற்றின் நகர்வும், ஏற்கனவேயான அரசு கட்டமைப்பை நெறிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி அளிக்கப்பட்டது. அதாவது அரசு சீர்திருத்தவாதம் (state reformation) என்ற புள்ளியிலேயே கருத்தியலும் செயற்பாடும் குவிந்து காணப்பட்டது. ஒருவிதத்தில் உலகளாவிய பொருளாதாரம் (global economy) இற்கான தயார்ப்படுத்தல்களுக்கு அரசு சீர்திருத்தவாதம் (state reformation) தேவைப்பட்டது. அதாவது 1990 களின் முன்னரான உலக அதிகாரக் கட்டமைப்பு ஒழுங்கு குலைக்கப்பட்டதன் பின்னர், அமெரிக்கா தலைமையிலான - உறுதிநிலை தேவைப்பட்டது. நீண்டகால நோக்கில் அமெரிக்க வல்லாதிக்கக் கனவை குலைக்கலாம் - அதாவது அரசு என்ற அலகை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் உலக அதிகாரக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதன் அடிப்படையில் அரசுருவாக்கம் (state formation) செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டன. தேசிய இனங்களை மையப்படுத்திய அரசுக்குடுவைகள் ஜனநாயக திரவத்தால் ஊற்றி நிரப்பப்பட்டன. தனித்த அடையாளங்களது வலியுறுத்தல்களும் - அடையாள அரசியலின் எழுச்சியும் நிகழ்ந்தது. ஒவ்வொரு சிறிய அடையாளங்களும் விசேட கவனத்திற்குட்படுத்தப்பட்டு - அரசியல்மயப்படுத்தப்பட்டு பிரச்சனைகள் இனங்காணப்பட்டன. இவை பெரும்பாலும் சட்ட அங்கீகாரத்திற்கு உட்பட்ட செயற்பாடுகளாகவே காணப்படும். ஒருவிதத்தில் உலகளாவிய பொருளாதாரம் (global economy) இற்கு இந்நிகழ்வு மிகவும் தேவையாகவும் இருந்தது.

இறையாண்மைக்கான நகர்வுடன் கூடிய காலபகுதியில் தேசியவாதத்தின் பிரயோக வடிவம்

பின் காலனித்துவ காலப்பகுதி, காலனிக்குட்பட்ட நாடுகளுக்கு பெரும் பிரச்சனையாக அமைந்தது. உலக அதிகாரக் கட்டமைப்பின் அடிப்படை அலகான 'அரசு' (state) வடிவம் அவர்களுக்கு சிறையாகவே அமைந்தது. ஏனெனில், அவர்கள் மீது சுமத்தப்பட்ட அரசு என்ற வடிவம் இயல்பான வளர்ச்சியின் (organic evolution) பாலானது அல்ல. துரதிஸ்டவசமாக காலனித்துவ நாடுகளது சுரண்டல் பொறிமுறையின் மேலாண்மை அலகே, அவர்களது அரசாக அமைந்தது. ( வரலாற்றில் 'ஒன்றுபட்ட இலங்கை' என்பது கிழக்கிந்தியக் கம்பனியின் மேலாண்மை அலகு - Historically "United Sri Lanka" was an administrative unit created by British East India Company) திணிக்கப்பட்ட அரசு கட்டமைப்பிற்கு எதிராகவே பின் - காலனித்துவ போராட்டங்கள் நடைபெற்றன. வரலாற்று இயங்கியலில் தமிழ்த்தேசிய அரசியலின் புள்ளி இதுதான். இவ்வகைக்குள் வரக்கூடிய தேசியவாதத்தின் பிரயோக வடிவம் முற்றுமுழுதாக ஜனநாயக உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ராஜன்குறையின் மொழியில் சொல்வதானால் 'இன்னம் அடையமுடியாத இறையாண்மை, பல சமயங்களில் ஏற்படுத்தமுடியாத கருத்தொருமிப்பு உருவாக்கும் பதட்டத்தின், மன விகாரத்தின் விளைவு'. அதற்காக, இவ்வுள்ளடக்கம் ஜனநாயகமற்று இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக ஆகிவிடாது. மாறாக, ஜனநாயக உள்ளடக்கத்தை (democratic core ) அதிகப்படுத்தும் மனவிருப்புக் கொண்டதாக இருக்க வேண்டும். இவ்வகைமாதிரிக்குள் வரும் செயற்பாடுகள் உலகத்தில் எங்கும் ஏற்றுக்கொள்ளப்படாத சட்ட எல்லைகளைத் (legal boundary) தாண்டியவை.

தமிழ்த்தேசியவாதம் : பிரயோக வடிவமும் (applicable form) வாழ்வியல் நடைமுறையும் (praxis) தகமை விருத்தியும் (capacity building)

இறுதியாக இன்றைய தமிழ்த்தேசியவாதம்
(அ) நடைமுறையில் பண்பாட்டுத்தளத்திலும்
(ஆ) அரசியல் கோட்பாட்டுத் தளத்தில் அதன் பிரயோக வடிவத்தில்
(இ) அரசியல் செயற்பாட்டில் தகமை விருத்தியில்
எவ்வாறிருக்கின்றது என்று பார்த்தோமேயானால் துயரமான முடிவிற்கு வந்தடைய வேண்டியிருக்கும். பண்பாட்டுத்தளத்திலோ அனைத்துப் பிற்போக்குக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டு - தனது முற்போக்கான அடையாளங்கள் அனைத்தையும் இழந்து அம்மணமாக நிற்கின்றது. அரசியல் தளத்தில் - தமிழ்த்தேசியவாதத்தின் பிரயோக வடிவம், அதன் ஆழமான அர்த்தங்கள் அனைத்தையும் இழந்து வெறுமனே இலங்கை 'அரசு கட்டமைப்பை எதிர்த்தல்' என்றளவில் சுருங்கிப் போயுள்ளது.
தகமை விருத்தியில் பேச்சுவார்த்தை அரசிலயலை விட்டால் வேறு வழியில்லை என்ற மோசமான நிலையை எய்துவிட்டுள்ளது.

முக்கியமாக நிலாந்தனுடைய நேர்காணலில் தொடப்பட்டுள்ள இவ்விடயத்தை உரையாடல்கள் மூலமாகத் தொடர்ந்து வளர்த்துச் செல்ல வேண்டியுள்ளது. இவ்வடிப்படையைக் கொண்டு 'தமிழ் சிவில் சமூகத்தினுடைய வேண்டுகோள்களையும் - அதன் தொடர்ச்சியில் இடம்பெற்றுவரும் உரையாடல்களையும் கவனத்தில் கொண்டு - முக்கியமாக தமிழ் சாணக்கியனாலும் நிர்மானுசனாலும் பொங்குதமிழ் தளத்தில் எழுதப்பட்டுள்ள பிரதிகளை வாசிப்பிற்கு உட்படுத்தியபடி தொடர்ந்து செல்ல வேண்டும். தமிழ்த்தேசியவாதம் தொடர்பான உரையாடல்களின் போது ஒவ்வொரு தரப்பினரும் தனக்கு நெருக்கமான துறைகளுடன் மாத்திரம் உரையாடுவதன் காரணமாக பெருமளவிற்குப் போதாமைகளை உணரக்கூடியதாக உள்ளது. நிலாந்தன் முதன்மைப்படுத்தியுள்ள அரசியல் கோட்பாட்டுத்தளத்திலும் தமிழ் சாணக்கியனும் நிர்மானுசனும் பேசிக் கொண்டிருக்கும் அரசியல் செயற்பாட்டுத்தளத்திலும் ஏற்கனவே கடந்த காலங்களில் பெருமளவான உரையாடல்கள் முன்னெடுக்கபப்ட்டுள்ளன. ஆயினும், அதன் இருப்பைத் தக்க வைக்கக்கூடிய சக்தியுள்ள பண்பாட்டுத்தளத்திலும் வாழ்வியல் நடைமுறையிலும் இவ்விடயம் இணைத்துப் பேசப்படவில்லை. ஒரு கருத்தியலின் - அதன் முன்னெடுப்பின் ஆதாரமாக அமைவது பண்பாட்டுத்தளத்திலும் நடைமுறை வாழ்வியலிலும் அக்கருத்தியல் எவ்வளவுதூரம் வேர்விட்டுள்ளது என்பதிலேயே தங்கியுள்ளது. அரசியல் தளத்திலும் கோட்பாட்டுத்தளத்திலும் மாத்திரமேயான உரையாடல்கள் வெகுஜன உளவியலில் பெரியளவான மாற்றங்களை ஏற்படுத்த வல்லவையல்ல. தேசியவாத அரசியல் செயற்பாட்டில் மேற்கூறிய விடயங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பிறிதொரு பகுதியில் பார்க்கலாம்.

* வல்லினம் நேர்காணல்

* praxis (வினையான தொகை)

* தமிழ் சாணக்கியன் - பொங்குதமிழ்

Statcounter