வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

May 20, 2012

அரசற்ற தேசங்களினது மரபுசார் சட்டங்கள் : தேசவழமைச் சட்டத்தை திருத்துவது யார் என்பதனை முன்வைத்து சில ஆரம்பக் குறிப்புக்கள்




குமாரவடிவேல் குருபரன் [1]
சட்ட விரிவுரையாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.







# அறிமுகம்


தேசவழமைச் சட்டத்தைத் திருத்தும் நோக்கில் கடந்த அரசாங்கத்தில் நீதித்துறை அமைச்சராக இருந்த திரு. மிலிந்த மொறொகொடவால் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. 2010 பொதுத் தேர்தல்களுடன் திரு. மொறொகொடவின் அமைச்சு கைமாற இக்குழுவின் செயற்பாடுகளும் முடிவுக்கு வந்தன. அண்மையில் மீள்சக்தி, வலு அமைச்சரும் ஜாதிக ஹெல உருமயவின் தலைவர்களில் ஒருவருமாகிய திரு. பாட்டாலி சம்பிக்க ரணவக்க தேசவழமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்திருந்தார். இதே கருத்தை எல்லாவல மேதானந்த தேரரும் அண்மையில் தெரிவித்திருந்தார் [2] . காலத்திற்குக் காலம் தீவிர சிங்கள இனவாதிகளால் இத்தகைய கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மே 2009 இற்குப் பின்னராக நிலவுகின்ற தற்கால அரசியல் சூழ்நிலையில் - ஒரு தேசியக் கோட்பாட்டை (one nation theory) உறுதியாக வலியுறுத்தும் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் அதியுச்சமான வடிவமாக இன்றைய அரசாங்கம் இருக்கின்ற சூழ்நிலையில் - மீளவும் தேசவழமைச் சட்டம் மாற்றியமைக்கப்படுவது (அல்லது இல்லாதொழிக்கப்படுவது) தொடர்பில பேசப்படுவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவது இயல்பானதே. சிங்கள இனவாதிகள் தேசவழமையை இல்லாதொழிக்க வேண்டும் எனக் கூறுவது சிங்கள மேலாண்மைக் கருத்தியலிலிருந்து ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது தமிழர் தவிர்ந்த ஏனைய இனத்தவர்களால் யாழ்ப்பாணத்தில் காணி வாங்க முடியாது என்ற பிழையான விளங்கிக் கொள்ளலின் அடிப்படையில் சொல்லப்படுவது [3]. இதுவன்றி தேசவழமைச் சட்டத்தை சீர்திருத்துவதற்கு அல்லது இற்றைப்படுத்துவதற்கான வேறு நியாயமான தேவை இருக்கலாம். அப்படியான சந்தர்ப்பங்களை மட்டும் கருத்தில் கொள்ளும் போது கூட யார் தேசவழமையைத் திருத்தலாம் என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய, சரியான விடையைக் காண வேண்டிய அவசியம் உண்டு.  இக்கட்டுரையின் நோக்கமானது தேசவழமையைத் திருத்துவது தொடர்பிலான  செயன்முறை (process) தொடர்பிலான மேற்கண்ட கேள்வியின்  பல்வேறு பரிமாணங்களைப் பற்றி அலசுவதும் ஆரம்ப கட்ட பதில் ஒன்றைப் பதிவு செய்தலும் ஆகும்.



# (அரசற்ற) தேசங்களும் மரபுரிமைச் சட்டங்களும்


தேசமாகத் தம்மைக் கருதும் ஒரு மக்கள் கூட்டத்தினர் சுயாட்சியைக் கோரி நிற்பவர்கள். தம்மைச் சுயாட்சிக்கு உரித்துடையவர்களாக்கும் சுயநிர்ணயத்திற்கான உரிமையையுடையவர்கள் என்ற கூட்டுச் சிந்தனையைக் கொண்டவர்கள். தம்மைத் தேசமாகக் கருதினும் தமக்கென அரசொன்றைக் கொண்டிராதவர்களை அரசற்ற தேசங்கள் (Stateless Nations) என சில புலமையாளர்கள் வர்ணிப்பர் [4]. (தேசமாக தம்மைத் தக்க வைப்பதற்கு கட்டாயமாகத் தனியரசாக இருக்க வேண்டியதில்லை) தம்மைத் தேசமாகக் கருதும் மக்கள் தம்மை அடையாளப்படுத்தும் விடயங்களில் ஒன்றாகத் தம்மால் தமக்கு தமது முன்னோரால் வழங்கப்பட்ட சட்டப்பாரம்பரியத்தைக் கருதும் தன்மையானவர்கள் [5]. ஸ்கொட்லான்ட் தேசத்தைச் சேர்ந்த ஸ்கொட்டிய (Scottish) மக்கள் ஸ்கொட்ஸ் சட்டத்தை (Scots law) பாதுகாப்பதில் வெகு தீவிரமானவர்கள். அதே போன்று கனடாவில் கியுபெக (Quebec) மாநிலத்தைச் சேர்ந்த கியுபெக்கோஸ் தம்மை ஆங்கிலேயரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் சிவில் சட்டத்தைப் பாதுகாப்பதில் தீவிரம் காட்டுவார்கள். இந்தப் பார்வையிலேயே தமிழர்களும் தேசவழமைச் சட்டம் தொடர்பில் சிந்திக்கின்றனர் என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தேசவழமைச் சட்டமானது ‘இலங்கை அரசு’[6] என்றவொன்று கருத்தாக்கம் பெறுவதற்கு முன்னர் இருந்தே நிலவுகையிலிருந்த ஒன்று. வேறொரு முறையில் கூறுவதானால் தேசவழமை, அரசுக்கு முந்திய சட்டம் (Pre - State Law). பொதுவாகச் சட்டம் என்பது அரசிடமிருந்து ஊற்றுப் பெறுவதாகக் கருதப்படுகின்றது (state centric conception of the law). நவீன அரசக் கட்டமைப்புக்களின் அதிகாரப் படிநிலையாக்கத்தின் அதியுச்சியில் இருக்கும் அரசாங்கமும் அது சார்ந்த நிறுவனங்களுமே சட்டமாக்கும் தத்துவமுடையதாகப் பொதுப் புத்தியில் உறைந்து போயுள்ளது. சட்டம் என்பது மக்களிடமிருந்து அந்நியப்பட்டு இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகவும் நாம் இதனை அவதானிக்கலாம். நிற்க. தேசவழமைச் சட்டமானது அரசுக்கு முந்தியதெனின் அதனைக் காலத்திற்கு ஏற்ப ‘திருத்தும்’ அதிகாரம் / முறை யாது என்ற கேள்வி எழுகின்றது. ஒரு ‘முறையைப்’ பின்பற்றி தேசவழமைச் சட்டம் உருப்பெறவில்லை. வழமைகளின் தொகுப்பாகவே தேசவழமை வருகின்றது. அவ்வாறெனில் வழமைகளில் ஏற்படும் மாற்றங்களிற்கேற்ப அச் சட்டத்தை எவ்வாறு இற்றைப்படுத்தலாம்? வழக்காறுகள் எழுத்தில் தொகுக்கப்பட்டதன் பின்னரேயே இந்தப் பிரச்சினை எழுகின்றது. தேசவழமைக்கும் இது பொருந்தும்.

இன்று நாம் தேசவழமைச் சட்டம் எனக் கருதுவது 1707 ஆம் ஆண்டு அப்போதைய ஒல்லாந்த ஆளுநர் ஜோன் சைமன்ஸ் என்பவரது உத்தரவின் பெயரில் கிளாஸ் ஐசாக்ஸ் (Class Issakz) என்பவரால் தொகுக்கப்பட்டது [7]. அதேவருடம் ஜான் பைரஸ் (Jan Piras) என்பவர் இந்தத் தேசவழமைக் கோவையினைத் தமிழில் மொழிபெயர்த்தார். கிளாஸ் ஐசாக்ஸ் தன்னால் தொகுக்கப்பட்ட தேசவழமைக் கோவையைப் பரிசீலனை செய்வதற்காக அப்போது யாழ்ப்பாணத்தில் வாழந்த / சேர்ந்த கல்வி அறிவு உள்ள முதலியார்கள் பன்னிருவரிடம் அதனைக் கொடுத்திருந்தார். இந்தப் பன்னிரெண்டு முதலியர்களும் இக்கோவையைப் வாசித்துப் பார்த்ததன் பின்னர் எந்தத் திருத்தத்தையும் முன்மொழியவில்லை. இந்த முதலியர்கள் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பைச் சரிவரச் செய்யவில்லை என்றே தோன்றுகின்றது. ஐசாக்ஸ் இன் வேண்டுகோளிற்குப் பதிலளிக்கும் விதத்தில் அப்பன்னிருவரும் கூட்டாக எழுதிய கடிதத்தில், ‘தவறிழைத்ததன் காரணமாக ஆங்கிலேயரது சிறைகளில் இருந்த தமது அடிமைகளைப் பேணும் பொருட்டு ஆங்கிலேயரால் தம்மிடம் இருந்து அறவிடப்படுகின்ற பணம் மிதமிஞ்சியது’, என்ற விண்ணப்பத்தைப் பற்றியதாகவே இருந்தது. தொகுக்கப்பட்ட தேசவழமைக் கோவையைப் பற்றிக் காத்திரமாக இவர்கள் ஒன்றையும் சொல்லி இருக்கவில்லை. ஆகவே ஐசாக்ஸ் தொகுத்த வடிவத்திலேயே கோவை பாவனைக்கு வந்தது. பின்னர் ஆங்கிலேயரது காலத்தில், 1799 இல் வெளியிடப்பட்ட பிரகடனம் ஒன்றின் மூலம் தமது (ஆங்கிலேயரது) கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நிலவுகையிலிருந்த சட்டங்களை அங்கீகரிப்பதாக உறுதியளித்ததன் தொடர்ச்சியாக, 1806 இல் தேவசழமைக் கோவையை ஆங்கிலேயர் அங்கீகரித்தனர்.

ஒல்லாந்தரது காலத்திலேயே ஆங்கில மொழிபெயர்ப்பொன்று செய்யப்பட்டதாயினும் அம் மொழிபெயர்ப்பினது மொழித்தரம் திருப்திகரமானதாக இல்லை எனக் கருதி 1806 இல் இலங்கையின் பிரதம நீதியரசராக இருந்த அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் துரை (Sir Alexander Johnstone) அவர்களால் புதிதாக ஒரு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. அந்நேரத்தில் அவர் இது தொடர்பில் அரசாங்கத்திற்கு அனுப்பிய அறிக்கையொன்றில் ‘வேறெந்த மக்கள் கூட்டம் போன்றல்லாது தமிழர்கள் தமது பண்டைய நிறுவனங்களில் அதீத பற்றுடையவர்களாக இருக்கின்றனர்’ எனக் குறிப்பிட்டிருந்தமை நோக்குதற்குரியது. மேலும் ஆங்கிலேயர்களது நீதி பரிபாலனத்தின் மீது அம்மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமெனின் அவர்களது மரபுகளை நீதிமன்றங்கள் இறுக்கமாகப் பேண வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். தமது ஆட்சி தொடர்பிலான ஏற்புடைத்தன்மையை தமிழ் மக்கள் மத்தியில் உறுதி செய்வதற்கு தேசவழமையைப் பின்பற்ற வேண்டும் என ஆங்கிலேயர் கருதியமையைக் கவனிக்க வேண்டும்.

அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனது முயற்சியால் இவ்வாறாக மொழிபெயர்க்கப்பட்ட கோவையின் பிரதிகளை அவர் அனைத்து நீதிமன்றங்களிற்கும் அனுப்பி வைத்ததோடு தமிழில் மொழிபெயர்த்து அவற்றை பனையோலைகளில் எழுதுவித்து கிராமத் தலைவர்களுக்கு அவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் சாதாரண மக்களுக்கு விளங்கப்படுத்துமாறு கூறி விநியோகம் செய்தார். இதன் பின்னராக ஆங்கிலேயரது காலத்தில் 1911 இலும் 1947 இலும் [8] கொண்டுவரப்பட்ட சட்டங்கள் மூலம் தேசவழமைச் சட்டத்திற்கு சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

தேச வழமைக் கோவையில் உள்ளடக்கப்பட்டவை தேச வழமை தொடர்பிலான பூரணமான கோவையாகக் கருதப்படுவதற்கில்லை. ஆங்கிலேயரது காலத்து நீதிமன்றங்களில் ஏதேனும் விடயம் தொடர்பில் தேசவழமைக் கோவையில் பதில் பெற முடியாதவிடத்து அவ்விடயம் தொடர்பிலான மரபுசார் வழக்காற்றை விசேட சாட்சிகளின் (Expert Witness) கூற்றுக்களின் வாயிலாக ஸ்தாபிக்கலாம் என்ற நடைமுறை இருந்தது [9]. எனினும் வழக்கின் எத்தரப்பினால் நீதிமன்றத்திற்கு சாட்சி அறிமுகப்படுத்தப்பட்டதோ அத்தரப்பிற்குச் சாதகமான வகையில் சாட்சிகள் வழங்கப்பட்டதாகப் பரவலாகக் கருதப்பட்டு இம்முறை கைவிடப்பட்டது. அதனால் இவ்வாறாக தேசவழமைக் கோவைக்கப்பால் உள்ள தேசவழமை மரபுகளைச் சட்டத்தினால் / நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போனது. இன்று, தேசவழமைக் கோவையில் இடைவெளிகள் இனங்காணப்படும் போது தேசவழமைச்சட்டத்தின் பொதுவான பண்புகளை வைத்து நீதிமன்றம் முடிவொன்றுக்கு வர முயற்சிக்கும். இல்லாவிடின் ரோமன் - டச்சுச் சட்டத்தை வைத்து இடைவெளி நிரப்பப்படுகின்றது. மேலைத்தேய சட்டமொன்றை வைத்துத் தேசவழமையில் இருக்கின்ற ‘இடைவெளிகளை’ நிரப்ப முயற்சிக்கின்றமையானது தேசவழமைச் சட்டத்தின் சுயாதீனத்தைப் பாதிப்பதாக உள்ளது. உண்மையில் ‘இடைவெளிகள்’ என்று பேச வேண்டி வந்ததே தேசவழமை கோவைப்படுத்தப்பட்டதனாலேயே. காலம் காலமாக, காலத்திற்கேற்ற வண்ணம் இயைபடைந்து வளர்கின்ற ஓர் முறைமையில் ‘இடைவெளிகள்’ இருப்பதில்லை. ஆனால் எழுத்துருவாக்கத்தை நாம் முற்றிலுமாக வேண்டத்தகாததாகவும் பார்க்க முடியாது. எழுத்துருவாக்கம் செய்யப்படாதிருப்பின் விரைவாக நவீன மயப்பட்டுக் கொண்டிருந்த அரச கட்டமைப்பில் தேசவழமை என்பது முற்றிலுமாக அழிந்து போயிருக்கலாம். ஆகவே எழுத்துருவாக்கம் என்பதைத் தவிர்க்க முடியாத ஒன்றாகவே நாம் பார்க்க வேண்டும். ஆனால் எழுத்துருவாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட இரண்டு பிரச்சினைகளே தேச வழமையைச் சீர்திருத்த வேண்டும் என்ற முன்மொழிவுக்கு இட்டுச் செல்கின்றன என்பதனையும் கவனிக்க வேண்டும். முதலாவது தேசவழமை எழுத்துருவாக்கம் செய்யப்பட்ட காலகட்டத்திலிருந்த  சமூகத்தையே தேசவழமை பிரதிபலிக்கின்றது என்ற பிரச்சினை. இரண்டாவது தேசவழமைக் கோவையானது யாழ்ப்பாணத் தேசவழமை என்று ஒல்லாந்தர் கருதிய விடயங்களையே உள்ளடக்குகின்றது என்பது.



# இலங்கைப் பாராளுமன்றத்தினால் தேசவழமையைத் திருத்த முடியாதா?


இலங்கைப் பாராளுமன்றம் தமிழர் விடயங்களைக் கையாள்வது தொடர்பில் தமிழர்கள் மத்தியில் ஓர் ஏற்புடைத் தன்மைப் பிரச்சினை (legitimacy problem) இருப்பது ஏற்கனவே குறிப்பால் உணர்த்தப்பட்டது. இலங்கைப் பாராளுமன்றத்தில் முடிவுகள் எடுக்கப்படுவது  முற்றிலும் ஓர் பெரும்பானமை முடிவெடுக்கும் முறையைப் (majoritarian decision-making) பின்பற்றியதாகும். ஆகவே பாராளுமன்றம் தேசவழமையை இற்றைப்படுத்தும் முயற்சியை நியாயமாகச் செய்யும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. மேலும் அரசிற்கு முந்திய சட்டம் என்ற வகையில் தேசவழமையை இற்றைப்படுத்தும் தார்மீக உரிமையும் இலங்கைப் பாராளுமன்றத்திற்கில்லை.  முன்னர் குறிப்பிட்டவாறு 1947 இற்குப் பின்னர் இலங்கைப் பாராளுமன்றத்தினால் தேசவழமைச் சட்டத்தைத் திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற நிலைமைக்கு மேற்சொன்ன காரணங்களும் பங்களித்துள்ளனவா என்பது ஆராயத்தக்கது.

அனைத்து மரபுசார் சட்டங்களையும் ஒழித்து அதன் கூறுகளை உள்ளடக்கியதாக ஓர் சீரான சிவில் கோவையை (ரnகைழசஅ உiஎடை உழனந) ஒன்றை உருவாக்க முடியாதா என்ற கேள்வி கேட்கப்படுகின்றது. அப்படியானதோர் முயற்சியின் விளைவாக உருவாக்கப்படும் கோவை இந்த நாட்டில் அரசியலில் மேலாண்மையைக் கொண்டிருக்கும் சமூகத்தின் சமூக வழக்காறுகளையே கூடுதலாகப் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் இத்தகைய சிவில் கோவையை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதனை அரசியல் புலத்தில் வலியுறுத்துபவர்கள் அதிதீவிர வலதுசாரி இந்துத்துவ கட்சிகள் என்பது கவனிக்கத்தக்கது. இலங்கையில் இத்தகைய கோரிக்கைகள் ஜாதிக ஹெல உருமய போன்ற கட்சிகளிடமிருந்து வெளிக்கிளம்புவதையும் நாம் அவதானிக்க வேண்டும்.

சட்டத்தில் பல்வகைமையை (uniform civil code) கண்டு அச்சப்படுகின்ற அல்லது விரும்பாத மனப்பான்மை தான் இத்தகைய ஒரு சீரான சிவில் கோவையொன்றுக்கான கோரிக்கையின் அடிப்படையாக இருக்கின்றது. சட்டப் பல்வகைமையானது தனித்துவங்களை அங்கீகரிக்கும் தன்மையது. பல்தேசிய (legal pluralism)[10] நாடொன்று சட்டப் பல்வகைமையை அங்கீகரிக்கும். இலங்கையைப் பல்தேசிய நாடொன்று என்று அங்கீகரிக்க மறுக்கும் நிலை இருக்கும் வரை, ஒரு தேசியக் கொள்கையைக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் சமூகத்தாலும் அதன் பாராளுமன்றத்தினாலும் மற்றையவொரு தேசியத்தின் மரபுச் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதனை அனுமதிக்கக் கூடாது.



# நீதிமன்றங்களினால் தேசவழமைச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரமுடியாதா?


சட்டத்தின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியில் நீதிமன்றங்களிற்கு குறிப்பாக உயர் நீதிமன்றங்களிற்கு (Superior courts) பெரும் பங்கு உண்டு. நீதிபதிகளால் தீர்ப்புக்களின் வாயிலான இயற்றப்படுகின்ற சட்டம் (Judicial - law making) இன்று சட்டவாக்கத்தில் பெரும் பங்காற்றுகின்றது. கனடாவிலும் ஸ்கொட்லாண்டிலும் மரபுசார் அல்லது ஓர் குறிப்பிட்ட சமூகம் தொடர்பான தனித்துவமான சட்டங்கள் இருப்பதாக இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்விரு இடங்களிலும் நீதிமன்றங்கள் அத்தகைய தனித்துவமான சட்டங்கள் தொடர்பில் எவ்வாறு செயற்படுகின்றன எனப் பார்த்த பின் இலங்கை நீதிமன்றங்கள் தொடர்பில் பார்ப்பது நன்று.

கனடாவின் உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதியரசர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் மூவர் கியூபெக்கைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் [11]. கியூபெக்கில் கனடாவின் மொத்த  சனத்தொகையின் 24 சதவீதமானோரே வாழ்கின்ற போதிலும் அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் 1/3 ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. கியூபெக் சிவில் சட்டத்தைப் பின்பற்றுகின்ற அடிப்படையில் இவ்வேற்பாடு நியாயப்படுத்தப்படுகின்றது. கியூபெக் சிவில் சட்டம் தொடர்பில் வருகின்ற மேன்முறையீடுகள் யாவற்றையும் ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு விசாரிக்கும். இவ் ஐவருள் மூவர் கியுபெக்கைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி.

ஐக்கிய இராச்சியத்தினது உச்ச நீதிமன்றத்தின் பதவி வகிக்கின்ற 12 நீதிபதிகளில் இருவர் ஸ்கொட்லண்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது மரபாக இருந்து வருகின்றது. ஐவரைக் கொண்ட உச்ச நீதிமன்றின் குழுவொன்று ஸ்கொட்லாண்டிலிருந்து வரும் மேன்முறையீடுகளை விசாரிக்கும் போது அந்த ஐவருள் இருவர் இந்த இரண்டு ஸ்கொட்டிய நீதிபதிகளாக இருக்க வேண்டும் என்பதும் மரபாக இருந்து வருகின்றது. இவ்வாறான ஏற்பாடு இருக்கின்ற போதிலும் ஸ்கொட்டிய தேசியவாத கட்சியினர் (ஸ்கொட்லண்டின் ஆளும் கட்சி) அண்மைக் காலத்தில் இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றமானது தேவையற்ற வகையில் ஸ்கொட்டிய நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் தலையிடுவதாக குற்றஞ் சாட்டுகின்றனர் [12]. உச்ச நீதிமன்றில் பதவி வகிக்கும் ஸ்கொட்டிய நீதிபதிகளும் ‘இங்கிலாந்தின் மனநிலையில்’ இருந்து செயற்படுவதாக ஸ்கொட்லாண்டின் தேசியவாதிகள் கருதுகின்றனர்.

இங்கிலாந்திலும் கனடாவிலும் இவ்வாறாக நீதிமன்றங்களின் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகளிற்கு நிகரான ஏற்பாடுகள் இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் இல்லை. தேசவழமை தொடர்பிலோ முஸ்லிம் சட்டம் தொடர்பிலோ வழக்கொன்று விசாரணைக்கு  வரும் போது தமிழ், முஸ்லிம் நீதிபதிகள் அவற்றில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை. இது தொடர்பில் ஏற்படக்கூடிய சிக்கல்களை 1986 - 1988 இல் தீர்க்கப்பட்ட வழக்கொன்றிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம் [13].

முஸ்லிம் தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்ட பிள்ளை ஒன்றிற்கு அத்தம்பதிகளின் இறப்பிற்குப் பின்னர் அவர்களது சொத்துக்களின் மீதான உரித்து உண்டா என்ற கேள்வி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னர் வந்த போது, உண்டு எனப் பெரும்பான்மையான நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். (நீதியரசர் செனவிரட்ண மற்றும் நீதியரசர் சிவா செல்லையா) ஆனால் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த நீதியரசர் ஒருவர் (நீதியரசர் ஜமீல்) பெரும்பான்மையினரது தீர்ப்போடு உடன்படாமல் புனித குரானில் இது தொடர்பில் சொல்லப்பட்டுள்ளவை பற்றிய நீண்ட விளக்கமளித்துத் தனித் தீர்ப்பொன்றை - தத்தெடுத்த பிள்ளைக்கு உரிமை இல்லை - எனத் தீர்ப்பளித்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட போது நீதியரசர் ஜமீலின் தீர்ப்பை அடியொற்றி பிரதம நீதியரசர் சர்வானந்தா தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்போடு வேறு மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் இணைந்து கொண்டனர். இந்தத் தீர்ப்போடு இணங்காத ஒரேயொரு உச்சமன்ற நீதிபதி, நீதியரசர் வனசுந்தர மட்டுமே. நீதியரசர் வனசுந்தர ஒரு போற்றத்தக்க நீதியரசர். ஆனால் இந்த நீதியரசர் வனசுந்தரவே முன்னர் 13 ஆம் திருத்தம் அரசியலமைப்போடு இயைபானதா என்ற வழக்கின் போது தான் வழங்கிய தீர்ப்பில் மாகாணங்களுக்கு சட்டவாக்க அதிகாரம் வழங்கப்படுமானால் வடக்கு கிழக்கில் உள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு விடும் என்ற கவலையைத் தனது தீர்ப்பிலேயே தெரிவித்தவர் [14]. நீதியரசராக இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் இவர் சிங்கள அதிதீவிர தேசியவாத மேலாண்மைவாதிகளால் அமைக்கப்பட்ட சிங்கள ஆணைக்குழுவிற்குத் தலைமை வகித்து இலங்கை அரசின் ஒற்றையாட்சி முறைமைகளில் மாற்றங்கள் கொண்டுவரக் கூடாது என அறிக்கை எழுதினார். நீதியரசர் வனசுந்தர மேற்படி வழக்கின் தீர்ப்பை சிங்கள மேலாண்மை மனநிலையிலிருந்து எழுதினார் என்பதைத் திடமாகக் கூற முடியாது. அவ்வாறு எழுதவில்லை என்றும் உறுதியாகக் கூற முடியாது. இலங்கை உச்ச நீதிமன்றத்திடம் தேச வழமையை வளர்த்தெடுக்கும் பொறுப்பை விடுவதில் உள்ள சிக்கலுக்கு இந்த வழக்கு நல்லதோர் உதாரணம் என்பதையே இந்தக் கட்டுரையாளர் சொல்ல வருவது.



# தேச வழமையைத் திருத்தம் செய்யக்கூடியது யார்?


ஒரு சமூகத்தினது வழக்காறுகளை அந்தச் சமூகம் தான் திருத்த வேண்டும். மாற்றங்கள் என்பது உள்ளிருந்து வரும் போது தான் அம்மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படும. தேச வழமையைத் திருத்துவதும் தமிழ்ச் சமூகமாகவே இருக்க வேண்டும். நவீன அரச கட்டமைப்பில் இதற்கான வழிமுறை தமிழர்களுக்கான சுயாட்சி அலகு ஒன்றின் மூலமாக வரவேண்டும். இந்த சுயாட்சி அலகுக்கு வழங்கப்படுகின்ற பொறுப்புக்களில் ஒன்றாக விசேட சட்டங்களைத் திருத்துதல் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் தமிழருக்கான சுயாட்சி அரசாங்கம் ஒன்றை அமையப் பெறும் போது பல்வேறு தரப்புக்களது ஆலோசனைகளைப் பெற்று ஓர் வெள்ளை அறிக்கை ஒன்று இது தொடர்பில் தயாரிக்கப்பட வேண்டும். அவ்வாறாக ஆலோசிக்கப்படுகின்ற தரப்பில் பெண்களும் தமிழர் மத்தியில் காணப்படும் ஒடுக்கப்படும் சமூகத்தவர்களுக்கும் கூடியளவு முக்கியத்துவம் வழங்க வேண்டும். இன்றைய தமிழ் சமூகத்தினது வழக்காறுகளை சமூக நீதியுடன் இயைபுபட்டதாக அமையும் வண்ணம் நாம் ‘புதிய தேசவழமை’ ஒன்றை உருவாக்கலாம்.

தமிழ்த் தேசம் என்று நாம் கருதுகின்ற சமூகம் எத்தகையது என்பது பற்றிய ஆக்கபூர்வமான கருத்துருவாக்கத்தை நாம் இன்றைய சூழ்நிலையில் செய்ய வேண்டும் என்பதனைப் பற்றி இக்கட்டுரையாளர் வேறொரு இடத்தில் வலியுறுத்தியுள்ளார். தமது அரசியலின் எதிர்காலம் தொடர்பில், முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு தமிழ் மக்கள் விரக்தியுற்றுள்ளவொரு சூழலில் அவ்விரக்தி நிலையை முறியடிப்பதற்கான சமூக ஒன்றுதிரட்டல் ஒன்று அவசியமானது. அந்த ஒன்று திரட்டல் ஆக்கபூர்வமானதாக இருத்தல் வேண்டும். தமிழ்த் தேசியம் என்பது வெற்றுக் கோசமாக அல்லாமல் எமது எதிர்கால ஆட்சியியலைப் பற்றி காத்திரமான பார்வைகளை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறானதொரு நிகழ்ச்சித் திட்டத்தின் ஓரங்கமாகவே இக்கட்டுரையாளர் தேசவழமை தொடர்பான ஓர் பரந்துபட்ட உரையாடலை நாம் செய்ய வேண்டியதான அவசியத்தை வலியுறுத்துகின்றார்.

தேசவழமை பற்றிய இந்தச் செயன்முறையில் இந்தத் தீவில் வாழும் அனைத்துத் தமிழர்களும் பங்குபற்ற முடியும். பெல்ஜியத்தில் ஆள்புல சமஸ்டிப் பாராளுமன்றம் என்பதற்கு மேலதிகமாக ஒவ்வொரு சமூகத்திற்கும் (அந்த சமூகத்தவர்கள் எங்கு வாழ்கின்றனர் என்ற வரையறைக்கப்பால்) சமூகப் பாராளுமன்றம் (Community Parliament) ஒன்றில் பங்குபற்றுவதற்கு ஏற்பாடு உண்டு [15]. இத்தகைய முறைமையைப் பற்றி நாம் சிந்திக்கலாம். மனமும் செயலூக்கமும் இருக்குமானால் தீர்வைத் தேடுவது கடினமான காரியமன்று. கிழக்கைச் சேர்ந்த தமிழர்களின் முக்குவர் சட்டத்தை துயிலெழுப்பவும் அதனை தேசவழமையைப் போன்று புத்துயிர் ஊட்டுவதற்கான வழிவகையைப் பற்றியும் சிந்திக்கலாம்.



# முடிவுரை


தேச வழமையின் இப்போதைய வடிவத்தையோ உள்ளடக்கத்தையோ ஓர் பழமைவாதப் பார்வையிலிருந்து இந்தக் கட்டுரை வக்காலத்து வாங்க முயற்சிக்கவில்லை. ஓர்மைப்படுத்தும் முயற்சிக்கெதிராகவும் பன்மைவாதத்தைப் பாதுகாக்கும் பார்வையிலுமே இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. தேசவழமையை சீர்திருத்துவதில் உள்ள வரைமுறைப் பிரச்சினைக்குத் துணிச்சலாக ஓர் தீர்வை முன்வைக்க முயற்சித்துள்ளது. வைக்கப்பட்டுள்ள தீர்வு நடைமுறைச் சாத்தியமானதா என்ற கேள்வி எழக்கூடும். நடைமுறைவாதத்தை முன்வைத்தால் இன்று எமது சமூகத்தின் மத்தியில் நிலவக்கூடிய அடக்குமுறைச் சூழலை ஒட்டியே சிந்திக்க வேண்டிவரும். அவ்வாறான சிந்தனை ஒடுக்குமுறைக்குத் துணை செய்வதாகவே முடியும்.



அடிக்குறிப்புக்கள்.
[1] LL.B (Hons) (Colombo), B.C.L (Oxford) ; சட்டத்தரணி
[2] உதயன், 04 நவம்பர் 2011
[3] இந்த விளங்கிக் கொள்ளல் தவறானது என்பதற்கு பார்க்க : Dr Shivaji Felix, ‘Introduction’ appearing in Dr. H.W. Thambiah, The Laws and Customs of the Tamils of Jaffna, (Revised Edition, Women’s Education and Research Centre, 2001), pp. vi-vii
[4] பார்க்க : Michael Keating, Plurinational Democracy: Stateless Nations in a Post Sovereignty Era (Oxford: Oxford University Press, 2001)
[5] இத்தகைய சட்டங்களை ‘மரபுசார் சட்டங்கள்’ என வகைப்படுத்துவது காலனியாதிக்கவாதிகளால் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்ட ஒன்று. தமது சட்டங்களை பிரதான நீரோட்டத்திற்கு உரியவை எனவும் தாம் காலனியாதிக்கத்திற்குட்படுத்திய மக்கள் சட்டங்கள் மரபுசார்ந்தவை என வகைப்படுத்தியதில் காலனியாதிக்க மனநிலை வெளிப்படுகின்றது.
[6] சிலோன் அல்லது சிறீலங்கா அரசு என்ற கருத்தாக்கத்தினது நவீன செயன்முறை வடிவம் 1815 உடன் ஆரம்பமாகின்றது எனலாம்.
[7] தேசவழமையைக் கோவைப்படுத்திய வரலாறு தொடர்பில் பார்க்க: H.W Thambiah, ‘The History of Codification’, (Chapter 2), n. 3.
[8] Jaffna Matrimonial Rights and Inheritence Ordinance of 1911 as amended by Oridnance no 58 of 1947.
[9] தேசவழமை தொடர்பிலான முத்துக்கிருஸ்ணா என்பவரது நூலில் மேற்கோள காட்டப்பட்ட Vyrewanadan v Vinasi, Kander v Ramaswamy போன்ற வழக்குகளை கலாநிதி. தம்பையா உதாரணமாகக் காட்டுகின்றார். n. 3இ p. 40இ 41
[10] Legal Pluralism தொடர்பான சுருக்கமானதோர் புலமைத்துவ ஆய்வுக்குப் பார்க்க :  Brian Z Tamanaha, ‘Understanding Legal Pluralism: Past to Present, Local to Global’, 29 Sydney Law Review (2007)
[11] பிரிவு 6, கனடிய உச்ச நீதிமன்றச் சட்டம்
[12] பார்க்க : Guardian, ‘Alex Salmond provokes fury with attack on UK Supreme Court’, 01 June 2011: http://www.guardian.co.uk/uk/2011/jun/01/alex-salmond-scotland-supreme-court
[13] Ghouse v Ghouse 1986 1 Sri. L. R 48 (Court of Appeal), 1988 1 Sri. L. R 25 (Supreme Court)
[14] In Re the Thirteenth Amendment to the Constitution 1987 2 Sri. L. R 312 at 364, 365, 366.
[15] பார்க்க : Ann L. Griffiths (Ed), Handbook of Federal Countries 2005 (Forum of Federations, 2005), pp. 58-72



[[ 1707 இல் ஒல்லாந்தரால் எழுத்து வடிவிற்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் குருபரன் குறிப்பிடுவது போன்று வழமைகளின் தொகுப்பாகவே இருந்திருக்கின்றது. அவ்வாறான வழக்கம் நெகிழ்ச்சியான மாற்றங்களுக்குட்படக்கூடிய நிலையிலேயே இருந்தது. ஒல்லாந்தரால் எழுத்தாவணமாக உருவாக்கப்பட்ட நிகழ்வின் மூலமான நிறுவனமயப்படுத்தல் - அதுவரையிலான நெகிழ்ச்சித்தன்மையைக் கட்டிப் போட்டது குறிப்பிடத்தக்கது. 1707 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்தவாறான பிற்போக்கான கூறுகளுடனேயே தேச வழமையின் நிறுவனமயமாதல் நிகழ்ந்தது. 30 அக்டோபர் 2003 தமிழீழ சட்டத்துறையின் முக்கியஸ்தரான பரராஜசிங்கம் தமிழ்நெட் இணையத்தளத்திற்கு கொடுத்த நேர்காணலில் தேசவழமை தொடர்பான பல முக்கியமான விடயங்களைக் குறிப்பிடுகின்றார். அதில் தமிழீழ சட்டவாக்கத்துறையினரால் தேசவழமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். அடிமைத்தனம், சாதியம் போன்றவை காலத்திற்குப் பொரித்தமற்றவை / அருவருப்பூட்டக்கூடியவை என்பதை மாற்றத்திற்கான காரணமாகக் குறிப்பிடுகின்றார். குருபரனின் கட்டுரை இவ்விடயங்களையும் தொட்டிருக்கலாம். - சசீவன் ]]

May 18, 2012

ஆறாவடு : சில விமர்சனக் குறிப்புக்கள்



சயந்தனின் 'ஆறாவடு' என்ற நாவல் ஈழத்து நாவல் வரிசையில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நாவல் என்ற வரிசையில் இடம்பெறும் என்பதை முதலில் குறிப்பிட வேண்டும். சில குறைகள் மற்றும் நாவலின் முதிர்ச்சியற்ற தன்மையைத் தாண்டி அதன் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடக்கூடியது அல்ல.

நாவல் வெளிவந்த நாளில் இருந்து வெளிவந்த விமர்சனங்கள் பெரும்பாலும் நாவலைப் பாராட்டியே அமைந்திருந்தன. ஈழத்துத் தமிழ்ச்சூழலில் இளைய தலைமுறையைச் சேர்ந்த புதிய நாவலாசிரியர் ஒருவரின் வருகையை மனப்பூர்வமாக வரவேற்பதற்காக தவறுகள் கண்டும் காணப்படாமல் விடப்பட்டிருக்கலாம். அதற்காக, இந்நாவல் குறைகளற்ற நாவலை என்று அர்த்தப்படுத்திவிட முடியாது. தவறுகள் சரியாகச் சுட்டிக் காட்டப்படும் போது, நிச்சயமாக ஆசிரியர் தனது அடுத்த நாவலை இன்னும் முதிர்ச்சியோடும் - தவறுகளை நிவர்த்தி செய்து வெளிக்கொணர்வார் என எதிர்பார்க்கலாம். ஆக, காழ்ப்புணவர்வற்ற தவறுகளைச் சரியாகச் சுட்டிக்காட்டக் கூடிய விமர்சனங்கள் மிக அவசியமானவை. நாவலை வாசிப்பதற்கு முன்னர் நாவல் தொடர்பாக வெளியாகிய பெரும்பாலான விமர்சனங்களையே முதலில் படித்துள்ளேன் என்ற வகையில், நாவலை வாசிக்கும் போது நாவல் தொடர்பான சித்திரமொன்று மனதில் இருந்தது. ஆக, எனது விமர்சனக்குறிப்புக்கள் பெரும்பாலும் நாவலுக்கான விமர்சனமாக மாத்திரம் அமையாமல், நாவல் மீதான விமர்சனங்களுக்கான விமர்சனமாகவோ அல்லது எவ்விடங்களில் அவ்விமர்சனங்களுக்குச் சமாந்தரமாகவும் விலத்தியும் எனது பார்வை அமைந்துள்ளது என்பதைச் சுட்டுவதாகவும் அமையும். இப்பதிவை முழுமையான விமர்சனமாக பார்க்காமல், நாவலுடைய சில அம்சங்கள் சார்ந்த விமர்சனக்குறிப்புக்களாக மாத்திரமே பார்க்க முடியும்.


# நாவலின் கட்டமைப்பு

ஆறாவடு என்ற இந்நாவல், பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பு போன்ற அமைந்திருப்பதாக விமர்சனம் சொல்லப்பட்டிருந்தது. நாவலின் முதல் நூறு பக்கங்களைப் படித்து முடித்தபோது அவ்வாறான எண்ணமே எனக்கும் ஏற்பட்டது. ஆயினும், நாவலைத் தொடர்ந்து வாசிக்கும் போது அவ்வெண்ணம் அடிபட்டுப் போய் நாவலாக முழுமை பெற்றுள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது. கதைப்பிரதி முழுமையாக பின்னநவீனக் கதை சொல்லல் முறை வடிவமான Nonlinear narrative முறையில் சொல்லப்பட்டுள்ளது. வாசகரே கதையைக் கோர்த்துச் செல்ல வேண்டிய நிலைக்கு 'ஆசிரியரால்' விடப்பட்டுள்ளார்.

எனது வாசிப்புத் தேர்ச்சியின் அடிப்படையில் ஒருசில அத்தியாயங்கள் தொடர்புபடுத்த முடியாமல் துருத்திக் கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றது. இது ஒரு தோல்வியடைந்த ஒரு வாசகரின் அனுபவமாகக் கூட இருக்கலாம். முக்கியமாக சிவராசனுடைய இடப்பெயர்வு அனுபவமும் தேவியின் கதையும் அக்காலப்பகுதியைப் பிரதிபலிகின்றதேயன்றி, நாவலுடன் பிற வகைகளில் தொடர்புறவில்லை. சற்று கவனமெடுத்திருந்தால் சகல 'கதைகளையும்' ஒன்றுடன் ஒன்றாகச் சரியாகக் கோர்த்திருக்கலாம். ஆசிரியர் அதனைச் செய்திருக்க வேண்டுமென்றில்லைத்தானென்றாலும், வாசகனின் கற்பனைக்காவது அதற்கான வெளியை உருவாக்கி விட்டிருக்கலாம். இவ்வகையான துருத்தல்கள் குறிப்பிட்ட காலப்பகுதியை மையமாகக் கொண்ட வெறும் சம்பவங்களின் தொகுப்பாக பிரதியை எஞ்ச வைத்துவிடுமோ என்ற அஞ்ச வைக்கின்றது.


# விவரணம்

அடுத்ததாக விவரணம் தொடர்பான விடயத்தைக் கவனித்தோமேயானால், பொதுவாக ஈழத்து நாவல்கள் பெரும்பாலானவற்றில் காணப்படும் குறை இந்நாவலிலும் காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. வாசகரைப் பிரதியுள் உள்வாங்குவதற்கு பெரும்பாலான ஈழத்து நாவல்கள் பின்னிற்கின்றன. தமது கதைகளைச் சொல்லி முடித்துவிட வேண்டுமென்ற அவாவில் சொல்லப்படுவது போன்று அமைந்திருப்பதை அவதானிக்கலாம். அவற்றால் வாசகருடன் ஊடாடவோ அல்லது வாசகரைத் தன்னுள் உள்வாங்கவோ முடிவதில்லை என்பது அவற்றின் மிகப்பெரும் குறையாகும். தீவிர இலக்கியகர்த்தாக்களால் வெகுஜன எழுத்தாளர் என்று கூறப்படும் செங்கை ஆழியான் இத்தடையக் கடந்து தனது நாவல்களைப் படைத்துள்ள போதிலும், தீவிர எழுத்தாளர்கள் இவ்விடயத்தில் திண்டாடுவதைத் தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்றது.

சோவியத் ரஸ்யாவின் நிலக்காட்சி தொடர்பான எவ்வித முன் அனுபவமுமற்ற எம்மால் சோவியத் இலக்கியங்கள் மூலமாக ரஸ்யாவில் வாழ முடிந்திருக்கின்றது. அதேநேரம். எம்மால் எப்போதும் எமது நிலப்பரப்பில் - எமது நிலப்பரப்பிற்குத் தொடர்பில்லாத வாசகர்களை வாழ வைக்க முடிவதில்லை. எமது நிலவரைவியலை விளங்கப்படுத்தவோ அல்லது எமது நிலப்பரப்புக்களில் வாழவைக்கவோ வேண்டுமென்றால், நாம் 'வெகுஜன' எழுத்தாளர்களிடம் செல்ல வேண்டியிருப்பது துரதிஸ்டவசமே. இதுதான் ஈழத்து நாவல்களின் நிலமை. மிக முக்கியமாக - எமது வாழ்வியலுடன் மிகவும் ஆழமாகத் தொடர்புபட்ட ஈழப்போராட்டம் தொடர்பான விடயங்களை முதன்மைப்படுத்திய நாவல்களில் இப்போதாமையை நன்குணர முடிகின்றது. எமது துயரங்கள் நிறைந்த வாழ்வு முழுமையும் செய்திக்குறிப்புக்களிலும் - ஆய்வுகளிலும் - அரசியல் ஆவணங்களிலும் - அவதூறுகளிலும் வாழுமாறு சபிக்கப்பட்டிருப்பது துரதிஸ்டவசமானது.


# சம்பவங்களின் உண்மையும் பொய்யும்.

புனைவுகளில் காலத்தைக் கலைத்துப் போடுதல் - சம்பவங்களைக் குலைத்துப் போடுதல் - உண்மையையும் பொய்யையும் கலந்து கொடுத்தல் தொடர்பான விடயங்களில் தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களும் நெடுங்காலமாக குழப்பத்தில் இருக்கின்றார்கள். கதாசிரியர்கள் தமது அனுபவக்குறைவு - ஆய்வுப் போதாமை போன்றவற்றை நியாயப்படுத்த மாயயதார்த்தவாதம் - பின்னவீனத்துவம் போன்றவற்றைத் துணைக்கிழுப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சயந்தனின் நாவல் தவல்பிழைகளையும் - முரண்களையும் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. அதனை, தத்துவங்களைக் கொண்டு சரிசெய்யும் ஆசிரியர்கள் போல் செயற்படமாட்டார் என நம்புவோம்.

ஜூலை மாதத்தில் நெல்லுகள் பற்றியெரியும் காட்சியும் 2002 இல் போய்ஸ் பட இறுவட்டுக்களை எரிக்கும் காட்சியும் 'சம்பவங்களையும் காலத்தையும் புனைவுகளூடாகக் கலைத்துப் போடுதல்' வகைப்பட்டது என்று புருடா விட முடியாது. 'நொன்-லீனியர்' மற்றும் 'காலத்தைக் கலைத்துப் போடுதல்' தொடர்பாக இதை விட்டால் சிறுமைப்படுத்தும் செயற்பாடுகள் வேறெதுவும் இருக்க முடியாது.

மிக அண்மையில் சோபாசக்தி எழுதிய கப்டன் கதையில் வரும் ஒரு சம்பவம் தொடர்பாகவும் இதேமாதிரி சில விமர்சனங்கள் முன்வைக்கபப்ட்டது. 'சோபாசக்தி அடிச்ச ஆட்லறி' என்று ஒரு பதிவும் எழுதியிருந்தேன். புனைவென்றால் அப்படித்தானிருக்கும் என்றவாறாக சில விமர்சகர்களாலும் ஆய்வாளர்களாலும் எனது பதிவும் பல்வேறுபட்டோரது விமர்சனங்களும் எதிர்கொள்ளப்பட்டது, அறியாமையின் உச்சமென்றே கருத வேண்டும். இவ்வாறான கருத்துக்கள் இன்றைக்கும் ஏராளமான மானிடவியல் ஆய்வுகளைத் தரவுகளாகக் கொண்டு கடின உழைப்பின்பால் உருவாக்கப்படும் காவல்கோட்டம் போன்ற பிரதிகளையும் அவற்றை உருவாக்கும் நாவலாசிரியர்களையும் மறுப்பது போலாகிவிடும்.


# நாவல் எதிர் சிறுகதை

நாவலுக்கும் சிறுகதைக்குள் உள்ள வேறுபாடுகள் தொடர்பாகவும் சில விடயங்களையும் இந்நாவலுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. புனைவிற்கு வடிவமேயில்லை - நாவல்/கவிதை/சிறுகதை என்ற வடிவங்களே அபத்தம் என்ற பிரகடனங்களுக்கும் புனைவு / அ-புனைவு என்ற வேறுபாடே சுத்த பைத்தியக்காரத்தனம் என்ற பிரகடனங்களுக்கும் பின்னரான காலத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றோம். மேற்கூறிய கருத்தியல்கள் தோன்றிய காலம் / தேவை / சூழல் போன்றவற்றையும் அக்கருத்தியல்களில் அடியிலோடும் கனதியையும் விளங்கிக் கொள்ளாமல் வழமை போன்று எளிதாக விளங்கிக் கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்டதன் பின்னரே இவ்விடயத்திற்குள் செல்ல முற்படுகின்றேன்.

சிறுகதையை எழுதுவதற்கு நீங்கள் ஒரு கத்தியுடன் எளிதாகக் களமிறங்கிவிட முடியும். குயுக்தியான - சகலதையும் நிராகரிக்கும் - குரூர மனம், நீங்கள் சிறுகதை ஆசிரியராக இருப்பதற்குத் தடையாக இருக்கப்போவதில்லை. மிகச்சிறந்த புத்திசாலி / தந்திரசாலி ஒருவரால் ஒரு சிறந்த சிறுகதையைப் படைத்துவிட முடியும். ஆனால், ஒரு நாவலை எழுதுவதற்கு மேலதிகமான சில தகைமைகள் தேவைப்படுவதாகவே நினைக்கின்றேன். தெளிவான பார்வையும் சகலதையும் தவறுகளுடன் அங்கீகரிக்கும் மனநிலையும் தாய்மையுணர்வும் அவசியமானதெனத் தோன்றுகின்றது.

ஏற்கனவே கூறியபடிக்கு ஈழத்து நாவல்களில் நாம் சில போதாமைகளைத் தொடர்ச்சியாகத் தேடிக் கொண்டிருக்கின்றோம். எம்மால் நல்ல சிறுகதைகளை எழுதிவிட முடிகின்ற போதிலும் ஏன் நல்ல நாவல்களை உருவாக்க முடிவதில்லை என்ற கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது. எமது வாழ்வு முழுமையும் போராட்டச் சூழலுக்குள் அமைந்ததன் காரணமாக, சற்று அதிகமாகவே சமூகமும் மனிதர்களும் அரசியல் மயப்பட்டுள்ளது. அரசியல் என்ற கத்தியால் சிறுகதையை வேண்டுமானால் சீவிச்செதுக்கிவிட முடியும். ஆனால், நாவலில் அவ்வாறான அணுகுமுறை சாத்தியமில்லை. இதுதான், இவ்வளவு துயரங்கள் நிரம்பிய வாழ்வைக் கொண்டுள்ள ஈழத்தில் இருந்து வரவேண்டிய நாவல்கள் வராமல் போனதற்கான காரணமோ தெரியவில்லை.

மேலும், சற்றுப் பெரிய சிறப்பான சிறுகதைகளை வெளியிட்ட சோபாசக்தியை நாவலாசிரியர் என்று கொண்டாடியது எமது சமூகத்தில் எவ்வாறான தவறான முன்னுதாரணமாகப் போகின்றது என்பதை இனிமேல் தான் அனுபவிக்க வேண்டும் போலுள்ளது. அரசியல் சம்பவங்களின் கோர்வையால் ஒரு நாவலைப் படைத்துவிட முடியும் என்ற துணிவு சயந்தனிற்குச் சோபாசக்தியிடமிருந்தே கிடைத்திருக்கும் என நம்புகின்றேன். நாவல் எழுதுவதற்கு அரசியல் கருத்துக்களும் சம்பவங்களும் போதுமானவை அல்ல என்பது எனது கருத்து. சமூகம் தனியே மனிதர்களாலும் அரசியலாலும் நிரம்பிய எளிய சூத்திரமல்ல.


# சயந்தனுடையதும் ஆறாவடுவினதும் இடம்

சயந்தனின் நாவலை, ஈழத்து நாவல் வரிசையிலும் - சயந்தனை ஈழத்து நாவலாசிரியர் வரிசையிலும் எவ்விடத்தில் வைத்துப் பார்ப்பது என்ற விவாதங்களைச் சில இடங்களில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. பல்வேறு உரையாடல்களில் சோபாசக்தியுடன் ஒப்பிடுவது நிகழ்திருக்கின்றது. எனது கணிப்பின்படி, சிறுகதைகளில் சோபாசக்தியை எப்போதுமே முந்த முடியாத சயந்தன், நாவல் வரிசையில் முதிர்ச்சியின்மை என்ற விடயத்தைத் தாண்டி - உயரத்தில் நிற்கின்றார் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டியுள்ளது. அதேநேரம், விவரணம் சார்ந்து செங்கை ஆழியான், விமல் குழந்தைவேல் போன்றோருடைய நிலவரைவில் மனதில் அகலாமல் உள்ளது போன்று, சயந்தனுடைய நாவலின் பின்புலம் மனதில் பதியவில்லை.

இவ்விடத்தில் புதியதோர் உலகம் என்ற கோவிந்தனது நாவலைக் குறிப்பிட வேண்டியுள்ளது. அரசியல் முதன்மையான நாவலென்றாலும் கூட, மிகச்சிறந்த நாவலாக புதியதோர் உலகத்தைத் தயக்கமின்றிக் குறிப்பிடலாம். போராட்டம் மற்றும் மனிதநேயம் தொடர்பான கோவிந்தனது பார்வைகளே அவரால் இவ்வாறான உன்னதமான நாவலைப் படைக்க முடிந்தது. 'அனார்கிஸ்ட்' இற்குரிய மனநிலையில் இருந்து அரசியல் பிரதிகளை தொடர்ச்சியாக பிரசவிக்க முடியுமே தவிர, நிச்சயமாக நல்ல நாவல்களை உருவாக்கிவிட முடியாது. வாழ்வைக் குரூரமாக அல்லாமல் மிகவும் திறந்த மனதோடு எதிர்கொள்ளுவது அவ்வளவு இலேசானது அல்ல. வாழ்வில் நாம் காணும் அசமத்துவங்களையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ளும் போதெல்லாம் வெறுமனே எதிர்ப்பை வெளிப்படுத்திவிட்டோ அல்லது வெறுப்பை உமிழ்ந்துவிட்டோ அப்பால் நகர்ந்து செல்வதும் - பின்பு அந்த யதார்த்தத்திற்குள் எம்மைத் தொலைத்து விடுவதுமே பல புரட்சியாளர்களின் கதையாக இருப்பதை கண்ணால் கண்டு கொண்டிருக்கின்றோம். மாறாக, கோவிந்தன் ஒடுக்குமுறைகளின் யதார்தத்தை ஏற்றுக் கொண்டு அதற்கெதிராகப் போராடும் வலுவையும் மனநிலையையும் கொண்டுள்ளார். இன்னும் சொல்லப்போனால் அதற்குத் தேவைப்படும் உழைப்பையும் கொடுக்கக்கூடிய போராளியாக மனதில் நிற்கின்றார். இதனால் தான் 'புதியதோர் உலகம்' என்ற நாவலை ஈழத்து போராட்ட அரசியல் நாவல்களில் அளவுகோலாக என்னால் கொள்ள முடிகின்றது. எனது அளவுகோல் சகலருக்கும் இருக்க வேண்டுமென்ற எந்த கட்டாயமும் யாருக்கும் இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது.

பிரதியின்பம் மட்டும் நாவலாகிவிடாது. அவ்வாறெனில், நாம் ராஜேஸ்குமாரையும் பட்டுக்கோட்டைப் பிரபாகரையும் நல்ல நாவலாசிரியர்கள் என்று கூறிவிடுவோம். தமிழ்நாட்டு வாசகர்களை முதன்மையாகக் கொண்ட தமிழ் வாசகப்பரப்பு தனக்கு அண்மையில் உள்ள நிலப்பரப்பின் - தன்னில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சூழலை அறியப் பேராவல் கொண்டுள்ளது. இங்கேதான், ஈழத்து நாவல்கள் - அதுவும் அரசியல் பிரதிகள் - அவற்றின் தவறுகளுடன் கொண்டாடடப்படுவது நிகழ்கின்றது. சாகசம் நிரப்பிய கதைகள் தமிழ்ப்பரப்பில் நல்லகதைகளாக நிலைபெற்றுவிட்டன. அதாவது, இன்றைய நிலையில் ஈழத்தின் நிலவரத்தை அதன் நிலவரைவியலுடன் - ஈழத்துப் பண்பாட்டு வாழ்வியலுடன் கூறுவதை விட - ஈழத்தின் சாகசங்களையும் ஈழத்தின் துயரங்களையும் தமிழ்நாட்டு வாசகர்களுக்குக் கூறுவதே இலக்கியம் என்றாகிப் போனது துரதிஸ்டவசமான நிலையென்பேன். இச்சூழல், தொடர்ச்சியாக ஈழத்தில் தமிழ்நாட்டுக்குக் 'கதை' சொல்பவர்களையே உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

சயந்தனிடம் தமிழ்நாட்டிற்குக் கதை சொல்லும் அணுகுமுறை காணக்கிடைப்பதாகச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. இதனை அவர் நிவர்த்தி செய்து, தனது அடுத்த நாவலைப் படைப்பார் என நம்புகின்றேன்.


# நாவல் விருத்தியடைந்த சூழல்

ஒரு போராளியின் வாழ்வினூடாக இந்நாவல் வளர்ந்து செல்கின்றது. இந்நாவலின் ஊடாக சமூகத்தில் சாதாரண தரத்தில் உள்ள போராளியின் நிலையைத் உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. போராளி எப்போதும் அதிகாரம் நிரம்ப்ப பெற்றவன் என்ற பொதுப்புத்தியை ஆசிரியர் கடந்து செல்கின்றார். போராளிகளுடைய அளவற்ற அதிகாரங்கள் தொடர்பான உரையாடல்களை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் 1990 களுக்கு முன்னர் இயக்கங்களில் இருந்தவர்களும் - அதன் பின்பு ஈழச்சூழலில் இருந்து அந்நியப்பட்டவர்களுமேயாவார்கள். 1990 களின் பின்னர் நிறுவனமயப்பட்ட ஒரேயொரு போராளி இயக்கத்தில் இருந்த சாதாரண போராளியொருவர் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே கொண்டிருந்தார் என்பதை எமது அனுபவத்தில் கண்டிருக்கின்றோம்.

ஆறாவடுவில் வரும் பிரதான பாத்திரமான போராளி, பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கும் நிரம்பப்பெற்ற சாதாரணனாகவே வந்து செல்கின்றார். ஒரு போராளியின் அன்றாட வாழ்க்கையை சயந்தனால் மிகைப்படுத்தப்படாமல் பதிவுசெய்ய முடிந்திருக்கின்றது. போராளி தான் சார்ந்த அமைப்பை நம்புவதும் - அதனை வெறுப்பதும் - அதனை நக்கலடிப்பதும் - அதனால் தண்டனைக்குட்படுத்தப்படுவதும் யதார்த்தபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நாவலின் பின் காலப்பகுதியைத் தவிர மிகுதியான - பெரும்பாலான காலப்பகுதியை நானும் பகிர்ந்து கொண்டுள்ளேன் என்பதன் அடிப்படையிலும் குறித்த காலப்பகுதியில் வசித்த ஒருவருக்கு இருக்கக்கூடிய அனுபவங்கள் என்ற வகையிலும், பல்வேறுபட்ட விடயங்களை மீள ஞாபகப்படுத்திப் பார்க்கக்கூடியதாக இருந்தது. இந்நாவலை புதிய தலைமுறையொன்றைச் சேர்ந்த நாவலென்று துணிந்து சொல்ல முடியும். 90 களுக்குப் பின்பான ஈழத்துச் சூழலுடைய நேரடி அனுபவங்களைக் கொண்டு படைக்கபப்ட்ட இப்பிரதி, அக்காலப்பகுதியில் தமது வாழ்க்கையின் ஆரம்பத்தைத் தொடங்கிய தலைமுறையொன்றினுடைய கதைகள் இவ்வாறுதான் அமைந்திருக்கும் என்பதை நேர்மையாகக் கூறியுள்ளது. நான் ஒரு நாவலை எழுதுவேனாக இருந்தால், இதே கதைக்களனையும் காலப்பகுதியையும் கொண்டதாகவே பெரும்பாலும் அமைந்திருக்கும்.

இந்நாவல், அரசியல் நீக்கம் செயபட்ட பிரதி என்ற கூற்று மிக மோசமானது என்றே கூறுவேன். இருவேறு அதிகார மையங்களுக்குள் வாழச்சபிக்கப்பட்ட தலைமுறையொன்றின் - 'எஞ்சியுள்ள வாழ்வைத் தக்கவைக்கும்' தலைமுறையொன்றின் அலைக்கழிவான வாழ்க்கை அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. அரசியல் அதிகாரங்களுக்குள்ளே சென்றவர்கள் கூட அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருந்தததைக் கண்டும் கேட்டும் இருக்கின்றோம். இந்த தலைமுறையின் அரசியல் சார்ந்த சிறு கருத்துதிர்ப்பும் கூட, தீவிரமான அரசியற் செயற்பாடுதான் என்றே கூற வேண்டும். தமிழ்த்தேசியத்திற்கு எதிரான ஒரு சிறு வரியைக் கூட வாசித்திருக்காத / அறிந்திருக்காத ஏராளமான இளைஞர்களை இத்தலைமுறையில் கண்டிருக்கின்றோம். அதிலிருந்து மாறுமட்டு, உரையாடலுக்குத் தயாராயிருக்கும் பிரதிகளை அரசியல் நீக்கம் செய்யப்பட்டவை என்று சவடால் வசனங்களால் எட்டித்தள்ளும் மனநிலை 'அரசியல் நீக்கம்' ஐ தொடர்ச்சியாக வாழ வைப்பதற்குத்தான் உதவக்கூடும்.

நாவலில் அதிகார மையங்களுக்குமெதிராக எங்கேயும் போர்க்கொடி தூக்கப்படவில்லை. எதிர்த்து வசனம் பேசப்படவில்லை. நாவலில் வரும் பாத்திரங்கள், யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அப்பால் நகர்பவர்களாகவே நாவல் முழுவதும் வந்து செல்கின்றார்கள்.  அப்பால் சென்று, அதிகாரத்தை வைகின்றார்கள். தனியே இருந்து தலையிலடித்து கதறி, ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றார்கள். அதிகாரத்தின் இருப்பை மறுதலிக்க முடியாத தமது இயலாமையை நோகாமல், அதிகாரத்தை ஓயாமல் நையாண்டி செய்கின்றார்கள். நையாண்டி மூலம் தமது உடன்பாடின்மையைத் தெரிவிக்கின்றார்கள். ஆயுதம் மூலமான, உயிரை ஏந்நேரமும் பறித்துவிடக்கூடிய அதிகாரத்தின் பலமான இருப்பைத் தம்மால் அசைத்துவிட முடியாது என்று தெரிந்தும் - தமது நையாண்டிகளும் நக்கல்களும் அதிகாரத்தை எதுவும் செய்துவிடப்போவதில்லை என்ன்பது தெரிந்தும் அதிகாரத்தைத் தொடர்ச்சியாக நையாண்டி செய்தபடியேயிருக்கின்றார்கள். அதிகாரத்தின் காதுகள் தம்மைச் சுற்றி உள்ள போதெல்லாம் மனதிற்குள் நையாண்டி செய்கின்றார்கள். அதிகாரத்தின் துப்பாக்கிகளின் முன்பு கைகட்டி வாய்பொத்தி மௌனியாகி நிற்கின்றார்கள். அதிகாரத்தின் கால்களை தடவிய மறுகணமே அப்பால் சென்று, அதிகாரத்தை நையாண்டி செய்கின்றார்கள். இங்கு, மனிதர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து தம்மைப் பழக்கபப்டுத்தினார்கள். 'அரசியல் நீக்கம் செய்யபப்டாதவர்கள்' ஒன்றில், வெளிநாட்டுக்குச் சென்றார்கள் அல்லது இன்னொரு அதிகாரத்தின் துப்பாக்கிகளின் நிழலில் பதுங்கிக் கொண்டார்கள். இன்னும் சிலர் இறந்து போனார்கள்.


# பாத்திர வார்ப்புக்கள்.

நாவல்களில் முக்கியமானவை பாத்திர வார்ப்புக்கள். இன்று, சில சிறுகதையாசிரியர்களே தமக்கான மிகச்சிறிய அவகாசத்தில் மனதில் நீங்காமல் நிற்கக்கூடிய மிகச்சிறப்பான பாத்திரங்களை உருவாக்குகின்றார்கள். இந்நாவலில் சயந்தனால், மிகச்சிறப்பான ஆளுமையுடன் கூடிய பாத்திரமொன்றை உருவாக்க முடியாமல் போனது வருத்தமே. ஏராளமான சிறப்பான பாத்திரங்களாக உருவாகக்கூடியவர்கள் கூட சயந்தனின் கவனமின்மையினாலோ அல்லது வேறாதவது விசேட காரணங்களாலோ ஆளுமையான பாத்திரங்களாக முழுமை பெறவில்லை. அமுதன், நேரு ஐயா, பெரிய ஐயா, வெற்றி, அகிலா, நிலாமதி, நந்தகுமாரன், தேவி, பண்டார, பண்டார வன்னியன் ஆகிய பாத்திரங்கள் எதுவும் முழுமை பெறவில்லை என்பதை மரபார்ந்த கதைசொல்லல் முறையில் குறையாக முன்வைக்க முடியும்.

அதேநேரம், எந்தப் பாத்திரமும் நாவலை ஆக்கிரமிக்காமல் கதாசிரியர் திட்டமிட்டுப் பார்த்துக் கொண்டாரா அல்லது அவரது அனுபவப் போதாமைதான் அதற்குக் காரணமா என்பதை ஆசிரியர் வாய்திறந்தால் மாத்திரமே கண்டு கொள்ளலாம். பாத்திரங்கள் மிகைப்படுத்தப்பட்டதாக அல்லது தவறுகள் நீங்கிய இலட்சியத்தன்மையுடைய பாத்திரங்களாக உருவாக்கபப்டவில்லை. சுய எள்ளல் நிரம்பியதும் - தவறுகளைக் கொண்டதுமாகவே பெரும்பாலான பாத்திரங்கள் உருவாக்கபப்ட்டுள்ளன. அல்லது இயல்பாக நாவலில் வந்து போகின்றன என்று கூற முடியும். நாவலின் பிரதான பாத்திரம் மிகுந்த சுய எள்ளலுடனும் யாதார்த்தபூர்வமாகவும் படைக்கப்பட்டுள்ளது முக்கியமானது.

ஈழத்து இலக்கியங்களில் உலாவும் பாத்திரங்களைப் பொதுவாக இரண்டாக வகைப்படுத்த முடியும். முதலாவது, தவறு நீக்கம் செய்யப்பட்ட வீராவேசமுடைய இலட்சியத்தன்மை வாய்ந்த கதாநாயகக் கதாபாத்திரங்கள். பெரும்பாலும் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களை பிம்பமாகக் கொண்டு உருவாக்கபப்ட்ட பாத்திரங்களை இவ்வகைக்குள் அடக்கலாம். இரண்டாவது சுயபச்சாதாபம் நிறைந்த ஓயாத துன்பத்தில் உழலும் பாத்திரங்கள். வாசகருக்கு குற்ற உணர்ச்சியை உண்டாக்கும் நோக்கில் உருவாக்கப்படும் பாத்திர வார்ப்புக்களை இவ்வகைக்குள் குறிப்பிடலாம். இவ்விரண்டு வகைகளுக்கு வெளியே யதார்த்தபூர்வமான பாத்திரங்களையுடைய பிரதிகள் எமக்கு அவசியப்படுகின்றன. ஏனெனில், அவற்றின் இருப்பே சமூகத்தை உயிர்ப்புடன் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லக்கூடியவை என்று கருதுகின்றேன். அவ்வகையில் சுய எள்ளலும் கதாநாயக பிம்பங்களும் அற்ற சயந்தனது பாத்திரங்கள் மனதிற்கு நெருக்கமாக உள்ளதை குறிப்பிட்டேயாக வேண்டும்.


# போரின் இயல்பு

போரின் நெருக்கடிகளை நாவலாசிரியர் ஒரு சாதாரணனின் பார்வையில் கொண்டு வந்துள்ளார் என்று கருத வேண்டியுள்ளது. இன்று போரிற்கு வெளியில் இருந்தாலும், இந்திய இராணுவக் காலம் - இந்திய இராணுவக் காலத்திற்குப் பின்பான 95 வரையான நிலமை - 95 இடப்பெயர்வு - அதற்குப் பின்பான கெடுபிடிகள் நிறைந்த யாழ்ப்பாண நிலமை - சமாதான காலம் - யுத்த காலக் கெடுபிடிகள் நிறைந்த கொழும்பு போன்றவை எனக்குப் பரிச்சயமானவை. இளமைக்காலம் இக்காலப்பகுதிக்குள்ளேயே தொலைந்திருந்தது. வாழ்வின் ஒவ்வொரு கணங்களையும் நாவல் மீள் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தது.

போர் எப்போதும், ஆயுத வியாபாரிகளைத்தவிர வேறு எவருக்கும் சந்தோசமாக இருக்கப்போவதில்லை. சாதாரணர்கள் யாவரும் அதனால் பாதிக்கப்படுபவர்களாகவே இருப்பார்கள். இருந்திருக்கின்றார்கள். போர் சில அடைவுகளுக்கான படிக்கட்டுக்களாக - மிக அவசியமான நேரங்களில் மாத்திரமே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எமது சிறுபிராயமும் இளமைக்காலமும் போரிற்குள்ளும் அதற்கு வெளியில் இருந்த கெடுபிடிக்குள்ளும் அமைந்திருந்தது. மிகச்சிறிய போர்களையும் இடப்பெயர்வுகளையும் சந்தித்த எம்மைப் போன்றவர்களுக்கே வலிகளைத் தரும்போது, மிக உக்கிரமான போரில் அகபப்ட்ட வன்னியைக் கற்பனை செய்து பார்க்க முடியாமல் இருந்தது. இந்நாவல், எமது கடந்த காலத்தையும் நாம் தற்போது மறந்து கொண்டிருக்கும் அதன் குடூரங்களையும் மீண்டும் ஞாபகப்படுத்தியது.

போரின் போதையில், போரைத்தாண்டி எம்மால் அடையக்கூடிய அடைவுகளைக்கூட நாம் மறந்துவிட்டோம். ஆயுதத்தின் மூலமான அதிகாரம் தற்காலிகமானதே. ஆயுதங்கள், மனிதகுலம் - தன்னை நிறுத்தி வைத்திருக்க இயற்கையால் படைக்கப்பட்ட கால்கள் அல்ல. கால்கள் தளர்ந்த போது, நாம் தட்டுத்தடுமாறி நிற்கப் பயன்படும் தற்காலிகமான ஊன்று தடியே என்பதை மறந்து, நிரந்தரக் கால்களாக்கி விடத் துடிப்பதன் அபத்தைத்தை - பாதிப்புக்களை இந்நாவல் ஓரளவிற்காவது வெளிப்படுத்தியுள்ளது.

Statcounter