இந்த உரையாடல் தொடர்பான சில விடயங்கள். முதலில் இவ்விடயங்கள் சார்ந்து எனது அனுபவத்தைக் கூறிவிடுகின்றேன். அறிவியல் தொடர்பான எனது ஆரம்பகால வாசிப்புக்கள் பெரும்பாலும் சுஜாதாவில் தொடங்கி ரவிசிறீனிவாஸ் வரையானவை. இவை Teen-age அனுபவங்கள். பின்பு Capra வை வாசித்தபோது சுஜாதா போன்றவர்களின் இந்துத்துவா கருத்தியல்கள் அதில் புகுத்தப்பட்ட விதம் குறித்து அறிய முடிந்த அதேநேரம் அவ்வகையான வாசிப்புக்கள் ஓரளவு தடைப்பட்டும் போனது. பின்னர் Edward Said இன் Orientalism உடனும் அதன் பின்பான ஐரோப்பிய மையவாதத்திற்கு எதிரான கருத்தியல்களை உள்வாங்கியதன் பின்னர் EthnoMedicine தொடர்பாக பலவிடயங்களை வாசித்தறிய முடிந்தது. இதில் இருந்து அறிவியலின் வரலாறு தொடர்பான விடயங்களைத் தேட முடிந்தது. அப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக நீண்ட கால மரபைக் கொண்ட சமூகங்கள் உற்பத்தி செய்த 'அறிவுகள்' அவற்றின் தொடர்ச்சிகள் காலனியாதிக்கத்தின் காரணமாக தடைப்பட்டுப் போனது மட்டுமல்லாது, ஆவணப்படுத்தப்படவும் இல்லை என்பதை அறிந்து கொள்ளவும் முடிந்தது. உள்ளூர் மருத்துவங்கள் சிலவற்றினதும் ஆங்கில மருத்துவத்திற்கு மாற்றீடான மருத்துவங்களின் 'நிரூபிக்கப்படாத' (கவனிக்கவும்) அபூர்வ சக்திகள் தொடர்பாக அதிசயப்பட முடிந்தது. அதேநேரம் லெவி-ஸ்ட்ராஸ் இன் வாசிப்பனுபவங்கள் ஒர் விடயத்தை நன்றாக உணர்த்தின. மேற்கலாத சமூகங்களின் அறிவுற்பத்தி தர்க்கம் மற்றும் பரிசோதனை முறைகளைப் பின்பற்றவில்லை என்பதோடு அறிவு என்பது மூடநம்பிக்கையோடு இரண்டறக் கலந்த விடயமாக கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. அவர்கள் அறிவுத்தொடர்ச்சியை ஆவணப்படுத்துவதற்கு மாறாகச் சடங்குகளூடு அறிவைக் கடத்தி வந்திருக்கின்றார்கள் என்பதை ஐரோப்பியர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமது மேலாண்மை சார்ந்து அத்தொடர்ச்சிகளை முற்றாக மறுதலித்து தமது பார்வையில் அவற்றை பதிவு செய்ததோடு தமது அறிவியல் தொடர்ச்சிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தி வெற்றியும் பெற்றார்கள். இன்று எம்மிடம் 5000 ஆண்டுகால மரபைக் கொண்ட எமது அறிவுத் தொடர்ச்சி இல்லை. அது எம்மிடம் இருந்து இழக்கப்பட்டுவிட்டது. உதாரணமாக நீர்வளத்துறையைச் சேர்ந்த தசநாயக்க என்னும் சிங்கள புலமையாளர் கூறுவார் காலனியாதிக்க காலத்திற்கு முற்பட்ட இலங்கையின் நீர்முகாமைத்துவம் தொடர்பான கொள்கையோ அதன் வடிவமோ ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில் கூட இன்றும் மாற்றப்படவில்லை. அக்காலத்தையவரின் அமைப்புக்கள் சற்று மெருகூட்டப்பட்டுள்ளன அவ்வளவே. இலங்கை வளமான நீர்வளத்தை கொண்டிருந்ததோடு மட்டுமல்லாது அதற்கான நீர்முகாமைத்துவத்தையும் கொண்டிருந்தது. இவ்விடயத்தை நான் கூறுவதற்கான காரணம் மேற்கல்லாத அறிவு மரபுகள் எவ்வாறு தோற்றுப்போயின அல்லது தோற்கடிக்கப்பட்டன என்பதற்கானதே. மருத்துவம் மற்றும் நீர்முகாமைத்துவம் தொடர்பான விடயங்கள் அன்றாட வாழ்க்கையுடன் பிணைந்தவை என்பதால் இவை தொடர்பான அறிவு எதோவொருவகையில் அப்பிரதேச மக்களால் தொடரப்பட்டது. ஒருபக்கத்தில் ஐரோப்பிய அறிவு ஐரோப்பா அல்லாத அறிவுத் தொடர்ச்சிக்காகப் பிரதியீடு செய்யப்பட்ட அதேவேளை சமாந்தரமாக மக்களால் தமது அறிவுத்தொடர்ச்சிகள் சிறிய அளவில் தொடரப்பட்டன. மூடநம்பிக்கைகள், காட்டுமிராண்டித்தனம் என்ற கேலிப்பேச்சுக்களின் மத்தியிலும் அவை 500 வருடங்கள் தொடரப்பட்டிருக்கின்றன என்பது ஆச்சரியமான விடயமே. காலனியாதிக்க காலம் முடிவுக்கு வந்த பின்னர் உருவான பின்காலனியக் கற்கைகள் Edward Said இன் Orientalism இற்குப்பின்னர் உத்வேகமடைகின்றன. இதேநேரம் மானுடவியல் தொடர்பான கற்கைகளின் பெருக்கம் புதிய சிந்தனைகளிற்கு வழிகோலுகின்றது. இதன் தொடர்ச்சியிலேயே Subaltern Studies போன்ற துறைகள் தோற்றம் பெறுகின்றன. இவற்றின் நோக்கமே ஐரோப்பா அல்லாத பிரதேசங்களது உண்மையான வாழ்வுமுறைகள் மற்றும் அறிவுத்தொடர்ச்சிகளையும் அவற்றின் மூலங்களையும் கண்டுகொள்வதன் பாற்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே இன்று அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் இனத்துவ அறிவியல் (EthnoScience என்பதை இனத்துவ அறிவியல் என்பதாக மொழிமாற்றம் செய்ய முற்படுகின்றேன். ஆனால் அது தவறென்பது எனது தனிப்பட்ட கருத்து) கற்கைகளை இன்று பெருமளவான மானியங்கள் கொடுத்து ஊக்குவிக்கின்றன. டார்வினின் கூர்ப்பு சார்பான வாதங்கள் பிற்காலத்தில் இவற்றிற்கு வலுச்சேர்த்தன. வெவ்வேறு சூழ்நிலையில் வாழ்ந்து வந்த சமூகங்கள் பலவிதமான ஆயிரக்கணக்கான சாத்தியங்களைக் கொண்ட அறிவுகளை / அறிவுத்தொடர்ச்சிகளை, ஆயிரக்கணக்கான மாற்றீடுகளைக் கொண்ட அறிவை உற்பத்தி செய்திருக்கும். நாம் ஒற்றைப்பாதையில் செல்கின்றோம் என்ற எண்ணம் பிற்காலத்தில் ஐரோப்பிய அறிவுஜீவிகள் மத்தியில் ஏற்பட்டது. இதை விளங்கிக்கொள்ள ஒரு புள்ளியில் (ஒரு புள்ளி என்பது அபத்தம். வெறும் உதாரணத்திற்கு மட்டும்) வெவ்வேறு திசைகளில் ஆரம்பித்த பயணங்கள் எதோவொரு பிறிதொரு புள்ளியில் இடைவெட்டும்போது ஏற்படும் அதிர்ச்சிக்கு சமனானதே ஐரோப்பா பிறதேசங்களைக் கண்டடைந்தபோது நிகழ்ந்தது. இவ்வுதாரணத்தின் மூலம் அதிர்ச்சியின் முழுமையை விளங்கிக் கொள்ள முடியாவிட்டால் நேரடி உதாரணம் ஒன்றைப் பார்க்க முடியும். பூமி ஒரு வெடிப்பில் பிறந்ததாகவும் அவை இரட்டைப் பிள்ளைகள் எனவும் வைத்துக் கொள்வோம். மற்றையது வட்டவடிவப் பாதையில் இயங்கும் நோக்கில் எதிர்த்திசையில் பயணித்து லட்சக்கணக்கான ஆண்டுகள் கழித்து இரண்டும் சந்தித்தால் ஏற்படும் அதிர்ச்சி சொல்லி மாளாதது. இரண்டுக்குமான ஒப்பீடுகள் உருவாக்கும் துறைகளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஒரே நிபந்தனைகளிலான வளர்ச்சி என்று வைத்தால் கூட அது நிச்சயமாக முற்றிலும் வேறானதாகவே இருக்கப்போகின்றது. இதில் ஒரு தொகுதியில் இருந்து மற்றைய தொகுதி கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக்கொள்ளாவிட்டால் இழப்பு இரண்டுக்குமானதே என்பதே எனது வாதம். மாற்று அறிவியல் பற்றிய பார்வைகளுக்குப் பின்னரும் சில உதாரணங்களுக்குப் பின்னரும் நான் கணிதம் பற்றிய விடயங்களுக்கு வருகின்றேன். அதற்கான காரணத்தை நீங்கள் ஊகித்திருப்பீர்கள். நடைமுறை வாழ்வுடன் நெருங்கிய தொடர்புள்ள பிற அறிவுத்துறைகளில் ஐரோப்பியர்களுக்குக் முழுதாகக் காவுகொடுக்கப்படாத அறிவுத்தொடர்ச்சிகளை நீங்கள் நன்று அறிவீர்கள். ஆனால், கணிதம் போன்ற துறைகள் ஏன் EthnoMedicine தொடர்பான ஆய்வுகள் அளவிற்குச் செய்யக்கூடிய தரவுகள் இல்லையெனில், அவை அன்றாட வாழ்வியலில் இருந்து மறக்கப்பட்டுவிட்டதோடு அவ்வறிவு தொடர்ச்சியாகக் கடத்தப்படவுமில்லை. உங்களுக்கு இப்போது ஆரம்பித்த கோபம் இனிமேல் உச்சத்திற்கு ஏறப்போகின்றது என்பது தெரிந்தே கூறுகின்றேன். கணிதம் என்பதை தனியே சமன்பாடுகளுக்குள் முடங்கிய விடயமாக என்னால் கருதமுடியவில்லை. ஒழுங்குபடுத்தல் - ஒப்பீடுசெய்தல் - வகைப்படுத்தல் - முகாமைத்துவம் செய்தல் போன்றவை உருவாக்கும் கணிதக்கோலங்கள் கலாச்சாரங்கள் சார்ந்து வேறுவேறானவை என்பதோடு அவற்றின் அறிதிறனும் கலாச்சாரப் பின்புலம் சார்ந்து வேறுவேறானவை. Numerical analysis ஐ நீங்கள் புரிந்துகொள்வதற்கும் நான் புரிந்து கொள்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. கலாச்சாரத்தை மையமாக வைத்து அறிவியலை பிரதேசங்கள் சார்ந்து அளவிட முயற்சிப்பதை நிச்சயமாக நீங்கள் எதிர்ப்பீர்கள். ஆனால், மற்றைய அறிவியலாளர்களை விட உங்களைப் போன்ற அறிவியலாளர்களிடம் அவ்வெதிர்ப்பு குறைவாக இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. ஏனெனில் நீங்கள் சமூகவியல் தளங்களிலும் இயங்கக்கூடியவர்கள். ஆவணப்படுத்தப்படுத்தப்படாத வெளிப்படையாகப் பயன்படுத்தப்படாத வாய்ப்பாட்டுத்தன்மைக்குள் வந்துவிடாத கணித மரபுகள் தொடர்பானதே எனது அக்கறை. இவை மொழியியலை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்படக்கூடியவை. இன்றைய Cognitive science இவற்றை அடிப்படையாகக் கொண்டது. அவை உண்மையில் புதிய பாதைகளைத் திறந்துவிடக்கூடியவையாக எதிர்பார்க்கப்படுகின்றன. உண்மையில் Ethno என்ற பிரயோகமே மொழி அடிப்படையானதாகவே நான் கருதுகின்றேன். இனத்துவம் என்பது சமூகவியல் தளங்களில் வேறுபல பார்வைகளில் பயன்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாகவே EthnoScience என்பதற்கு இனத்துவ அறிவியல் என்ற மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தத் தயங்கினேன். மேலும் நான் கூறும் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவுருவாக்கம் என்பது Engineering Mathematics பிற Applied Mathematics துறைகளில் இருப்பவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. அவர்கள் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட வாய்ப்பாடுகள் மற்றும் சமன்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள். அவர்களால் இவ்வகையான விடயங்களை ஏற்றுக்கொள்ளவது கடினமாக இருக்கும். ஆனால், ஒரு வாய்ப்பாடோ அல்லது சமன்பாடோ உருவான 'வரலாறு' என்பது ஏராளம் ஏளனங்களுடன் கூடியது. நீங்கள் கூறும் விடயங்களை மறுதலிக்கும் இடத்திலும் நான் இல்லை. அலன் சோக்கலின் வாதங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையே எனதும். ஆனால், கணிதவியலை புனிதப்படுத்தி அதைச் சமன்பாடுகளுக்குள் மட்டுப்படுத்தும் நோக்கம் இல்லாததன் காரணமே புதிய பார்வைகள் தொடர்பான தேடுதலை ஆதரிக்கின்றேன். கிட்டத்தட்ட நீங்கள் கூறும் கலாச்சார மையவாதம் சார்பானதே எனதுவாதமே தவிர சுஜாதா கூறுவது போன்றதான 'எம்மிடம் ஏற்கனவே எல்லாம் இருந்தது' போன்ற உடார்கள் அல்ல. அதில் நான் மிகத்தெளிவாக இருக்கின்றேன். நவீன கணிதத்தில் எந்தக்கணிதமும் விமர்சனத்தை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. சுஜாதா போன்று வாதிப்பவரிடம் மட்டுமே நீங்கள் மேற்படி கேள்வியைக் கேட்க முடியும். சுதேசிய அறிவு புதிய பாதைகளில் - சிறிய அளவாயினும் - பயணித்திருக்குமா என்பதற்கான தேடல் பெரிய சமன்பாடுகளுடன் போராடும் கணிதவியலாளர்களுக்கு சுவராசியமாக இருக்கப்போவதில்லை. ஆயினும், எங்காவது ஓரிடத்தில் உடைப்பெடுக்குமா என்ற பார்வைகளுடன் கூடியதே அறிவியல். உங்களிடம் நான் கேட்பது நீங்கள் நடந்து சென்ற நீண்ட பாதையில் ஆரம்பத்திற்குச் சென்று சுற்றுமுற்றும் பாருங்கள். அங்கே உங்களுக்கு வேறொரு நீண்ட பாதை இருக்கும் என்று நான் உங்களுக்கு நிச்சயமாகப் பொய் கூறப்போவதில்லை. ஆனால், சிறியதொரு புதியவகை அமைப்புடன் கூடிய பாதை இருக்கக்கூடும். அப்பாதையில் புதிய பிரதேசங்களைக் கண்டுகொள்வதற்கான சாத்தியங்கள் இருக்கக்கூடும். புதிய பாதைகள் என்று கூறுவதை விட முக்கியமாகப் புதிய சட்டகங்கள் இருக்கக்கூடும். Fritjof Capra போன்றவர்கள் இந்நோக்கிலேயே கீழைத்தேய மரபு நோக்கி ஓடியிருப்பார்கள் எனத்தோன்றுகின்றது. நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு என்னிடம் விடைகள் இல்லை. அவற்றிற்கு என்னால் அல்ல வேறு யாராலும் பதில் சொல்ல முடியும் எனவும் நான் நினைக்கவில்லை. ஆனால், அதுவல்ல பிரச்சனை என்பதை இப்போது உணர்ந்திருப்பீர்கள்.மேலதிக வாசிப்பிற்கு : Ethnomathematics: challenging eurocentrism in mathematics education