வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

July 31, 2010

சாந்தனின் “Whirlwind” ஐ முன்வைத்து சில சமூக, அரசியல் அவதானிப்புக்கள்

- குமாரவடிவேல் குருபரன்

நூல் பெயர்: “The Whirlwind”
நூல் வகை: நாவல் (ஆங்கிலம்)
ஆசிரியர்: ஐயாத்துரை சாந்தன்
பதிப்பு: V.U.S. பதிப்பகம், சென்னை (2010)
பக்கங்கள்: 179
இந்திய விலை: ரூ. 100

ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஆக்க இலக்கியப் படைப்புகளுக்காக சாகித்திய விருது பெற்ற சாந்தன் அவர்களது முதலாவது ஆங்கில நாவல் “The Whirlwind”. இந் நாவல் அண்மையில், இலங்கையிலிருந்து ஆங்கிலத்தில் வெளிவரும் ஆக்க இலக்கியங்களுக்கான கிரேயன் (Gratien) விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஐந்து படைப்புகளுள் ஒன்றாகும். Whirlwind என்ற சொல்லுக்கான அண்மித்த தமிழ்ச் சொல் ‘சுழல் காற்று’ எனலாம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தமிழர் வாழும் பகுதிகளில் இந்திய அமைதிப் படையினரின் நிலைகொள்ளல் தொடர்பாக ஜுலை மாதம் 1987ஆம் ஆண்டு நான்கைந்து நாட்கள் இடைவெளியினூடு இடம்பெற்றவொரு சுற்றிவளைப்பு இராணுவ நடவடிக்கையையும் அதனை ஒட்டிய இடப்பெயர்வு அனுபவத்தையும் கூறும் ஓர் அரசியல் நாவல் இந்த “Whirlwind”.

இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியத் தலையீடு தொடர்பாக (குறிப்பாக 1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் நிகழ்ந்த காலப்பகுதி தொடர்பிலான) ஆக்க இலக்கியம் சாராத (non-fiction) படைப்புகளும் ஆய்வுகளும் ஏராளமாக வெளிவந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அக் காலப்பகுதியில் கடமையாற்றிய இந்திய இராஜதந்திரிகள் இராணுவ உயரதிகாரிகளது மற்றும் ஊடகவியலாளர்களது நினைவுக் குறிப்புகளாக அமைந்துள்ளன. இவற்றைத் தவிர தென்னிலங்கை மற்றும் இந்திய அரசியல் மற்றும் வரலாற்றுப் புலமையாளர்களும் தமது ஆய்வுகளை வெளியீடுகளாக்கியுள்ளனர். இது தொடர்பில் தமிழர் தரப்பில் இக்காலப்பகுதி தொடர்பில் ஆய்வு அல்லது ஆவணப்படுத்தும் வகையிலான முயற்சிகள் மிகக் குறைவு அல்லது இல்லை என்றே கூறலாம். ஒரே ஒரு விதி விலக்காக அமைவது “The Broken Palmyrah” (“முறிந்த பனை”) என்ற நூல். தமிழரது அரசியலில் நிலவுகின்ற சமூக, சட்ட அரசியல் சார்ந்த ஆய்வு இடைவெளி மிகவும் பாரதூரமானது.

இக்காலப்பகுதி தொடர்பிலான ஆக்க இலக்கியங்கள் என்று பார்க்கும் பொழுது தமிழ் ஆக்க இலக்கியத்தில் பல படைப்புக்கள் வெளிவந்தமை ஆச்சரியப்படுவதற்கில்லை. 1980 களுக்குப் பின்னரான ஆக்க இலக்கியப் படைப்புகளினது முனைப்பு கூடுதலாக தமிழரது போராட்டச் சூழல் பற்றிய பிரதிபலிப்புகளாகவே இருந்துள்ளன என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. சாந்தன் அவர்களது தமிழ் ஆக்க இலக்கியங்கள் இந்தியப் படையினரது நிலைகொள்ளல் பற்றி அதன் ஆரம்ப காலத்திலிருந்தே பேசி வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஆங்கில நாவல் இலக்கியப் பரப்பிற்குள் இக் காலப்பகுதி தொடர்பிலான படைப்புக்கள் இல்லை என்றே கூறலாம். இலங்கையின் இன முரண்பாட்டு அரசியல் என்று பொதுவாகப் பார்க்கும் போது கூட ஆங்கில ஆக்கிய இலக்கியப் பரப்பிற்குள் மிகச் சொற்பமான செயற்பாட்டையே அவதானிக்க முடிகின்றது. 1983 இனக்கலவரம் தொடர்பிலான படைப்புகளான சியாம் செல்வத்துரையின் “Funny Boy” மற்றும் மனுகா விஜயசிங்கவின் “Monsoons and Potholes”, 1983 க்குப் பின்னரான சம்பவங்கள் தொடர்பில் நிஹால் டி சில்வாவின் “The Road from Elephant Pass” மற்றும் புண்யகாந்தி விஜயநாயக்கவின் “The Enemy within” போன்ற ஆக்கங்களைக் குறிப்பிடலாம். இவர்கள் யாவரும் தென்னிலங்கையர் அல்லது தென்னிலங்கை அரசியற் பரப்பில் வாழ்ந்து கொண்டு எழுதியவர்கள் என்பது நோக்குதற்குரியது. இந்த வகையில் தமிழ் போராட்டச் சூழலில் வாழ்ந்து ஆங்கிலத்தில் எழுதும் தமிழர் சாந்தன் ஒருவராகவே இருக்க முடியும். (இக்கணிப்பீடு மொழிபெயர்ப்பு இலக்கியப் பரப்பைத் தவிர்த்தே முன்வைக்கப்படுகின்றது. மொழிபெயர்ப்பு இலக்கியப் பரப்பிற்குள் நின்று செயற்படும் சோ.ப. போன்றவர்களது முயற்சிகளும் முக்கியமானவை என்பதில் சந்தேகம் இல்லை).

ஒரு பொது மொழியினூடாக சமூக அரசியல் இலக்கியப் பதிவுகளை மேற்கொள்வதில் ஒரு முக்கியமான சமூகப் பெறுமதி உள்ளது. ஆங்கிலமொழி மூலமான அறிவுச் செயற்பாடானது உயர் மத்தியதர வர்க்க மற்றும் மேட்டுக்குடியினிடத்து உறைநிலைப்பட்டுள்ளதாயினும் இந்த முக்கியமான சமூக தளத்திற்குள்ளும் எமது சமூகம், அரசியல் தொடர்பிலான பதிவுகளை நாம் முன்வைப்பது எதிர்காலத்தில் எமது வரலாறு எங்ஙனம் பேசப்படுகின்றதென்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வகையில் சாந்தனின் “Whirlwind” வரவேற்கப்படவேண்டியது.

“Whirlwind” இன் அரசியல்

இயல்பானதொரு மொழிநடையில் சாதாரண மக்களுக்கிடையிலான உரையாடலினூடாக வெளிவருகின்ற அரசியலை, Whirlwind இல் பதிவு செய்யும் சாந்தன் அதேவேளை பல்வேறு பாத்திரங்களினூடு எமது அரசியல் தொடர்பிலான தனது பார்வையையும் முன்வைக்கின்றார். இச்சமநிலையை நாவல் எங்கணும் அவதானிக்கலாம். மக்கள் மத்தியில் இந்திராகாந்தி மீதிருந்த ஈர்ப்பு, அவரது இறப்பின் பின்னரான இந்திய அரசியலை அவரது அரசியலோடு ஒப்பிட்டு அங்கலாய்க்குமொரு அரசியல் பார்வை (பக்.31), இந்தியப் படையினரை வரவேற்ற மனநிலையும் அது சொற்ப காலத்தில் வெறுப்பாக மாறிய அரசியல் மனப்பாங்கும் (பக்.69), இலங்கை இராணுவத்தை இந்திய இராணுவத்தோடு ஒப்பிட்டு பின்னையதை அதிகமாக வெறுத்த மக்களது மனநிலை (பக். 24) போன்ற IPKF காலப்பகுதியில் நடைபெற்றவை பற்றிப் ‘பொதுப் புத்தி’ (Common sense) மட்டத்தில் சாதாரணமாகப் பேசப்பட்ட அரசியலை சாந்தன் இயல்பாகப் பதிந்து வைத்திருக்கிறார்.

இப் பொதுப்புத்தி அரசியல், பிரதான அரசியல் நீரோட்டத்தின் விவாதத்தில் வெளிப்படுவது மிகக் குறைவு - வெளிப்படுவது இல்லை என்று கூடச் சொல்லலாம். இதற்கு அதன் ‘சாதாரண தன்மை’ அல்லது ‘Sub-altern’ தன்மை காரணமாகவிருக்கலாம். (இது தொடர்பான ஆய்வுப் புலத்தினை Sub-altern studies என்பார்கள்). ஆக்க இலக்கியப் படைப்புக்கள் மூலமாக இவை வெளிக்கொணரப்படலாம் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணம்.

சாந்தனுடைய தனிப்பட்ட கூர்மைப்படுத்தப்பட்ட அரசியல் தத்துவார்த்தமும் நாவலின் பல பாத்திரங்கடாக மேற்சொன்ன பொதுப்புத்தி அரசியலை நளினம் செய்யாமல் முன்வைக்கப்படடிருப்பதை அவதானிக்கலாம். குறிப்பாக சாந்தன் அடையாள அரசியல் (Identity politics) தொடர்பாகக் கொண்டிருக்கும் சந்தேகமும் வெளிப்படையாக நாவலில் சொல்லப்படுகின்றது (பக்கங்கள் 93-96). சாந்தனின் உலக இலக்கியப் பரிச்சயமும் (குறிப்பாக இரஸ்ய இலக்கியத்தில் அவர் கொண்டுள்ள நாட்டமும்) இடதுசாரி அரசியலில் அவர் கொண்டுள்ள பரிச்சயமும் ஒரு சர்வதேசியவாதிக்குரிய சிந்தனைகளாக (Internationalist) வெளிப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. (பக். 140 இல் சாந்தன் இர~ஸ்ய நாவலாசிரியர் Mikhail Sholokhov மற்றும் அமெரிக்க நாவலாசிரியர் Ernest Hemingway ஆகியோரது படைப்புக்களை சிவன் என்ற பாத்திரத்தினூடாக மேற்கோள் காட்டி வேறுபட்ட யுத்த சமூகங்களுடைய அனுபவங்களின் பொதுத் தன்மையைப் பற்றிப் பேசுவதைக் காண்க).

மற்றுமோர் இடத்தில் ‘political behalfism’ த்தைச் சாந்தன் சாடுகிறார். எமது சார்பில் போராட்டம் நடத்துவதாகக் கூறிக் கொள்பவர்களிடமிருந்து நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம் என்று சாந்தனின் ஒரு பாத்திரம் பேசுகிறது. தனியே இந்திய அமைதிப் படையினரைப் பற்றியதாக நாம் இவ்வவதானிப்பைச் சுருக்க முடியாது. அரசியல் விளிம்பின் நுனியில் ஒரு பரிதவித்த சமூகமாக மாறியுள்ள நாம் இது பற்றி சிந்திக்க வேண்டும். நல்ல இலக்கியங்களுடைய உண்மையான சேவை இதுதான்.

40 வருடகால சமூக இலக்கியச் செயற்பாட்டைத் தாண்டி வந்துள்ள சாந்தன் அரசியல் “ism” கள் எவற்றுள்ளும் அடைக்கப்பட விரும்பாதவர் என்பதனைப் பதிவு செய்துள்ளார். ஏலவே இடதுசாரிஃ சர்வதேசியவாத சிந்தனை மரபின் தாக்கங்கள் இந்நாவலில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளேன். பின் நவீனத்துவ மரபின் சாயல்களையும் காணலாம் என்பதையும் இங்கு சேர்க்கலாம். (தேவர் என்ற பாத்திரத்தினூடாக ‘நிலையான உண்மை’ என்றொன்றில்லை என்ற சாந்தனின் வாதத்தை உதாரணமாகப் பார்க்கலாம் (பக். 33).

பக். 32 இல் சிவன் என்ற பாத்திரத்தினூடாக சாந்தனிடத்து வெளிப்படும் பின்வரும் அவதானிப்பு முதல் நோக்கில் அரசியல் மேலெழுந்தவார்த்தனம் உடையதாகத் தெரிந்தாலும் ஒரு ஆழ்நிலையில் அர்த்தபுஷ்டியுடையதாகவே படுகின்றது. சாந்தன் எந்த அடைப்புக்குள்ளும் நின்று தன் இலக்கிய எழுத்தை வரையறை செய்ய விரும்பாத தொனிப்பும் இவ்வவதானிப்பில் வெளிப்படுகிறது.
“இந்தக் கொடுமையான விளையாட்டில் எந்தவொரு (அரசியல்) செயற்பாட்டாளரும் தனது மனசாட்சிக்கு எதிராக செயற்படுவதாக நான் நினைக்கவில்லை. எல்லாத் தரப்புக்களும் தாம் நல்லது என்று நினைப்பதனையும் மக்களுக்குச் சரியானது எனக் கருதுவதனையுமே செய்கின்றனர். இவர்களுடைய செயற்பாடுகள் மற்றையவர்களுடைய செயற்பாடுபாடுகளோடு முரண்படுவது அவர்களை மட்டுமல்ல, யாருக்காக இதனைச் செய்வதாகக் கூறிக் கொள்கிறார்களோ அந்த அப்பாவி மக்களையும் வெகுவாகப் பாதிப்பது துரதிட்டவசமானது”. (மொழிபெயர்ப்புக் கட்டுரையாளரது)

இந்த அரசியல் விளையாட்டில் ஒருவர் மற்றொருவர் மீது குறைகாணும் தன்மையை, நீண்டகாலமாக அவதானித்துச் சோர்வுற்றதால் சாந்தனிடம் ஏற்பட்ட ஒரு வித சலிப்பின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம். ஒரு விதத்தில் இருத்தலியத் தத்துவார்த்தத்தின் (existentialism) சாயலையும் இந்த அவதானிப்பில் காணலாம். இருத்தலியம் முறைசார்ந்த, புலமைவார்ப்பிற்குட்பட்ட தத்துவார்த்தமானது உண்மையான மனித அனுபவத்திலிருந்து தொலைவுபட்டது எனக் கொள்கின்றது. விவாதத்திற்குட்படுத்த வேண்டிய பல விடயங்களைச் சாந்தன் எமக்குத் தந்து உதவியுள்ளார்.

‘Whirldwind’ இல் இடம்பெயர் வாழ்வியல் தொடர்பாக இது தொடர்பில் ‘Whirldwind’ முன்வைக்கும் மூன்று விடயங்களை முன்னிலைப்படுத்த விரும்புகின்றேன்.

முதலாவது, இடப்பெயர்வு வாழ்வு அனுபவமானது அது உருவாக்கித்தரும் ஒரு இறுக்கமான சமூக வெளி காரணமாகத் தமிழர் சமூகத்தில் நிலவிவரும் சாதிக் கட்டுமானங்களை உடைக்கின்றதா அல்லது நெகிழ்வடையவோ அன்றி உறுதி செய்யவோ பங்களிக்கின்றதா என்பது தொடர்பானதாக. ‘Whirldwind’ இல் முத்து என்ற பாத்திரத்தினூடாக (பக்கங்கள் 162-165) இந்தக் கேள்வியை சாந்தன் எம்முன் நிறுத்துகிறார். சாந்தனைப் பொறுத்த வரையில் வாழ்வா சாவா என்ற நிலை வரும்போது (existential threat) இந்த வேறுபாடுகள் தளர்வடைகின்றன. இந்த அனுபவத்தைப் பொதுமைப்படுத்த என்ன செய்ய வேண்டும் என நாம் சிந்திக்க வேண்டும்.

இரண்டாவது, எமது சமூகம் பெண்களது நிலை தொடர்பாகக் கொண்டிருக்கும் பார்வை பற்றியது. மற்றவர்களோடு இடம்பெயராது சற்றுக் காலம் தாழ்த்தி வரும் கலா (எனும் பாத்திரம்) பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கக் கூடுமோ என்று ஏனைய சில பெண் பாத்திரங்கள் சந்தேகப்படுவதும் அது பற்றிக் கலாவுடன் கலந்துரையாட முற்படுவதையும் சாந்தன் கவனமாக எடுத்துக் காட்டியுள்ளார். போர்ச் சூழலில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்களை தனக்கேயுரிய சுருக்க நேர்த்தியோடு சாந்தன் சொல்லியிருக்கிறார்.

மூன்றாவது, சமூகத் தலைமைத்துவம் தொடர்பாக எமது சமூகத்தில் மாறிவரும் பெறுமான மதிப்பீடு தொடர்பாக. தேவி (மனைவி) மற்றும் ராஜு (கணவன்) என்ற கதாபாத்திரங்கடான கலந்துரையாடலை முன்னறுத்தி சாந்தன் சொல்வதை ப.133இல் காண்க.
தொடர்ந்தேர்ச்சியாக எமது சமூகத்தில நிலவி வரும் பாதுகாப்பற்ற சூழல், காரணமாக சமூகப் பிரச்சனைகளில் அக்கறை கொள்வது என்பது விரும்பப்படுவதில்லை என்ற செய்தியை சாந்தன் பதிவு செய்கிறார். “ஏன் நமக்கு இந்த சோலி” என்ற சமூக மனநிலை எம்மத்தியில் ஆழ ஊடுருவியுள்ளது. எமது சமூகத்தில் எதிர்காலம் பற்றிக் கவலைப்பட வைக்கும் மனநிலை இது. இதிலிருந்து நாம் எப்படி வெளிவரப் போகின்றோம் என்பதனைப் பற்றிய சிந்தனையும் விவாதமும் இன்றைய அவசரத் தேவைகள்.

Whirldwind இன் மொழி நடை

பின்காலனித்துவ ஆங்கில மொழிப் பாவனையில் ஆங்கிலத்தை அதன் பிரித்தானிய வடிவில் (British English) தான் உபயோகிக்க வேண்டும் என்ற தூய்மைவாதம் உடைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தை அதன் பல்வேறு சமூகத்திற்காட்பட்ட பல்வகைப் பாவனையை “World Englishes” என்று அழைக்கின்றனர். இலங்கையில் பேராசிரியர் மனிக் குனசேகர, கலாநிதி அர்ச்சுன பராக்கிரம போன்றோர் ஆங்கில மொழிப் போதனையிலும் ஒரு “Sri Lankan English” என்ற தராதரத்தை அங்கீகரித்து கற்றல் கற்பித்தலில் பாவிக்கலாம் என்றும் கூறுகின்றனர். “Sri Lankan Dictionary of English” என்ற ஒன்றையும் பிரித்தானியக் கவுன்சிலில் Michael Meyler அண்மையில் வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்தை குறிப்பிடத்தக்களவு காலம் கற்பித்த சாந்தன் அவர்கள் இதைப் பற்றி என்ன பார்வையைக் கொண்டுள்ளாரோ தெரியவில்லை. ஆனால் சாந்தனின் மொழி நடையில் சமூகத்தின் தாக்கம் (இது தொடர்பான ஆய்வை Social Linguistics சமூக மொழியியல் என்பார்கள்) நிறையவே உள்ளது - Sri Lankanised English இன் கூறுகளும் நிறையவே உள்ளன. உதாரணமாக: “I say, you can’t take this much of space. If you want to sleep comfortably, get back home” (பக். 37) என்பதில் வருகின்ற ““I say”. இந்த “I say” அச்சில் வேறுபடுத்தி Italic இல் காட்டுவது அவதானிக்கத்தக்கது. தமிழ்ப் பழமொழிகள் பலவற்றையும் ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பு (transliterate) செய்து நாவலின் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். சாந்தனுடைய தமிழ் மொழி நடையில் நான் அதிகம் இரசித்தது அவரது ‘economy of language’ மொழியைக் கவனமாகவும் சுருக்கமாகவும் பாவிக்கும் ஆற்றல். அதனை அவர் ஆங்கிலத்திலும் காட்டியுள்ளார்.

(யாழ் உதயன் பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)

சாந்தனின் சில நூல்களை காண இங்கே சொடுக்கவும்

'எதுவரை' இதழில் பிரசுரமான சாந்தனின் நேர்காணல் (2010)

No comments:

Post a Comment

Statcounter