வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

September 11, 2012

இசைபட வாழ்தல், மனிதநேயமற்ற குழுமஅறம் | கைமண்


மனிதர்களிடையே காணப்படும் பகிர்ந்து வாழ்தல் - பறித்து வாழ்தல், இசைபட வாழ்தல் - பகைபட வாழ்தல் ஆகிய இரு சோடிப் பண்பாட்டுக் கூறுகளே இங்கு அறம் எனும் பதத்தால் குறிப்பிடப்படுகிறது. மனிதர்களுக்கிடையேயான உறவை சமூக குழுமங்களிற்குள் சிறைப்படுத்திக் காண்பது உருவ மனித நேயம் எனப்படுகிறது. சமூகக் குழுமங்களைக் கணக்கில் கொள்ளாமல் மனிதர்களிடையேயான உறவுகளைக் காண்பது அருவ மனித நேயம் எனப்படுகிறது. சமூக குழுமங்களெனும் பதம் எதைக் குறிக்கிறது என்பதை மேலும் விரிவாகப் பார்ப்போம். மனிதன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சமூக நிறுவனங்களில் அங்கத்துவம் வகிக்கிறான். இதனால்தான் அவன் சமூகப் பிராணி எனப்படுகிறான். ஏனைய பிராணிகளிலிருந்து மனிதன் வேறுபடுவது இந்த இடத்தில் தான். இந்த சமூக நிறுவனங்கள் அவனின் செயற்பாடுகளையும் சிந்தனைகளையும் வடிவமைக்கின்றன. அதே நேரம் அவன் தனித்துவமுள்ள தனிமனிதனாகவும் இருந்து வருகிறான். ஆனால்; இத்தனித்துவம் சமூக நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டதுமல்ல; அத்தனி நபர் சமூக நிறுவனங்களின் கொத்தடிமையும் அல்ல.

மனிதன் சுய விருப்பத்துடனும், சுய விருப்பின்றியும் உறுப்புரிமை வகிக்கும் சமூக நிறுவனங்கள் இரு வகைப்படும். ஒன்று அடிக்கட்டுமான சமூக நிறுவனங்கள், மற்றையது மேற்கட்டுமான சமூக நிறுவனங்கள். மேற்கட்டுமான சமூக நிறுவனங்களுக்கான எடுத்துக்காட்டுக்கள்; தொழிற்பிரிவுகளின் அடிப்படையிலான சங்கங்கள், நலன்புரிச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், கலை இலக்கிய மன்றங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள் அரசியல் கட்சிகள் - குழுக்கள், கோவில்கள் இத்தியாதிகள். இவை முறைசார் நிறுவனங்களாகும். இவற்றிலான உறுப்புரிமை பெரும்பாலும் முறைசார் தன்மை பெற்றவைகளேயாகும். சடங்குகள் மரபுகள் ஆகியன முறைசார் தன்மை அற்றவை. அதாவது முறைசாரா சமூக நிறுவனங்களாகும். இரத்த உறவுகள், குடும்பம் ஆகிய இரண்டும் சமூக நிறுவனங்களே. இதில் இரத்த உறவுகள் முறைசாரா நிறுவுனமாகும். குடும்பம் முறைசார்ந்த தன்மையும், முறைசாரா தன்மையும் ஒருங்கே பெற்ற சமூக நிறுவனமாகும். குடும்பம்தான் முதலில் தோன்றிய முறை சார் சமூக நிறுவனமாகும். தனி நபர்களின் நடவடிக்கைகளை வடிவமைப்பதில் குடும்பம் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

இனவழிக் கட்டுமானங்கள் , மொழிவழிக் கட்டுமானங்கள், மதக் கட்டுமானம், வர்க்கக் கட்டுமானம், தேசக் கட்டுமானம் ஆகியவையே அடிக்கட்டுமான சமூக நிறுவனங்களாகும். இவ் அடிக்கட்டுமான சமூக நிறுவனங்களையே சமூகக் குழுமங்கள் என அழைக்கிறோம். மேற்கட்டுமான சமூக நிறுவனங்களை சமூக ஸ்தாபனங்கள் என அழைப்போம். சமூக குழுமங்கள் தான் சமூக ஸ்தாபனங்களின் தோற்றுவாயாகும். அரசியல் கட்சிகளும் அரசியல் குழுக்களும் மேற்கட்டுமானத்துக் குரியவையே. இந்த சமூக ஸ்தாபனங்களினதும் அதன் உறுப்பினர்களினதும் அறம் கெட்டுள்ளது என்பதே இன்றைய விசனமாக உள்ளது. அதைப்பற்றி நிறையவே பேசப்பட வேண்டும் எனப் பலரும் எதிர்பார்க்கிறார்கள். இது பற்றி வெளிப்படையான பேச்சுகள் ஆரம்பித்து விட்டன. இந்நிலை ஏன் உருவானது? இதை எவ்விதம் மாற்றுவது? என்பது தொடர்பான கருத்துகளும் முன் வைக்கப்படுகின்றன. அது நல்லதே, அவசியமானதே. ஆனால் இக்கட்டுரை அரசியல் குழுக்களின் அறம் கெட்டிருப்பது பற்றிப் பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஏனெனில், பானையில் இருப்பது தான் அகப்பையில் வரும். சமூக குழுமங்களைப் பானையென்றும் அகப்பையில் உள்ளவற்றை சமூக ஸ்தாபனங்கள் என்றும் கொள்ளவும். அகப்பையில் உள்ளவை வெறுமனே வெளிப்பாடுகள் தான். வெளிப்பாடுகளையும் அவற்றின் விளைவுகளையும் அவதானிப்போம், பட்டியலிடுவோம். வெளிப்பாடுகளை நோவென்றும் விளைவுகளை நோவின் காரணத்தாலான உடல் உள அவஸ்தைகள் என்றும் கொள்வோம். நோவை உணராமல் செய்ய ஏதாவது செய்யத்தான் வேண்டும். ஆனால் அது ஏதாவது நோய்க்கான சிகிச்சையல்ல. வலி நிவாரணியுடன் நிறுத்தி விடக் கூடாது. நோய்க்கான சிகிச்சை அவசியம். அகப்பையில் உள்ளவற்றைப் பட்டியலிட்டது போதும். இனி மாற்றத்தைச் செய்ய பானைக்குள் செல்வோம். அப்போது தான் நோய் நாடலிலும், நோய் முதல் நாடலிலும் வெற்றி பெற முடியும். வாருங்கள் நோய் நாடியும், நோய் முதல் நாடியும் பானைக்குள் செல்வோம் என இக்கட்டுரை அழைக்கின்றது. நோய் முதல் பானைக்குள்தான் உள்ளது. சமூக குழுமங்களின் அறந்தான் பானைப் பண்டமாகும். அப்பண்டத்தை முதலில் புரிந்து கொள்வோம். அதன் இருத்தலை மாத்திரமல்ல அதன் இயங்கியலையும் புரிந்து கொள்வோம். அதாவது இலங்கையின் சமூகக் குழுமங்கள் ஒன்றுடன் ஒன்று கொண்டுள்ள உறவு நிலையின் இயங்கியவைப் புரிந்துக் கொள்வோம். அவ் உறவு நிலையின் இன்றைய இயங்கு நியதிகளைப் புரிந்து கொள்வோம்.

சமூக குழுமங்களை நாம் இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று பண்பாட்டு மரபு வழி வந்த சமூக குழுமங்கள்; மற்றையது உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் செயற்படும் சமூக குழுமங்கள். இரண்டாவது வர்க்க சமூக குழுமங்கள் என அழைக்கப்படும். தமிழ் பேசும் மக்கள் இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், யாழ்பாணத்தார், வன்னியர், பௌத்த சிங்களவர், கிறிஸ்துவ சிங்களவர், வன்னிச் சிங்களவர், மலை நாட்டுச் சிங்களவர், முஸ்லீம்கள், வடகிழக்கு முஸ்லிம்கள், தென் இலங்கை முஸ்லீம்கள், மட்டக்களப்பார், கொழும்புத் தமிழர், கொவியார்ஸ், வெள்ளாளர், கரவாஸ், கரையார்கள், பறங்கியர்கள், வேடர், பஞ்சமர், குடிமைசாதிகள் நொடியாஸ், முக்குரைவர், முக்கியர், கிறிஸ்தவர், இந்து, சைவர், புலர் பெயர் தமிழர்கள், தமிழர், சிங்களவர் ஆகிய இவ்வித சமூக குழுமங்கள் அனைத்தும் பண்பாட்டு மரபு வழிவந்த சமூக குழுமங்களேயாகும். இவை அனைத்துக்குமான பொதுப் பெயர் என்ன? வர்க்க சமரச சமூக குழுமங்கள் எனலாம். இக்குழுமங்களின் முன்னனி அமைப்புகளின் உறுப்பினர்களின் முதலில் வர்க்க சமரச கோட்பாட்டாளர்களாக ஆக்கப்படுகிறார்கள். இதுதான் இவர்களுக்கான ஞானஸ்தானமாகும். பகைமைப் போக்குக் கொண்ட குழுமங்களின் இருத்தலுக்கான காரணம் இவ்வர்க்க சமரசமே.

குழுமங்களுக்குள்ளான வர்க்க சமரசத்தின் அதிகரிப்பு குழுமங்களிடையேயான பகைமை உறவின் அதிகரிப்பாக அமைகின்றது. இக்குழுமங்களின் தலைவர்களும், செய்றபாட்டாளர்களும், தீவிர ஆதரவாளர்களும் வர்க்க நீக்கம் பற்றியும் வர்க்க உறவுகளுக்கு அப்பாற்பட்ட மனித உறவு பற்றியும் பேசிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் வர்க்க சமரசமும், குழும பாசமும் கலந்த இவர்களின் மனித நேயந்தான் வர்க்க சமரச குழும உருவ மனித நேயம் எனப்படுகிறது. அடுத்த பக்கத்தில் தொழிலாளி வர்க்கம், உதிரித் தொழிலாளி வர்க்கம், விவசாயக் கூலிகள், உழைக்கும் விவசாயிகள், சிறு உடமை உற்பத்தியாளர்கள், ஆடைகசங்கா சேவைத்துறைத் தொழிலாளர்கள், மூளை உழைப்பாளர்கள் பெரும் நில உடமையாளர்கள் அதிகாரத்துவ வாதிகள், முதலாளிகள், சிறுவர்த்தகர்கள், பெரும் வர்த்தகர்கள் போன்றோர் தனித் தனி சமூக குழுமங்களாகச் செயல்படுகிறார்கள். இச் சமூக குழுமங்களே வர்க்க சமூக குழுமங்களாகும். இவை தான் உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் அமைந்த சமூக குழுமங்கள். கடந்த 25 வருட கால இலங்கை வரலாற்றை எடுத்துக் கொண்டால் வர்க்க மேட்டுக்குடிச் சமூகக் குழுமம் மாத்திரமே (ஆளும் வர்க்கங்களின் கூட்டணி) உணர்வு பூர்வமான செயற்திறன் மிகு சக்தியாக இருந்து வருகின்றது. ஆனால், ஆளப்படும் வர்க்க குழுமங்களோ தமது வர்க்கக் கடமையை மறந்து வர்க்க சுபாவத்தை இழந்து ஒரு வர்க்கக் குழுமம் என்ற முறையில் நீண்ட துயிலில் ஆழ்ந்துள்ளன. சக்திமான்கள் இடையிடையே இவ்வித நீண்ட துயில் கொள்வது வரலாற்றின் தொடர்கதை போலும். கும்பகர்ணன் மீளாத் துயில் கொள்ளவில்லை, நீண்ட துயில் தான் கொண்டான். ஆனால் உழைக்கும் வர்க்க சமூக குழுமங்களின் உறப்பினர்கள் கூட்டம் கூட்டமாக வர்க்க சமரச சமூக குழுமங்களில் இணைவதே கடந்த 25 வருட கால இலங்கையின் வரலாறாக இருந்து வருகிறது. இவ்விதம் இணைப்பவர்களில் ஒரு பகுதியினர் வர்க்க மேல்நிலையாக்கம் பெற்று பணக்காரர்களாகிறார்கள். அத்துடன் வர்க்க சமரச சமூக குழுமங்களின் தலைமை அணியாக மாறுகிறார்கள். அவ்விதம் மாற விரும்பாதவர்களும் மாற முடியாதவர்களும் அதே குண்டாஞ்சட்டிக்குள் நின்று குதிரையோட்டிய வண்ணம் உள்ளார்கள்.

நலமடித்த நாய் தனது எஜமானர்களை விட்டுப் பிரிய முடியாதது போல் வர்க்க சமரசப் பார்வையுள்ள அவர்களால் வர்க்க சமரச சமூக குழுமங்களைவிட்டு விலகிக் கொள்ளவும் முடியாமல், அதை நெறிப்டுத்தவும் வழி தெரியாமல் ஒரு மையத்தை சுற்றிச் சுற்றி ஒடிக் கொண்டேயிருக்கிறார்கள். வர்க்க மேல் நிலை பெறும் முயற்சியில் தோற்றுப் போனவர்களும், மேல்நிலை பெற விரும்பாதவர்களும் மீண்டும் தமது வர்க்கத்துக்கு வந்து நீண்ட துயிலில் இருக்கும் தமது வர்க்க சமூக் குழுமத்தின் தூக்க நிலையை கலைப்பார்கள் என எதிர்பார்ப்போம். கும்பகர்ணன் போர்க்களம் புகுவான் என நம்புவோம். எப்படியோ வர்க்க சமூக குழுமங்களின் உறங்கு நிலை காரணத்தால் வர்க்க சமரச சமூக குழுமங்களே சமுதாயத்தின் இயங்கு சமூக குழுமங்களாகவும், இலங்கை சமூகத்தை இயக்கும் சமூக குழுமங்களாகவும் இருந்து வருகின்றன. இதனால் தான் இன்றைய அறத்தின் வாழ்நிலை பற்றிய காரண காரியத் தேடலை வர்க்கச் சமரச சமூக குழுமங்களின் செயற்பாடுகள், வர்க்க மேட்டுக்குடி சமூக குழுமங்களிலும் செயற்பாடுகள் ஆகிய இரு களங்களில் மாத்திரமே நடத்துகிறோம்.

வர்க்க சமரச சமூக குழுமங்களுக்கிடையேயான உறவுகள் என்பது என்ன? குஜராத்தில் வாழும் ஒரு இந்துப் பெண்ணும், இஸ்லாமிய இளைஞனும் காதலித்தால் அதை இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான உறவு நிலை சீரடைந்து விட்டது என அர்த்தப்படுத்தலாமா? 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ் மூதாட்டியை ஒரு சிங்கள் இளைஞன் இன வெறியர்களிடமிருந்து பாதுகாத்து பாதுகாப்பாக யாழ்ப்பாணம் கொண்டு வந்து சேர்த்த நிகழ்ச்சியை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது என அர்த்தப்படுத்தலாமா?
சிங்கள இராணுவத்திலிருந்து தமிழ் கிராமத்துக்கு தப்பியோடி வந்த (அது தமிழ் கிராமம் என்று தெரிந்தும்) ஒரு சிங்கள சிப்பாயை அக்கிராம மக்கள் புலிகளுக்கும் தெரியாமல், சிறிலங்கா அரசுக்கும் தெரியாமல் அச்சிப்பாயின் கிராமத்துக்கே தெரியாமல் அச்சிப்பாயின் கிராமத்துக்கே கொண்டு போய் சேர்ப்பித்ததை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது என்று அர்த்தப்படுத்தலாமா? அல்லது அக்கிராம மக்கள் சிங்களவனிடம் சரணடைந்துவிட்டார்கள் என அர்த்தப்படுத்தலாமா?
இஸ்லாமியர்களுக்கும் புலிகளுக்கும் இடையே ஒரு முறுகல் நிலை உருவாகத் தொடங்கிய பிறகும் வன்னிப் பகுதி நாட்டார் வளமைக் கோவில்களை (அநேகமாக இவை மலையக மக்களின் கோவில்கள்) சைவ ஆகமக் கோவில்களாக மாற்றும் முயற்சி துரிதமடைந்து வருகிறது என்று தெரிந்த பிறகும் ஒரு மலையக முஸ்லீம் இளைஞன் தனது கிராமத்து முத்துமாரியம்மன் கோவில் தலைவராகப் பணிபுரிந்து அக்கோவிலை மலையக முறைப்படி சிறப்பாக நடத்தி வந்ததை முஸ்லீம்களுக்கும் சைவ ஆகமவாதிகளுக்கும் இடையில் ஒரு நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தப்படுத்தலாமா? சைவ ஆகம தலைமையிடமான புனித நிலமான வைத்தீஸ்வர கல்லூரிக்கும் அதன் மிக அருகாமையில் இருந்த சிவன் கோவிலுக்கும் நிலம் போதாமை என்று பிரச்சனை இருந்தது. இதனால் ஆறுமுக நாவலரின் பேரன் வழியான ஒருவரின் தலைமையில்தான் வண்ணார் பண்ணை முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்பது இனியும் ஒரு இரகசியமா என்ன?

யாழ்பாணத்து தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் ஒரு உச்சநிலையை அடைந்து பின்னர் தணிந்து வந்த வேளையில் அகமண முறையைப் பாதுகாப்பதற்காக பனையில் இருக்கும் போதே பனையைத் தறித்து வீழ்த்திக் கொலை செய்யப்பட்டார் ஒரு சீவல் தொழிலாளி. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால் கொதிப்படைந்திருந்த பஞ்சமர் இளைஞர்கள் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் உயர்சாதி இளம் பெண்கள் சிலர் இவர்கள் கைகளில் தனியாக மாட்டக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டது. இதை அவதானித்த வேறு சில பஞ்சம இளைஞர்கள் அப்பெண்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். இந்நிகழ்வை பஞ்சம இளைஞர்களில் ஒரு பகுதியினர் சமரசப் பாதையை மேற்கொண்டு விட்டார்கள் என்று அர்த்தப்படுத்தலாமா? இவை அரசியல் விளம்பரத்துக்காக நடந்த சம்பவங்களல்ல. அரசியல் உள்நோக்கம் எதுவும் இவற்றிற்கு இருக்கவில்லை. பலன் எதையும் எதிர்பார்க்காமல் நடந்து வரும் பல்லாயிரம் சம்பவங்களில் இவை மிகச் சிலவாகும். இவ்வித சம்பவங்களில் உயிர் நீத்தவர்கள் கூட உள்ளார்கள். பிறர் மேலான அன்பினதும் அருவ மனித நேயத்தினதும் விளைவுகளே இந்நிகழ்வுகளாகும். இவற்றை முன் சொன்ன முறையில் அர்த்தப்படுத்தலாமா? அவர்களின் அருவ மனித நேயப் பார்வையைக் கொச்சைப்படுத்தலாமா? இல்லை இல்லை யென்பதே இக் கேள்விகளுக்கான பதிலாகும். அவ்விதமானால் இவற்றை எவ்விதம் அர்த்தப்படுத்துவது? இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வர்க்க சமரச சமூகக் குழும உரும மனித நேயிகளாக அல்லாமல் அருவ மனித நேயிகளாக இருந்துள்ளார்கள் என்றே அர்த்தமாகும். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இடதுசாரிகளாக இருந்திருந்தால் வர்க்க சமரச சமூக-குழும மனிதநேயிகளாக இல்லாமல் வர்க்க சமரச சமூக-குழும மனிதநேயிகளாக இருந்துள்ளார்கள்.

இன்னோர் வகையான எடுத்துக்காட்டை அவதானிப்போம். இளம் பெண் வைத்தியர் ஒருவர் தன் மீது பாலியல் வன்முறை செலுத்த முற்பட்ட ஒரு சிங்கள ஆணை அவ்விடத்தில் வைத்தே அவமானப்படுத்த முற்பட்டார். தான் அவமதிக்கப்படுதலைத் தவிர்ப்பதற்காக அவ் ஆண், “தமிழிச்சி சிங்களவர் மீது பாரபட்ச் காட்ட முற்படுகிறாள்” என்றோர் புரளியைக் கிளப்பிவிடுகிறான். சிங்களவர் அதை உண்மையென நம்புகிறார்கள். அம் மருத்துவர் அவ் ஊரைவிட்டே துரத்தப்பட வேண்டுமென்பது மக்கள் முடிவாகிறது. சிங்கள அதிகாரியும் அம்முடிவை ஏற்று அவளை இடமாற்றம் செய்கிறார். இச்சம்பவத்தை வைத்துக் கொண்டு சிங்கள தமிழ் பகைமை உறவை நிரந்தரமானது என்றும் சர்வ வியாபாகமானது என்றும் அர்த்தப்படுத்தலாமா? மனித நேயமற்ற ஒரு சிங்களவன் தனது இச்சைக்கு இணங்க மறுத்தவொரு பெண்ணை பழிவாங்கிக் கொண்டான். அவள் ஒரு றொடிய சிங்களம் பெண்ணாகவும் அவன் ஒரு கொவிகம சாதியனாகவும் இருந்திருந்தால் அவளைத் துரத்தியடிக்க அவன் சாதிய மேலாண்மை உணர்வை பயன்படுத்தியிருப்பான். கிறிஸ்துவப் பெண்ணாகவும் சிங்கள பௌத்தனாகவும் இருந்திருந்தால் பௌத்த பேரகங்காரவாதம் பயன்பட்டிருக்கும். சிங்களப் பெண்ணாகவும் தமிழ் ஆணாகவும் இருந்திருந்தால் தமிழ் உணர்வு பயன்படுத்தப்பட்டிருக்கும். இங்குள்ள விவகாரம் அவள் ஒரு பெண், அவன் அருவ மனித நேயமற்ற ஒரு காமுகன் என்பது தான். இங்கு வேறு எந்த விவகாரமும் இல்லை. ஒரு அருவ மனித நேயியின் கண்களுக்கு இந்த விவகாரம் மட்டும் தான் தெரியும். வேறு எதுவுமே தெரியாது. ஆனால் ஒரு வர்க்க சமரச உருவ மனித நேயியின் கண்களுக்கு அவன் ஒரு காமுகன் என்பது மட்டும் தெரியாது. வேறென்னவோ எல்லாம் தெரியும். வர்க்க உருவ மனித நேயி கூட இந்த இடத்தில் தவறு இழைக்கக் கூடும். இவள் ஒரு உயர் அதிகாரியாக இருந்து அவன் ஒரு கீழ்நிலை ஊழியனாக இருந்தால் இவ்விவகாரம் கீழ்நிலை ஊழியன் பழிவாங்கப்படுகிறான் எனும் விவகாரமாயிருக்கும்.

முன் கூறிய எடுத்துக்காட்டுகளெல்லாம் தனிநபர்கள் சம்பந்தப்பட்ட தனித்தனிச் சம்பவங்கள். மரங்களைக் கண்டுக் கொள்ளாமல் மரங்களின் கூட்டுத் தொகுப்பான காட்டை மட்டுமே பார்க்கும் கண்ணோட்டம் உள்ளவர்கள் தனித்தனிச் சம்பவங்களை நிராகரிக்கக் கூடும். அவர்களுக்குப் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. காடு (முழுமை) சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை எடுத்துக்காட்டாக கொண்டு ஆராய்வோம். 1971 இல் பல ஆயிரம் சிங்கள இளைஞர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். மகாவலிகங்கையிலும், மாணிக்க கங்கையிலும், களனி கங்கையிலும் இளைஞர்களின் பிரேதங்கள் தூக்கி எறியப்பட்டன. குறை உயிரும் குற்றுயிருமாக பலர் தெருக்களில் டயர் போட்டுக் கொளுத்தப்பட்டனர். கொல்வதிலும், கொல்லப்பட்டவர்களின் விபரங்களைப் பதிவதிலும் அவர்களைப் பற்றிய விபரங்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த விதிமுறைகளும் பின் பற்றப்படவில்லை. 1989, 90 களிலும் இதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்தது. கடந்த ஐந்து வருடங்களாக சிங்கள ஊடகவியலாளர்கள் மற்றும் பிற சமூக ஆர்வலர்கள் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், நாட்டை விட்டுஓட நிர்பந்திக்கப் படுகிறார்கள். வெள்ளைவானின் தொல்லை தொடர் தொல்லையாக அதிகரித்து வருகின்றது. வர்க்க சமரச தமிழ் குழுமத்தினருக்கு இதுவெல்லாம் கண்களுக்குத் தெரிவதில்லை. சிறிலங்கா அரசு தம்முடன் மாத்திரம்தான் முரண்படுகிறது என்று கருதிக் கொண்டுள்ளார்கள். தமிழர்களையும் இவ்விதமே நம்ப வைக்க அதிக சிரமம் எடுத்து வருகிறார்கள். அதே போன்று வர்க்க சமரச சிங்களக் குழுமத்தினரின் ஒரு பகுதியினர் தமது அரசு தமக்கு எதிராக நடந்து கொள்வதைக் கண்டுக் கொள்ளவேயில்லை. அல்லது அதைப் பார தூரமாகக் கருதுவதில்லை. இன்னோர் பகுதியினர் சிறிலங்கா அரசின் கரங்கள் தம்மையும் அடக்குகிறது என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அவ் அரசு தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கும் வன்முறையை கண்டு கொள்வதில்லை. அது அவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. அதே போன்று தமிழீழ அரசு தமிழ் பேசும் மக்களுக்கும் பிற தமிழ் அரசியல் குழுமங்களுக்கும் எதிராக எடுத்து வந்த அடக்குமுறைகளைத் தமிழர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். தமிழீழ அரசு சிறிலங்கா அரசுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளிலேயே தமது கவனம் முழுமையையும் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

வர்கக சமரச குழுமங்களை தனித்தனி அலகுகளாக எடுத்துக் கொண்டால் அவற்றில் பல தத்தமது மக்களிடையே பகை வாழ்தல் எனும் அறநெறியைக் கடைப்பிடிக்காதனவாகவே உள்ளன. ஆனால் சிங்களக் குழுமத்துக்கும் பிற இன, மத வழிக் குழுமங்களும் இடையேயான உறவு நிலையோ நல்லறமாக இல்லை. பதுக்கி அல்லது பறித்து வாழ்தலும், பகைபட வாழ்தலுமே பிரதான உறவு நிலையாக உள்ளது. ஆனால், பகைமையுள்ள குழுமங்களின் உறுப்பினர்களை தனித்தனி அலகுகளாக எடுத்துக் கொண்டால் வௌ;வேறு குழும தனிநபர்களுக்கிடையேயான உறவு நிலையில் பகிர்தலும் இசைபடவாழலுமான அறம் காணப்படவே செய்கிறது. அதாவது தனி நபர்களுக்கிடையேயான உறவில் நல்லறம் காணப்படவே செய்கின்றது. இந்தத் தனிநபர்கள் எண்ணிக்கையில் குறைந்த மிகச் சிறுபான்மையினரல்ல எண்ணிக்கையில் குறைந்தாலும் கணிசமாக தொகையினராகும். யாழ் மாவட்டம் தவிர இலங்கையின் அனைத்து மாவட்டங்களும் பல் இனக் கலப்பு மாவட்டங்களே என்பது கவனிக்கப்பட வேண்டிய விசயமாகும். வெவ்வேறு சமூக குழும உறுப்பினர்களுக்கிடையேயான உறவு நிலையும், குழுமங்களுக்கிடையேயான உறவு நிலையும், இரு வெவ்வேறு தளங்களில் இயங்கும் தனித்தன்மையுள்ள இரு வெவ்வேறு சமூக நிகழ்வுப் போக்குகளாகும். இவை இரண்டுக்கும் தனித்தனியான பொறிமுறை உண்டு. வெவ்வேறு சமூக குழுமங்களின் உறுப்பினர்களுக்கிடையேயான உறவு நிலையை இயல்பு நிலை சமூக நிகழ்வுப் போக்கு எனக் கொள்வோம். குழுமங்களுக்கிடையேயான உறவு நிலையை அரசியல் மைய சமூக நிகழ்வுப் போக்கு எனக் கொள்வோம்.

இயல்பு நிலை சமூக நிகழ்வுப் போக்கு மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகள், சடங்குகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. பகிர்ந்து வாழ்தலும் இசைபட வாழ்தலுமே இங்கு பிரதான போக்காக இருக்கும். வேற்றுமையில் ஒற்றுமை காணல், பகையை புறந்தள்ளி நல்லுறவை வளர்த்தல் ஆகியனவே இவர்களின் மந்திரமாக இருக்கும். பண்பாட்டுக் கலப்புகள் மிக எளிதாக நடைபெறும். பகிர்ந்து வாழல் , இசைபட வாழ்தல் அறம் இங்கு உயிரோட்டமானதாகக் செயற்படும். அதே நேரம் பறித்து பதுக்கி வாழும் பண்பாடும், பகைபட வாழும் அறமும், முற்றாக அற்றுப் போயிருக்கும் என்று கூற முடியாது. நல்லறத்துடன் கூடவே அந்நிகழ்வுப் போக்கும் காணப்படும். ஆனால் இத் தீயறத்துக்கு எதிரான போராட்டமும் அந்தந்த மக்களிடையே நடந்து கொண்டேயிருக்கும். இயல்பான உறவு நிலையைத் தீர்மானிப்பது அருவ மனித நேயம், வர்க்க உருவ மனிதநேயம், வர்க்க சமரச உருவ மனித நேயம் ஆகியனவேயாகும். சாதாரன வேளைகளில் வர்க்க சமரச உருவ மனித நேயம் அடித்தளத்தில் மறைந்திருக்கும். அது பிரதான போக்காக இருக்காது. ஆனால் இவ் எதிர்மறை மனித நேயம் மேலாண்மை பெறும் வேளைகளில் வௌ;வேறு குழும உறுப்பினர்களிடையேயான உறவு கெட்டுப் போகின்றது. பறித்து - பதுக்கி வாழலும், பகைபட வாழலும் எனும் வாழ்க்கை நெறி அறமாகின்றது. இவ்வித மேலோங்கல் அடிக்கடி ஏற்படும் ஒரு நிகழ்வாக இருந்தாலும் இத வளமையான நிகழ்வல்ல. மக்கள் வர்க்க சமரச சமூக குழுமங்களின் மேட்டுக் குடிகளின் அரசியல் பண்பாட்டு செல்வாக்கிற்கு உள்ளாகும் போது தான் இவ்வித மேலோங்கல்கள் நடைபெறுகின்றன. மக்களுக்கும் மேட்டுக்குடிக்கும் இடையேயான அரசியல் தூரம் அதிகரிக்க அதிகரிக்க மக்களின் நல்லறமும் அதிகரிக்கும். அரசியல் தூரம் குறைய குறைய குறிப்பிட்ட தூரம் வரை நல்லறமும் குறையும். அதன் பின் நல்லறம் தீயறமாக மாறத் தொடங்கிவிடும்.

குழுமங்களுக்கிடையேயான உறவு நிலையென்பது என்ன? அதை எவ்விதம் வரையறுப்பது. இவ் உறவு ஐந்து வகைப்படும். எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவோம் . S,T எனும் இரு வர்க்க சமரச சமூகக் குழுமங்களை எடுத்துக் கொள்வோம்.

1. S இன் தலைமைக்கும் (மேட்டுக்குடிக்கும்) T இன் தலைமைக்கும் இடையேயான உறவு.
2. S இன் தலைமைக்கும் T யின் மக்களுக்கும் இடையேயான உறவு.
3. S இன் தலைமைக்கும் S இன் மக்களுக்கும் இடையேயான உறவு.
4. T இன் தலைமைக்கும் S இன் மக்களுக்கும் இடையேயான உறவு.
5. T இன் தலைமைக்கும் T இன் மக்களுக்கும் இடையேயான உறவு.

இந்த ஐந்து உறவுகளின் தொகுப்புத்தான் S.T ஆகிய இரு வர்க்கச் சமரச சமூகக் குழுமங்களுக்கிடையேயான உறவாக அமைகிறது. இரு சமூகக் குழுமங்களினதும் மேட்டுக் குடிகளுக்கு இடையேயான தொடர்பாகவே இது காட்சியளிக்கிறது. ஆனால் உண்மையில் இது இந்த ஐந்து உறவுகளின் தொகுப்பேயாகும். புலிகளின் இராணவ அணி தோற்கடிக்கப்பட்டதன் பின்னேயான இன்றைய சூழலில் இவ் ஐந்து வகை உறவுகளும் எவ்விதம் செயல்படுகிறது என்பதை நோக்குவோம்.

அ) மஹிந்த அரசுக்கும் புலிகளுக்கும் இடையேயான உறவு நிலை.
புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள். தமிழரின் தலைமை அரசியல் அணியாக திகழ்ந்த புலிகளின் இடம் இன்னமும் எந்த அரசியல் தலைமையாலும் ஈடு செய்யப்படவில்லை. இதனால் மஹிந்த அரசுக்கு உள்ளுர் எதிராளியாரும் இல்லை.

ஆ) மஹிந்த அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான உறவு
இவ்வுறவு ஆளும் அணியின் நலனுக்கு ஏற்றபடி மிக நன்றாகவே அமைப்பு மயப்படுத்தப்பட்டு வருகின்றது. கீழ்படியும், பணிவும், சமரசமும் மிக்க அரசியல் தலைவர்களும் அரசியல் குழுக்களும் தாரளமாகவே உள்ளன. இவ் உறவு வளர்ந்தும் வருகிறது. இது இசைபட வாழ்தலல்ல, அடிமைப்பட வாழ்வதாகும்.

இ) மஹிந்த அரசுக்கும ; சிங்கள மக்களுக்கும் இடையேயான உறவு.
யுத்தத்தின் முன்னர் இது மிக நெருக்கமானதாக இருந்தது. யுத்தத்தின் பின்னர் இந்நெருக்கம் மேலும் அதிகரித்தது. ஆனால் தற்போது இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இராணுவ வல்லமையைப் பிறயோகிக்கும் அவசியம் தோன்றியுள்ளது. இவ் இடைவெளியை அதிகரிப்பதற்கான காரணிகள் இடைவெளியைக் குறைப்பதற்கான காரணிகளை விட கெட்டியானதாகும் வளர்திசை நோக்கியதாகவும் உள்ளன.

ஈ) புலிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையேயான உறவு
தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையேயான தொடர்பைப்பற்றி எந்தத் தமிழ் தேசியவாதியும் புரிந்துக் கொள்ளவில்லை. அவர்களின் கண்களுக்கு சிங்களவர்கள் எல்லாமே பகைவர்கள்தான். தமது அமைப்பின் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கக்கூடிய சிங்கள தனிநபர்களைத் தேடி வருகிறார்கள். கண்டுபிடித்து விட்டால் அவர்களைத் தமது குழுவாதத்திற்குள் அமுக்கி சிங்கள மக்களிடம் இருந்து பிரித்துவிடுகிறார்கள். புலிகள் உட்பட அனைத்துத் தேசியவாதிகளும் இதையே காலங் காலமாக செய்து வருகிறார்கள்.

உ) புலிகளுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையேயான தொடர்பு
இது பூஜ்ஜியம் என்று சொல்லக் கூடியளவிற்கே இருந்தது என்பது யாவரும் அறிந்ததே. தமிழரின் தலைமைக்கு வரக்கூடியவர்கள் என எதிர்பார்க்கப்படும் மாற்றாளர்கள் எவரிடமும் தமிழ் மக்களுடனான உறவை வளர்ப்பதற்கான எந்த வேலைத்திட்டமும் இல்லை.

இந்த ஐந்து உறவு நிலைகளையும் தொகுத்துப் பார்க்கும் போது சிங்களம் அரசியல்ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் தமிழியத்தை விட பலமானதாகவே உள்ளது. ஆகவே சிங்களம் தமிழியம் உறவு எஜமான ஊழியன் உறவாகவே இன்று காணப்படுகிறது. சரணடைவும், தனிமைப்பாடும் விரக்தியுமே தமிழியத்தின் இன்றைய நிலையாக உள்ளது. இராணுவ ரீதியான வல்லமை ஒன்று தான் தமிழியத்தக்கு இருந்ததே தவிர புலிகளின் இராணுவத் தோல்விக்குப் முன்பும் பின்பும் தமிழியம் அரசியல்ரீதியாகப் பலவீனப்பட்டே இருந்துவருகிறது. தமிழியம் பலவீனப்பட்டுவிட்டது என்பதை சிங்களம் புரிந்து கொண்டுள்ளது. சுயமாக தம்மால் இனி எதுவும் செய்ய முடியாது என்பதை தமிழியம் புரிந்த கொண்டுள்ளது. ஆயினும், தமக்கிடையேயான பகைபட வாழும் போக்கை ஊக்குவிப்பதில் சிங்களத்தினதும்; தமிழியத்தியத்தினதும் வர்க்க மேட்டுக்குடியினர் மிக மும்முரமாகவே செயற்பட்டு வருகிறார்கள். அவர்களது வர்க்க மேல்நிலையாக்கத்திற்கு இவ்வித பகைமையுறவு அவசியப்படுகிறது. ஆகவே மஹிந்த அரசு இன்னோர் இனப் பேரழிவை ஏற்படுத்தாது என்றோ, இன்னோர் இனப் பேரழிவுக்கு தமிழியம் மீண்டும் காரணமாக இருக்கமாட்டாது என்றோ கூற முடியாது.

தமிழியம் அடிமை நிலையில் இருந்த மீள்வது எப்படி என்பது ஒரு அரசியல் பிரச்சினை. அவ் அரசியல் விவாதம் இக்கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. இங்கு சொல்ல வருவது பெரும்பான்மையான தமிழ் குழுக்களிடமும் அரசியல் உணர்வுள்ளவர்களாக கருதப்படுபவர்களிடமும் காணப்படும் குப்பைத்தனமாக அரசியல் உறவு முறைகளுக்கான காரணம் அவர்களல்ல. அவர்களின் பாசறைகளேயாகும். தலைமை வெற்றிடத்தை நிரப்புவதற்கான அரசியல் வேலைத் திட்டம் ஒன்றின் கூட்டுருவாக்கமும் அவ் வேலைத் திட்டத்தை நிறைவெற்றுவதற்கான முயற்சிகளுந்தான் குப்பைத்தனத்தைக் களைய உதவும். குப்பையில் விளைந்த மாணிக்கங்களை பட்டை தீட்டி மகுடம் சேர்க்க வழிவகுக்கும். அரசியல் அறிவியலார்கள் அரசியல் நிபுணத்துவம் மிக்கவர்கள் இதற்கு விடை காணட்டும். ஆனால் வெவ்வேறு வர்க்க சமரச சமூக குழுமங்களின் மக்களிடையே பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்துவது என்பது ஒரு அரசியல் வேலைத் திட்டமல்ல. அது பண்பாட்டுக் கட்டுமானத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்களை உள்ளடக்கியதாகும். அதுதான் வெளிவர இருக்கின்ற இந்நூலின் விரிவான விவாதத்திற்குரிய பொருளாகும். ஆகவே அதைத் தொடர்வோம்.

[[ கைமண் அவர்களால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நுலின் ஒரு சிறு பகுதி, தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகத்தினால் லண்டனில் மாதாந்தம் நடாத்தப்பெறும் உரையாடல் அரங்கில் தோழர் எஸ்.சிறீதரன் அவர்களால் வாசிக்கப்பட்டது. சமூக அடிக்கட்டுமானம் தொடர்பாக, வழமையான பாணியில் இருந்து ஆசிரியர் விலகிச் செல்வதையும் - செழுமைப்படுத்துவதையும் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. லக்லாவ் , கிராம்சியை மீள்வாசிப்புச் செய்யும் போது கூறிய விடயங்களுக்குச் சமாந்தரமான கருத்தமைவுடன் இக்கட்டுரை செல்வதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. - சசீவன்  ]]

May 20, 2012

அரசற்ற தேசங்களினது மரபுசார் சட்டங்கள் : தேசவழமைச் சட்டத்தை திருத்துவது யார் என்பதனை முன்வைத்து சில ஆரம்பக் குறிப்புக்கள்




குமாரவடிவேல் குருபரன் [1]
சட்ட விரிவுரையாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.







# அறிமுகம்


தேசவழமைச் சட்டத்தைத் திருத்தும் நோக்கில் கடந்த அரசாங்கத்தில் நீதித்துறை அமைச்சராக இருந்த திரு. மிலிந்த மொறொகொடவால் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. 2010 பொதுத் தேர்தல்களுடன் திரு. மொறொகொடவின் அமைச்சு கைமாற இக்குழுவின் செயற்பாடுகளும் முடிவுக்கு வந்தன. அண்மையில் மீள்சக்தி, வலு அமைச்சரும் ஜாதிக ஹெல உருமயவின் தலைவர்களில் ஒருவருமாகிய திரு. பாட்டாலி சம்பிக்க ரணவக்க தேசவழமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்திருந்தார். இதே கருத்தை எல்லாவல மேதானந்த தேரரும் அண்மையில் தெரிவித்திருந்தார் [2] . காலத்திற்குக் காலம் தீவிர சிங்கள இனவாதிகளால் இத்தகைய கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மே 2009 இற்குப் பின்னராக நிலவுகின்ற தற்கால அரசியல் சூழ்நிலையில் - ஒரு தேசியக் கோட்பாட்டை (one nation theory) உறுதியாக வலியுறுத்தும் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் அதியுச்சமான வடிவமாக இன்றைய அரசாங்கம் இருக்கின்ற சூழ்நிலையில் - மீளவும் தேசவழமைச் சட்டம் மாற்றியமைக்கப்படுவது (அல்லது இல்லாதொழிக்கப்படுவது) தொடர்பில பேசப்படுவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவது இயல்பானதே. சிங்கள இனவாதிகள் தேசவழமையை இல்லாதொழிக்க வேண்டும் எனக் கூறுவது சிங்கள மேலாண்மைக் கருத்தியலிலிருந்து ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது தமிழர் தவிர்ந்த ஏனைய இனத்தவர்களால் யாழ்ப்பாணத்தில் காணி வாங்க முடியாது என்ற பிழையான விளங்கிக் கொள்ளலின் அடிப்படையில் சொல்லப்படுவது [3]. இதுவன்றி தேசவழமைச் சட்டத்தை சீர்திருத்துவதற்கு அல்லது இற்றைப்படுத்துவதற்கான வேறு நியாயமான தேவை இருக்கலாம். அப்படியான சந்தர்ப்பங்களை மட்டும் கருத்தில் கொள்ளும் போது கூட யார் தேசவழமையைத் திருத்தலாம் என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய, சரியான விடையைக் காண வேண்டிய அவசியம் உண்டு.  இக்கட்டுரையின் நோக்கமானது தேசவழமையைத் திருத்துவது தொடர்பிலான  செயன்முறை (process) தொடர்பிலான மேற்கண்ட கேள்வியின்  பல்வேறு பரிமாணங்களைப் பற்றி அலசுவதும் ஆரம்ப கட்ட பதில் ஒன்றைப் பதிவு செய்தலும் ஆகும்.



# (அரசற்ற) தேசங்களும் மரபுரிமைச் சட்டங்களும்


தேசமாகத் தம்மைக் கருதும் ஒரு மக்கள் கூட்டத்தினர் சுயாட்சியைக் கோரி நிற்பவர்கள். தம்மைச் சுயாட்சிக்கு உரித்துடையவர்களாக்கும் சுயநிர்ணயத்திற்கான உரிமையையுடையவர்கள் என்ற கூட்டுச் சிந்தனையைக் கொண்டவர்கள். தம்மைத் தேசமாகக் கருதினும் தமக்கென அரசொன்றைக் கொண்டிராதவர்களை அரசற்ற தேசங்கள் (Stateless Nations) என சில புலமையாளர்கள் வர்ணிப்பர் [4]. (தேசமாக தம்மைத் தக்க வைப்பதற்கு கட்டாயமாகத் தனியரசாக இருக்க வேண்டியதில்லை) தம்மைத் தேசமாகக் கருதும் மக்கள் தம்மை அடையாளப்படுத்தும் விடயங்களில் ஒன்றாகத் தம்மால் தமக்கு தமது முன்னோரால் வழங்கப்பட்ட சட்டப்பாரம்பரியத்தைக் கருதும் தன்மையானவர்கள் [5]. ஸ்கொட்லான்ட் தேசத்தைச் சேர்ந்த ஸ்கொட்டிய (Scottish) மக்கள் ஸ்கொட்ஸ் சட்டத்தை (Scots law) பாதுகாப்பதில் வெகு தீவிரமானவர்கள். அதே போன்று கனடாவில் கியுபெக (Quebec) மாநிலத்தைச் சேர்ந்த கியுபெக்கோஸ் தம்மை ஆங்கிலேயரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் சிவில் சட்டத்தைப் பாதுகாப்பதில் தீவிரம் காட்டுவார்கள். இந்தப் பார்வையிலேயே தமிழர்களும் தேசவழமைச் சட்டம் தொடர்பில் சிந்திக்கின்றனர் என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தேசவழமைச் சட்டமானது ‘இலங்கை அரசு’[6] என்றவொன்று கருத்தாக்கம் பெறுவதற்கு முன்னர் இருந்தே நிலவுகையிலிருந்த ஒன்று. வேறொரு முறையில் கூறுவதானால் தேசவழமை, அரசுக்கு முந்திய சட்டம் (Pre - State Law). பொதுவாகச் சட்டம் என்பது அரசிடமிருந்து ஊற்றுப் பெறுவதாகக் கருதப்படுகின்றது (state centric conception of the law). நவீன அரசக் கட்டமைப்புக்களின் அதிகாரப் படிநிலையாக்கத்தின் அதியுச்சியில் இருக்கும் அரசாங்கமும் அது சார்ந்த நிறுவனங்களுமே சட்டமாக்கும் தத்துவமுடையதாகப் பொதுப் புத்தியில் உறைந்து போயுள்ளது. சட்டம் என்பது மக்களிடமிருந்து அந்நியப்பட்டு இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகவும் நாம் இதனை அவதானிக்கலாம். நிற்க. தேசவழமைச் சட்டமானது அரசுக்கு முந்தியதெனின் அதனைக் காலத்திற்கு ஏற்ப ‘திருத்தும்’ அதிகாரம் / முறை யாது என்ற கேள்வி எழுகின்றது. ஒரு ‘முறையைப்’ பின்பற்றி தேசவழமைச் சட்டம் உருப்பெறவில்லை. வழமைகளின் தொகுப்பாகவே தேசவழமை வருகின்றது. அவ்வாறெனில் வழமைகளில் ஏற்படும் மாற்றங்களிற்கேற்ப அச் சட்டத்தை எவ்வாறு இற்றைப்படுத்தலாம்? வழக்காறுகள் எழுத்தில் தொகுக்கப்பட்டதன் பின்னரேயே இந்தப் பிரச்சினை எழுகின்றது. தேசவழமைக்கும் இது பொருந்தும்.

இன்று நாம் தேசவழமைச் சட்டம் எனக் கருதுவது 1707 ஆம் ஆண்டு அப்போதைய ஒல்லாந்த ஆளுநர் ஜோன் சைமன்ஸ் என்பவரது உத்தரவின் பெயரில் கிளாஸ் ஐசாக்ஸ் (Class Issakz) என்பவரால் தொகுக்கப்பட்டது [7]. அதேவருடம் ஜான் பைரஸ் (Jan Piras) என்பவர் இந்தத் தேசவழமைக் கோவையினைத் தமிழில் மொழிபெயர்த்தார். கிளாஸ் ஐசாக்ஸ் தன்னால் தொகுக்கப்பட்ட தேசவழமைக் கோவையைப் பரிசீலனை செய்வதற்காக அப்போது யாழ்ப்பாணத்தில் வாழந்த / சேர்ந்த கல்வி அறிவு உள்ள முதலியார்கள் பன்னிருவரிடம் அதனைக் கொடுத்திருந்தார். இந்தப் பன்னிரெண்டு முதலியர்களும் இக்கோவையைப் வாசித்துப் பார்த்ததன் பின்னர் எந்தத் திருத்தத்தையும் முன்மொழியவில்லை. இந்த முதலியர்கள் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பைச் சரிவரச் செய்யவில்லை என்றே தோன்றுகின்றது. ஐசாக்ஸ் இன் வேண்டுகோளிற்குப் பதிலளிக்கும் விதத்தில் அப்பன்னிருவரும் கூட்டாக எழுதிய கடிதத்தில், ‘தவறிழைத்ததன் காரணமாக ஆங்கிலேயரது சிறைகளில் இருந்த தமது அடிமைகளைப் பேணும் பொருட்டு ஆங்கிலேயரால் தம்மிடம் இருந்து அறவிடப்படுகின்ற பணம் மிதமிஞ்சியது’, என்ற விண்ணப்பத்தைப் பற்றியதாகவே இருந்தது. தொகுக்கப்பட்ட தேசவழமைக் கோவையைப் பற்றிக் காத்திரமாக இவர்கள் ஒன்றையும் சொல்லி இருக்கவில்லை. ஆகவே ஐசாக்ஸ் தொகுத்த வடிவத்திலேயே கோவை பாவனைக்கு வந்தது. பின்னர் ஆங்கிலேயரது காலத்தில், 1799 இல் வெளியிடப்பட்ட பிரகடனம் ஒன்றின் மூலம் தமது (ஆங்கிலேயரது) கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நிலவுகையிலிருந்த சட்டங்களை அங்கீகரிப்பதாக உறுதியளித்ததன் தொடர்ச்சியாக, 1806 இல் தேவசழமைக் கோவையை ஆங்கிலேயர் அங்கீகரித்தனர்.

ஒல்லாந்தரது காலத்திலேயே ஆங்கில மொழிபெயர்ப்பொன்று செய்யப்பட்டதாயினும் அம் மொழிபெயர்ப்பினது மொழித்தரம் திருப்திகரமானதாக இல்லை எனக் கருதி 1806 இல் இலங்கையின் பிரதம நீதியரசராக இருந்த அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் துரை (Sir Alexander Johnstone) அவர்களால் புதிதாக ஒரு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. அந்நேரத்தில் அவர் இது தொடர்பில் அரசாங்கத்திற்கு அனுப்பிய அறிக்கையொன்றில் ‘வேறெந்த மக்கள் கூட்டம் போன்றல்லாது தமிழர்கள் தமது பண்டைய நிறுவனங்களில் அதீத பற்றுடையவர்களாக இருக்கின்றனர்’ எனக் குறிப்பிட்டிருந்தமை நோக்குதற்குரியது. மேலும் ஆங்கிலேயர்களது நீதி பரிபாலனத்தின் மீது அம்மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமெனின் அவர்களது மரபுகளை நீதிமன்றங்கள் இறுக்கமாகப் பேண வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். தமது ஆட்சி தொடர்பிலான ஏற்புடைத்தன்மையை தமிழ் மக்கள் மத்தியில் உறுதி செய்வதற்கு தேசவழமையைப் பின்பற்ற வேண்டும் என ஆங்கிலேயர் கருதியமையைக் கவனிக்க வேண்டும்.

அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனது முயற்சியால் இவ்வாறாக மொழிபெயர்க்கப்பட்ட கோவையின் பிரதிகளை அவர் அனைத்து நீதிமன்றங்களிற்கும் அனுப்பி வைத்ததோடு தமிழில் மொழிபெயர்த்து அவற்றை பனையோலைகளில் எழுதுவித்து கிராமத் தலைவர்களுக்கு அவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் சாதாரண மக்களுக்கு விளங்கப்படுத்துமாறு கூறி விநியோகம் செய்தார். இதன் பின்னராக ஆங்கிலேயரது காலத்தில் 1911 இலும் 1947 இலும் [8] கொண்டுவரப்பட்ட சட்டங்கள் மூலம் தேசவழமைச் சட்டத்திற்கு சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

தேச வழமைக் கோவையில் உள்ளடக்கப்பட்டவை தேச வழமை தொடர்பிலான பூரணமான கோவையாகக் கருதப்படுவதற்கில்லை. ஆங்கிலேயரது காலத்து நீதிமன்றங்களில் ஏதேனும் விடயம் தொடர்பில் தேசவழமைக் கோவையில் பதில் பெற முடியாதவிடத்து அவ்விடயம் தொடர்பிலான மரபுசார் வழக்காற்றை விசேட சாட்சிகளின் (Expert Witness) கூற்றுக்களின் வாயிலாக ஸ்தாபிக்கலாம் என்ற நடைமுறை இருந்தது [9]. எனினும் வழக்கின் எத்தரப்பினால் நீதிமன்றத்திற்கு சாட்சி அறிமுகப்படுத்தப்பட்டதோ அத்தரப்பிற்குச் சாதகமான வகையில் சாட்சிகள் வழங்கப்பட்டதாகப் பரவலாகக் கருதப்பட்டு இம்முறை கைவிடப்பட்டது. அதனால் இவ்வாறாக தேசவழமைக் கோவைக்கப்பால் உள்ள தேசவழமை மரபுகளைச் சட்டத்தினால் / நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போனது. இன்று, தேசவழமைக் கோவையில் இடைவெளிகள் இனங்காணப்படும் போது தேசவழமைச்சட்டத்தின் பொதுவான பண்புகளை வைத்து நீதிமன்றம் முடிவொன்றுக்கு வர முயற்சிக்கும். இல்லாவிடின் ரோமன் - டச்சுச் சட்டத்தை வைத்து இடைவெளி நிரப்பப்படுகின்றது. மேலைத்தேய சட்டமொன்றை வைத்துத் தேசவழமையில் இருக்கின்ற ‘இடைவெளிகளை’ நிரப்ப முயற்சிக்கின்றமையானது தேசவழமைச் சட்டத்தின் சுயாதீனத்தைப் பாதிப்பதாக உள்ளது. உண்மையில் ‘இடைவெளிகள்’ என்று பேச வேண்டி வந்ததே தேசவழமை கோவைப்படுத்தப்பட்டதனாலேயே. காலம் காலமாக, காலத்திற்கேற்ற வண்ணம் இயைபடைந்து வளர்கின்ற ஓர் முறைமையில் ‘இடைவெளிகள்’ இருப்பதில்லை. ஆனால் எழுத்துருவாக்கத்தை நாம் முற்றிலுமாக வேண்டத்தகாததாகவும் பார்க்க முடியாது. எழுத்துருவாக்கம் செய்யப்படாதிருப்பின் விரைவாக நவீன மயப்பட்டுக் கொண்டிருந்த அரச கட்டமைப்பில் தேசவழமை என்பது முற்றிலுமாக அழிந்து போயிருக்கலாம். ஆகவே எழுத்துருவாக்கம் என்பதைத் தவிர்க்க முடியாத ஒன்றாகவே நாம் பார்க்க வேண்டும். ஆனால் எழுத்துருவாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட இரண்டு பிரச்சினைகளே தேச வழமையைச் சீர்திருத்த வேண்டும் என்ற முன்மொழிவுக்கு இட்டுச் செல்கின்றன என்பதனையும் கவனிக்க வேண்டும். முதலாவது தேசவழமை எழுத்துருவாக்கம் செய்யப்பட்ட காலகட்டத்திலிருந்த  சமூகத்தையே தேசவழமை பிரதிபலிக்கின்றது என்ற பிரச்சினை. இரண்டாவது தேசவழமைக் கோவையானது யாழ்ப்பாணத் தேசவழமை என்று ஒல்லாந்தர் கருதிய விடயங்களையே உள்ளடக்குகின்றது என்பது.



# இலங்கைப் பாராளுமன்றத்தினால் தேசவழமையைத் திருத்த முடியாதா?


இலங்கைப் பாராளுமன்றம் தமிழர் விடயங்களைக் கையாள்வது தொடர்பில் தமிழர்கள் மத்தியில் ஓர் ஏற்புடைத் தன்மைப் பிரச்சினை (legitimacy problem) இருப்பது ஏற்கனவே குறிப்பால் உணர்த்தப்பட்டது. இலங்கைப் பாராளுமன்றத்தில் முடிவுகள் எடுக்கப்படுவது  முற்றிலும் ஓர் பெரும்பானமை முடிவெடுக்கும் முறையைப் (majoritarian decision-making) பின்பற்றியதாகும். ஆகவே பாராளுமன்றம் தேசவழமையை இற்றைப்படுத்தும் முயற்சியை நியாயமாகச் செய்யும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. மேலும் அரசிற்கு முந்திய சட்டம் என்ற வகையில் தேசவழமையை இற்றைப்படுத்தும் தார்மீக உரிமையும் இலங்கைப் பாராளுமன்றத்திற்கில்லை.  முன்னர் குறிப்பிட்டவாறு 1947 இற்குப் பின்னர் இலங்கைப் பாராளுமன்றத்தினால் தேசவழமைச் சட்டத்தைத் திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற நிலைமைக்கு மேற்சொன்ன காரணங்களும் பங்களித்துள்ளனவா என்பது ஆராயத்தக்கது.

அனைத்து மரபுசார் சட்டங்களையும் ஒழித்து அதன் கூறுகளை உள்ளடக்கியதாக ஓர் சீரான சிவில் கோவையை (ரnகைழசஅ உiஎடை உழனந) ஒன்றை உருவாக்க முடியாதா என்ற கேள்வி கேட்கப்படுகின்றது. அப்படியானதோர் முயற்சியின் விளைவாக உருவாக்கப்படும் கோவை இந்த நாட்டில் அரசியலில் மேலாண்மையைக் கொண்டிருக்கும் சமூகத்தின் சமூக வழக்காறுகளையே கூடுதலாகப் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் இத்தகைய சிவில் கோவையை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதனை அரசியல் புலத்தில் வலியுறுத்துபவர்கள் அதிதீவிர வலதுசாரி இந்துத்துவ கட்சிகள் என்பது கவனிக்கத்தக்கது. இலங்கையில் இத்தகைய கோரிக்கைகள் ஜாதிக ஹெல உருமய போன்ற கட்சிகளிடமிருந்து வெளிக்கிளம்புவதையும் நாம் அவதானிக்க வேண்டும்.

சட்டத்தில் பல்வகைமையை (uniform civil code) கண்டு அச்சப்படுகின்ற அல்லது விரும்பாத மனப்பான்மை தான் இத்தகைய ஒரு சீரான சிவில் கோவையொன்றுக்கான கோரிக்கையின் அடிப்படையாக இருக்கின்றது. சட்டப் பல்வகைமையானது தனித்துவங்களை அங்கீகரிக்கும் தன்மையது. பல்தேசிய (legal pluralism)[10] நாடொன்று சட்டப் பல்வகைமையை அங்கீகரிக்கும். இலங்கையைப் பல்தேசிய நாடொன்று என்று அங்கீகரிக்க மறுக்கும் நிலை இருக்கும் வரை, ஒரு தேசியக் கொள்கையைக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் சமூகத்தாலும் அதன் பாராளுமன்றத்தினாலும் மற்றையவொரு தேசியத்தின் மரபுச் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதனை அனுமதிக்கக் கூடாது.



# நீதிமன்றங்களினால் தேசவழமைச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரமுடியாதா?


சட்டத்தின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியில் நீதிமன்றங்களிற்கு குறிப்பாக உயர் நீதிமன்றங்களிற்கு (Superior courts) பெரும் பங்கு உண்டு. நீதிபதிகளால் தீர்ப்புக்களின் வாயிலான இயற்றப்படுகின்ற சட்டம் (Judicial - law making) இன்று சட்டவாக்கத்தில் பெரும் பங்காற்றுகின்றது. கனடாவிலும் ஸ்கொட்லாண்டிலும் மரபுசார் அல்லது ஓர் குறிப்பிட்ட சமூகம் தொடர்பான தனித்துவமான சட்டங்கள் இருப்பதாக இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்விரு இடங்களிலும் நீதிமன்றங்கள் அத்தகைய தனித்துவமான சட்டங்கள் தொடர்பில் எவ்வாறு செயற்படுகின்றன எனப் பார்த்த பின் இலங்கை நீதிமன்றங்கள் தொடர்பில் பார்ப்பது நன்று.

கனடாவின் உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதியரசர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் மூவர் கியூபெக்கைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் [11]. கியூபெக்கில் கனடாவின் மொத்த  சனத்தொகையின் 24 சதவீதமானோரே வாழ்கின்ற போதிலும் அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் 1/3 ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. கியூபெக் சிவில் சட்டத்தைப் பின்பற்றுகின்ற அடிப்படையில் இவ்வேற்பாடு நியாயப்படுத்தப்படுகின்றது. கியூபெக் சிவில் சட்டம் தொடர்பில் வருகின்ற மேன்முறையீடுகள் யாவற்றையும் ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு விசாரிக்கும். இவ் ஐவருள் மூவர் கியுபெக்கைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி.

ஐக்கிய இராச்சியத்தினது உச்ச நீதிமன்றத்தின் பதவி வகிக்கின்ற 12 நீதிபதிகளில் இருவர் ஸ்கொட்லண்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது மரபாக இருந்து வருகின்றது. ஐவரைக் கொண்ட உச்ச நீதிமன்றின் குழுவொன்று ஸ்கொட்லாண்டிலிருந்து வரும் மேன்முறையீடுகளை விசாரிக்கும் போது அந்த ஐவருள் இருவர் இந்த இரண்டு ஸ்கொட்டிய நீதிபதிகளாக இருக்க வேண்டும் என்பதும் மரபாக இருந்து வருகின்றது. இவ்வாறான ஏற்பாடு இருக்கின்ற போதிலும் ஸ்கொட்டிய தேசியவாத கட்சியினர் (ஸ்கொட்லண்டின் ஆளும் கட்சி) அண்மைக் காலத்தில் இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றமானது தேவையற்ற வகையில் ஸ்கொட்டிய நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் தலையிடுவதாக குற்றஞ் சாட்டுகின்றனர் [12]. உச்ச நீதிமன்றில் பதவி வகிக்கும் ஸ்கொட்டிய நீதிபதிகளும் ‘இங்கிலாந்தின் மனநிலையில்’ இருந்து செயற்படுவதாக ஸ்கொட்லாண்டின் தேசியவாதிகள் கருதுகின்றனர்.

இங்கிலாந்திலும் கனடாவிலும் இவ்வாறாக நீதிமன்றங்களின் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகளிற்கு நிகரான ஏற்பாடுகள் இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் இல்லை. தேசவழமை தொடர்பிலோ முஸ்லிம் சட்டம் தொடர்பிலோ வழக்கொன்று விசாரணைக்கு  வரும் போது தமிழ், முஸ்லிம் நீதிபதிகள் அவற்றில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை. இது தொடர்பில் ஏற்படக்கூடிய சிக்கல்களை 1986 - 1988 இல் தீர்க்கப்பட்ட வழக்கொன்றிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம் [13].

முஸ்லிம் தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்ட பிள்ளை ஒன்றிற்கு அத்தம்பதிகளின் இறப்பிற்குப் பின்னர் அவர்களது சொத்துக்களின் மீதான உரித்து உண்டா என்ற கேள்வி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னர் வந்த போது, உண்டு எனப் பெரும்பான்மையான நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். (நீதியரசர் செனவிரட்ண மற்றும் நீதியரசர் சிவா செல்லையா) ஆனால் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த நீதியரசர் ஒருவர் (நீதியரசர் ஜமீல்) பெரும்பான்மையினரது தீர்ப்போடு உடன்படாமல் புனித குரானில் இது தொடர்பில் சொல்லப்பட்டுள்ளவை பற்றிய நீண்ட விளக்கமளித்துத் தனித் தீர்ப்பொன்றை - தத்தெடுத்த பிள்ளைக்கு உரிமை இல்லை - எனத் தீர்ப்பளித்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட போது நீதியரசர் ஜமீலின் தீர்ப்பை அடியொற்றி பிரதம நீதியரசர் சர்வானந்தா தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்போடு வேறு மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் இணைந்து கொண்டனர். இந்தத் தீர்ப்போடு இணங்காத ஒரேயொரு உச்சமன்ற நீதிபதி, நீதியரசர் வனசுந்தர மட்டுமே. நீதியரசர் வனசுந்தர ஒரு போற்றத்தக்க நீதியரசர். ஆனால் இந்த நீதியரசர் வனசுந்தரவே முன்னர் 13 ஆம் திருத்தம் அரசியலமைப்போடு இயைபானதா என்ற வழக்கின் போது தான் வழங்கிய தீர்ப்பில் மாகாணங்களுக்கு சட்டவாக்க அதிகாரம் வழங்கப்படுமானால் வடக்கு கிழக்கில் உள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு விடும் என்ற கவலையைத் தனது தீர்ப்பிலேயே தெரிவித்தவர் [14]. நீதியரசராக இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் இவர் சிங்கள அதிதீவிர தேசியவாத மேலாண்மைவாதிகளால் அமைக்கப்பட்ட சிங்கள ஆணைக்குழுவிற்குத் தலைமை வகித்து இலங்கை அரசின் ஒற்றையாட்சி முறைமைகளில் மாற்றங்கள் கொண்டுவரக் கூடாது என அறிக்கை எழுதினார். நீதியரசர் வனசுந்தர மேற்படி வழக்கின் தீர்ப்பை சிங்கள மேலாண்மை மனநிலையிலிருந்து எழுதினார் என்பதைத் திடமாகக் கூற முடியாது. அவ்வாறு எழுதவில்லை என்றும் உறுதியாகக் கூற முடியாது. இலங்கை உச்ச நீதிமன்றத்திடம் தேச வழமையை வளர்த்தெடுக்கும் பொறுப்பை விடுவதில் உள்ள சிக்கலுக்கு இந்த வழக்கு நல்லதோர் உதாரணம் என்பதையே இந்தக் கட்டுரையாளர் சொல்ல வருவது.



# தேச வழமையைத் திருத்தம் செய்யக்கூடியது யார்?


ஒரு சமூகத்தினது வழக்காறுகளை அந்தச் சமூகம் தான் திருத்த வேண்டும். மாற்றங்கள் என்பது உள்ளிருந்து வரும் போது தான் அம்மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படும. தேச வழமையைத் திருத்துவதும் தமிழ்ச் சமூகமாகவே இருக்க வேண்டும். நவீன அரச கட்டமைப்பில் இதற்கான வழிமுறை தமிழர்களுக்கான சுயாட்சி அலகு ஒன்றின் மூலமாக வரவேண்டும். இந்த சுயாட்சி அலகுக்கு வழங்கப்படுகின்ற பொறுப்புக்களில் ஒன்றாக விசேட சட்டங்களைத் திருத்துதல் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் தமிழருக்கான சுயாட்சி அரசாங்கம் ஒன்றை அமையப் பெறும் போது பல்வேறு தரப்புக்களது ஆலோசனைகளைப் பெற்று ஓர் வெள்ளை அறிக்கை ஒன்று இது தொடர்பில் தயாரிக்கப்பட வேண்டும். அவ்வாறாக ஆலோசிக்கப்படுகின்ற தரப்பில் பெண்களும் தமிழர் மத்தியில் காணப்படும் ஒடுக்கப்படும் சமூகத்தவர்களுக்கும் கூடியளவு முக்கியத்துவம் வழங்க வேண்டும். இன்றைய தமிழ் சமூகத்தினது வழக்காறுகளை சமூக நீதியுடன் இயைபுபட்டதாக அமையும் வண்ணம் நாம் ‘புதிய தேசவழமை’ ஒன்றை உருவாக்கலாம்.

தமிழ்த் தேசம் என்று நாம் கருதுகின்ற சமூகம் எத்தகையது என்பது பற்றிய ஆக்கபூர்வமான கருத்துருவாக்கத்தை நாம் இன்றைய சூழ்நிலையில் செய்ய வேண்டும் என்பதனைப் பற்றி இக்கட்டுரையாளர் வேறொரு இடத்தில் வலியுறுத்தியுள்ளார். தமது அரசியலின் எதிர்காலம் தொடர்பில், முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு தமிழ் மக்கள் விரக்தியுற்றுள்ளவொரு சூழலில் அவ்விரக்தி நிலையை முறியடிப்பதற்கான சமூக ஒன்றுதிரட்டல் ஒன்று அவசியமானது. அந்த ஒன்று திரட்டல் ஆக்கபூர்வமானதாக இருத்தல் வேண்டும். தமிழ்த் தேசியம் என்பது வெற்றுக் கோசமாக அல்லாமல் எமது எதிர்கால ஆட்சியியலைப் பற்றி காத்திரமான பார்வைகளை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறானதொரு நிகழ்ச்சித் திட்டத்தின் ஓரங்கமாகவே இக்கட்டுரையாளர் தேசவழமை தொடர்பான ஓர் பரந்துபட்ட உரையாடலை நாம் செய்ய வேண்டியதான அவசியத்தை வலியுறுத்துகின்றார்.

தேசவழமை பற்றிய இந்தச் செயன்முறையில் இந்தத் தீவில் வாழும் அனைத்துத் தமிழர்களும் பங்குபற்ற முடியும். பெல்ஜியத்தில் ஆள்புல சமஸ்டிப் பாராளுமன்றம் என்பதற்கு மேலதிகமாக ஒவ்வொரு சமூகத்திற்கும் (அந்த சமூகத்தவர்கள் எங்கு வாழ்கின்றனர் என்ற வரையறைக்கப்பால்) சமூகப் பாராளுமன்றம் (Community Parliament) ஒன்றில் பங்குபற்றுவதற்கு ஏற்பாடு உண்டு [15]. இத்தகைய முறைமையைப் பற்றி நாம் சிந்திக்கலாம். மனமும் செயலூக்கமும் இருக்குமானால் தீர்வைத் தேடுவது கடினமான காரியமன்று. கிழக்கைச் சேர்ந்த தமிழர்களின் முக்குவர் சட்டத்தை துயிலெழுப்பவும் அதனை தேசவழமையைப் போன்று புத்துயிர் ஊட்டுவதற்கான வழிவகையைப் பற்றியும் சிந்திக்கலாம்.



# முடிவுரை


தேச வழமையின் இப்போதைய வடிவத்தையோ உள்ளடக்கத்தையோ ஓர் பழமைவாதப் பார்வையிலிருந்து இந்தக் கட்டுரை வக்காலத்து வாங்க முயற்சிக்கவில்லை. ஓர்மைப்படுத்தும் முயற்சிக்கெதிராகவும் பன்மைவாதத்தைப் பாதுகாக்கும் பார்வையிலுமே இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. தேசவழமையை சீர்திருத்துவதில் உள்ள வரைமுறைப் பிரச்சினைக்குத் துணிச்சலாக ஓர் தீர்வை முன்வைக்க முயற்சித்துள்ளது. வைக்கப்பட்டுள்ள தீர்வு நடைமுறைச் சாத்தியமானதா என்ற கேள்வி எழக்கூடும். நடைமுறைவாதத்தை முன்வைத்தால் இன்று எமது சமூகத்தின் மத்தியில் நிலவக்கூடிய அடக்குமுறைச் சூழலை ஒட்டியே சிந்திக்க வேண்டிவரும். அவ்வாறான சிந்தனை ஒடுக்குமுறைக்குத் துணை செய்வதாகவே முடியும்.



அடிக்குறிப்புக்கள்.
[1] LL.B (Hons) (Colombo), B.C.L (Oxford) ; சட்டத்தரணி
[2] உதயன், 04 நவம்பர் 2011
[3] இந்த விளங்கிக் கொள்ளல் தவறானது என்பதற்கு பார்க்க : Dr Shivaji Felix, ‘Introduction’ appearing in Dr. H.W. Thambiah, The Laws and Customs of the Tamils of Jaffna, (Revised Edition, Women’s Education and Research Centre, 2001), pp. vi-vii
[4] பார்க்க : Michael Keating, Plurinational Democracy: Stateless Nations in a Post Sovereignty Era (Oxford: Oxford University Press, 2001)
[5] இத்தகைய சட்டங்களை ‘மரபுசார் சட்டங்கள்’ என வகைப்படுத்துவது காலனியாதிக்கவாதிகளால் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்ட ஒன்று. தமது சட்டங்களை பிரதான நீரோட்டத்திற்கு உரியவை எனவும் தாம் காலனியாதிக்கத்திற்குட்படுத்திய மக்கள் சட்டங்கள் மரபுசார்ந்தவை என வகைப்படுத்தியதில் காலனியாதிக்க மனநிலை வெளிப்படுகின்றது.
[6] சிலோன் அல்லது சிறீலங்கா அரசு என்ற கருத்தாக்கத்தினது நவீன செயன்முறை வடிவம் 1815 உடன் ஆரம்பமாகின்றது எனலாம்.
[7] தேசவழமையைக் கோவைப்படுத்திய வரலாறு தொடர்பில் பார்க்க: H.W Thambiah, ‘The History of Codification’, (Chapter 2), n. 3.
[8] Jaffna Matrimonial Rights and Inheritence Ordinance of 1911 as amended by Oridnance no 58 of 1947.
[9] தேசவழமை தொடர்பிலான முத்துக்கிருஸ்ணா என்பவரது நூலில் மேற்கோள காட்டப்பட்ட Vyrewanadan v Vinasi, Kander v Ramaswamy போன்ற வழக்குகளை கலாநிதி. தம்பையா உதாரணமாகக் காட்டுகின்றார். n. 3இ p. 40இ 41
[10] Legal Pluralism தொடர்பான சுருக்கமானதோர் புலமைத்துவ ஆய்வுக்குப் பார்க்க :  Brian Z Tamanaha, ‘Understanding Legal Pluralism: Past to Present, Local to Global’, 29 Sydney Law Review (2007)
[11] பிரிவு 6, கனடிய உச்ச நீதிமன்றச் சட்டம்
[12] பார்க்க : Guardian, ‘Alex Salmond provokes fury with attack on UK Supreme Court’, 01 June 2011: http://www.guardian.co.uk/uk/2011/jun/01/alex-salmond-scotland-supreme-court
[13] Ghouse v Ghouse 1986 1 Sri. L. R 48 (Court of Appeal), 1988 1 Sri. L. R 25 (Supreme Court)
[14] In Re the Thirteenth Amendment to the Constitution 1987 2 Sri. L. R 312 at 364, 365, 366.
[15] பார்க்க : Ann L. Griffiths (Ed), Handbook of Federal Countries 2005 (Forum of Federations, 2005), pp. 58-72



[[ 1707 இல் ஒல்லாந்தரால் எழுத்து வடிவிற்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் குருபரன் குறிப்பிடுவது போன்று வழமைகளின் தொகுப்பாகவே இருந்திருக்கின்றது. அவ்வாறான வழக்கம் நெகிழ்ச்சியான மாற்றங்களுக்குட்படக்கூடிய நிலையிலேயே இருந்தது. ஒல்லாந்தரால் எழுத்தாவணமாக உருவாக்கப்பட்ட நிகழ்வின் மூலமான நிறுவனமயப்படுத்தல் - அதுவரையிலான நெகிழ்ச்சித்தன்மையைக் கட்டிப் போட்டது குறிப்பிடத்தக்கது. 1707 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்தவாறான பிற்போக்கான கூறுகளுடனேயே தேச வழமையின் நிறுவனமயமாதல் நிகழ்ந்தது. 30 அக்டோபர் 2003 தமிழீழ சட்டத்துறையின் முக்கியஸ்தரான பரராஜசிங்கம் தமிழ்நெட் இணையத்தளத்திற்கு கொடுத்த நேர்காணலில் தேசவழமை தொடர்பான பல முக்கியமான விடயங்களைக் குறிப்பிடுகின்றார். அதில் தமிழீழ சட்டவாக்கத்துறையினரால் தேசவழமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். அடிமைத்தனம், சாதியம் போன்றவை காலத்திற்குப் பொரித்தமற்றவை / அருவருப்பூட்டக்கூடியவை என்பதை மாற்றத்திற்கான காரணமாகக் குறிப்பிடுகின்றார். குருபரனின் கட்டுரை இவ்விடயங்களையும் தொட்டிருக்கலாம். - சசீவன் ]]

May 18, 2012

ஆறாவடு : சில விமர்சனக் குறிப்புக்கள்



சயந்தனின் 'ஆறாவடு' என்ற நாவல் ஈழத்து நாவல் வரிசையில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நாவல் என்ற வரிசையில் இடம்பெறும் என்பதை முதலில் குறிப்பிட வேண்டும். சில குறைகள் மற்றும் நாவலின் முதிர்ச்சியற்ற தன்மையைத் தாண்டி அதன் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடக்கூடியது அல்ல.

நாவல் வெளிவந்த நாளில் இருந்து வெளிவந்த விமர்சனங்கள் பெரும்பாலும் நாவலைப் பாராட்டியே அமைந்திருந்தன. ஈழத்துத் தமிழ்ச்சூழலில் இளைய தலைமுறையைச் சேர்ந்த புதிய நாவலாசிரியர் ஒருவரின் வருகையை மனப்பூர்வமாக வரவேற்பதற்காக தவறுகள் கண்டும் காணப்படாமல் விடப்பட்டிருக்கலாம். அதற்காக, இந்நாவல் குறைகளற்ற நாவலை என்று அர்த்தப்படுத்திவிட முடியாது. தவறுகள் சரியாகச் சுட்டிக் காட்டப்படும் போது, நிச்சயமாக ஆசிரியர் தனது அடுத்த நாவலை இன்னும் முதிர்ச்சியோடும் - தவறுகளை நிவர்த்தி செய்து வெளிக்கொணர்வார் என எதிர்பார்க்கலாம். ஆக, காழ்ப்புணவர்வற்ற தவறுகளைச் சரியாகச் சுட்டிக்காட்டக் கூடிய விமர்சனங்கள் மிக அவசியமானவை. நாவலை வாசிப்பதற்கு முன்னர் நாவல் தொடர்பாக வெளியாகிய பெரும்பாலான விமர்சனங்களையே முதலில் படித்துள்ளேன் என்ற வகையில், நாவலை வாசிக்கும் போது நாவல் தொடர்பான சித்திரமொன்று மனதில் இருந்தது. ஆக, எனது விமர்சனக்குறிப்புக்கள் பெரும்பாலும் நாவலுக்கான விமர்சனமாக மாத்திரம் அமையாமல், நாவல் மீதான விமர்சனங்களுக்கான விமர்சனமாகவோ அல்லது எவ்விடங்களில் அவ்விமர்சனங்களுக்குச் சமாந்தரமாகவும் விலத்தியும் எனது பார்வை அமைந்துள்ளது என்பதைச் சுட்டுவதாகவும் அமையும். இப்பதிவை முழுமையான விமர்சனமாக பார்க்காமல், நாவலுடைய சில அம்சங்கள் சார்ந்த விமர்சனக்குறிப்புக்களாக மாத்திரமே பார்க்க முடியும்.


# நாவலின் கட்டமைப்பு

ஆறாவடு என்ற இந்நாவல், பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பு போன்ற அமைந்திருப்பதாக விமர்சனம் சொல்லப்பட்டிருந்தது. நாவலின் முதல் நூறு பக்கங்களைப் படித்து முடித்தபோது அவ்வாறான எண்ணமே எனக்கும் ஏற்பட்டது. ஆயினும், நாவலைத் தொடர்ந்து வாசிக்கும் போது அவ்வெண்ணம் அடிபட்டுப் போய் நாவலாக முழுமை பெற்றுள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது. கதைப்பிரதி முழுமையாக பின்னநவீனக் கதை சொல்லல் முறை வடிவமான Nonlinear narrative முறையில் சொல்லப்பட்டுள்ளது. வாசகரே கதையைக் கோர்த்துச் செல்ல வேண்டிய நிலைக்கு 'ஆசிரியரால்' விடப்பட்டுள்ளார்.

எனது வாசிப்புத் தேர்ச்சியின் அடிப்படையில் ஒருசில அத்தியாயங்கள் தொடர்புபடுத்த முடியாமல் துருத்திக் கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றது. இது ஒரு தோல்வியடைந்த ஒரு வாசகரின் அனுபவமாகக் கூட இருக்கலாம். முக்கியமாக சிவராசனுடைய இடப்பெயர்வு அனுபவமும் தேவியின் கதையும் அக்காலப்பகுதியைப் பிரதிபலிகின்றதேயன்றி, நாவலுடன் பிற வகைகளில் தொடர்புறவில்லை. சற்று கவனமெடுத்திருந்தால் சகல 'கதைகளையும்' ஒன்றுடன் ஒன்றாகச் சரியாகக் கோர்த்திருக்கலாம். ஆசிரியர் அதனைச் செய்திருக்க வேண்டுமென்றில்லைத்தானென்றாலும், வாசகனின் கற்பனைக்காவது அதற்கான வெளியை உருவாக்கி விட்டிருக்கலாம். இவ்வகையான துருத்தல்கள் குறிப்பிட்ட காலப்பகுதியை மையமாகக் கொண்ட வெறும் சம்பவங்களின் தொகுப்பாக பிரதியை எஞ்ச வைத்துவிடுமோ என்ற அஞ்ச வைக்கின்றது.


# விவரணம்

அடுத்ததாக விவரணம் தொடர்பான விடயத்தைக் கவனித்தோமேயானால், பொதுவாக ஈழத்து நாவல்கள் பெரும்பாலானவற்றில் காணப்படும் குறை இந்நாவலிலும் காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. வாசகரைப் பிரதியுள் உள்வாங்குவதற்கு பெரும்பாலான ஈழத்து நாவல்கள் பின்னிற்கின்றன. தமது கதைகளைச் சொல்லி முடித்துவிட வேண்டுமென்ற அவாவில் சொல்லப்படுவது போன்று அமைந்திருப்பதை அவதானிக்கலாம். அவற்றால் வாசகருடன் ஊடாடவோ அல்லது வாசகரைத் தன்னுள் உள்வாங்கவோ முடிவதில்லை என்பது அவற்றின் மிகப்பெரும் குறையாகும். தீவிர இலக்கியகர்த்தாக்களால் வெகுஜன எழுத்தாளர் என்று கூறப்படும் செங்கை ஆழியான் இத்தடையக் கடந்து தனது நாவல்களைப் படைத்துள்ள போதிலும், தீவிர எழுத்தாளர்கள் இவ்விடயத்தில் திண்டாடுவதைத் தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்றது.

சோவியத் ரஸ்யாவின் நிலக்காட்சி தொடர்பான எவ்வித முன் அனுபவமுமற்ற எம்மால் சோவியத் இலக்கியங்கள் மூலமாக ரஸ்யாவில் வாழ முடிந்திருக்கின்றது. அதேநேரம். எம்மால் எப்போதும் எமது நிலப்பரப்பில் - எமது நிலப்பரப்பிற்குத் தொடர்பில்லாத வாசகர்களை வாழ வைக்க முடிவதில்லை. எமது நிலவரைவியலை விளங்கப்படுத்தவோ அல்லது எமது நிலப்பரப்புக்களில் வாழவைக்கவோ வேண்டுமென்றால், நாம் 'வெகுஜன' எழுத்தாளர்களிடம் செல்ல வேண்டியிருப்பது துரதிஸ்டவசமே. இதுதான் ஈழத்து நாவல்களின் நிலமை. மிக முக்கியமாக - எமது வாழ்வியலுடன் மிகவும் ஆழமாகத் தொடர்புபட்ட ஈழப்போராட்டம் தொடர்பான விடயங்களை முதன்மைப்படுத்திய நாவல்களில் இப்போதாமையை நன்குணர முடிகின்றது. எமது துயரங்கள் நிறைந்த வாழ்வு முழுமையும் செய்திக்குறிப்புக்களிலும் - ஆய்வுகளிலும் - அரசியல் ஆவணங்களிலும் - அவதூறுகளிலும் வாழுமாறு சபிக்கப்பட்டிருப்பது துரதிஸ்டவசமானது.


# சம்பவங்களின் உண்மையும் பொய்யும்.

புனைவுகளில் காலத்தைக் கலைத்துப் போடுதல் - சம்பவங்களைக் குலைத்துப் போடுதல் - உண்மையையும் பொய்யையும் கலந்து கொடுத்தல் தொடர்பான விடயங்களில் தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களும் நெடுங்காலமாக குழப்பத்தில் இருக்கின்றார்கள். கதாசிரியர்கள் தமது அனுபவக்குறைவு - ஆய்வுப் போதாமை போன்றவற்றை நியாயப்படுத்த மாயயதார்த்தவாதம் - பின்னவீனத்துவம் போன்றவற்றைத் துணைக்கிழுப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சயந்தனின் நாவல் தவல்பிழைகளையும் - முரண்களையும் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. அதனை, தத்துவங்களைக் கொண்டு சரிசெய்யும் ஆசிரியர்கள் போல் செயற்படமாட்டார் என நம்புவோம்.

ஜூலை மாதத்தில் நெல்லுகள் பற்றியெரியும் காட்சியும் 2002 இல் போய்ஸ் பட இறுவட்டுக்களை எரிக்கும் காட்சியும் 'சம்பவங்களையும் காலத்தையும் புனைவுகளூடாகக் கலைத்துப் போடுதல்' வகைப்பட்டது என்று புருடா விட முடியாது. 'நொன்-லீனியர்' மற்றும் 'காலத்தைக் கலைத்துப் போடுதல்' தொடர்பாக இதை விட்டால் சிறுமைப்படுத்தும் செயற்பாடுகள் வேறெதுவும் இருக்க முடியாது.

மிக அண்மையில் சோபாசக்தி எழுதிய கப்டன் கதையில் வரும் ஒரு சம்பவம் தொடர்பாகவும் இதேமாதிரி சில விமர்சனங்கள் முன்வைக்கபப்ட்டது. 'சோபாசக்தி அடிச்ச ஆட்லறி' என்று ஒரு பதிவும் எழுதியிருந்தேன். புனைவென்றால் அப்படித்தானிருக்கும் என்றவாறாக சில விமர்சகர்களாலும் ஆய்வாளர்களாலும் எனது பதிவும் பல்வேறுபட்டோரது விமர்சனங்களும் எதிர்கொள்ளப்பட்டது, அறியாமையின் உச்சமென்றே கருத வேண்டும். இவ்வாறான கருத்துக்கள் இன்றைக்கும் ஏராளமான மானிடவியல் ஆய்வுகளைத் தரவுகளாகக் கொண்டு கடின உழைப்பின்பால் உருவாக்கப்படும் காவல்கோட்டம் போன்ற பிரதிகளையும் அவற்றை உருவாக்கும் நாவலாசிரியர்களையும் மறுப்பது போலாகிவிடும்.


# நாவல் எதிர் சிறுகதை

நாவலுக்கும் சிறுகதைக்குள் உள்ள வேறுபாடுகள் தொடர்பாகவும் சில விடயங்களையும் இந்நாவலுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. புனைவிற்கு வடிவமேயில்லை - நாவல்/கவிதை/சிறுகதை என்ற வடிவங்களே அபத்தம் என்ற பிரகடனங்களுக்கும் புனைவு / அ-புனைவு என்ற வேறுபாடே சுத்த பைத்தியக்காரத்தனம் என்ற பிரகடனங்களுக்கும் பின்னரான காலத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றோம். மேற்கூறிய கருத்தியல்கள் தோன்றிய காலம் / தேவை / சூழல் போன்றவற்றையும் அக்கருத்தியல்களில் அடியிலோடும் கனதியையும் விளங்கிக் கொள்ளாமல் வழமை போன்று எளிதாக விளங்கிக் கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்டதன் பின்னரே இவ்விடயத்திற்குள் செல்ல முற்படுகின்றேன்.

சிறுகதையை எழுதுவதற்கு நீங்கள் ஒரு கத்தியுடன் எளிதாகக் களமிறங்கிவிட முடியும். குயுக்தியான - சகலதையும் நிராகரிக்கும் - குரூர மனம், நீங்கள் சிறுகதை ஆசிரியராக இருப்பதற்குத் தடையாக இருக்கப்போவதில்லை. மிகச்சிறந்த புத்திசாலி / தந்திரசாலி ஒருவரால் ஒரு சிறந்த சிறுகதையைப் படைத்துவிட முடியும். ஆனால், ஒரு நாவலை எழுதுவதற்கு மேலதிகமான சில தகைமைகள் தேவைப்படுவதாகவே நினைக்கின்றேன். தெளிவான பார்வையும் சகலதையும் தவறுகளுடன் அங்கீகரிக்கும் மனநிலையும் தாய்மையுணர்வும் அவசியமானதெனத் தோன்றுகின்றது.

ஏற்கனவே கூறியபடிக்கு ஈழத்து நாவல்களில் நாம் சில போதாமைகளைத் தொடர்ச்சியாகத் தேடிக் கொண்டிருக்கின்றோம். எம்மால் நல்ல சிறுகதைகளை எழுதிவிட முடிகின்ற போதிலும் ஏன் நல்ல நாவல்களை உருவாக்க முடிவதில்லை என்ற கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது. எமது வாழ்வு முழுமையும் போராட்டச் சூழலுக்குள் அமைந்ததன் காரணமாக, சற்று அதிகமாகவே சமூகமும் மனிதர்களும் அரசியல் மயப்பட்டுள்ளது. அரசியல் என்ற கத்தியால் சிறுகதையை வேண்டுமானால் சீவிச்செதுக்கிவிட முடியும். ஆனால், நாவலில் அவ்வாறான அணுகுமுறை சாத்தியமில்லை. இதுதான், இவ்வளவு துயரங்கள் நிரம்பிய வாழ்வைக் கொண்டுள்ள ஈழத்தில் இருந்து வரவேண்டிய நாவல்கள் வராமல் போனதற்கான காரணமோ தெரியவில்லை.

மேலும், சற்றுப் பெரிய சிறப்பான சிறுகதைகளை வெளியிட்ட சோபாசக்தியை நாவலாசிரியர் என்று கொண்டாடியது எமது சமூகத்தில் எவ்வாறான தவறான முன்னுதாரணமாகப் போகின்றது என்பதை இனிமேல் தான் அனுபவிக்க வேண்டும் போலுள்ளது. அரசியல் சம்பவங்களின் கோர்வையால் ஒரு நாவலைப் படைத்துவிட முடியும் என்ற துணிவு சயந்தனிற்குச் சோபாசக்தியிடமிருந்தே கிடைத்திருக்கும் என நம்புகின்றேன். நாவல் எழுதுவதற்கு அரசியல் கருத்துக்களும் சம்பவங்களும் போதுமானவை அல்ல என்பது எனது கருத்து. சமூகம் தனியே மனிதர்களாலும் அரசியலாலும் நிரம்பிய எளிய சூத்திரமல்ல.


# சயந்தனுடையதும் ஆறாவடுவினதும் இடம்

சயந்தனின் நாவலை, ஈழத்து நாவல் வரிசையிலும் - சயந்தனை ஈழத்து நாவலாசிரியர் வரிசையிலும் எவ்விடத்தில் வைத்துப் பார்ப்பது என்ற விவாதங்களைச் சில இடங்களில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. பல்வேறு உரையாடல்களில் சோபாசக்தியுடன் ஒப்பிடுவது நிகழ்திருக்கின்றது. எனது கணிப்பின்படி, சிறுகதைகளில் சோபாசக்தியை எப்போதுமே முந்த முடியாத சயந்தன், நாவல் வரிசையில் முதிர்ச்சியின்மை என்ற விடயத்தைத் தாண்டி - உயரத்தில் நிற்கின்றார் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டியுள்ளது. அதேநேரம், விவரணம் சார்ந்து செங்கை ஆழியான், விமல் குழந்தைவேல் போன்றோருடைய நிலவரைவில் மனதில் அகலாமல் உள்ளது போன்று, சயந்தனுடைய நாவலின் பின்புலம் மனதில் பதியவில்லை.

இவ்விடத்தில் புதியதோர் உலகம் என்ற கோவிந்தனது நாவலைக் குறிப்பிட வேண்டியுள்ளது. அரசியல் முதன்மையான நாவலென்றாலும் கூட, மிகச்சிறந்த நாவலாக புதியதோர் உலகத்தைத் தயக்கமின்றிக் குறிப்பிடலாம். போராட்டம் மற்றும் மனிதநேயம் தொடர்பான கோவிந்தனது பார்வைகளே அவரால் இவ்வாறான உன்னதமான நாவலைப் படைக்க முடிந்தது. 'அனார்கிஸ்ட்' இற்குரிய மனநிலையில் இருந்து அரசியல் பிரதிகளை தொடர்ச்சியாக பிரசவிக்க முடியுமே தவிர, நிச்சயமாக நல்ல நாவல்களை உருவாக்கிவிட முடியாது. வாழ்வைக் குரூரமாக அல்லாமல் மிகவும் திறந்த மனதோடு எதிர்கொள்ளுவது அவ்வளவு இலேசானது அல்ல. வாழ்வில் நாம் காணும் அசமத்துவங்களையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ளும் போதெல்லாம் வெறுமனே எதிர்ப்பை வெளிப்படுத்திவிட்டோ அல்லது வெறுப்பை உமிழ்ந்துவிட்டோ அப்பால் நகர்ந்து செல்வதும் - பின்பு அந்த யதார்த்தத்திற்குள் எம்மைத் தொலைத்து விடுவதுமே பல புரட்சியாளர்களின் கதையாக இருப்பதை கண்ணால் கண்டு கொண்டிருக்கின்றோம். மாறாக, கோவிந்தன் ஒடுக்குமுறைகளின் யதார்தத்தை ஏற்றுக் கொண்டு அதற்கெதிராகப் போராடும் வலுவையும் மனநிலையையும் கொண்டுள்ளார். இன்னும் சொல்லப்போனால் அதற்குத் தேவைப்படும் உழைப்பையும் கொடுக்கக்கூடிய போராளியாக மனதில் நிற்கின்றார். இதனால் தான் 'புதியதோர் உலகம்' என்ற நாவலை ஈழத்து போராட்ட அரசியல் நாவல்களில் அளவுகோலாக என்னால் கொள்ள முடிகின்றது. எனது அளவுகோல் சகலருக்கும் இருக்க வேண்டுமென்ற எந்த கட்டாயமும் யாருக்கும் இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது.

பிரதியின்பம் மட்டும் நாவலாகிவிடாது. அவ்வாறெனில், நாம் ராஜேஸ்குமாரையும் பட்டுக்கோட்டைப் பிரபாகரையும் நல்ல நாவலாசிரியர்கள் என்று கூறிவிடுவோம். தமிழ்நாட்டு வாசகர்களை முதன்மையாகக் கொண்ட தமிழ் வாசகப்பரப்பு தனக்கு அண்மையில் உள்ள நிலப்பரப்பின் - தன்னில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சூழலை அறியப் பேராவல் கொண்டுள்ளது. இங்கேதான், ஈழத்து நாவல்கள் - அதுவும் அரசியல் பிரதிகள் - அவற்றின் தவறுகளுடன் கொண்டாடடப்படுவது நிகழ்கின்றது. சாகசம் நிரப்பிய கதைகள் தமிழ்ப்பரப்பில் நல்லகதைகளாக நிலைபெற்றுவிட்டன. அதாவது, இன்றைய நிலையில் ஈழத்தின் நிலவரத்தை அதன் நிலவரைவியலுடன் - ஈழத்துப் பண்பாட்டு வாழ்வியலுடன் கூறுவதை விட - ஈழத்தின் சாகசங்களையும் ஈழத்தின் துயரங்களையும் தமிழ்நாட்டு வாசகர்களுக்குக் கூறுவதே இலக்கியம் என்றாகிப் போனது துரதிஸ்டவசமான நிலையென்பேன். இச்சூழல், தொடர்ச்சியாக ஈழத்தில் தமிழ்நாட்டுக்குக் 'கதை' சொல்பவர்களையே உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

சயந்தனிடம் தமிழ்நாட்டிற்குக் கதை சொல்லும் அணுகுமுறை காணக்கிடைப்பதாகச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. இதனை அவர் நிவர்த்தி செய்து, தனது அடுத்த நாவலைப் படைப்பார் என நம்புகின்றேன்.


# நாவல் விருத்தியடைந்த சூழல்

ஒரு போராளியின் வாழ்வினூடாக இந்நாவல் வளர்ந்து செல்கின்றது. இந்நாவலின் ஊடாக சமூகத்தில் சாதாரண தரத்தில் உள்ள போராளியின் நிலையைத் உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. போராளி எப்போதும் அதிகாரம் நிரம்ப்ப பெற்றவன் என்ற பொதுப்புத்தியை ஆசிரியர் கடந்து செல்கின்றார். போராளிகளுடைய அளவற்ற அதிகாரங்கள் தொடர்பான உரையாடல்களை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் 1990 களுக்கு முன்னர் இயக்கங்களில் இருந்தவர்களும் - அதன் பின்பு ஈழச்சூழலில் இருந்து அந்நியப்பட்டவர்களுமேயாவார்கள். 1990 களின் பின்னர் நிறுவனமயப்பட்ட ஒரேயொரு போராளி இயக்கத்தில் இருந்த சாதாரண போராளியொருவர் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே கொண்டிருந்தார் என்பதை எமது அனுபவத்தில் கண்டிருக்கின்றோம்.

ஆறாவடுவில் வரும் பிரதான பாத்திரமான போராளி, பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கும் நிரம்பப்பெற்ற சாதாரணனாகவே வந்து செல்கின்றார். ஒரு போராளியின் அன்றாட வாழ்க்கையை சயந்தனால் மிகைப்படுத்தப்படாமல் பதிவுசெய்ய முடிந்திருக்கின்றது. போராளி தான் சார்ந்த அமைப்பை நம்புவதும் - அதனை வெறுப்பதும் - அதனை நக்கலடிப்பதும் - அதனால் தண்டனைக்குட்படுத்தப்படுவதும் யதார்த்தபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நாவலின் பின் காலப்பகுதியைத் தவிர மிகுதியான - பெரும்பாலான காலப்பகுதியை நானும் பகிர்ந்து கொண்டுள்ளேன் என்பதன் அடிப்படையிலும் குறித்த காலப்பகுதியில் வசித்த ஒருவருக்கு இருக்கக்கூடிய அனுபவங்கள் என்ற வகையிலும், பல்வேறுபட்ட விடயங்களை மீள ஞாபகப்படுத்திப் பார்க்கக்கூடியதாக இருந்தது. இந்நாவலை புதிய தலைமுறையொன்றைச் சேர்ந்த நாவலென்று துணிந்து சொல்ல முடியும். 90 களுக்குப் பின்பான ஈழத்துச் சூழலுடைய நேரடி அனுபவங்களைக் கொண்டு படைக்கபப்ட்ட இப்பிரதி, அக்காலப்பகுதியில் தமது வாழ்க்கையின் ஆரம்பத்தைத் தொடங்கிய தலைமுறையொன்றினுடைய கதைகள் இவ்வாறுதான் அமைந்திருக்கும் என்பதை நேர்மையாகக் கூறியுள்ளது. நான் ஒரு நாவலை எழுதுவேனாக இருந்தால், இதே கதைக்களனையும் காலப்பகுதியையும் கொண்டதாகவே பெரும்பாலும் அமைந்திருக்கும்.

இந்நாவல், அரசியல் நீக்கம் செயபட்ட பிரதி என்ற கூற்று மிக மோசமானது என்றே கூறுவேன். இருவேறு அதிகார மையங்களுக்குள் வாழச்சபிக்கப்பட்ட தலைமுறையொன்றின் - 'எஞ்சியுள்ள வாழ்வைத் தக்கவைக்கும்' தலைமுறையொன்றின் அலைக்கழிவான வாழ்க்கை அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. அரசியல் அதிகாரங்களுக்குள்ளே சென்றவர்கள் கூட அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருந்தததைக் கண்டும் கேட்டும் இருக்கின்றோம். இந்த தலைமுறையின் அரசியல் சார்ந்த சிறு கருத்துதிர்ப்பும் கூட, தீவிரமான அரசியற் செயற்பாடுதான் என்றே கூற வேண்டும். தமிழ்த்தேசியத்திற்கு எதிரான ஒரு சிறு வரியைக் கூட வாசித்திருக்காத / அறிந்திருக்காத ஏராளமான இளைஞர்களை இத்தலைமுறையில் கண்டிருக்கின்றோம். அதிலிருந்து மாறுமட்டு, உரையாடலுக்குத் தயாராயிருக்கும் பிரதிகளை அரசியல் நீக்கம் செய்யப்பட்டவை என்று சவடால் வசனங்களால் எட்டித்தள்ளும் மனநிலை 'அரசியல் நீக்கம்' ஐ தொடர்ச்சியாக வாழ வைப்பதற்குத்தான் உதவக்கூடும்.

நாவலில் அதிகார மையங்களுக்குமெதிராக எங்கேயும் போர்க்கொடி தூக்கப்படவில்லை. எதிர்த்து வசனம் பேசப்படவில்லை. நாவலில் வரும் பாத்திரங்கள், யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அப்பால் நகர்பவர்களாகவே நாவல் முழுவதும் வந்து செல்கின்றார்கள்.  அப்பால் சென்று, அதிகாரத்தை வைகின்றார்கள். தனியே இருந்து தலையிலடித்து கதறி, ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றார்கள். அதிகாரத்தின் இருப்பை மறுதலிக்க முடியாத தமது இயலாமையை நோகாமல், அதிகாரத்தை ஓயாமல் நையாண்டி செய்கின்றார்கள். நையாண்டி மூலம் தமது உடன்பாடின்மையைத் தெரிவிக்கின்றார்கள். ஆயுதம் மூலமான, உயிரை ஏந்நேரமும் பறித்துவிடக்கூடிய அதிகாரத்தின் பலமான இருப்பைத் தம்மால் அசைத்துவிட முடியாது என்று தெரிந்தும் - தமது நையாண்டிகளும் நக்கல்களும் அதிகாரத்தை எதுவும் செய்துவிடப்போவதில்லை என்ன்பது தெரிந்தும் அதிகாரத்தைத் தொடர்ச்சியாக நையாண்டி செய்தபடியேயிருக்கின்றார்கள். அதிகாரத்தின் காதுகள் தம்மைச் சுற்றி உள்ள போதெல்லாம் மனதிற்குள் நையாண்டி செய்கின்றார்கள். அதிகாரத்தின் துப்பாக்கிகளின் முன்பு கைகட்டி வாய்பொத்தி மௌனியாகி நிற்கின்றார்கள். அதிகாரத்தின் கால்களை தடவிய மறுகணமே அப்பால் சென்று, அதிகாரத்தை நையாண்டி செய்கின்றார்கள். இங்கு, மனிதர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து தம்மைப் பழக்கபப்டுத்தினார்கள். 'அரசியல் நீக்கம் செய்யபப்டாதவர்கள்' ஒன்றில், வெளிநாட்டுக்குச் சென்றார்கள் அல்லது இன்னொரு அதிகாரத்தின் துப்பாக்கிகளின் நிழலில் பதுங்கிக் கொண்டார்கள். இன்னும் சிலர் இறந்து போனார்கள்.


# பாத்திர வார்ப்புக்கள்.

நாவல்களில் முக்கியமானவை பாத்திர வார்ப்புக்கள். இன்று, சில சிறுகதையாசிரியர்களே தமக்கான மிகச்சிறிய அவகாசத்தில் மனதில் நீங்காமல் நிற்கக்கூடிய மிகச்சிறப்பான பாத்திரங்களை உருவாக்குகின்றார்கள். இந்நாவலில் சயந்தனால், மிகச்சிறப்பான ஆளுமையுடன் கூடிய பாத்திரமொன்றை உருவாக்க முடியாமல் போனது வருத்தமே. ஏராளமான சிறப்பான பாத்திரங்களாக உருவாகக்கூடியவர்கள் கூட சயந்தனின் கவனமின்மையினாலோ அல்லது வேறாதவது விசேட காரணங்களாலோ ஆளுமையான பாத்திரங்களாக முழுமை பெறவில்லை. அமுதன், நேரு ஐயா, பெரிய ஐயா, வெற்றி, அகிலா, நிலாமதி, நந்தகுமாரன், தேவி, பண்டார, பண்டார வன்னியன் ஆகிய பாத்திரங்கள் எதுவும் முழுமை பெறவில்லை என்பதை மரபார்ந்த கதைசொல்லல் முறையில் குறையாக முன்வைக்க முடியும்.

அதேநேரம், எந்தப் பாத்திரமும் நாவலை ஆக்கிரமிக்காமல் கதாசிரியர் திட்டமிட்டுப் பார்த்துக் கொண்டாரா அல்லது அவரது அனுபவப் போதாமைதான் அதற்குக் காரணமா என்பதை ஆசிரியர் வாய்திறந்தால் மாத்திரமே கண்டு கொள்ளலாம். பாத்திரங்கள் மிகைப்படுத்தப்பட்டதாக அல்லது தவறுகள் நீங்கிய இலட்சியத்தன்மையுடைய பாத்திரங்களாக உருவாக்கபப்டவில்லை. சுய எள்ளல் நிரம்பியதும் - தவறுகளைக் கொண்டதுமாகவே பெரும்பாலான பாத்திரங்கள் உருவாக்கபப்ட்டுள்ளன. அல்லது இயல்பாக நாவலில் வந்து போகின்றன என்று கூற முடியும். நாவலின் பிரதான பாத்திரம் மிகுந்த சுய எள்ளலுடனும் யாதார்த்தபூர்வமாகவும் படைக்கப்பட்டுள்ளது முக்கியமானது.

ஈழத்து இலக்கியங்களில் உலாவும் பாத்திரங்களைப் பொதுவாக இரண்டாக வகைப்படுத்த முடியும். முதலாவது, தவறு நீக்கம் செய்யப்பட்ட வீராவேசமுடைய இலட்சியத்தன்மை வாய்ந்த கதாநாயகக் கதாபாத்திரங்கள். பெரும்பாலும் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களை பிம்பமாகக் கொண்டு உருவாக்கபப்ட்ட பாத்திரங்களை இவ்வகைக்குள் அடக்கலாம். இரண்டாவது சுயபச்சாதாபம் நிறைந்த ஓயாத துன்பத்தில் உழலும் பாத்திரங்கள். வாசகருக்கு குற்ற உணர்ச்சியை உண்டாக்கும் நோக்கில் உருவாக்கப்படும் பாத்திர வார்ப்புக்களை இவ்வகைக்குள் குறிப்பிடலாம். இவ்விரண்டு வகைகளுக்கு வெளியே யதார்த்தபூர்வமான பாத்திரங்களையுடைய பிரதிகள் எமக்கு அவசியப்படுகின்றன. ஏனெனில், அவற்றின் இருப்பே சமூகத்தை உயிர்ப்புடன் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லக்கூடியவை என்று கருதுகின்றேன். அவ்வகையில் சுய எள்ளலும் கதாநாயக பிம்பங்களும் அற்ற சயந்தனது பாத்திரங்கள் மனதிற்கு நெருக்கமாக உள்ளதை குறிப்பிட்டேயாக வேண்டும்.


# போரின் இயல்பு

போரின் நெருக்கடிகளை நாவலாசிரியர் ஒரு சாதாரணனின் பார்வையில் கொண்டு வந்துள்ளார் என்று கருத வேண்டியுள்ளது. இன்று போரிற்கு வெளியில் இருந்தாலும், இந்திய இராணுவக் காலம் - இந்திய இராணுவக் காலத்திற்குப் பின்பான 95 வரையான நிலமை - 95 இடப்பெயர்வு - அதற்குப் பின்பான கெடுபிடிகள் நிறைந்த யாழ்ப்பாண நிலமை - சமாதான காலம் - யுத்த காலக் கெடுபிடிகள் நிறைந்த கொழும்பு போன்றவை எனக்குப் பரிச்சயமானவை. இளமைக்காலம் இக்காலப்பகுதிக்குள்ளேயே தொலைந்திருந்தது. வாழ்வின் ஒவ்வொரு கணங்களையும் நாவல் மீள் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தது.

போர் எப்போதும், ஆயுத வியாபாரிகளைத்தவிர வேறு எவருக்கும் சந்தோசமாக இருக்கப்போவதில்லை. சாதாரணர்கள் யாவரும் அதனால் பாதிக்கப்படுபவர்களாகவே இருப்பார்கள். இருந்திருக்கின்றார்கள். போர் சில அடைவுகளுக்கான படிக்கட்டுக்களாக - மிக அவசியமான நேரங்களில் மாத்திரமே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எமது சிறுபிராயமும் இளமைக்காலமும் போரிற்குள்ளும் அதற்கு வெளியில் இருந்த கெடுபிடிக்குள்ளும் அமைந்திருந்தது. மிகச்சிறிய போர்களையும் இடப்பெயர்வுகளையும் சந்தித்த எம்மைப் போன்றவர்களுக்கே வலிகளைத் தரும்போது, மிக உக்கிரமான போரில் அகபப்ட்ட வன்னியைக் கற்பனை செய்து பார்க்க முடியாமல் இருந்தது. இந்நாவல், எமது கடந்த காலத்தையும் நாம் தற்போது மறந்து கொண்டிருக்கும் அதன் குடூரங்களையும் மீண்டும் ஞாபகப்படுத்தியது.

போரின் போதையில், போரைத்தாண்டி எம்மால் அடையக்கூடிய அடைவுகளைக்கூட நாம் மறந்துவிட்டோம். ஆயுதத்தின் மூலமான அதிகாரம் தற்காலிகமானதே. ஆயுதங்கள், மனிதகுலம் - தன்னை நிறுத்தி வைத்திருக்க இயற்கையால் படைக்கப்பட்ட கால்கள் அல்ல. கால்கள் தளர்ந்த போது, நாம் தட்டுத்தடுமாறி நிற்கப் பயன்படும் தற்காலிகமான ஊன்று தடியே என்பதை மறந்து, நிரந்தரக் கால்களாக்கி விடத் துடிப்பதன் அபத்தைத்தை - பாதிப்புக்களை இந்நாவல் ஓரளவிற்காவது வெளிப்படுத்தியுள்ளது.

March 15, 2012

ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : கணேசன் ஐயர்



நிகழ்விற்குத் தலைமை தாங்கியதனால், நூல் தொடர்பான எனது கருத்துக்களை முழுமையாகப் பதிவு செய்ய முடியவில்லை. ஆயினும், பேச்சாளர்களின் கருத்துக்களிடையே அவர்களை மறுத்தும் ஏற்றுக்கொண்டும் சில விடயங்களைப் பதிவு செய்திருந்தேன். கட்டுரை என்ற வடிவத்தில் வைத்துப் பார்க்க முடியாது. அதற்கான தொடர்ச்சித்தன்மையையும் இப்பதிவில் எதிர்பார்க்க முடியாது. - சசீவன்

- மனிதர்கள் தமது வரலாற்றைத் தாமே உருவாக்குகிறார்கள். ஆனால் தமது விருப்பத்திற்கேற்ப அதை அப்படியே உருவாக்குவதில்லை; அவர்களே தெரிந்தெடுத்துக் கொண்ட ஒரு சூழலில் அவர்கள் அதை உருவாக்குவதில்லை. ஆனால் கடந்த காலத்திலிருந்து நேரடியாக வந்து சேர்ந்த, கொடுக்கப்பட்ட, கடத்தப்பட்ட சூழலில் அதை உருவாக்குகிறார்கள். - கார்ல் மார்க்ஸ்


பகுதி 1

ஈழப்போராட்டம் - ஆயுதம் தாங்கிய ஈழப்போராட்டம் அண்ணளவாக 30 ஆண்டுகால தொடர்ச்சியாலானது. விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய இயக்கங்களின் பங்களிப்புக்களும் ஏராளமான சிறிய இயக்கங்களின் பங்களிப்புக்களுமாக - மிகப்பெரிய பொருண்மையுடையது. ஒரு சில எழுத்துப்பிரதிகளைக் கொண்டு அதனை முழுமையாக அளவிட்டு விடவும் முடியாது. பல்வேறுபட்ட செயற்பாட்டாளர்களுடையதும் எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபடாத சாதாரண மக்களுடையதும் விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்ட கருத்து வெளிப்பாடுகளின் தொகுப்பின் மூலமே - அதன் பொருண்மையான வடிவத்தை ஓரளவுக்கேனும் கற்பனை செய்து கொள்ளலாம். அமைப்பிற்கு வெளியேயிருந்தான பார்வைகளும் - அமைப்பை விட்டு வெளியேறியவர்களுடைய காய்தல் உவத்தலற்ற விமர்சனப் பாங்குமே வரலாற்றை ஓரளவிற்கேனும் முழுமைப்படுத்த எத்தனிக்கின்றது. கடந்த காலம் தொடர்பான மோகத்திற்கப்பாலிருந்து பதிவு செய்யப்படும் சம்பவங்கள் தனியே வரலாறாக எஞ்சிப்போவதில்லை. அவை, எதிர்காலத்திற்கான நகர்வுகளைத் தீர்மானிக்கக்கூடியவையாகவும் - அவற்றிற்கான படிக்கட்டுக்களாகவும் அமைகின்றன என்ற புரிதலிலிருந்தே இப்பிரதியை அணுக வேண்டியுள்ளது. எமக்கு முன்னைய தலைமுறையினருக்கு - போராட்டத்தை உருவாக்கியவர்களுக்கு - பங்கு கொண்டவர்களுக்கு - பக்கத்திலிருந்து பார்த்தவர்களுக்கு இவை வெறும் சம்பவங்களாக இருக்கலாம். ஆனால், அதனை அறியாதவர்களுக்கும் பின்னைய தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கும் அவை வரலாறுகள். தமது வாழ்க்கைக்காலத்தில் சரியான முடிவுகளை எடுப்பதற்கான ஆதாரங்கள்.

ஈழப்போராட்ட வரலாற்றில் இயக்கங்களின் தோற்றம், அவற்றின் செயற்பாடுகள் தொடர்பான முக்கிய ஆவணப்பதிவுகள் என்று பார்த்தால் கீழ்வரும் நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் (சி. புஸ்பராஜா), ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (கணேசன் ஐயர்), சுதந்திர வேட்கை (அடேல் பாலசிங்கம்), புளொட்டில் இருந்து தீப்பொறி வரையான எனது பதிவுகள் (நேசன்), புளொட்டில் நான் (சீலன்), தேசிய விடுதலைப்போராட்டம் - ஒரு மீளாய்வை நோக்கி (அன்னபூரணா), ஒரு போராளியின் டயறி (அலியார் மர்சூஃப்). இவை நான் ஆங்காங்கே வாசித்தவை. எனது ஞாபகப்பரப்பில் உள்ளவை. இவை தவிர உதிரிகளாக எழுதப்பட்ட ஏராளமான இவ்வகைக்குள் வரக்கூடிய பிரதிகளும் உண்டு. இவற்றில் புஸ்பராஜனுடைய பதிவும் கணேசன் ஐயரின் பதிவுமே நூலுருவில் வெளிவந்திருக்கின்றன. 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டமும் - ஏராளமான போராளிகளின் அனுபவமுமாக மொத்தம் 10 இற்குக் குறைவான விடயங்களே பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கை போராடிய இயக்கங்களின் எண்ணிக்கையை விடக் குறைவானது என்பதுதான் சோகம். இவற்றில் கூட ஆரம்பகாலப்பதிவுகள் அல்லது 'உள்வீட்டு விடயங்களை'ப் பதிவு செய்தவை என்று பார்த்தால் இன்னும் குறைவானவையே எஞ்சும்.

இவை தவிர பாலநடராஜ ஐயர் எழுதிய நூலொன்றும் அற்புதன் எழுதிய 'துரையப்பா முதல் காமினி' வரை என்ற தொடரும் மணியம் எழுதிக்கொண்டிருக்கும் 'புலிகளின் வதைமுகாம் அனுபவங்கள்' என்ற தொடரும் 'வதைமுகாமில் நான்' என்ற ரயாகரன் எழுதிக்கொண்டிருக்கும் தொடரும் கூட முக்கியமான பதிவுகளென்பேன். ராஜினி திராணகம, ராஜன் ஹூல், கே. சிறீதரன் மற்றும் தயா சோமசுந்தரம் ஆகியோருடைய 'முறிந்த பனை' என்ற நூலும், அதனைத்தொடர்ந்து அவர்களால் மனித உரிமை நோக்கிலிருந்து பதிவாக்கப்பட்ட அறிக்கைகளும் கூட பிறிதொரு தளத்தில் முக்கியமான பதிவுகளே. இதுதவிர புலிகளால் வெளியிடப்பட்ட ஏராளமான அனுபவக்குறிப்புக்கள், புனைவுகள் போன்றவை எவ்விதத்திலும் முக்கியத்துவம் குறைந்தவை அல்ல. புலிகளால் உட்சுற்றுக்கு விடப்பட்ட ஏராளமான முக்கிய ஆவணங்களும் ஏனைய பிரதிகளும் பல இன்று அழிக்கபப்ட்டுவிட்டன. எஞ்சியவற்றை முறையாக ஆவணப்படுத்தி வைக்க வேண்டிய பொறுப்பு எம் சமூகத்திற்கு உண்டு. ஒரு சமூகம் கடந்து வந்த பாதையையும் அனுபவத்தையும் பின்னொருக்கால் நின்று தேட முடியாது.

செ. யோகரட்ணம் அவர்களால் எழுதப்பட்ட 'தீ மூண்ட நாட்களும் தீண்டாமைக் கொடுமைகளும்' என்ற நூல் ஆயுதம் தாங்கிய தேசிய விடுதலைப்போராட்டங்கள் கருக்கொள்வதற்கு முன்னரும் கருக்கொண்டு தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்ட காலப்பகுதி வரைக்குமான பிறிதொரு மாற்று வரலாற்றை எழுதிச் செல்வதையும் அவதானிக்க வேண்டும். சாதியொழிப்புடன் கூடிய இடதுசாரி அரசியல் செயற்பாடுகளையும் அவற்றை முதன்மைப்படுத்திய போராட்டங்களையும் ஆவணப்படுத்திய மிக முக்கிய நூலாகக் கருத வேண்டும்.

இவை தவிர, நாவல் வடிவில் சில விடயங்கள் புனைவுகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் செழியனின் 'ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து' மற்றும் கோவிந்தனின் 'புதியதோர் உலகம்' ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்நாவல்கள் கூட சமூகத்தில் பலத்த அதிர்வை ஏற்படுத்தியவையே. புதியதோர் உலகம் நாவலைப் படித்த போது எனக்கு 10 வயதிருக்கும். அப்பாத்திரங்களையும் சம்பவங்களையும் நீண்டகாலம் மறக்க முடியாமல் அலைக்கழிக்கபப்ட்டிருக்கின்றேன். இடையில் மடித்துக் கட்டப்பட்ட சாரமும், பெரும்பாலான பட்டன்களைத் திறந்து விட்டபடியான தோரணையும், தலைநிறைந்த கலைந்த கேசமும் சேர்ந்து உருவாக்கிய சிறுவயதுக் கதாநாயக படிமங்கள் - சிறுவயது முதல் தேடியலைந்த கதாநாயகர்கள் தோல்வியால் துவண்டு போவதை எப்போதும் ஜீரணிக்க முடிவதில்லை. சீருடைகள் ஏதுமற்ற போராளிகள் கதாநாயகர்களாக எமது தலைமுறையை ஆகர்சித்திருப்பார்கள் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. பட்டன்களைத்திறந்துவிட்ட கலைந்த முடியும் சாரக்கட்டுமாக உலாவந்த கதாநாயகர்கள் எம்மண்ணையும் மக்களையும் சிக்கிச் சின்னாபின்னமாக்கிச் சென்றுள்ளார்கள் என்பதே சோகமான உண்மை.

கணேசன் ஐயரால் எழுதப்பட்ட 'ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்' என்ற நூலில் மேற்கூறிய பதிவுகளுக்கு மேலதிகமாகத் தனித்துவமான அம்சங்கள் உண்டு. ஈழப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய விடுதலைப்புலிகளின் தோற்றம் தொடர்பான பதிவு என்பதும், அமைப்பை விட்டு வெளியேறி சுய விமர்சனத்துடன் கூடியதாக அமைந்திருக்கின்றது என்பதும் பிரதான அம்சங்கள். இந்நூலைப்பற்றிய பார்வையை ஒரு சில சொற்கள் மூலமோ கட்டுரை மூலமோ தெளிவுபடுத்திவிட முடியாது. இந்நூலில், அச்சூழலில் புலிகளின் தோற்றம் தொடர்பாக அக்கால மனநிலையில் பதிவு செய்யும் அதேநேரம், அதன் அடிக்கட்டுமானம் தொடர்பான விமர்சனத்தையும் சமாந்தரமாகப் பதிவு செய்வதில் கணேசன் ஐயர் வெற்று பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும். அதாவது, அக்காலப்பகுதியில் - அக்காலச்சூழலில் நிகழ்ந்த சம்பவங்களை அதன் உண்மைத்தன்மையுடன் பதிவு செய்வது மற்றும் அச்சூழல் தொடர்பான அதன் பின்பான விமர்சனம் என்ற இரு விடயங்களுக்கிடையிலான போராட்டமே இப்பிரதி என்று சுருக்கமாகச் சொல்லலாம். இவ்விரண்டு நோக்குநிலைகளுக்கிடையில் அவற்றை உண்மையாகப் பதிவுசெய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் நூலாசிரியர் போராடியுள்ளதை நூலெங்கிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரனை நூலாசிரியரால் நிராகரிக்கவும் முடியவில்லை. அதே நேரம் போராட்டத்தில் அவரது வரலாற்றுப் பாத்திரத்தின் பின்பான விளைவுகளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இவ்விரு எண்ணப் போக்கிற்கிடையிலும் நூலாசிரியர் நூல் முழுவ்வதும் ஊடாடிக் கொண்டிருப்பதை தெளிவாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது.


பகுதி 2

பிரபாகரன் மீது முன்வைக்கப்படும் இரு குற்றச்சாட்டுக்கள் சார்ந்து நாம் சில விடயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது தலைமைப் பதவியின் மீதான பற்றுதலும் தனிநபர் வழிபாடும் என்ற விமர்சனம். இதை மறுதலிக்கும் விதமான முக்கிய சம்பவமாக உமாமகேஸ்வரனை தலமைப்பொறுப்பில் உட்கார வைத்ததைக் கூறலாம். சில ஆண்டுகளாக தானும் நண்பர்களும் கட்டி வளர்த்த இயக்கத்திற்கு புதிதாக வெளியில் இருந்து வந்த ஒருவரை தலைவராக்குகின்றார் பிரபாகரன். உமாமகேஸ்வரனே விடுதலைப்புலிகளின் முதலாவது தலைவர் என்ற விடயமும் - அச்சந்தர்ப்பம் ஏற்பட்ட சூழலும் முக்கியமாகக் கவனப்படுத்தப்பட வேண்டிய புள்ளிகள். இவ்விடயத்தை இன்னும் ஆழமாகப் பார்ப்போமேயானால் - தீவிர இராணுவப் பார்வையுடைய போராளி தனது அனுபவம் சார்ந்த முடிவுகளைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததும் அதன் தொடர்ச்சியில் காலப்போக்கில் தலைமைப் பொறுப்பை தானே கையெலெடுப்பதும் நிகழ்கின்றதெனவே கருதவேண்டியுள்ளது. மத்தியகுழு - செயற்குழு தொடர்பான விடயங்களின் போது இயக்கத்தில் தனது பிடி தளர்கின்றதே என்பதைவிட - தனது சிந்தனை முறையின் பால் விடயங்கள் நகராதோ என்ற ஆற்றாமையின் வெளிப்பாடு முதன்மைப்படுத்தப்படுவதாகவே பல விடயங்களைப் பார்க்க வேண்டியுள்ளது. உட்கட்சி ஜனநாயகம் என்ற நிலைப்பாடு - தனது தலைமைப்பதவிக்கு தீங்காக அமைந்துவிடும் என்பதிலும் பார்க்க தனது சிந்தனை முறையிலான நகர்வுப் பொறிமுறைக்குத் தீங்காக அமைந்துவிடும் என்ற மனநிலை மேவி நிற்பதாகவே பார்க்கின்றேன். கணேசன் ஐயர் தவிர, தற்போது உயிரோடிருக்கும் பிற போராளிகள் - தமது நோக்குநிலையில் இருந்து இவ்விடயத்தை எழுதும் போது இவ்விடயம் சார்ந்த மேலதிக தெளிவிற்கு வர முடியும்.

பிரபாகரன் தொடர்பான பிறிதொரு விமர்சனம் தொடர்பாகவும் நாம் கரிசனை கொள்ள வேண்டும். அதாவது, பிரபாகரனின் சிந்தனை முறை முற்றுமுழுதாகத் தூய இராணுவவாதச் சிந்தனையின்பாற்பட்டது என்ற விமர்சனம். கணேச ஐயர் பல இடங்களில் வலியுறுத்திச் செல்லும் விடயமொன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது விடுதலைப்புலிகள் இயக்கத்தை கட்டியெழுப்ப முற்படும் ஆரம்ப காலப்பகுதியில், தமிழர் விடுதலைக்கூட்டணியின் இராணுவ அலகாகவே விடுதலைப்புலிகளைக் கட்டியெழுப்பும் நோக்கம் பிரபாகரனுக்கு இருந்திருக்கின்றது. தமிழர் விடுதலைக்கூட்டணி அரசியல் அமைப்பாகவும், இளைஞர் பேரவை வெகுஜன அமைப்பாகவும், விடுதலைப்புலிகள் ராணுவ அணியாகவும் செயற்படும் என்ற எண்ணமே அவர் மனதில் இருந்திருக்கின்றது. இதனை நூலாசிரியர் பல இடங்களில் வலியுறுத்த முற்படுகின்றார். அதுமட்டுமன்றி, தமிழர் விடுதலைக்கூட்டணியின் அரசியலை பிரபாகரன் அக்காலத்தில் ஏற்றுக் கொண்டுமிருந்தார். ஆரம்ப காலங்களில் தமிழர் விடுதலைக்கூட்டணியில் தான் கண்ட போதாமையை நிரவுவதற்கான பணியாகவே விடுதலைப்புலிகள் அமைப்பு என்ற நோக்கம் அவருக்கு இருந்திருக்கின்றது. அதாவது தமிழ்மக்கள் மத்தியில் அரசியல் செய்வதற்கான அமைப்பொன்று உள்ளது - ஆனால், அதற்குப் பக்கபலமான இராணுவ அமைப்பே இல்லை என்ற குறையே அவர் மனதில் இருந்திருக்கின்றது. அதுவே தனது முதன்மைப் பணியென நினைத்திருக்கக்கூடும். இக்காரணங்களாலேயே அவரது தூய இராணுவவாதச் சிந்தனை முறை கட்டியமைக்கபபட்டிருக்கலாம். இதில் இன்னுமொரு விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். 2002 இன் பின்பான ஈழப்போராட்ட வரலாற்றைக் கவனித்தால், விடுதலைப்புலிகள் - தமிழர் விடுதலைக்கூட்டணியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தமது அரசியல் முன்னணியாக ஆக்கிக்கொண்ட சந்தர்ப்பத்தை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. அதாவது பிரபாகரன், 72 இல் தான் கண்ட கனவை சரியாக 30 வருடங்களின் பின்னர் 2002 இல் நடைமுறைப்படுத்தியதாகவே என்னால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விடயங்கள் நிச்சயமாக மேலும் மேலும் பேசப்பட வேண்டியது அவசியமானது. ஏனெனில் அண்மையில் டயான் ஜெயதிலக கொழும்பு டெலிகிராப் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையொன்று, பிரபாகரனை ஹிட்லரின் வாரிசாக நிறுவுவதிலேயே கவனத்தைக் குவிக்கின்றது. அதுமட்டுமன்றி, அவர் தனது நிறுவலுக்கு கபீலாவில் பிரசுரமான ராகவனுடைய நேர்காணலொன்றையும் இனியொருவில் வெளியான கணேச ஐயருடைய இத்தொடரையும் ஆதாரமாக முன்வைக்கின்றார். இங்கே, உட்கட்சி ஜனநாயகம் - ஜனநாயகம் - மனித உரிமைகள் போன்றவற்றுக்காகப் போராடி வரும் ஒருவர் இதே விடயத்தைக் கூறுவதற்கும், இனப்படுகொலை என்று வர்ணிக்கப்படூம் ஒரு யுத்தத்தைச் சர்வதேச ரீதியாக அரசின் பிரதிநிதியாக நியாயப்படுத்திய ஒருவர் கூறுவதற்கும் நிச்சயம் வேறுபாடுண்டு.

பிரபாகரனை மையப்படுத்திய தமிழ் மக்கள் போராட்டம் அழிக்கப்பட வேண்டும் என்ற நிறுவலுக்கு தயான் ஜெயதிலக துணைக்கிழுக்கும் இருவர்கள் கணேச ஐயரும் ராகவனும். இதில் கணேச ஐயர் உடகட்சி ஜனநாயகம் - போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவது என்ற புள்ளியில் நின்று நீண்ட காலம் இயங்கியவர். நான்கு வெவ்வேறு முக்கியமான இயக்கங்களின் (எல்.டி.டி.ஈ, புளொட், என்.எல்.எஃப்.ரி, தீப்பொறி) மத்திய குழு உறுப்பினராகச் செயற்பட்டவர். அவ்வாறே ராகவனும் இயக்கத்திற்குள் மிதவாதியாகக் கருதப்பட்டவர். பிளவுகளின் போது இருதரப்பினர் மீதும் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணியவர். பிளவுகளைச் சரியாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டவர். பிரிவுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர். இயக்க காலத்தின் பின்னரும் மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். இவ்விருவருக்கும் பிரபாகரன் தொடர்பாகவும் விடுதலைப்புலிகள் தொடர்பாகவும் காட்டமான விமர்சனங்களை முன்வைக்கும் முழு உரிமையும் உண்டு. இவ்விருவரின் கூற்றுக்களையும் - நிலைப்பாடுகளையும் அடித்தளமாகக் கொண்டு இனப்படுகொலையை நியாயப்படுத்திய அரசின் பிரதிநிதி போகின்ற போக்கில் பயன்படுத்திவிட்டுப் போக முடியாது. இவ்விருவரும் போராட்ட வழிமுறைகள் தொடர்பாக முன்வைக்கும் விமர்சனங்களை - தமிழ்மக்களின் எதிர்காலப் போராட்டங்களையும் எழுச்சிகளையும் செழுமைப்படுத்துவதாக எடுத்துக்கொள்ளலாம். தமிழ் மக்களது எழுச்சியைத் தடுத்து நிறுத்தும் நோக்கோடு டயான் ஜெயதிலக போன்றவர்கள் முன்வைக்கும் போது, அதனைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.


பகுதி 3

ஜனநாயம் தொடர்பாக நாம் நீண்டகாலம் பேசி வருகின்றோம். ஜனநாயகமின்மையால் நாம் அனுபவித்த கொடுமைகளிலிருந்தும் - எதிர்காலச் சந்ததியாவது ஜனநாயகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தும் எமது உரையாடல்கள் இடம்பெறுவது வரவேற்கத்தக்கதே. அதேநேரம், சில அடிப்படையான விடயங்களை மறந்து விடுகின்றோம். முதலாவது, இந்த 'ஜனநாயகம்' என்ற எண்ணக்கரு எதனைக் குறிக்கின்றது. எம்மை ஆளும் நிறுவனங்களில் - அரசு உட்பட - ஜனநாயகம் எவ்வாறு சாத்தியமாகும் என்பதை யோசிக்க வேண்டியுள்ளது. ஜனநாயகம் என்பது வெறுமனே அரசியல் கோட்பாடோ அல்லது ஒரு குறிப்பிட்ட சாராரால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விடயமோ அல்ல. அதனை வெறுமனே கோட்பாடாக வரித்துக் கொண்டும் உரையாடல்கள் மூலமாகவும் அமுல்படுத்திவிட முடியாது. ஜனநாயகம் என்பது வாழ்வியல் நடைமுறையுடன் நெருக்கமாகத் தொடர்புபட்டுள்ளது. அரசு அல்லது இயக்கங்கள் போன்றவற்றில் ஜனநாயகத்தைச் சடுதியாக ஏற்படுத்திவிட முடியாது. அதன் நடைமுறைச் சாத்தியப்படுத்தல்களை நாம் எம்மில் இருந்து தொடங்க வேண்டியுள்ளது. இன்று, தமிழ் பேசும் சமூகங்களில் குடும்பம் என்ற நிறுவனம் சார்ந்து ஜனநாயகம் எவ்வகையில் நடைமுறையில் உள்ளது என்பதிலேயே பல்வேறு மக்கள் இணைந்து உருவாக்கும் பொது நிறுவனத்தில் ஜனநாயகம் எந்தளவு தூரம் நடைமுறையில் இருக்கும் என்பது தங்கியுள்ளது. நாம் அன்றாடாம் ஊடாடும் பாடசாலைச் சங்கங்கள், ஊர்ச்சங்கங்கள், தொழிற்சங்கங்கள், மதவழிபாட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களுடைய நிர்வாக சபைகள் போன்றவற்றில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் போதே - இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய அரசு அமைப்பிலும் இயக்கங்கள் - கட்சிகளிலும் ஜனநாயகம் நடைமுறையில் சாத்தியமாகும். தமிழ் பேசும் சமூகங்கள் மத்தியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த எத்தனிக்கின்ற ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த ஒவ்வொரு சமூக நிறுவனங்களிலிருந்தும் அதனை அமுல்படுத்தத் தொடங்க வேண்டியுள்ளது.

ஈழப்போராட்டத்தில் அமைப்பாகிய - நிறுவனமாகிய இயக்கங்களது நடவடிக்கைகள் தொடர்பாக அதில் அங்கம் வகித்தவர்களாலும், அதிருப்திகளால் வெளியேறிய மறுத்தோடிகளாலும் ஏராளமான விடயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. புதியதோர் உலகம் என்ற கோவிந்தனின் நாவல், சமூகத்தின் மீது முகத்திலறைந்து கேட்ட முதல் பிரதியெனலாம். அதனைத் தொடர்ந்து இன்றுவரைக்கும் இவ்விவாதங்கள் ஓயாமல் துரத்திக் கொண்டேயிருக்கின்றன. மறுத்தோடிகள் என்னும் மரபே தனகான அதிகாரத்தைக் கட்டமைத்துக் கொண்டதையும் ஜனநாயகமின்மைகளுடன் இயங்கியதையும் வரலாற்றில் கண்டுள்ளோம். அதிகார அமைப்பாக நிறுவனமயமாகிய அலகுகளுக்கெதிரான மறுத்தோடிகளது பாத்திரத்தை நாம் வரலாற்றில் எவ்விடத்தில் வைத்துப் பார்ப்பது என்ற தெளிவிற்கு வர வேண்டிய தவிர்க்க முடியாத தருணமிது. மிதவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும் நிகழ்காலத்தில் ஒரேமாதிரியாகவே தோற்றம் காட்டுவார்கள். அவர்களை வரலாற்று ஓட்டத்தில் வைத்து - நீண்டகாலச் செயற்பாடுகளின் பின்னணியில் வைத்தே வேறுபடுத்தி அறிய முடியும். ஏராளமான ஜனநாயகப் போராளிகள் நிறுவனமாகிய அதிகாரத்தின் சேவகர்களாகச் செயற்பட்டதைச் சமகாலத்தில் கண்டுகொண்டிருக்கின்றோம். இவ்விடத்தில் தான் நூலாசிரியர் வலியுறுத்தும் உட்கட்சி ஜனநாயகம் தொடர்பான விடயத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு கட்டத்தில் கணேசன் ஐயர் தாம் செல்லும் பாதை தவறென்பதை உணர்ந்து கொள்கின்றார். அதற்கான மாற்றீடுகள் தொடர்பான முன்மொழிவுகளை அவரால் இயக்கத்திற்குள் முன்வைக்க முடியாத போதிலும் தனது விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைக்கின்றார். இனிமேலும் முடியாது என்ற கட்டம் வரும்போது, இயக்கத்தில் இருந்து வெளியேறிச் செல்கின்றார். அதன் அடுத்த கட்டமாக, தான் சரியெனக் கருதும் போராட்ட முன்னெடுப்புக்களில் ஈடுபடுகின்றார். இதன் தொடர்ச்சியிலேயே புளொட்டிலும் என்.எல்.எஃப்.ரி இலும் தீப்பொறியிலுமான அவருடைய செயற்பாடுகள் அமைகின்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து மறுத்தோடியாக ஆரம்பித்த அவர் பயணம் இதர இயக்கங்களில் பங்களிப்பதிலும் - அங்கும் தனது எண்ணத்தைச் செயற்படுத்த இயலாது அதிருப்தியுடன் விலகுவதிலும் முடிவடைகின்றது. கணேசன் ஐயர் இறுதிவரை போராட்டத்திற்கான தேவையை மறுதலிக்கவும் இல்லை - அதேநேரம் தொடர்ச்சியாக வெகுஜன மக்கள் இயக்கங்களின் தேவையை வலியுறுத்திக் கொண்டும் செல்கின்றார் என்பதை நாம் பதிவு செய்தே ஆகவேண்டியுள்ளது. அவர் வலியுறுத்திய விடயங்களை அவர் ஈடுபட்ட எந்த இயக்கங்களிலும் சாத்தியப்படுத்த முடியவில்லை. இங்கே தான் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் - ஒரு சமூகத்தின் வகிபாகம் குறித்தும் எமது சிந்தனையைத் திசை திருப்ப வேண்டியுள்ளது. இயக்கங்களைக் குற்றம் சாட்டுவதுடன் எமது பணி முற்றுப்பெறவில்லை என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது.


பகுதி 4

இடதுசாரியப் பாரம்பரிய அரசியல் தொடர்பாக இந்நூலாசிரியர் கணேசன் சில விமர்சனங்களை முன்வைக்கின்றார். அக்காலப்பகுதியில், இடதுசாரியப் பாரம்பரியத்தில் வந்த அரசியல் இயக்கங்களான 'சிறுபான்மை தமிழர் மகாசபை' மற்றும் 'தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்' போன்றவை சாதிய ஒழிப்புப் போராட்டங்களை முன்னின்று நடத்தியிருந்தன. இந்நூலில் இவ்விடயங்கள் சார்ந்து எவ்விடத்திலும் எக்குறிப்புக்களும் இல்லை. அதேநேரம், கணேச ஐயர் முன்வைக்கும் விமர்சனங்களைப் பார்ப்போமேயானால் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் தம்மை அணுகுவதற்கு முயற்சிக்கவில்லை என்பதும் தேசிய இன விடுதலை தொடர்பாகப் பாராமுகத்தைக் கடைப்பிடித்தார்கள் என்பதும் முக்கியமானவை. இடதுசாரிய அரசியல் அக்காலப்பகுதியில் கருத்தியல் ரீதியாக தேசிய இன முரண்பாட்டை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தலைக் கொண்டிருக்கவில்லை. தேசியம், தேசியவாதக் கருத்துக்கள் தனியே வலதுசாரி அரசியலின் நீட்சியாகவே இடதுசாரிகளால் பார்க்கப்பட்டன. இன ரீதியான முரண்பாடுகளை முதன்மையான முரண்பாடுகளாகக் கொள்ள முடியாது என்ற வாதத்தில் இருந்து மாறி, இன ரீதியான முரண்பாடுகளையும் கவனிக்கத்தான் வேண்டும் என்று கட்டத்திற்கு இடதுசாரிகள் வந்தபோது, நிலமை தலைகீழாக மாறிப்போயிருந்தது.

கொலைகளில் நல்ல கொலை / தீய கொலை என்ற பாகுபாடு எவ்வளவு அபத்தமானதோ, அதேபோன்று ஒடுக்குமுறைகளில் நல்ல ஒடுக்குமுறை / தீய ஒடுக்குமுறை என்ற வாதமும் அபத்தமானதே. நாம் ஒடுக்குமுறைகளை வகைப்படுத்தும் போதும், தரவரிசைப்படுத்தும் போதும் நிச்சயமாக ஒடுக்கப்படுபவர்கள் என்ற திரட்சியையும் - ஒடுக்கப்படுபவர்களுக்கு இருக்கக்கூடிய தார்மீக நியாயத்தையும் இழந்துவிடுவோம். இன ரீதியான ஒடுக்குமுறையோ / மத ரீதியான ஒடுக்குமுறையோ / சாதிய ரீதியான ஒடுக்குமுறையோ / வர்க்க ரீதியான ஒடுக்குமுறையோ / பால் ரீதியான ஒடுக்குமுறையோ - அனைத்து ஒடுக்குமுறைகளும் சமாந்தரமாக எதிர்கொள்ளப்பட வேண்டியவை. அதைத்தான் அடையாள அரசியல் எமக்குக் கற்றுத் தந்துள்ளது. அடையாள அரசியலின் தீமையான பக்கங்கள் குறித்து நாம் கவனப்படுத்தாமல் விட முடியாதபோதிலும், அடையாள அரசியலின் நியாயங்களை தார்மீக ரீதியில் உணர்ந்து கொள்ளும் போதும் செயற்படும் போதும் - அதன் தீமையான பக்கங்களிலிருந்து விலகிச்செல்ல முடியும் என நம்புகின்றேன். அனைத்து ஒடுக்கப்பட்டவர்களுக்கான திரட்சியை உருவாக்குவதே உண்மையான இடதுசாரிய அரசியலாக இருக்க முடியும். பிரதிநித்துவ அரசியலாகச் சுருங்கிப் போய், முதலாளித்துவ ஜனநாயக கட்சி அரசியலாக எஞ்சிப்போன இடதுசாரிய அரசியலே ஒடுக்கப்பட்டவர்களுடைய திரட்சியை அசாத்தியமாக்கியது. இடதுசாரிய அரசியல் வெகுஜன அரசியல் தளத்திற்கு அப்பால் நகரும் போது, அதுவும் இதர கட்சி அரசியல் போன்று எஞ்சிப்போகும் என்பதை வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கின்றது.

மேற்கூறிய காரணங்களே, ஒடுக்கப்பட்டவர்கள் இணைந்த முற்போக்கு அரசியலைச் சாத்தியமாக்க விடவில்லை. இன ஒடுக்குமுறையை உணர்ந்திருந்தால் - அதனை இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் முதலில் கையெலெடுக்க வேண்டும். அல்லாது போனால் மக்கள் சார்ந்து அரசியல் செய்ய அனுபவமில்லாதவர்கள் கைகளில் அவ்வொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் சிக்கிக்கொள்ளும் என்ற ஏக்கத்தில் இருந்தே ஐயருடைய இடதுசாரிகள் தொடர்பான விமர்சனத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இதனை ஒரு விமர்சனமாகப் பார்க்க முடியாது. பிணங்களின் மேல் நின்று விரக்தியில் கூறும் கூற்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இன்றிருக்கும் எந்த ஒடுக்குமுறையையும் மறுதலிக்கும் ஒருவர், நிச்சயமாக முற்போக்கான போராட்டம் ஒன்றைச் சாத்தியமாவதை விரும்பாதவராகவே இருப்பார். ஈழத்தில் சாதிய ரீதியான ஒடுக்குமுறையே இல்லை - தேசிய ஒடுக்குமுறை மாத்திரமே உண்டு என்று கூறுபவர்களும், ஈழத்தில் இன ரீதியான ஒடுக்குமுறையெதுவும் இல்லை - சாதிய ஒடுக்குமுறை மாத்திரமே உண்டு என்று கூறுபவர்களும் ஈழத்தில் வர்க்க ரீதியான ஒடுக்குமுறையெதுவும் இல்லை - தேசிய ஒடுக்குமுறை மாத்திரமே உண்டு என்று கூறுபவர்களும் ஈழத்தில் ஒடுக்கப்படுபவர்கள் சார்ந்து முற்போக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை விரும்பாதவர்கள் என்றே கருத வேண்டியுள்ளது. நாம் ஒடுக்குமுறைகளை தரவரிசைப்படுத்தாமல் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கெதிரான செயற்பாடுகளையும் சமாந்தரமாக முன்னெடுக்கும் போதே, அதிகாரத்திற்கெதிரான ஐக்கிய முன்னணிகளையும் அதனூடான விடுதலையையும் சாத்தியப்படுத்த முடியும்.

January 18, 2012

தமிழ்த்தேசியவாதம் : பன்மைத்துவம் மற்றும் உள்ளார்ந்த - வெளியகற்றும் தன்மை



முன்னைய பதிவுகள்
* தமிழ்த்தேசிய உணர்வும் தமிழ்த்தேசியமும்
* தமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறையும் தகமை விருத்தியும் பிரயோக வடிவமும்

'தமிழ்த்தேசிய உணர்வும் தமிழ்த்தேசியமும்' , 'தமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறையும் தகமை விருத்தியும் பிரயோக வடிவமும்' ஆகிய இரண்டு பதிவுகள் தொடர்பாகவும் சில நண்பர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள். பெருமளவான விடயங்களை ஒரே பதிவில் சுருக்க முற்படுகின்றேன் என்பதைக் குறையாகத் தெரிவித்திருந்தார்கள். சுட்ட முற்படும் பல்வேறு விடயங்களை விரிவாக்கித் தனித்தனிப் பதிவுகளாக இடலாம் என்பது அவர்களது கருத்தாயிருந்தது. கடந்த இரண்டு பதிவுகளும் வெறும் சட்டகங்களே என்பதை கட்டுரையின் இறுதிப்பகுதியில் தெரிவித்திருந்தேன். அவற்றை விரிவாக்கிச் செல்ல வேண்டியது பல்வேறு துறை சார்ந்தவர்களின் பணியாகவே இருக்க முடியும். நான் கவனப்படுத்த முற்பட்ட விடயம் தமிழ்த்தேசியவாதம் என்பது தனியே அரசியல் கோரிக்கை மட்டுமல்ல என்பது மட்டுமல்லாது, அக்கோரிக்கை சார்ந்து செயற்படுபவர்கள் அதன் ஆழத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதுவுமே. தேசியவாதக் கோரிக்கையின் உள்ளடகத்தை அல்லது அது உள்ளடங்கும் பகுதிகளை - அதன் சட்டகத்தின் எல்லைகளை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமானது. மேலும், அக்கோரிக்கை கடந்த காலங்களில் ஏற்படுத்தி பாதிப்புக்கள் எவை? அக்கோரிக்கையின் சில நடைமுறைகளால் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய தரப்புக்கள் எவை? என்பது போன்ற விடயங்களை மிகத்தெளிவாக வரையறை செய்யும் போதே அதன் ஆரோக்கியமான திசைவழியைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும். இவ்வகையான தீர்மானங்களுக்கு வராமல், 70 களில் அல்லது 80 களில் இருந்திருக்கக்கூடிய விடயத்தைத் தூசு தட்டி எடுத்து, காவுவது நிச்சயமாகக் சரியான அறுவடையைத் தரப்போவதில்லை. அதுமாத்திரமன்றி, குறித்த அரசியல் கோரிக்கைக்குள்ள உண்மையான தேவையையும் காரணங்களையும் படிப்படியாக இல்லாததாக்கும் சூழலை உண்டு பண்ணும் என்பதை உணர்ந்து கொள்ளாவிடின், நாம் வரலாற்றில் இருந்து எதையும் படிக்கைவில்லை என்றே கருத வேண்டும்.

Applicable form and Diversity

இக்காலத்தைய தமிழ்த்தேசியவாதத்தின் பிரயோக வடிவம் 'ஒரே நேரத்தில் Deconstructive அணுகுமுறையும் Constructive அணுகுமுறையும் தமது பிரயோக நடைமுறையாகக் கொண்டிருக்க வேண்டிய சந்தர்ப்பத்தை 'உலக சிந்தனை போக்கு' உருவாக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த முரணியக்கமே பின்- காலனித்துவ தேசங்களது - தற்காலத் தேசியவாதத்தின் ஆரோக்கியமான பண்பாக இருக்க முடியும்.' என்றவாறு கடந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வகையான விடயங்களில் Deconstructive அணுகுமுறையும் எவ்வகையான விடயங்களில் Constructive அணுகுமுறையும் பின்பற்றப்பட வேண்டும் என்பது தொடர்பாக மேலும் மேலும் சிந்திக்க வேண்டியுள்ளது. இப்புரிதலுக்கு வர முன்னதாக 'அரசு' வடிவத்தின் தோற்றம், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான உலக அதிகார ஒழுங்கின் வரலாறு, பின்-காலனித்துவ காலப்பகுதியில் இனத்துவ முரண்பாடுகள் - தீர்வுகள் போன்ற விடயங்களில் பரந்தளவான தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது. ஏற்கனவே, முதல் கட்டுரையில் குறிப்பிட்டது போன்று, அரசு சீர்திருத்தம் (state reformation) என்ற எல்லைக்குள் இயங்கி வருபவர்கள் 'கட்டவிழ்ப்பு' (Deconstruction) என்பதை எவ்வாறு அணுக முற்படுகின்றார்கள் என்ற தெளிவை ஏற்படுத்திக் கொள்ளும் போதே தேசிய அரசுருவாக்கம் (nation state formation) என்ற வெளியில் இயங்க முற்படுபவர்கள் , பின் - நவீன கால சிந்தனைப் போக்குகளை உள்வாங்கி - தமது பிரயோக வடிவத்தை மெருகூட்டலாம் என்ற தெளிவிற்கு வர முடியும். தமிழ்த்தேசியவாதத்தைக் கட்டவிழ்ப்பதென்பது (Deconstruction) அதனை - உள்ளக அடையாளங்கள் சார்ந்து சுக்குநூறாக்கி பிளவுபடுத்துவதல்ல. மாறாக, கட்டவிழ்ப்பின் மூலம் அதனை ஜனநாயகப்படுத்துவது அல்லது மீளொழுங்கிற்கான புதிய நிபந்தனைகளை உருவாக்கிக் கொள்வது என்றும் பொருள்படும். இச்செயற்பாடு, தமிழ்த்தேசியவாத்தை கீழிருந்து மேலாக (Bottom - up) அதன் உண்மையான தேவை சார்ந்து கட்டியெழுப்பும் என்று நிச்சயமாகவே கூற முடியும். கீழிருந்து மேலாக தேசியவாத்தின் அடிப்படையான அம்சங்களில் இருந்து அதைக் கட்டியெழுப்பும் போது - நிச்சயமாக அரசியல் கோரிக்கைக்குரிய தனியான செயற்பாட்டியக்கம் தேவைப்படப்போவதில்லை. மாறாக, அதன் அங்கமான ஒவ்வொருவருமே அரசியல் கோரிக்கையின்பாலான தீவிரத்துடனும் தமது கருத்தியலுக்கான தெளிவுடனும் இருப்பார்கள். தவறான அரசியல் பிரதிநித்துவ சக்திகள் ஊடுருவ முடியாத ஆரோக்கியமான வெளிகளைக் கட்டமைக்கும். தமிழ்த்தேசியவாதத்தைக் கட்டவிழ்ப்பதை தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களே முன்வைக்க வேண்டும். அவ்வெளியை தாம் 'வெளியார்' (Outsider) என்று கருதுபவர்களோ அல்லது தமிழ்த்தேசியவாத எதிர்ச்சக்திகள் என்று கருதுபவர்களோ கையகப்படுத்துவதை அனுமதிக்கும் போது, அடையாள அரசியலை அதன் நன்மையான பக்கத்திற்கு மாறாக தீமையான பக்கத்தில் எதிர்கொள்ள நேரிடும் என்ற தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது. கட்டவிழ்ப்பு என்பது ஒருவித சமூகம் சார்ந்த Re - engineering செயற்பாடென்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. தமிழில் கட்டவிழ்ப்பு சார்ந்து ஏற்படுத்தப்பட்டுள்ள எதிர்மறையான பிம்பத்தை மாற்றியமைப்பதனூடாகவே இவ்விடயம் சார்ந்து சாதகமான புரிதலை ஏற்படுத்த முடியும்.

இலங்கையில், தமிழ்த்தேசியம் என்ற சட்டகத்திற்குள் வரக்கூடியவர்கள் அல்லது குறித்த சட்டகத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் சமூகங்கள் எவை என்பது தொடர்பானதுமான புரிதலை மேம்படுத்த வேண்டியுள்ளது. முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்கள் சார்ந்த புரிதலை கடந்த 30 ஆண்டுகளில் வளர்த்துள்ளோம்? இன்று தமிழ்த்தேசியக் கோரிக்கையை முன்னெடுப்பவர்கள் மேற்படி சமூகங்கள் சார்ந்து எவ்வகையான நிலைப்பாடுகளில் உள்ளார்கள்? அதற்கு எவ்வகையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டிருக்கின்றது? போன்ற விடயங்கள் தொடர்பாக எவ்விதமான தயக்கமுமற்று உரையாட வேண்டியுள்ளது. எமக்கருகில் உள்ள தமிழ்நாட்டிலும் உலகச்சிந்தனைப் போக்கிலும் சமகாலத்தில் உரையாடப்படும் விடயங்களை வெறுமனே எமது அரசியல் கோரிக்கையை பலவீனமாக்கும் செயற்பாடுகள் என்று நிராகரித்துவிட்டு நகருபவர்கள் தமிழ்த்தேசியம் தொடர்பான அக்கறையற்றவர்கள் என்றே கருத வேண்டும்.

Inclusive Nationalism, Exclusive Nationalism and Third Space

கடந்த பதிவுகளில் குறிப்பிட்டது போன்று தேசியவாதம் இயங்கும் முறையை நாம் தெளிவாக இனங்கண்டுகொள்ள வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேசியவாதம் முற்போக்கான வடிவில் இயங்குவதில்லை. சமூகத்தின் அடையாள உறுதியாக்கம் நிகழ்ந்த போது - அதன் வெளிப்பாட்டு வடிவமாகவே இக்கோரிக்கை முதன்மை பெற்றிருக்க முடியும். வரலாற்றுப் போக்கில், தமிழ்த்தேசியம் என்ற அடையாள உறுதியாக்கம் ஒற்றை பரிமாணமானதல்ல. பல்வேறுபட்ட வாழ்முறைகளினது வித்தியாசங்களது கூட்டிணைவினால் உருவாகிய அடையாள உறுதியாக்கம். தேவைகள் - அரசியல் கோரிக்கைகள் போன்றவற்றால் உருவாகியிருக்கக்கூடியது. தொடர்ச்சியான இயக்கத்தில் ஒற்றை பரிமாணத்தை முதன்மைப்படுத்த எத்தனிக்கும். உலகில் உள்ள அனைத்துத் தேசியவாதங்களினது தவிர்க்க முடியாத பிற்போக்காமன பாத்திரமே இதுதான். ஒருகட்டத்தில் ஒற்றைப் பரிமாணத்தை அடையும் தேசியவாதம் - அதே மூர்க்கத்தோடு மேலிருந்து கீழாக இயங்கத் தொடங்கும். இதன் போது ஒவ்வாமைகளுடனும் தனித்துவங்களுடமிருக்கின்ற சமூகங்களை தனது பரப்பிற்குள் அபகரித்துக் கொள்வது மாத்திரமன்றி - தனது கோரிக்கைகளையும் ஒற்றை அடையாளத்தையும் வித்தியாசங்களை மறுத்துத் திணிக்கத் தொடங்கும் தன்மை கொண்டது. அதற்கான கருத்தியல் ரீதியான நியாயத்தை, பிரயோகிப்பவர்களுக்குக் கொடுக்கக்கூடியது. அதை இயக்க முற்படுபவர்களது கைகளைத் தாண்டி தானாக - மூர்க்கமாக இயங்கும் வல்லமை தேசியவாதத்திடம் உண்டு. தேசியவாதத்தைக் கையாளுபவர்கள் இப்புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமானது. இவ்வகையான புரிதலற்றவர்கள் எக்காலத்திலும் தேசியவாத்தைக் கையாள முற்படக்கூடாது.

இன்றுள்ள சூழலில், தமிழ்த்தேசியவாத உணர்வையும் அதன் வெளிப்பாட்டையும் மறுக்க முடியாத நிலமை உள்ளது. இன்றுள்ள தமிழ்த்தேசியவாதக்கூறுகளின் கணிசமான பகுதி, சிங்கள பெருந்தேசியவாதத்தின் எதிர்வினையென்பதை மறுக்க முடியாது. ஆக, தேசியவாத்தை 'உள்வாங்கும்' தன்மை கொண்டதாக எவ்வாறு கட்டியமைக்க முடியும் என்ற பகுதிக்குள் புக வேண்டியுள்ளது. பன்மைத்துவக்கூறுகள் நிரம்பியதாக - போதுமானளவு ஜனநாயக வெளிகள் நிரம்பியதாக எவ்வாறு வளர்த்துச் செல்ல முடியும் என்ற வகையிலும் சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது. தேசியவாதம், தன்னைச் சிதைத்துக் கொண்டும் நகர வேண்டியதன் அவசியமும், தேசியவாத்தின் முதன்மைக் குணாம்சமே வெளியொதுக்கல் செய்வதுதான் என்பதும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டாயிற்று.

ஒருவரது அரசியல் நிலைப்பாடுகளை தெளிவாக வரையறை செய்து அணுக முடியாது. அரசியல் நிலைப்பாடுகள் நிறமாலை (spectrum) போன்றது. வெவ்வேறு கற்றைகளுக்குள் அலைந்து திரியும் தன்மை கொண்டது. தீவிர தமிழ்த்தேசிய நிலைப்பாட்டு வரையறைக்குள் தம்மை நிலைநிறுத்திக் கொள்பவர்கள் எதிர் தீவிர தமிழ்த்தேசிய எதிர்ப்பு வரையறைக்குள் தம்மை நிலைநிறுத்திக் கொள்பவர்கள் என்ற இருவகை அரசியல் நிலைகளை வைத்துக் கொண்டுதான் சகலதையும் பார்க்க வேண்டிய துரதிஸ்டவசமான நிலையில் உள்ளோம். எவ்வாறிருப்பினும், அரசியல் அக்கறை குறைந்த - அரசியல் அக்கறை தொடர்பில் தமது நிலைப்பாடுகளை குறித்த எல்லைக்குட்படுத்திக் கொண்ட 'மூன்றாவது தரப்பு' எப்போதும் பெருமளவான எண்ணிக்கையாக இருந்து கொண்டேயிருக்கும். அதாவது, மேற்கூறிய இரண்டு தரப்புக்களையும் இரண்டு எதிரெதிர் புள்ளிகளில் நிலைநிறுத்துவோமேயாக இருந்தால் இடையில் உள்ள ஏராளமான புள்ளிகளில் அலைவுறுவோரின் எண்ணிக்கையே அதிகமானது. கறுப்பு - வெள்ளை பிரதேசங்களில் இயங்கும் - எவருடைய வெற்றியும் கறுப்பும் வெள்ளையும் அல்லாத சாம்பல் வெளியில் உள்ளவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது, தனது கருத்தியல் வெற்றி பெற வேண்டும் என்று உண்மையாகவே நினைக்கும் தரப்பு - சாம்பல் வெளிகளை வெற்றி கொள்வதைப் பற்றிய அக்கறையுடன் செயற்படும். அதற்கு மாறாக, வெளியொதுக்கலுடன் கூடிய மனதுடன் இயங்கும் தரப்பிற்குத் தனது கருத்தியல் சார்ந்த அக்கறையை விட - வெறுமனே தனது இருப்பு சார்ந்த அக்கறையே அதிகமானதாக இருக்கும்.

இன்று, தம்மை தமிழ்த்தேசியத்தின் காவலர்களாகவும் பிரதிநிதிகளாகவும் கருதிக்கொள்ளகூடிய பலர் மூன்றாவது வெளியை வெல்வதை விடுத்து, அவ்வெளியை முற்றாக தமிழ்த்தேசியத்தில் சட்டகத்தில் இருந்து அந்நியப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது. இதனாலேயே, தேசியவாத்தின் அடிப்படைக் குணாம்சத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டே அதனை கையிலெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். உண்மையான செயற்பாட்டாளனுக்கே, பல தரப்புக்களையும் வெற்றி கொள்ள வேண்டியதன் அவசியமும் - அதன் தேவையும் புரியக்கூடியதாக இருக்கும். தமிழ்மக்கள் சார்ந்து அக்கறை உள்ளவர்கள் நிச்சயமாக பல்வேறு தரப்புக்களையும் வெற்றி கொள்வதைப் பற்றி யோசிக்கத் தொடங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் போன்று ஈழத்தமிழர்களும் - அதே பாணியில் 'வெளியொதுக்கலுடன்' கூடிய அரசியலை முன்னிறுத்தி வருவது ஆபத்தானது. முற்றுமுழுதாக தமிழ்நாட்டு அரசியலில் இருந்து வேறுபட்ட - ரத்தமும் சதையுமான அரசியல் நம்முடையது. 'வெளியொதுக்கல்' அணுகுமுறையால் நாம் எதனையும் அடைய முடியாது. எம்மிடம் இருக்க வேண்டியது மற்றைய தரப்புக்களை வெல்லும் நோக்குடன் கூடிய அணுகுமுறையே. கறாரான - அல்லது தெளிவான வரையறைகளுடன் கூடிய உரையாடல்கள் நிகழ்வது பிரச்சனையல்ல. ஆனால், அவை மற்றைய தரப்புக்களை களத்தில் இருந்து அகற்றுவதில் போய் முடிவடையக்கூடாது.

கடந்த காலங்களில் தேசியவாதம் தொடர்பான ஏராளம் உரையாடல்கள் தமிழிலேயே நடைபெற்றிருந்தது. தேசியவாதத்தின் சரி / பிழை தொடர்பாக போதுமான உரையாடல்கள் நடைபெற்றுள்ளதாகவே கருத வேண்டும். ஆயினும், அவற்றில் பெரும்பாலானவை ஒரு கருத்தியலின் உருவாக்கம் தொடர்பாகவும் நிபந்தனைகள் தொடர்பாகக விசேட கவனத்தைச் செலுத்தவில்லை. ஒரு கருத்தியலை அக்கருத்தியலின் தோற்றம் - பின்னணி - சூழல் போன்றவற்றுடன் இணைத்து பார்க்கப்பட வேண்டியது மிக அவசியமான நிபந்தனையாகும். உதாரணமாக மேற்கத்தைய இடதுசாரிகளின் தேசியவாதம் தொடர்பான பார்வைகள், பின்னவீன நிபந்தனைகளுடன் கூடிய தேசியவாதம் தொடர்பான பார்வைகள், பின் காலனித்துவ கால பார்வைகள் என்று பலவிதமாக வகைப்படுத்த முடியும். ஈழத்தமிழ் தேசியவாதத்தின் நிபந்தனைகளை சரியாகப் பட்டியலிடும் போது - அதன் பிரயோக வடிவம் சார்ந்து சரியான வரையறைகளுக்கு வர முடியும். வெறுமனே அமெரிக்கா, சீனா, இந்தியா என்ற அரசியல் அதிகார ஒழுங்குநிபந்தனைகளை முன்வைத்து மாத்திரம் பேசுவதில் நிறைய போதாமைகள் உண்டு. அடையாள அரசியலின் எழுச்சி, பின்னவீன - பின்காலனித்துவ கருத்தியல் தொடர்ச்சி, இறையாண்மை நோக்கிய பயணம், தேசியவாதத்தின் சக பயணிகள் போன்ற பல்வேறு நிபந்தனைகளையும் இணைத்தே இன்றைய ஈழத்தமிழ்த்தேசியவாத்தின் பிரயோக வடிவத்தை மீள்வரையறை செய்ய முடியும்.

January 12, 2012

தமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறையும் தகமை விருத்தியும் பிரயோக வடிவமும்


முன்னைய பதிவு : தமிழ்த்தேசிய உணர்வும் தமிழ்த்தேசியமும்

இலங்கை அரசியல் கணித - சமன்பாட்டின் அடிப்படையிலும் இன்றைய அரசியல் சூழ்நிலையிலும் தமிழ்மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய உணர்வு மழுங்கடிக்கப்படப்போவதில்லை. உணர்வுத்தளத்தில் அது தொடர்ச்சியாகக் கூர்மைப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கும். "தமிழ்த்தேசிய உணர்வும் தமிழ்த்தேசியமும்" என்ற பதிவில் கூறியுள்ளது போன்று அவ்வுணர்வுக்கான காரணிகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டேயிருக்கும் என்பது மாத்திரமல்லாது அக்காரணிகள் மேலும் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியங்களே அதிகமுள்ளன. அதுமாத்திரமன்றி மெய்நிகர் வெளியில் புலம்பெயர் தமிழ்மக்களுடனும் தமிழ்நாட்டு மக்களுடனுமான ஊடாட்டம் இவ்வுணர்வைத் தொடர்ச்சியாகத் தக்க வைத்தபடியேயிருக்கும். இவ்விடத்தில், இத்தளத்தில் செயற்படுபவர்களுக்கு இருவகையான தெரிவுகள் உண்டு. முதலாவது, தமிழ்த்தேசியத்தை நிராகரிப்பவர்கள் - தீவிர தமிழ்த்தேசிய உணர்விற்கான காரணிகளையும் தேவைகளையும் கண்டடைந்து அவற்றை நிவர்த்தி செய்யும் செயற்பாடுகளை முன்னெடுப்பது. இரண்டாவது தமிழ்த்தேசிய உணர்வையும் அவற்றின் நியாயப்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு, அதன் முற்போக்கான பாத்திரத்தை உறுதி செய்வது. இதில், முதலாவது செயற்பாட்டுவெளி பெரும்பாலும் இலங்கை அரசு கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாகவே சாத்தியபடுத்தக்கூடியது. முதலாவதன் அடிப்படையில் தீர்வை விரும்புபவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலும் சிங்கள அதிகாரக் கட்டமைப்பிற்குள்ளும்தான் பெருமளவில் தொழிற்பட வேண்டியுள்ளது. இரண்டாவது தளத்தில் செயற்பட விரும்புபவர்களுக்கான செயற்பாட்டுவெளி பெரும்பாலும் தமிழ்பேசும் சமூகங்கள் மத்தியிலானது. தவிர்க்க முடியாமல் அவ்வுணர்வை ஏற்றுக் கொண்டே செயற்பட முடியும்.

இக்கட்டுரையில் கவனப்படுத்தவிரும்பும் பகுதி இரண்டாவது செயற்பாட்டுவெளியுடன் தொடர்புள்ளது. தமிழ்த்தேசிய உணர்வை அதன் நியாயப்பாடுகளுடன் ஏற்றுக்கொண்டு, அவ்வுணர்வை முற்போக்கான திசைவழி நகர்த்துவதன் அவசியம் தொடர்பாக நீண்ட உரையாடல்களை நிகழ்த்த வேண்டியுள்ளது. காயங்களும் தேவைகளும் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்படும் போது அவை வன்மமாக வெளிப்படும். அவற்றின் வெளிப்பாடு வன்முறையாகவும் அடிப்படைவாதத் தன்மை கொண்டதாகவுமே அமையும். இன்றுள்ள தமிழ்த்தேசிய உணர்வை - நிர்மானுசன் குறிப்பிடும் நிலைத்து நிற்றல் (Survival), சுதந்திரம் (Freedom), நல்வாழ்வு (Well being), அடையாளம் (Identity) ஆகிய அம்சங்கள் உள்ளடங்கிய அடைவாக மாற்றுவது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழ்த்தேசியம் என்ற பொதுமைப்படுத்திய கருத்தியலின் ஊடாக அணுகுவதின் போதாமைகளை உணர்ந்து கொண்டும் வெவ்வேறு தளங்களில் அணுக வேண்டியதன் தேவையை உணர்ந்து கொண்டும் செயற்பட வேண்டியது அவசியமானது.

தமிழ்த்தேசிய உணர்வினது முற்போக்கான திசைவழியைத் தீர்மானிப்பதற்கு முன்னால், தமிழ் பேசும் சமூகங்களது இன்றைய நிலையின் குறுக்குவெட்டுப்பரப்பை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. கடந்த பதிவில் தமிழ்பேசும் சமூகங்கள், கடந்த 30 வருடங்களில் மாற்றம் பெற்று வந்த முறை ஓரளவு சுட்டப்பட்டிருந்தது. அதேநேரம், தமிழ்பேசும் சிறுபான்மைச் சமூகங்கள் என்றளவில் வைத்து தமிழ்பேசும் மக்களை அணுகிவிட முடியாது. தமிழ் பேசும் மக்கள் என்ற பதம் இன்று மூன்று தேசிய இனங்களைக் கொண்ட கட்டமைப்பே என்ற உணர்வுடனேயே, அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக யோசிக்க முடியும். அதே போன்று 1990 களுக்குப் பின்னரான உலக ஒழுங்கும் தொழில்நுட்ப வளர்ச்சியும் - முதலீட்டிய விரிவாக்கமும் 'அரசு' கட்டமைப்புக்களுக்கு வழங்கியிருக்கும் பாத்திரம் தொடர்பான புரிதல்களை மேலும் வளர்த்துச் செல்ல வேண்டியுள்ளது. முதலீட்டிய விரிவாக்கத்தின் 'உள்ளூர் முகவர்' என்ற பாத்திரத்தை ஏற்றுக் கொண்டுள்ள அரசுகளுக்கு அமெரிக்கா தலமையிலான 'நிலையான' உலக ஒழுங்கும் தொழில்நுட்பமும் - வழங்கியுள்ள அதிகாரமும் அதன் சட்டபூர்வ தன்மையும் (legitimacy) அதனை உறுதிசெய்யும் நோக்கில் உலகமெங்கும் உருவாக்கிவிட்டுள்ள என்.ஜி.ஓ செயற்பாட்டுகளும் இணைந்து உருவாக்கியுள்ள புதிய அதிகார ஒழுங்கு தொடர்பான புரிதல்களின் மத்தியிலேயே, நாம் இலங்கையில் 'தமிழ்' செயற்பாடுகளை மீள்வரையறை செய்ய வேண்டியுள்ளது.

தமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறையும் (praxis) தகமை விருத்தியும் (capacity building) பிரயோக வடிவமும் (applicable form)

தமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறை (praxis)

வாழ்வியல் நடைமுறையில், தமிழ்த்தேசியவாதத்தின் பிரயோகவடிவத்தைத் தீர்மானிக்கும் மக்கள் கூட்டத்தினரிடையே - தமிழ்த்தேசியவாதமானது எவ்வாறான நிலமையில் உள்ளது என்பது அதன் முற்போக்கான பிரயோகவடிவத்திற்கு மிக முக்கியமான அம்சமாகும். அதாவது இனவரைவியல் (Ethnography) அடிப்படையிலான நோக்கில், அதன் வாழ்வுமுறை எத்தகையது என்ற அம்சம், அதன் பிரயோகவடிவத்தின் முற்போக்கான அம்சத்தைத் தீர்மானிமானிக்கும் முக்கியமான காரணியெனலாம். பண்பாட்டு மானிடவியல் (Cultural Anthropology) துறையின் எழுச்சியில் உருவாகிய ஆய்வுகள் போராட்டத்தின் தேவைகள் - போக்குகளின் அடிப்படையாக இனவரையிலையும் அதனூடான வாழ்வியல் நடைமுறையையும் முன்வைக்கின்றன. இவ்வடிப்படைகளைத் தெளிவாக இனங்காணும் போதே, அதன் பிரயோகவடிவத்தைத் தீர்மானிக்கும் போது - பிற்போக்குக் கூறுகளை உதிர்த்து வெளியேறுதல் தொடர்பான உரையாடலுக்குள் உள்நுழைய முடியும். பிற்போக்கான கூறுகளை 'உரித்து' வெளியேறுவதென்பதை விட, அவற்றை 'உதிர்த்து' வெளியேறுதல் என்ற சொற்பிரயோகத்தைக் கவனிக்க. அதாவது முற்போக்கான பிரயோகம் என்பது சடுதியான திணிப்பின் மீதாக அல்லாமல் இயல்பான பரிணாமமாக (Organic evolution) இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது அவசியமானது.

சடங்குகளும் வழிபாடுகளும், கலை - கலாச்சார வெளிப்பாடு, மருத்துவ அறிவும் உணவுப் பழக்கவழக்கமும், தொழிற்கலைகள், விளையாட்டுக்கள் என்ற ஆறு விடயங்கள் சார்ந்த ஆய்வுகள் மிக அவசியமானவை. மேற்கூறிய ஆறு வகை மாதிரிகளூம் நாட்டாரியல், தொன்மங்கள், பாடல்கள், சொல் விளையாட்டுக்கள், கட்டுக்கதைகள் என்று ஏராளமான வகைகளாகப் பிரிக்கப்படக்கூடியவை. இவை ஒவ்வொன்றினதும் பயன்பாடும் நடைமுறையும் இன்று சமூகத்தில் எத்தகையவையாக உள்ளன? எவ்வகையான விடயங்களை சமூகங்கள் தூக்கியெறிந்துவிட்டு நகர்ந்திருக்கின்றன போன்ற விடயங்களை நாம் தமிழ்த்தேசியவாதத்தின் பிரயோக வடிவத்தைத் தீர்மானிக்கும் போது உள்வாங்கி வைத்திருக்க வேண்டியது அவசியமானது. சடங்குகள் வழிபாடுகள் எவ்வாறான வளர்ச்சிக்கு உட்பட்டு வந்திருக்கின்றன? ஆன்மீகத்தில் நிகழ்ந்த சமஸ்ஹிருதமயமாக்கல் எவ்வாறான விளைவுகளைக் கொடுத்துள்ளது? தமிழ்த்தேசியவாதத்தின் கலை - கலாச்சார வெளிபாடுகள் எவை? வெவ்வேறு சாதிகள், பிரதேசம் சார்ந்த மக்களிடையே எவ்வாறான வகைகளில் வித்தியாசப்பட்டிருந்தது? பிரதேச ரீதியாக மாறுபட்டிருந்த உணவுப் பழக்க வழக்கங்கள் என்ன? தமிழ் சமூகங்கள் கொண்டிருந்த மருத்துவ அறிவு எத்தகையது? எவ்வாறான தொழிற்கலைகள் அதன் உள்ளடக்கத்தில் இருந்தன? எவ்வகையான விளையாட்டுக்கள் காணப்பட்டன? எவ்வாறான சட்ட முறைமை சமூகங்கள் மத்தியில் பின்பற்றப்பட்டது? உறவுமுறைகள் சமூக உறவுகளில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்பது போன்ற ஏராளமான விடயங்கள் - உள்ளடக்கம் சார்ந்ததுதான் தமிழ்த்தேசியம். பல்வேறு வித்தியாசங்களின் - பன்மைத்துவ வெளிப்பாடுகளின் கூட்டு ஒன்றிணைவாகவே தமிழ்த்தேசியம் உருவாகியிருக்க வேண்டும்.

தமிழ்த்தேசியவாதம் : தகமை விருத்தி (capacity building)

வாழ்வியல் நடைமுறை என்ற விடயத்திற்கு அடுத்ததாக தமிழ் சாணக்கியனின் 'தகமை விருத்தி' தொடர்பான விடயத்திற்கு வருவோம். வாழ்வியல் நடைமுறையில் இருந்து உருவாகும் சமூகக்குழுக்கள் பெருமளவான உரையாடல்கள் மத்தியில் உருவாக்கும் சமூக நிறுவனங்களே 'தகமை விருத்தியின்' அடிப்படையாக அமைய முடியும். ஐரோப்பிய நாடுகளில் இன்று தனி மனிதனுக்கும் அரசிற்கும் உள்ள உறவென்பது சடுதியாக ஏற்பட்டதல்ல. அதன் வளர்ச்சியான நூற்றாண்டுகால பரிணாம வளர்ச்சி. ஏகப்பட்ட படிநிலைகளையும் படிப்படியான மாற்றங்களையும் கொண்டது. ஜனநாயக ரீதியாக உருவாக்கப்படும் சமூக நிறுவனங்களே தேசியவாத அரசியலின் அடிக்கட்டுமானமாக அமையும். இலங்கை தமிழ்பேசும் சமூகங்களில் கூட்டு வேலைத்திட்டங்களுடன் கூடிய சமூக நிறுவனங்களாக கோயில்களைத் தவிர வேறெவற்றையும் காட்ட முடியாத துரதிஸ்டவசமான சூழலை யுத்தம் எமக்குத் தந்துள்ளது. ஆன்மீகத்தேவையின் பூர்த்தியைத் தாண்டிய சமூக நிறுவனங்கள், எமது சமூகத்தில் எவ்வளவு தூரம் இயங்கிவருகின்றன என்ற பட்டியலிட முயற்சித்தால் அவற்றின் விளைவு பூச்சியமாகவே இருக்க முடியும். இலங்கை அரசு கட்டமைப்பிற்குள் இயங்கி வரும் பாடசாலைகளும் இதர அரச நிறுவனங்களுமே இன்று தமிழ் மக்களுடைய நிறுவனங்களாக எஞ்சிப் போயுள்ளன. சமூக நிறுவனங்களின் பெருக்கம் வகைதொகையற்று நிகழ வேண்டிய தருணமிது. வாசிகசாலைகளும் விளையாட்டுக் கழகங்களும் தம்மை வேகப்படுத்திக் கொள்ள வேண்டும். 1996 ஆம் ஆண்டிற்குப் பின்னர் யுத்தத்தைச் சந்திக்காத யாழ்ப்பாணத்தில் கூட எவ்வகையான சமூக நிறுவனங்களும் மக்கள் சார்ந்து தோற்றம் பெறவில்லை என்னும் நிலையில், யுத்தத்தால் முழுமையாக துடைத்து அழிக்கப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் சிவில் சமூகமும் சமூக நிறுவனங்களும் எவ்வாறு தொழிற்படும் என்று எதிர்பார்க்க முடியும்?

சின்னஞ்சிறிய சமூக நிறுவனங்களுடைய உருவாக்கத்தின் பின்னரே அரசு கட்டமைப்பிற்கு மாற்றிடான சமுக நிறுவனங்கள் உருவாக முடியும். உதாரணமாக, இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் அமுல்படுத்த யோசிக்கப்படுகின்றதெனில், அதனை முழுமையாக ஆய்வு செய்து அவறிற்கு மாற்றீடான திட்டங்களை முன்வைக்கும் வல்லமையைப் பெற்றுக் கொள்ளும் அளவிற்குத் தகமை விருத்திச் செயற்பாடுகள் அவசியமானவை. வெறுமனே தேசியவாதத்தை அரசியல் பரப்பிற்குள் சுருக்கும் போது - அவ்விடயத்தை எதிர்ப்பதென்ற ஒரே தெரிவே எம்மிடமிருக்கும் என்பது துரதிச்டவசமானது. புலம்பெயர் சமூகம் இலங்கையில் செயற்பட முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வெறுமனே அரசிற்குச் சார்பான கோரிக்கையல்ல. அக்கோரிக்கையில் தமிழ்த்தேசியவாத்தின் ஆரோக்கியமான எதிர்காலமும் தங்கியுள்ளது என்ற புரிதலை வளர்க்க வேண்டியுள்ளது.

தமிழ்த்தேசியவாதம் : பிரயோக வடிவம் (applicable form)

இன்றைய தமிழ்த்தேசியக் கோரிக்கை என்பது வானத்தில் இருந்து குதித்த விடயமல்ல. அக்கோரிக்கை வெறுமனே தமிழ் அடையாளம் சார்ந்த அரசியல் கோரிக்கையுமல்ல. சமூகத்தின் அடையாள உறுதியாக்கம் நிகழ்ந்த போது - அதன் வெளிப்பாட்டு வடிவமாகவே இக்கோரிக்கை முதன்மை பெற்றிருக்க முடியும். இன்று அதன் உள்ளடக்கங்கள் தொடர்பான புரிதல்கள் அற்று வெறுமனே கோரிக்கையை காவித்திருவதென்பது, உயிரற்ற உடலை அலங்கரித்து கொண்டு திரிவதைப் போன்ற செயற்பாடன்றி வேறெதுவும் இல்லை. மேலும், மேற்கூறிய 'வாழ்வியல் நடைமுறை' மற்றும் 'தகமை விருத்தி' ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டே பிரயோக வடிவம் தொடர்பான தீர்மானத்திற்கு வர முடியும். இவற்றின் அடிப்படையிலேயே சரியான பிரயோக வடிவத்தைத் தீர்மானிக்க முடியும். இப்பிரயோக வடிவத்தின் கூறுகள், ஏற்கனவேயான வரலாற்றுப் போக்கில் எஞ்சிய கூறுகளை தற்காலத்தைய சிந்தனைக்கூறுகளின் உதவி கொண்டு செப்பனிட்டபடி நகர வேண்டியுள்ளது. இது, மிகவும் சவாலான பணியென்பதை யாராலும் மறுக்க முடியாது.

வரலாற்றுப் போக்கில், தமிழ்த்தேசியம் என்ற அடையாள உறுதியாக்கம் ஒற்றை பரிமாணமானதல்ல. பல்வேறுபட்ட வாழ்முறைகளினது வித்தியாசங்களது கூட்டிணைவினால் உருவாகிய அடையாள உறுதியாக்கம். அதேநேரம், அரசியல் ரீதியான தேவைகள் அவ்வுறுதியாக்கத்தை விரவுபடுத்தியோ அல்லது இயல்பான வளர்ச்சிக்கு மாற்றாகவோ ஒன்றிணைத்திருக்கக்கூடும். பண்பாட்டுப் போக்கில் கீழிருந்து மேலான செயற்பாடாக இருக்க வேண்டிய பொறிமுறையைக் கொண்டது. அடையாள உறுதியாக்கம் மேன்மேலும் இறுக்கமாகி ஒற்றை பரிமாணத்தை அடையும் போதும் - அது மேலிருந்து கீழாக இயங்க எத்தனிக்கும் போதும் வன்முறையாக மாறிவிடுகின்றது. பிரயோக வடிவத்தைத் தீர்மானிக்கும் போது, இவ்வகையான வித்தியாசங்கள் அனுமதிக்கப்பட்ட வெளியாக - சமத்துவ ரீதியானதாக இருக்கும் போதே அது தனது முற்போக்கான பாத்திரத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

ஏற்கனவே கூறியபடிக்கு, 'இறையாண்மை அடைவுடன் கூடிய - இன்றைய அரசு வடிவத்தில் உள்ள தேசியவாதத்தின் பிரயோக வடிவம்' இற்கும் 'இறையாண்மைக்கான நகர்வுடன் கூடிய காலபகுதியில் தேசியவாதத்தின் பிரயோக வடிவம்' ஆகிய இரண்டு விடயங்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டியது அவசியமானது. முன்னையதில் தேசியவாதம் - இறையாண்மையான அரசை அமைத்ததன் பின்னணியில் தனது அடையாள உறுதியாக்கத்தை சிதறடிக்கும் பண்பைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகின்றது. 'அரசு' 'குடிமகன்/ள்' என்ற உறவு வித்தியாசங்களை பெருக்கத்தில் மேன்மை பெற வேண்டியது அவசியமானது. ஆயினும், இரண்டாவது வகையான இறையாண்மைக்கான நகர்வுடன் கூடிய காலப்பகுதியில் உள்ள தேசியவாதச் சிந்தனைகளின் நகர்வோ இக்காலப்பகுதியில் மிகவும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. அச்சிந்தனை முறை இரண்டுவகையாக கட்டமைக்கப்பட வேண்டியுள்ளது. அடையாள உறுதியாக்கங்களை முன்வைத்து நகர வேண்டிய அதேவேளை அதே அடையாள உறுதியாக்கம் காரணமாக நிகழும் பன்மைத்துவ மறுப்பை சிதறடித்தவாறு - தன்னை ஜனநாயகப்படுத்திக் கொண்டும் முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. அடையாள அரசியல் சிந்தனைப் போக்குகளின் எழுச்சியும் பெண்கள், தலித்துக்கள், இதர சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பாக எழுந்துள்ள கருத்தியல்களும் ஏற்கனவேயான ஒற்றைப்படையான உறுதியாக்கங்களை உடைக்கக்கோருபவை. அதாவது, ஒரே நேரத்தில் Deconstructive அணுகுமுறையும் Constructive அணுகுமுறையும் தமது பிரயோக நடைமுறையாகக் கொண்டிருக்க வேண்டிய சந்தர்ப்பத்தை 'உலக சிந்தனை போக்கு' உருவாக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த முரணியக்கமே பின்- காலனித்துவ தேசங்களது - தற்காலத் தேசியவாதத்தின் ஆரோக்கியமான பண்பாக இருக்க முடியும்.

[ இக்கட்டுரையை பிறிதொரு சந்தர்ப்பத்தில் மேலும் விரிவாக்கி எழுத முயற்சிக்கின்றேன். வாழ்வியல் நடைமுறையும் (praxis) தகமை விருத்தியும் (capacity building) பிரயோக வடிவமும் (applicable form) என்ற விடயங்கள் சார்ந்து அரசியல் பரப்பிற்கு வெளியேயுள்ள புலமையாளர்களும் துறை சார் தொழில் அறிஞர்களும் சிந்திக்க வேண்டிய தருணமிது. நான் இங்கே சுருக்கமாகக் கொடுத்திருப்பது வெறும் சட்டகமே (framework). இவ்விடயத்தை வளர்த்துச் செல்ல வேண்டிய பணி சகலருக்குமானது. ]

மேற்குறித்த பதிவிற்கான அடிப்படை 'அ. மார்க்ஸ் பிராண்டு பின்நவீனத்துவ அரசியல்: வித்தியாசங்களின் பெருக்கமா? காலனியக் கழிவுகளின் கூட்டுத் தொகையா?' என்ற வளர்மதியின் கட்டுரையே.

Statcounter