வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

Showing posts with label பிறரது படைப்புக்கள். Show all posts
Showing posts with label பிறரது படைப்புக்கள். Show all posts

March 31, 2014

கல்வி 2.0 : கற்றல் கற்பித்தலில் இணைய நுட்பங்கள் | நற்கீரன்

உலகில் உணவு, பொருட்கள், மருத்துவம் ஆகிய அனைத்தையும் விட கல்வியே மிக வேகமாக விலை உயர்ந்துவருகிறது.[1]  பெரும் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து பட்டப்படிப்பைப் பெற்றாலும் அக்கல்வியை முழுமையாகப் பயன்படுத்தும் தொழில்கள் பெரும்பான்மையினருக்கு கிட்டுவதில்லை.[2]  அதே வேளை புதிய அறிவுகளும் திறன்களும் தேவைப்படும் தொழில்வாய்ப்புகள் தொடர்ச்சியாக உருவாகி வருகின்றன.  தொழில்களில் தம்மைத் தொடர்ச்சியாக இற்றைப்படுத்திக் கொள்வதும், புதிய அறிவுகளைப் பெற்றுக் கொள்வதும் வழமையாகி வருகிறது.  இவ்வாறு வேகமாக விரிவாகிவரும் மாறிவரும் அறிவுச் சூழலில் கல்வியின் தேவை முன் எப்பொழுதையும் விட உயர்வாகவே உள்ளது.  இத்தேவையை பல்வேறு குறைபாடுகளைக் கொண்ட பாடசாலை-பாடநூல்-ஆசிரியர் முறையிலான இன்றைய கல்விமுறையால் பூர்த்தி செய்ய முடியவில்லை, முடியாது.  இணையமும் அதன் ஊடாக வளர்சிபெறும் நுட்பங்களும் நாம் கல்வி கற்கும் கற்பிக்கும் முறையைப் புரட்டிப் போட்டு வருகின்றன.  இணையத் தகவல் மூலங்கள், மெய்நிகர் கற்றல் சூழல்கள் (virtual learning environments), திறந்த பாடத்திட்டங்கள், உள்ளடக்கங்கள், பாரிய திறந்த இணைப்பு வகுப்புகள் (massive open online courses), சகா-சகா கல்வி (peer-to-peer education), சமூகக் கற்றல் (social learning) ஆகிய நுட்பங்களையும் கல்வி முறைகளையும் அறிமுகப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.  

உலகில் உள்ள கணினிகள் எல்லாம் தம்மிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பரவிய நுட்பக் கட்டமைப்பே இணையம். இணையம் 1970 களில் வடிவமைக்கப்பட்டது.  தொடக்காலத்தில் பெரும் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களுக்கு இடையே மட்டுமே இணையம் இருந்தது.  இணையம் ஊடான மின்னஞ்சல் (email), கோப்புப் பரிமாற்றம் (file sharing), பயனர்வலை (Usenet) ஆகியவை ஊடாகத் தகவல் பரிமாற்றம் நடந்தது.  இன்று பரவலாக அறியப்பட்ட இணைப்புகளோடான (hyperlink) வலைத்தளங்களைக் (websites) கொண்ட உலகளாவிய வலை (worldwide web) 1990 களில் உருவாக்கப்பட்டது. இது ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராச்சியாளர்கள் தமது ஆய்வு ஆவணங்களை இலகுவில் பகிர்ந்து கொள்ள உதவும் வண்ணம் உருவாக்கப்பட்டது.  இணையத்தில் உள்ள தகவல்களை கண்டுபிடிக்கத் தேடுபொறிகள் உதவுகின்றன.  

தொடக்கத்தில் உலகளாவிய வலையில் தகவல்களைப் பகிர்வதும், ஊடாடுவதும் நுட்பச் சிக்கல் நிறைந்த ஒரு செயற்பாடாகவே இருந்தது.  ஆனால் இன்று மன்றம் (forum), வலைப்பதிவு (blog), விக்கி (wiki), பல்லூடகம் (multimedia), எழுத்து/ஒலி/ஒளி உரையாடல் (conferencing), திரைப் பகிர்வு (screen sharing/remote connection), சேர்ந்தியங்குக் கருவிகள் (collaboration tools), வலைச் செயலிகள் (web applications) எனப் பல தீர்வுகள் உள்ளன.  இணையம் ஊடாக உலகத்தில் உள்ள யாரும் யாருடனும் இலகுவாகத் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் (information sharing), நிகழ்நேரத்தில் ஊடாடவும் (interaction), பல பேர் பல இடங்களில் இருந்து சேர்ந்தியங்கவும் (distributed collaboration) முடியும்.  இன்று இந்த உள்கட்டமைப்பில் மரபுசார் கல்விமுறைக்கான மாற்றுக்கள் உருவாகி வருகின்றன.


இணையத் தகவல் மூலங்கள்

நீண்ட காலமாக தகவல்களையும் தரவுகளையும் மனப்பாடம் செய்தலே அறிவு வெளிப்பாட்டின் முக்கிய அடையாளமாகக் கருதப்பட்டது.  சோதனைகள் இதனையே முதன்மையாச் சோதித்தன.  தொழில் இரகசியம் போன்று தகவல்களையும் கேள்விகளையும் ஒளித்து வைத்து சிறிது சிறிதாகப் பல ஆசிரியர்கள் பகிர்ந்தனர்.  இணையம் ஊடாக தேடி தகவல்களையும் தரவுகளையும் எளிதில் எங்கிருந்தும் பெற்றுவிடலாம் என்னும் போது தகவல்களைப் போதிப்பதன் முக்கியத்துவம் குறைந்தது.  கல்வியின் இலக்குகள் விரிவுபடுத்தப்பட்டன. தகவல்களை பகுப்பாய்ந்து விமர்சன நோக்கில் புரிந்து கொள்ளல், தகுந்த முறையில் பயன்படுத்தல், பன்முகத் திறன்களைப் பெறுதல் முதன்மை பெறுகின்றன.   எடுத்துக்காட்டாக ஒரு முதாலாவது ஆண்டு மருத்துவ மாணவர் உயிர்வேதியியல் வழித்தடங்களைப் பற்றி தனக்கு விருப்பமான இடத்தில் இருந்து தகவல்களைப் படித்துக் கொள்ளலாம்.  வகுப்பில் ஊன்ம ஆக்கச் சிதைவு நோய் உள்ள ஒரு குழந்தையுடன், அவரின் பெற்றோர்களுடன், அவருக்கு மருத்துவம் வழங்கும் மருத்துவருடன், உயிரிவேதியியல் பேராசிரியருடன், பிற மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ளலாம். இத்தகைய ஊடாட்டம் (interaction/engagement) நூலில் வெற்றுத் தகவல்களாக உள்ள உயிர்வேதியியல் பாடத்துக்கு ஓர் உயிரோட்டம் கொடுக்கும்.[3]  இவ்வாறு ஆசிரியர்களின் நேரத்தை கூடிய திறனாகப் பயன்படுத்த இணையம் ஊடான கல்வி முறைகள் உதவுகின்றன.  மின்னஞ்சல், கோப்புப் பரிமாற்றம், பயனர்வலை (Usernet), வலைதளம், தரவுத்தளம் (database), தேடுபொறி முதற்கொண்ட தகவல் பகிர்வை இணையம் ஊடான கல்வியின் முதல் கட்டமாகக் குறிப்பிடலாம்.


மெய்நிகர் கற்றல் சூழல்கள் (Virtual Learning Environments)

இணையம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் மாணவர்கள் பழைய பாடத்திட்டங்கள், வினாத்தாள்கள், விடைகள், பயிற்சிகள், குறிப்புகள் ஆகியவற்றை இணையம் ஊடாகப் பகிர்ந்தார்கள்.  முதலில் ஆசிரியர்களும் கல்விக்கூடங்களும் இதனை எதிர்த்தன.  ஏன் என்றால் புதிய வினாத்தாள்களை எழுதுவது கூடிய வேலையாக அமைந்தது.  சில மாணவர்கள் படியெடுத்தும் புள்ளிபெற்றார்கள்.  நாளடைவில் தடுக்க முற்படுவதன் இயலாமையைப் புரிந்துகொண்டு ஆசிரியர்களே இந்தத் தகவல்களை வகுப்பின் தொடக்கத்திலேயே பகிர்ந்தார்கள்.  வினாக்களும் பயிற்சிகளும் படியெடுக்க முடியாதவாறு வடிவமைக்கப்பட்டன.  மேலும் இணையத்திலேயே பயன்படுத்தக் கூடிய இயங்குபடங்கள் (animations), ஒப்புருவாக்கங்கள் (simulations), பயிற்சிகள், புதிர்கள், உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டன.  ஆசிரியர்களின் விரிவுரைகள் நிகழ்படமாகப் பதியப்பட்டு மாணவர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கும் வசதி செய்துதரப்பட்டது.   இணைய மன்றங்கள், உரையாடல்கள் ஊடாக மாணவர் ஊடாட்டமும் ஊக்கப்படுத்தப்பட்டது.  இத்தகைய பல்வகை வகுப்புசார் கூறுகளை இணையம் ஊடாக நிறைவேற்ற உதவும் மென்பொருட்களை வகுப்பு மேலாண்மை மென்பொருட்கள் (course/class management system) என்பர்.  உள்ளடக்க மேலாண்மை மட்டும் இல்லாமல் வகுப்புகளை நேர அட்டவணைப்படுத்தவும், மாணவர்களின் முன்னேற்றத்தையும் மதிப்பீடுகளையும் பதிவுசெய்யவும், பல்வேறு நிர்வாகப் பணிகளைச் செய்யவும் கூட மென்பொருட்கள் பயன்படுகின்றன.  இவற்றை கற்றல் மேலாண்மை மென்பொருட்கள் (learning management system) என்பர்.  இவற்றின் ஊடாக பெளதீக வகுப்புகளே இல்லாமல் முற்றிலும் இணையத்தின் ஊடாகவே கல்வி கற்க முடியும்.  எ.கா ஒன்ராறியோவின் மெய்நிகர் உயர்பாடசாலை (virtualhighschool.com) பெரும்பாலான பாடங்களை இணையம் ஊடாக வழங்குகிறது.  ஐக்கிய இராச்சியத்தின் திறந்த பல்கலைக்கழகம் (open.ac.uk) முழுமையான பட்டப்படிப்புக்களை இணையம் ஊடாக வழங்குகிறது.  இவற்றுக்கு இன்னுமொரு பொதுப் பெயர் மெய்நிகர் கற்றல் சூழல் (virtual learning environment) என்பதாகும்.  இந்த மென்பொருட்களின் பயன்பாட்டுக் கூறுகள் சிறிது வேறுபட்டாலும் அடிப்படையில் வகுப்பு-நூல்-ஆசிரியர் அடிப்படையிலான கல்வி முறையை இவை மாற்றி அமைக்கின்றன.  இவற்றுக்கு கட்டற்ற மென்பொருட்களான மூடுள் (moodle.org), சாகை (sakaiproject.org), ஏரூற்ரர் (atutor.ca), கிளாரோலைன் (claroline.net) வணிக மென்பொருட்களான பிளக்போர்ட் (blackboard.com) மற்றும் டிசையர்2லேர்ன் (desire2learn.com) ஆகியன சிறந்த எடுத்துக்காட்டுக்கள்.  


திறந்த பாடத்திட்டங்கள், உள்ளடக்கங்கள்

மெய்நிகர் கற்றல் சூழல்கள் வகுப்பறையை இணையத்துக்கு கொண்டு வந்தன.  ஆனால் பெரும்பாலான அந்த இணைய வகுப்பறைகள் தொடக்கத்தில் பூட்டப்பட்டே இருந்தன.  அந்தந்த பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் பதிவுசெய்த மாணவர்களுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்தும் அனுமதி இருந்தது.  இந்தச் சிக்கலைத் தீர்க்க உருவாக்கப்பட்டவைதான் திறந்த பாடத்திட்டங்கள் மற்றும் திறந்த உள்ளடக்கத் திட்டங்கள்.  2002 ஆம் ஆண்டு உலகின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றான மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்லூரி முதலாவது விரிவான திறந்த பாடத்திட்டத்தைத் (ocw.mit.edu) தொடங்கியது.  இன்று அக் கல்லூரியின் அனைத்து பாடத் திட்டங்கள், பாட உள்ளடக்கங்கள் (நூல்கள், குறிப்புகள், விரிவுரை, நிகழ்படங்கள், பயிற்சிகள், பரிசோதனைகள்) இணையத்தில் இலவசமாக அனைவருக்கும் கிடைக்கின்றன. இவற்றை இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம் போன்ற பல்வேறு நாட்டு கல்விக்கூடங்களும் பல்லாயிரக்கணக்கான தனிநபர்களும் பயன்படுத்துகிறார்கள்.  இதனைத் தொடர்ந்து உலகின் பல தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் தமது பாடங்களை திறந்த நிலையில் பகிர்ந்துள்ளன.  எ.கா. ocwconsortium.org, openlearn.open.ac.uk, webcast.berkeley.edu.

இதே போன்று பல்கலைக்கழகங்கள் சாராத பல்வேறு திட்டங்களும் உள்ளன.  இவற்றில் பரவலாக அறியப்பட்டது கான் கல்வியகம் (khanacademy.org) ஆகும்.  படிப்படியாக சொல்லித்தரும் நிகழ்படங்கள், இயங்குபடங்கள், செயலிகள், பயிற்சிகள், சமூக வலைப்பின்னல் எனப் பல்வேறு வழிகளில் ஒருவர் கற்க கான் கல்வியகம் உதவுகிறது.  விக்கிப்பீடியா, விக்கிநூல்கள், விக்கிபல்கலைக்கழகம் (wikimedia.org) ஆகியவையும் திறந்த உள்ளடக்கதுக்கான நல்ல எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.  academicearth.org ஆயிரக்கணக்கான விரிவுரைகளை இலவசமாகத் தருகிறது.  textbookrevolution.org நூற்றுக்கணக்கான பாட நூல்களை இலவசமாகத் தருகிறது.


பாரிய திறந்த இணைப்பு வகுப்புகள் (Massive Open Online Courses)

திறந்த பாடத்திட்டங்கள் உயர்தரமான பாடங்களை மாணவர்களுக்கு வழங்கின.  ஆனால் மாணவர்கள் சேர்ந்து கற்கவோ, மதிப்பீடுகளைப் பெறவோ, சான்றிதழ்களைப் பெறவோ முடியவில்லை.  இந்த இடைவெளியை கோர்செரா (coursera.org), யுடாசிற் (udacity.com), எட்.எக்சு (edx.org) போன்ற கல்வித் தளங்கள் பூர்த்தி செய்கின்றன.[4]  இந்த திட்டங்களில் வழங்கப்படும் வகுப்புகளுக்கு பிற கல்லூரிகளில் போன்று மாணவர்கள் சேர முடியும்.  பின்னர் மாணவர்கள் அந்த வகுப்பின் உள்ளடக்கத்தை, விரிவுரைகளை, பயிற்சிகளை பிற மாணவர்களுடன் சேர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும்.  புதிர்களையும் (quiz) சோதனைகளையும் (tests) பயன்படுத்தி தமது முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து கொள்ளலாம்.  தற்போதைய மாதிரியின் படி அதிகாரபூர்வமாக மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்குவதற்கு மட்டுமே கட்டணம் அறவிடுகிறார்கள்.  2011 இல் கோர்செரா அறிமுகப்படுத்தப்பட்ட போது சுமார் 100 000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு வகுப்புகளையும் எடுத்தார்கள்.  2012 இல் அதே மாதிரி பாரிய மாணவர் தொகையுடன் இம் மூன்று தளங்களிலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.  வழமையாக பல்கலைக்கழகங்களில் ஒரு வகுப்புக்கு அதிக பட்சம் 400-1000 வரையான மாணவர்களே பங்கேற்பார்கள் என்பதை இங்கு ஒப்பிட்டால், கல்வியை அனைவருக்கும் எடுத்துச் செல்வதில் இத் தளங்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்பதை உணரலாம்.[4]


சகா-சகா கற்றல் (Peer-to-Peer), சமூகக் கற்றல் (Social Learning)

முழுமையான இணையக் கற்றல் முறைகள் தானாகக் கற்றலை ஏதுவாக்கின்றன, ஊக்குவிக்கின்றன.  ஆனால் இதன் ஒரு குறைபாடு நேரடி மனித வழிகாட்டல், வகுப்புத் தோழமை இல்லாமை ஆகும்.  இக் குறையை சகா-சகா கற்றல், சமூகக் கற்றல் முறைகள் பூர்த்தி செய்கின்றன.  

சகா-சகா கற்றல் இயல்பாக தொன்று தொட்டு நடைபெறும் ஒரு செயற்பாடுதான்.  ஆனால் இணையம் அதற்காக கூடிய வசதிகளைச் செய்கிறது.  திறன் பகிர்வகங்களில் (எ.கா www.swapsity.ca) ஒருவர் தனக்கு என்ன என்ன திறங்கள் உள்ளன என்றும், தான் என்ன என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறார் என்று கூறுவார். இங்கு இருவரின் தேவைகளுக்குப் பொருத்தம் ஏற்பட்டால், அவர்கள் தமது திறன்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.  எ.கா ஒருவர் தமிழ் படிக்க விரும்புகிறார், இன்னுமொருவர் சீனம் கற்க விரும்புகிறார்.  இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கற்பிக்கலாம். இதை இணையத்தின் ஊடாகத்தான் செய்ய வேண்டுமென்றில்லை.

சமூகக் கற்றல் என்பது சகா-சகா கற்றலின் நீட்சி ஆகும்.  இணையத்தில் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு இடையேயான சமூக வலைப்பின்னல் (social network) போன்று கற்றலுக்கான வலைபின்னல்கள் உண்டு.  இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இசுராக் ஓவர்ஃபுலோ (stackoverflow.com) போன்ற துறைசார் கேள்வி பதில் தளங்கள் ஆகும்.  இங்கு ஒரு நிரலாளர் தான் சந்திக்கும் சிக்கலைப் பற்றிய கேள்வியை கேட்கலாம்.  அக் கேள்விக்கு பிற நிரலாளர்கள் பதில் தருவார்கள்.  தரப்பட்ட பதில்களில் இருந்து சரியான பதிலை கேள்வி கேட்டவர் தேர்தெடுக்கலாம்.  இத் தளத்தில் கேட்கப்படும் பெரும்பான்மைக் கேள்விகளுக்கு சரியான பதில்கள் சில மணித்தியாலங்களில் கிடைத்துவிடும்.  சரியான பதில்களைக் கொடுக்கும் நிரலாளர்களுக்கு நன்மதிப்புக் கிடைக்கிறது, வேலைக்கான நேர்காணல்களில் கூட இந்த நன்மதிப்பு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஆசிரியரை மையப்படுத்திய கல்விமுறையில் இருந்து விலகி, எல்லோரும் எல்லோரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம் என்ற  மாதிரிக்கான நகர்வை இணையக் கல்விச் சமூகங்கள் செய்கின்றன.  இது "ரியூசன்" பண்பாட்டுக்கு சவாலாக அமையும்.  மாணவர் சமூகங்கள் அல்லது துறைசார் சமுகங்கள் (communities of practice) தாமாக இயல்பான கற்றலில் ஈடுபடுவதற்கான கட்டமைப்பை சமுகக் கற்றல் நுட்பங்கள் வழங்குகின்றன.


தமிழ்ச் சூழலில்

தமிழ்ச் சூழலில் தமிழில் கற்றல் கற்பித்தலுக்கு மேற் கூறிய இணைய நுட்பப் பயன்பாடுகள் பின்தங்கியே அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறன.  தமிழ்நாடு அரசு நூல்கள் (textbooksonline.tn.nic.in), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துறைசார் வலைவாசல்கள் (agritech.tnau.ac.in/ta/index.html), குழந்தைகள் நலம் (aboutkidshealth.ca/En/HealthAZ/Multilingual/TA/Pages), கணியம் (kaniyam.com), தொழில்நுட்பம் (thozhilnutpam.com), வரலாறு (varalaaru.com), ccat.sas.upenn.edu/plc/tamilweb போன்ற தமிழ் கற்க உதவும் தளங்கள் மற்றும் பிற பல வலைத்தளங்கள் தமிழில் கல்விசார் தகவல்களை வழங்குகின்றன.  தமிழ் இணையக் கல்விக்கழகம் (tamilvu.org), விக்கியூடகங்கள் (ta.wikipedia.org),  நூலகத் திட்டம் (noolaham.org), வேளாண் தகவல் ஊடகம் (agriinfomedia.com), இருகலப்பாசி திட்டம் (diatom.gubbilabs.in/root/tamil), அறுசுவை (arusuvai.com/tamil/) போன்ற தளங்கள் மெய்நிகர் கற்றல் சூழலின் சமூகக் கற்றலின் பல்வேறு கூறுகளைக் கொண்டுள்ளன.  ஆனால் தமிழில் பல நிலைகளில் விரிவான முழுமையான மெய்நிகர் சமூகக் கற்றச் சூழல்களின் தேவை உள்ளது.  குறிப்பாக பெளதீக வளங்களைக் குறைவாகக் கொண்ட இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு இது உள்ளது.

தமிழில் இணைய நுட்பங்களை எடுத்துச் செல்வதில் இலங்கையிலும் இந்தியாவிலும் இணையம் இன்னும் பெரும்பான்மையினரைச் சென்றடையாதது, தமிழில் கணினியைப் பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள், மரபுசார் கல்விமுறையில் இருந்து எழும் எதிர்ப்பு போன்றவை முதன்மைத் தடைகளாக உள்ளன.  ஆனால் இத் தடைகளை மீறி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது ஒரு அறிவுசார் சமூகத்தை கட்டமைப்பதற்கு அவசியம் ஆகும்.

இணையத் தகவல் மூலங்கள், மெய்நிகர் கற்றல் சூழல்கள், திறந்த பாடத்திட்டங்கள் உள்ளடக்கங்கள், பாரிய திறந்த இணைப்பு வகுப்புகள், சகா-சகா கல்வி, சமூகக் கற்றல் ஆகியவை தாமாகக் கற்றலையோ கற்பித்தலையோ செய்யாது.  ஆனால் கல்வியை எல்லோருக்கும் எங்கும் எப்பொழுதும் எடுத்துச்செல்வதற்கு இந்த இணைய நுட்பங்கள் ஒரு முதன்மைப் பங்கை வகிக்கும்.  மாணவர்களின் திறமைகளை, பல்வகை அறிவுகளை, கல்வி கற்கும் இயல்பை, விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொண்ட, அவரவருக்கு ஏற்ற ஒரு பூரண கல்விமுறையை அமைப்பதற்கு இத் தொழில்நுட்பங்கள் உதவும்.  குருகுலக் கல்விமுறையில் இருந்து கல்விக்கூட கல்விமுறைக்கு ஏற்பட்ட நகர்வைப் போன்ற ஒரு பெரிய, மக்கள்மயப்படுத்தும் ஒரு நகர்வாகவே இது அமைக்கிறது.  இந்த பாரிய மாற்றத்துக்குத் தமிழ்ச் சமூகம் தம்மை தயார்படுத்திக் கொள்வது காலத்தின் தேவை ஆகும்.



மேற்கோள்கள்

[1] Daphne Koller. (சூன் 26, 2012). பாரிய இணைப்புக் கல்வி (Massive online education). ரெக்ரோக்சு. எடுக்கப்பட்ட இடம்: http://blog.ted.com/2012/06/26/massive-online-education-daphne-koller-at-tedglobal2012/

[2] யோர்டன் வெயிசுமன். (ஏப்பிரல் 23, 2012). அண்மையில் பட்டம்பெற்ற 53% கல்லூரி மாணவர்களுக்கு வேலை இல்லை, தகுதி குறைந்த வேலையில் உள்ளார்கள்-எப்படி?. அற்ரலான்ரிக். எடுக்கப்பட்ட இடம்: http://www.theatlantic.com/business/archive/2012/04/53-of-recent-college-grads-are-jobless-or-underemployed-how/256237/

[3] சார்ள்சு புரோபர். (மே 3, 2012). விரிவுரை இல்லாத விரிவுரை அரங்குகள்: ஒரு மருத்துவக் கல்விக்கான முன்மொழிவு. மருத்துவத்துக்கான நியூ இங்கிலண்ட் ஆய்வேடு. எடுக்கப்பட்ட இடம்: http://www.um.es/c/document_library/get_file?uuid=c538d7e7-52a4-4f9a-93c7-92ac04c80b06&groupId=115466

[4] கிரெக்கொரி ஃபிரென்சுரெயின். (மே 9, 2012). வழியை விடு மிற், இசுரான்போர்ட் உண்மையான "கல்விப் புரட்சியைக்" கொண்டுள்ளது.  ரெக்கிறச். எடுக்கப்பட்ட இடம்: http://techcrunch.com/2012/05/09/move-over-harvard-and-mit-stanford-has-the-real-revolution-in-education/


உசாத்துணைகள்

ரெரி அன்டறசண். (2004). இணைப்புக் கல்வி நோக்கிய ஒரு கோட்பாடு. அதபசுகா பல்கலைக்கழகம். எடுக்கப்பட்ட இடம்: http://cde.athabascau.ca/online_book/contents.html

மைக்கல். (மார்ச் 2012). இணையக் கல்வி புரட்சி பட்டயக் கல்வியை கொல்லுமா?. ஃபாசுற்கம்பனி. எடுக்கப்பட்ட இடம்: http://www.fastcoexist.com/1679315/does-the-online-education-revolution-mean-the-death-of-the-diploma

September 11, 2012

இசைபட வாழ்தல், மனிதநேயமற்ற குழுமஅறம் | கைமண்


மனிதர்களிடையே காணப்படும் பகிர்ந்து வாழ்தல் - பறித்து வாழ்தல், இசைபட வாழ்தல் - பகைபட வாழ்தல் ஆகிய இரு சோடிப் பண்பாட்டுக் கூறுகளே இங்கு அறம் எனும் பதத்தால் குறிப்பிடப்படுகிறது. மனிதர்களுக்கிடையேயான உறவை சமூக குழுமங்களிற்குள் சிறைப்படுத்திக் காண்பது உருவ மனித நேயம் எனப்படுகிறது. சமூகக் குழுமங்களைக் கணக்கில் கொள்ளாமல் மனிதர்களிடையேயான உறவுகளைக் காண்பது அருவ மனித நேயம் எனப்படுகிறது. சமூக குழுமங்களெனும் பதம் எதைக் குறிக்கிறது என்பதை மேலும் விரிவாகப் பார்ப்போம். மனிதன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சமூக நிறுவனங்களில் அங்கத்துவம் வகிக்கிறான். இதனால்தான் அவன் சமூகப் பிராணி எனப்படுகிறான். ஏனைய பிராணிகளிலிருந்து மனிதன் வேறுபடுவது இந்த இடத்தில் தான். இந்த சமூக நிறுவனங்கள் அவனின் செயற்பாடுகளையும் சிந்தனைகளையும் வடிவமைக்கின்றன. அதே நேரம் அவன் தனித்துவமுள்ள தனிமனிதனாகவும் இருந்து வருகிறான். ஆனால்; இத்தனித்துவம் சமூக நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டதுமல்ல; அத்தனி நபர் சமூக நிறுவனங்களின் கொத்தடிமையும் அல்ல.

மனிதன் சுய விருப்பத்துடனும், சுய விருப்பின்றியும் உறுப்புரிமை வகிக்கும் சமூக நிறுவனங்கள் இரு வகைப்படும். ஒன்று அடிக்கட்டுமான சமூக நிறுவனங்கள், மற்றையது மேற்கட்டுமான சமூக நிறுவனங்கள். மேற்கட்டுமான சமூக நிறுவனங்களுக்கான எடுத்துக்காட்டுக்கள்; தொழிற்பிரிவுகளின் அடிப்படையிலான சங்கங்கள், நலன்புரிச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், கலை இலக்கிய மன்றங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள் அரசியல் கட்சிகள் - குழுக்கள், கோவில்கள் இத்தியாதிகள். இவை முறைசார் நிறுவனங்களாகும். இவற்றிலான உறுப்புரிமை பெரும்பாலும் முறைசார் தன்மை பெற்றவைகளேயாகும். சடங்குகள் மரபுகள் ஆகியன முறைசார் தன்மை அற்றவை. அதாவது முறைசாரா சமூக நிறுவனங்களாகும். இரத்த உறவுகள், குடும்பம் ஆகிய இரண்டும் சமூக நிறுவனங்களே. இதில் இரத்த உறவுகள் முறைசாரா நிறுவுனமாகும். குடும்பம் முறைசார்ந்த தன்மையும், முறைசாரா தன்மையும் ஒருங்கே பெற்ற சமூக நிறுவனமாகும். குடும்பம்தான் முதலில் தோன்றிய முறை சார் சமூக நிறுவனமாகும். தனி நபர்களின் நடவடிக்கைகளை வடிவமைப்பதில் குடும்பம் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

இனவழிக் கட்டுமானங்கள் , மொழிவழிக் கட்டுமானங்கள், மதக் கட்டுமானம், வர்க்கக் கட்டுமானம், தேசக் கட்டுமானம் ஆகியவையே அடிக்கட்டுமான சமூக நிறுவனங்களாகும். இவ் அடிக்கட்டுமான சமூக நிறுவனங்களையே சமூகக் குழுமங்கள் என அழைக்கிறோம். மேற்கட்டுமான சமூக நிறுவனங்களை சமூக ஸ்தாபனங்கள் என அழைப்போம். சமூக குழுமங்கள் தான் சமூக ஸ்தாபனங்களின் தோற்றுவாயாகும். அரசியல் கட்சிகளும் அரசியல் குழுக்களும் மேற்கட்டுமானத்துக் குரியவையே. இந்த சமூக ஸ்தாபனங்களினதும் அதன் உறுப்பினர்களினதும் அறம் கெட்டுள்ளது என்பதே இன்றைய விசனமாக உள்ளது. அதைப்பற்றி நிறையவே பேசப்பட வேண்டும் எனப் பலரும் எதிர்பார்க்கிறார்கள். இது பற்றி வெளிப்படையான பேச்சுகள் ஆரம்பித்து விட்டன. இந்நிலை ஏன் உருவானது? இதை எவ்விதம் மாற்றுவது? என்பது தொடர்பான கருத்துகளும் முன் வைக்கப்படுகின்றன. அது நல்லதே, அவசியமானதே. ஆனால் இக்கட்டுரை அரசியல் குழுக்களின் அறம் கெட்டிருப்பது பற்றிப் பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஏனெனில், பானையில் இருப்பது தான் அகப்பையில் வரும். சமூக குழுமங்களைப் பானையென்றும் அகப்பையில் உள்ளவற்றை சமூக ஸ்தாபனங்கள் என்றும் கொள்ளவும். அகப்பையில் உள்ளவை வெறுமனே வெளிப்பாடுகள் தான். வெளிப்பாடுகளையும் அவற்றின் விளைவுகளையும் அவதானிப்போம், பட்டியலிடுவோம். வெளிப்பாடுகளை நோவென்றும் விளைவுகளை நோவின் காரணத்தாலான உடல் உள அவஸ்தைகள் என்றும் கொள்வோம். நோவை உணராமல் செய்ய ஏதாவது செய்யத்தான் வேண்டும். ஆனால் அது ஏதாவது நோய்க்கான சிகிச்சையல்ல. வலி நிவாரணியுடன் நிறுத்தி விடக் கூடாது. நோய்க்கான சிகிச்சை அவசியம். அகப்பையில் உள்ளவற்றைப் பட்டியலிட்டது போதும். இனி மாற்றத்தைச் செய்ய பானைக்குள் செல்வோம். அப்போது தான் நோய் நாடலிலும், நோய் முதல் நாடலிலும் வெற்றி பெற முடியும். வாருங்கள் நோய் நாடியும், நோய் முதல் நாடியும் பானைக்குள் செல்வோம் என இக்கட்டுரை அழைக்கின்றது. நோய் முதல் பானைக்குள்தான் உள்ளது. சமூக குழுமங்களின் அறந்தான் பானைப் பண்டமாகும். அப்பண்டத்தை முதலில் புரிந்து கொள்வோம். அதன் இருத்தலை மாத்திரமல்ல அதன் இயங்கியலையும் புரிந்து கொள்வோம். அதாவது இலங்கையின் சமூகக் குழுமங்கள் ஒன்றுடன் ஒன்று கொண்டுள்ள உறவு நிலையின் இயங்கியவைப் புரிந்துக் கொள்வோம். அவ் உறவு நிலையின் இன்றைய இயங்கு நியதிகளைப் புரிந்து கொள்வோம்.

சமூக குழுமங்களை நாம் இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று பண்பாட்டு மரபு வழி வந்த சமூக குழுமங்கள்; மற்றையது உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் செயற்படும் சமூக குழுமங்கள். இரண்டாவது வர்க்க சமூக குழுமங்கள் என அழைக்கப்படும். தமிழ் பேசும் மக்கள் இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், யாழ்பாணத்தார், வன்னியர், பௌத்த சிங்களவர், கிறிஸ்துவ சிங்களவர், வன்னிச் சிங்களவர், மலை நாட்டுச் சிங்களவர், முஸ்லீம்கள், வடகிழக்கு முஸ்லிம்கள், தென் இலங்கை முஸ்லீம்கள், மட்டக்களப்பார், கொழும்புத் தமிழர், கொவியார்ஸ், வெள்ளாளர், கரவாஸ், கரையார்கள், பறங்கியர்கள், வேடர், பஞ்சமர், குடிமைசாதிகள் நொடியாஸ், முக்குரைவர், முக்கியர், கிறிஸ்தவர், இந்து, சைவர், புலர் பெயர் தமிழர்கள், தமிழர், சிங்களவர் ஆகிய இவ்வித சமூக குழுமங்கள் அனைத்தும் பண்பாட்டு மரபு வழிவந்த சமூக குழுமங்களேயாகும். இவை அனைத்துக்குமான பொதுப் பெயர் என்ன? வர்க்க சமரச சமூக குழுமங்கள் எனலாம். இக்குழுமங்களின் முன்னனி அமைப்புகளின் உறுப்பினர்களின் முதலில் வர்க்க சமரச கோட்பாட்டாளர்களாக ஆக்கப்படுகிறார்கள். இதுதான் இவர்களுக்கான ஞானஸ்தானமாகும். பகைமைப் போக்குக் கொண்ட குழுமங்களின் இருத்தலுக்கான காரணம் இவ்வர்க்க சமரசமே.

குழுமங்களுக்குள்ளான வர்க்க சமரசத்தின் அதிகரிப்பு குழுமங்களிடையேயான பகைமை உறவின் அதிகரிப்பாக அமைகின்றது. இக்குழுமங்களின் தலைவர்களும், செய்றபாட்டாளர்களும், தீவிர ஆதரவாளர்களும் வர்க்க நீக்கம் பற்றியும் வர்க்க உறவுகளுக்கு அப்பாற்பட்ட மனித உறவு பற்றியும் பேசிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் வர்க்க சமரசமும், குழும பாசமும் கலந்த இவர்களின் மனித நேயந்தான் வர்க்க சமரச குழும உருவ மனித நேயம் எனப்படுகிறது. அடுத்த பக்கத்தில் தொழிலாளி வர்க்கம், உதிரித் தொழிலாளி வர்க்கம், விவசாயக் கூலிகள், உழைக்கும் விவசாயிகள், சிறு உடமை உற்பத்தியாளர்கள், ஆடைகசங்கா சேவைத்துறைத் தொழிலாளர்கள், மூளை உழைப்பாளர்கள் பெரும் நில உடமையாளர்கள் அதிகாரத்துவ வாதிகள், முதலாளிகள், சிறுவர்த்தகர்கள், பெரும் வர்த்தகர்கள் போன்றோர் தனித் தனி சமூக குழுமங்களாகச் செயல்படுகிறார்கள். இச் சமூக குழுமங்களே வர்க்க சமூக குழுமங்களாகும். இவை தான் உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் அமைந்த சமூக குழுமங்கள். கடந்த 25 வருட கால இலங்கை வரலாற்றை எடுத்துக் கொண்டால் வர்க்க மேட்டுக்குடிச் சமூகக் குழுமம் மாத்திரமே (ஆளும் வர்க்கங்களின் கூட்டணி) உணர்வு பூர்வமான செயற்திறன் மிகு சக்தியாக இருந்து வருகின்றது. ஆனால், ஆளப்படும் வர்க்க குழுமங்களோ தமது வர்க்கக் கடமையை மறந்து வர்க்க சுபாவத்தை இழந்து ஒரு வர்க்கக் குழுமம் என்ற முறையில் நீண்ட துயிலில் ஆழ்ந்துள்ளன. சக்திமான்கள் இடையிடையே இவ்வித நீண்ட துயில் கொள்வது வரலாற்றின் தொடர்கதை போலும். கும்பகர்ணன் மீளாத் துயில் கொள்ளவில்லை, நீண்ட துயில் தான் கொண்டான். ஆனால் உழைக்கும் வர்க்க சமூக குழுமங்களின் உறப்பினர்கள் கூட்டம் கூட்டமாக வர்க்க சமரச சமூக குழுமங்களில் இணைவதே கடந்த 25 வருட கால இலங்கையின் வரலாறாக இருந்து வருகிறது. இவ்விதம் இணைப்பவர்களில் ஒரு பகுதியினர் வர்க்க மேல்நிலையாக்கம் பெற்று பணக்காரர்களாகிறார்கள். அத்துடன் வர்க்க சமரச சமூக குழுமங்களின் தலைமை அணியாக மாறுகிறார்கள். அவ்விதம் மாற விரும்பாதவர்களும் மாற முடியாதவர்களும் அதே குண்டாஞ்சட்டிக்குள் நின்று குதிரையோட்டிய வண்ணம் உள்ளார்கள்.

நலமடித்த நாய் தனது எஜமானர்களை விட்டுப் பிரிய முடியாதது போல் வர்க்க சமரசப் பார்வையுள்ள அவர்களால் வர்க்க சமரச சமூக குழுமங்களைவிட்டு விலகிக் கொள்ளவும் முடியாமல், அதை நெறிப்டுத்தவும் வழி தெரியாமல் ஒரு மையத்தை சுற்றிச் சுற்றி ஒடிக் கொண்டேயிருக்கிறார்கள். வர்க்க மேல் நிலை பெறும் முயற்சியில் தோற்றுப் போனவர்களும், மேல்நிலை பெற விரும்பாதவர்களும் மீண்டும் தமது வர்க்கத்துக்கு வந்து நீண்ட துயிலில் இருக்கும் தமது வர்க்க சமூக் குழுமத்தின் தூக்க நிலையை கலைப்பார்கள் என எதிர்பார்ப்போம். கும்பகர்ணன் போர்க்களம் புகுவான் என நம்புவோம். எப்படியோ வர்க்க சமூக குழுமங்களின் உறங்கு நிலை காரணத்தால் வர்க்க சமரச சமூக குழுமங்களே சமுதாயத்தின் இயங்கு சமூக குழுமங்களாகவும், இலங்கை சமூகத்தை இயக்கும் சமூக குழுமங்களாகவும் இருந்து வருகின்றன. இதனால் தான் இன்றைய அறத்தின் வாழ்நிலை பற்றிய காரண காரியத் தேடலை வர்க்கச் சமரச சமூக குழுமங்களின் செயற்பாடுகள், வர்க்க மேட்டுக்குடி சமூக குழுமங்களிலும் செயற்பாடுகள் ஆகிய இரு களங்களில் மாத்திரமே நடத்துகிறோம்.

வர்க்க சமரச சமூக குழுமங்களுக்கிடையேயான உறவுகள் என்பது என்ன? குஜராத்தில் வாழும் ஒரு இந்துப் பெண்ணும், இஸ்லாமிய இளைஞனும் காதலித்தால் அதை இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான உறவு நிலை சீரடைந்து விட்டது என அர்த்தப்படுத்தலாமா? 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ் மூதாட்டியை ஒரு சிங்கள் இளைஞன் இன வெறியர்களிடமிருந்து பாதுகாத்து பாதுகாப்பாக யாழ்ப்பாணம் கொண்டு வந்து சேர்த்த நிகழ்ச்சியை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது என அர்த்தப்படுத்தலாமா?
சிங்கள இராணுவத்திலிருந்து தமிழ் கிராமத்துக்கு தப்பியோடி வந்த (அது தமிழ் கிராமம் என்று தெரிந்தும்) ஒரு சிங்கள சிப்பாயை அக்கிராம மக்கள் புலிகளுக்கும் தெரியாமல், சிறிலங்கா அரசுக்கும் தெரியாமல் அச்சிப்பாயின் கிராமத்துக்கே தெரியாமல் அச்சிப்பாயின் கிராமத்துக்கே கொண்டு போய் சேர்ப்பித்ததை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது என்று அர்த்தப்படுத்தலாமா? அல்லது அக்கிராம மக்கள் சிங்களவனிடம் சரணடைந்துவிட்டார்கள் என அர்த்தப்படுத்தலாமா?
இஸ்லாமியர்களுக்கும் புலிகளுக்கும் இடையே ஒரு முறுகல் நிலை உருவாகத் தொடங்கிய பிறகும் வன்னிப் பகுதி நாட்டார் வளமைக் கோவில்களை (அநேகமாக இவை மலையக மக்களின் கோவில்கள்) சைவ ஆகமக் கோவில்களாக மாற்றும் முயற்சி துரிதமடைந்து வருகிறது என்று தெரிந்த பிறகும் ஒரு மலையக முஸ்லீம் இளைஞன் தனது கிராமத்து முத்துமாரியம்மன் கோவில் தலைவராகப் பணிபுரிந்து அக்கோவிலை மலையக முறைப்படி சிறப்பாக நடத்தி வந்ததை முஸ்லீம்களுக்கும் சைவ ஆகமவாதிகளுக்கும் இடையில் ஒரு நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தப்படுத்தலாமா? சைவ ஆகம தலைமையிடமான புனித நிலமான வைத்தீஸ்வர கல்லூரிக்கும் அதன் மிக அருகாமையில் இருந்த சிவன் கோவிலுக்கும் நிலம் போதாமை என்று பிரச்சனை இருந்தது. இதனால் ஆறுமுக நாவலரின் பேரன் வழியான ஒருவரின் தலைமையில்தான் வண்ணார் பண்ணை முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்பது இனியும் ஒரு இரகசியமா என்ன?

யாழ்பாணத்து தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் ஒரு உச்சநிலையை அடைந்து பின்னர் தணிந்து வந்த வேளையில் அகமண முறையைப் பாதுகாப்பதற்காக பனையில் இருக்கும் போதே பனையைத் தறித்து வீழ்த்திக் கொலை செய்யப்பட்டார் ஒரு சீவல் தொழிலாளி. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால் கொதிப்படைந்திருந்த பஞ்சமர் இளைஞர்கள் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் உயர்சாதி இளம் பெண்கள் சிலர் இவர்கள் கைகளில் தனியாக மாட்டக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டது. இதை அவதானித்த வேறு சில பஞ்சம இளைஞர்கள் அப்பெண்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். இந்நிகழ்வை பஞ்சம இளைஞர்களில் ஒரு பகுதியினர் சமரசப் பாதையை மேற்கொண்டு விட்டார்கள் என்று அர்த்தப்படுத்தலாமா? இவை அரசியல் விளம்பரத்துக்காக நடந்த சம்பவங்களல்ல. அரசியல் உள்நோக்கம் எதுவும் இவற்றிற்கு இருக்கவில்லை. பலன் எதையும் எதிர்பார்க்காமல் நடந்து வரும் பல்லாயிரம் சம்பவங்களில் இவை மிகச் சிலவாகும். இவ்வித சம்பவங்களில் உயிர் நீத்தவர்கள் கூட உள்ளார்கள். பிறர் மேலான அன்பினதும் அருவ மனித நேயத்தினதும் விளைவுகளே இந்நிகழ்வுகளாகும். இவற்றை முன் சொன்ன முறையில் அர்த்தப்படுத்தலாமா? அவர்களின் அருவ மனித நேயப் பார்வையைக் கொச்சைப்படுத்தலாமா? இல்லை இல்லை யென்பதே இக் கேள்விகளுக்கான பதிலாகும். அவ்விதமானால் இவற்றை எவ்விதம் அர்த்தப்படுத்துவது? இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வர்க்க சமரச சமூகக் குழும உரும மனித நேயிகளாக அல்லாமல் அருவ மனித நேயிகளாக இருந்துள்ளார்கள் என்றே அர்த்தமாகும். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இடதுசாரிகளாக இருந்திருந்தால் வர்க்க சமரச சமூக-குழும மனிதநேயிகளாக இல்லாமல் வர்க்க சமரச சமூக-குழும மனிதநேயிகளாக இருந்துள்ளார்கள்.

இன்னோர் வகையான எடுத்துக்காட்டை அவதானிப்போம். இளம் பெண் வைத்தியர் ஒருவர் தன் மீது பாலியல் வன்முறை செலுத்த முற்பட்ட ஒரு சிங்கள ஆணை அவ்விடத்தில் வைத்தே அவமானப்படுத்த முற்பட்டார். தான் அவமதிக்கப்படுதலைத் தவிர்ப்பதற்காக அவ் ஆண், “தமிழிச்சி சிங்களவர் மீது பாரபட்ச் காட்ட முற்படுகிறாள்” என்றோர் புரளியைக் கிளப்பிவிடுகிறான். சிங்களவர் அதை உண்மையென நம்புகிறார்கள். அம் மருத்துவர் அவ் ஊரைவிட்டே துரத்தப்பட வேண்டுமென்பது மக்கள் முடிவாகிறது. சிங்கள அதிகாரியும் அம்முடிவை ஏற்று அவளை இடமாற்றம் செய்கிறார். இச்சம்பவத்தை வைத்துக் கொண்டு சிங்கள தமிழ் பகைமை உறவை நிரந்தரமானது என்றும் சர்வ வியாபாகமானது என்றும் அர்த்தப்படுத்தலாமா? மனித நேயமற்ற ஒரு சிங்களவன் தனது இச்சைக்கு இணங்க மறுத்தவொரு பெண்ணை பழிவாங்கிக் கொண்டான். அவள் ஒரு றொடிய சிங்களம் பெண்ணாகவும் அவன் ஒரு கொவிகம சாதியனாகவும் இருந்திருந்தால் அவளைத் துரத்தியடிக்க அவன் சாதிய மேலாண்மை உணர்வை பயன்படுத்தியிருப்பான். கிறிஸ்துவப் பெண்ணாகவும் சிங்கள பௌத்தனாகவும் இருந்திருந்தால் பௌத்த பேரகங்காரவாதம் பயன்பட்டிருக்கும். சிங்களப் பெண்ணாகவும் தமிழ் ஆணாகவும் இருந்திருந்தால் தமிழ் உணர்வு பயன்படுத்தப்பட்டிருக்கும். இங்குள்ள விவகாரம் அவள் ஒரு பெண், அவன் அருவ மனித நேயமற்ற ஒரு காமுகன் என்பது தான். இங்கு வேறு எந்த விவகாரமும் இல்லை. ஒரு அருவ மனித நேயியின் கண்களுக்கு இந்த விவகாரம் மட்டும் தான் தெரியும். வேறு எதுவுமே தெரியாது. ஆனால் ஒரு வர்க்க சமரச உருவ மனித நேயியின் கண்களுக்கு அவன் ஒரு காமுகன் என்பது மட்டும் தெரியாது. வேறென்னவோ எல்லாம் தெரியும். வர்க்க உருவ மனித நேயி கூட இந்த இடத்தில் தவறு இழைக்கக் கூடும். இவள் ஒரு உயர் அதிகாரியாக இருந்து அவன் ஒரு கீழ்நிலை ஊழியனாக இருந்தால் இவ்விவகாரம் கீழ்நிலை ஊழியன் பழிவாங்கப்படுகிறான் எனும் விவகாரமாயிருக்கும்.

முன் கூறிய எடுத்துக்காட்டுகளெல்லாம் தனிநபர்கள் சம்பந்தப்பட்ட தனித்தனிச் சம்பவங்கள். மரங்களைக் கண்டுக் கொள்ளாமல் மரங்களின் கூட்டுத் தொகுப்பான காட்டை மட்டுமே பார்க்கும் கண்ணோட்டம் உள்ளவர்கள் தனித்தனிச் சம்பவங்களை நிராகரிக்கக் கூடும். அவர்களுக்குப் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. காடு (முழுமை) சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை எடுத்துக்காட்டாக கொண்டு ஆராய்வோம். 1971 இல் பல ஆயிரம் சிங்கள இளைஞர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். மகாவலிகங்கையிலும், மாணிக்க கங்கையிலும், களனி கங்கையிலும் இளைஞர்களின் பிரேதங்கள் தூக்கி எறியப்பட்டன. குறை உயிரும் குற்றுயிருமாக பலர் தெருக்களில் டயர் போட்டுக் கொளுத்தப்பட்டனர். கொல்வதிலும், கொல்லப்பட்டவர்களின் விபரங்களைப் பதிவதிலும் அவர்களைப் பற்றிய விபரங்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த விதிமுறைகளும் பின் பற்றப்படவில்லை. 1989, 90 களிலும் இதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்தது. கடந்த ஐந்து வருடங்களாக சிங்கள ஊடகவியலாளர்கள் மற்றும் பிற சமூக ஆர்வலர்கள் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், நாட்டை விட்டுஓட நிர்பந்திக்கப் படுகிறார்கள். வெள்ளைவானின் தொல்லை தொடர் தொல்லையாக அதிகரித்து வருகின்றது. வர்க்க சமரச தமிழ் குழுமத்தினருக்கு இதுவெல்லாம் கண்களுக்குத் தெரிவதில்லை. சிறிலங்கா அரசு தம்முடன் மாத்திரம்தான் முரண்படுகிறது என்று கருதிக் கொண்டுள்ளார்கள். தமிழர்களையும் இவ்விதமே நம்ப வைக்க அதிக சிரமம் எடுத்து வருகிறார்கள். அதே போன்று வர்க்க சமரச சிங்களக் குழுமத்தினரின் ஒரு பகுதியினர் தமது அரசு தமக்கு எதிராக நடந்து கொள்வதைக் கண்டுக் கொள்ளவேயில்லை. அல்லது அதைப் பார தூரமாகக் கருதுவதில்லை. இன்னோர் பகுதியினர் சிறிலங்கா அரசின் கரங்கள் தம்மையும் அடக்குகிறது என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அவ் அரசு தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கும் வன்முறையை கண்டு கொள்வதில்லை. அது அவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. அதே போன்று தமிழீழ அரசு தமிழ் பேசும் மக்களுக்கும் பிற தமிழ் அரசியல் குழுமங்களுக்கும் எதிராக எடுத்து வந்த அடக்குமுறைகளைத் தமிழர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். தமிழீழ அரசு சிறிலங்கா அரசுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளிலேயே தமது கவனம் முழுமையையும் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

வர்கக சமரச குழுமங்களை தனித்தனி அலகுகளாக எடுத்துக் கொண்டால் அவற்றில் பல தத்தமது மக்களிடையே பகை வாழ்தல் எனும் அறநெறியைக் கடைப்பிடிக்காதனவாகவே உள்ளன. ஆனால் சிங்களக் குழுமத்துக்கும் பிற இன, மத வழிக் குழுமங்களும் இடையேயான உறவு நிலையோ நல்லறமாக இல்லை. பதுக்கி அல்லது பறித்து வாழ்தலும், பகைபட வாழ்தலுமே பிரதான உறவு நிலையாக உள்ளது. ஆனால், பகைமையுள்ள குழுமங்களின் உறுப்பினர்களை தனித்தனி அலகுகளாக எடுத்துக் கொண்டால் வௌ;வேறு குழும தனிநபர்களுக்கிடையேயான உறவு நிலையில் பகிர்தலும் இசைபடவாழலுமான அறம் காணப்படவே செய்கிறது. அதாவது தனி நபர்களுக்கிடையேயான உறவில் நல்லறம் காணப்படவே செய்கின்றது. இந்தத் தனிநபர்கள் எண்ணிக்கையில் குறைந்த மிகச் சிறுபான்மையினரல்ல எண்ணிக்கையில் குறைந்தாலும் கணிசமாக தொகையினராகும். யாழ் மாவட்டம் தவிர இலங்கையின் அனைத்து மாவட்டங்களும் பல் இனக் கலப்பு மாவட்டங்களே என்பது கவனிக்கப்பட வேண்டிய விசயமாகும். வெவ்வேறு சமூக குழும உறுப்பினர்களுக்கிடையேயான உறவு நிலையும், குழுமங்களுக்கிடையேயான உறவு நிலையும், இரு வெவ்வேறு தளங்களில் இயங்கும் தனித்தன்மையுள்ள இரு வெவ்வேறு சமூக நிகழ்வுப் போக்குகளாகும். இவை இரண்டுக்கும் தனித்தனியான பொறிமுறை உண்டு. வெவ்வேறு சமூக குழுமங்களின் உறுப்பினர்களுக்கிடையேயான உறவு நிலையை இயல்பு நிலை சமூக நிகழ்வுப் போக்கு எனக் கொள்வோம். குழுமங்களுக்கிடையேயான உறவு நிலையை அரசியல் மைய சமூக நிகழ்வுப் போக்கு எனக் கொள்வோம்.

இயல்பு நிலை சமூக நிகழ்வுப் போக்கு மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகள், சடங்குகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. பகிர்ந்து வாழ்தலும் இசைபட வாழ்தலுமே இங்கு பிரதான போக்காக இருக்கும். வேற்றுமையில் ஒற்றுமை காணல், பகையை புறந்தள்ளி நல்லுறவை வளர்த்தல் ஆகியனவே இவர்களின் மந்திரமாக இருக்கும். பண்பாட்டுக் கலப்புகள் மிக எளிதாக நடைபெறும். பகிர்ந்து வாழல் , இசைபட வாழ்தல் அறம் இங்கு உயிரோட்டமானதாகக் செயற்படும். அதே நேரம் பறித்து பதுக்கி வாழும் பண்பாடும், பகைபட வாழும் அறமும், முற்றாக அற்றுப் போயிருக்கும் என்று கூற முடியாது. நல்லறத்துடன் கூடவே அந்நிகழ்வுப் போக்கும் காணப்படும். ஆனால் இத் தீயறத்துக்கு எதிரான போராட்டமும் அந்தந்த மக்களிடையே நடந்து கொண்டேயிருக்கும். இயல்பான உறவு நிலையைத் தீர்மானிப்பது அருவ மனித நேயம், வர்க்க உருவ மனிதநேயம், வர்க்க சமரச உருவ மனித நேயம் ஆகியனவேயாகும். சாதாரன வேளைகளில் வர்க்க சமரச உருவ மனித நேயம் அடித்தளத்தில் மறைந்திருக்கும். அது பிரதான போக்காக இருக்காது. ஆனால் இவ் எதிர்மறை மனித நேயம் மேலாண்மை பெறும் வேளைகளில் வௌ;வேறு குழும உறுப்பினர்களிடையேயான உறவு கெட்டுப் போகின்றது. பறித்து - பதுக்கி வாழலும், பகைபட வாழலும் எனும் வாழ்க்கை நெறி அறமாகின்றது. இவ்வித மேலோங்கல் அடிக்கடி ஏற்படும் ஒரு நிகழ்வாக இருந்தாலும் இத வளமையான நிகழ்வல்ல. மக்கள் வர்க்க சமரச சமூக குழுமங்களின் மேட்டுக் குடிகளின் அரசியல் பண்பாட்டு செல்வாக்கிற்கு உள்ளாகும் போது தான் இவ்வித மேலோங்கல்கள் நடைபெறுகின்றன. மக்களுக்கும் மேட்டுக்குடிக்கும் இடையேயான அரசியல் தூரம் அதிகரிக்க அதிகரிக்க மக்களின் நல்லறமும் அதிகரிக்கும். அரசியல் தூரம் குறைய குறைய குறிப்பிட்ட தூரம் வரை நல்லறமும் குறையும். அதன் பின் நல்லறம் தீயறமாக மாறத் தொடங்கிவிடும்.

குழுமங்களுக்கிடையேயான உறவு நிலையென்பது என்ன? அதை எவ்விதம் வரையறுப்பது. இவ் உறவு ஐந்து வகைப்படும். எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவோம் . S,T எனும் இரு வர்க்க சமரச சமூகக் குழுமங்களை எடுத்துக் கொள்வோம்.

1. S இன் தலைமைக்கும் (மேட்டுக்குடிக்கும்) T இன் தலைமைக்கும் இடையேயான உறவு.
2. S இன் தலைமைக்கும் T யின் மக்களுக்கும் இடையேயான உறவு.
3. S இன் தலைமைக்கும் S இன் மக்களுக்கும் இடையேயான உறவு.
4. T இன் தலைமைக்கும் S இன் மக்களுக்கும் இடையேயான உறவு.
5. T இன் தலைமைக்கும் T இன் மக்களுக்கும் இடையேயான உறவு.

இந்த ஐந்து உறவுகளின் தொகுப்புத்தான் S.T ஆகிய இரு வர்க்கச் சமரச சமூகக் குழுமங்களுக்கிடையேயான உறவாக அமைகிறது. இரு சமூகக் குழுமங்களினதும் மேட்டுக் குடிகளுக்கு இடையேயான தொடர்பாகவே இது காட்சியளிக்கிறது. ஆனால் உண்மையில் இது இந்த ஐந்து உறவுகளின் தொகுப்பேயாகும். புலிகளின் இராணவ அணி தோற்கடிக்கப்பட்டதன் பின்னேயான இன்றைய சூழலில் இவ் ஐந்து வகை உறவுகளும் எவ்விதம் செயல்படுகிறது என்பதை நோக்குவோம்.

அ) மஹிந்த அரசுக்கும் புலிகளுக்கும் இடையேயான உறவு நிலை.
புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள். தமிழரின் தலைமை அரசியல் அணியாக திகழ்ந்த புலிகளின் இடம் இன்னமும் எந்த அரசியல் தலைமையாலும் ஈடு செய்யப்படவில்லை. இதனால் மஹிந்த அரசுக்கு உள்ளுர் எதிராளியாரும் இல்லை.

ஆ) மஹிந்த அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான உறவு
இவ்வுறவு ஆளும் அணியின் நலனுக்கு ஏற்றபடி மிக நன்றாகவே அமைப்பு மயப்படுத்தப்பட்டு வருகின்றது. கீழ்படியும், பணிவும், சமரசமும் மிக்க அரசியல் தலைவர்களும் அரசியல் குழுக்களும் தாரளமாகவே உள்ளன. இவ் உறவு வளர்ந்தும் வருகிறது. இது இசைபட வாழ்தலல்ல, அடிமைப்பட வாழ்வதாகும்.

இ) மஹிந்த அரசுக்கும ; சிங்கள மக்களுக்கும் இடையேயான உறவு.
யுத்தத்தின் முன்னர் இது மிக நெருக்கமானதாக இருந்தது. யுத்தத்தின் பின்னர் இந்நெருக்கம் மேலும் அதிகரித்தது. ஆனால் தற்போது இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இராணுவ வல்லமையைப் பிறயோகிக்கும் அவசியம் தோன்றியுள்ளது. இவ் இடைவெளியை அதிகரிப்பதற்கான காரணிகள் இடைவெளியைக் குறைப்பதற்கான காரணிகளை விட கெட்டியானதாகும் வளர்திசை நோக்கியதாகவும் உள்ளன.

ஈ) புலிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையேயான உறவு
தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையேயான தொடர்பைப்பற்றி எந்தத் தமிழ் தேசியவாதியும் புரிந்துக் கொள்ளவில்லை. அவர்களின் கண்களுக்கு சிங்களவர்கள் எல்லாமே பகைவர்கள்தான். தமது அமைப்பின் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கக்கூடிய சிங்கள தனிநபர்களைத் தேடி வருகிறார்கள். கண்டுபிடித்து விட்டால் அவர்களைத் தமது குழுவாதத்திற்குள் அமுக்கி சிங்கள மக்களிடம் இருந்து பிரித்துவிடுகிறார்கள். புலிகள் உட்பட அனைத்துத் தேசியவாதிகளும் இதையே காலங் காலமாக செய்து வருகிறார்கள்.

உ) புலிகளுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையேயான தொடர்பு
இது பூஜ்ஜியம் என்று சொல்லக் கூடியளவிற்கே இருந்தது என்பது யாவரும் அறிந்ததே. தமிழரின் தலைமைக்கு வரக்கூடியவர்கள் என எதிர்பார்க்கப்படும் மாற்றாளர்கள் எவரிடமும் தமிழ் மக்களுடனான உறவை வளர்ப்பதற்கான எந்த வேலைத்திட்டமும் இல்லை.

இந்த ஐந்து உறவு நிலைகளையும் தொகுத்துப் பார்க்கும் போது சிங்களம் அரசியல்ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் தமிழியத்தை விட பலமானதாகவே உள்ளது. ஆகவே சிங்களம் தமிழியம் உறவு எஜமான ஊழியன் உறவாகவே இன்று காணப்படுகிறது. சரணடைவும், தனிமைப்பாடும் விரக்தியுமே தமிழியத்தின் இன்றைய நிலையாக உள்ளது. இராணுவ ரீதியான வல்லமை ஒன்று தான் தமிழியத்தக்கு இருந்ததே தவிர புலிகளின் இராணுவத் தோல்விக்குப் முன்பும் பின்பும் தமிழியம் அரசியல்ரீதியாகப் பலவீனப்பட்டே இருந்துவருகிறது. தமிழியம் பலவீனப்பட்டுவிட்டது என்பதை சிங்களம் புரிந்து கொண்டுள்ளது. சுயமாக தம்மால் இனி எதுவும் செய்ய முடியாது என்பதை தமிழியம் புரிந்த கொண்டுள்ளது. ஆயினும், தமக்கிடையேயான பகைபட வாழும் போக்கை ஊக்குவிப்பதில் சிங்களத்தினதும்; தமிழியத்தியத்தினதும் வர்க்க மேட்டுக்குடியினர் மிக மும்முரமாகவே செயற்பட்டு வருகிறார்கள். அவர்களது வர்க்க மேல்நிலையாக்கத்திற்கு இவ்வித பகைமையுறவு அவசியப்படுகிறது. ஆகவே மஹிந்த அரசு இன்னோர் இனப் பேரழிவை ஏற்படுத்தாது என்றோ, இன்னோர் இனப் பேரழிவுக்கு தமிழியம் மீண்டும் காரணமாக இருக்கமாட்டாது என்றோ கூற முடியாது.

தமிழியம் அடிமை நிலையில் இருந்த மீள்வது எப்படி என்பது ஒரு அரசியல் பிரச்சினை. அவ் அரசியல் விவாதம் இக்கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. இங்கு சொல்ல வருவது பெரும்பான்மையான தமிழ் குழுக்களிடமும் அரசியல் உணர்வுள்ளவர்களாக கருதப்படுபவர்களிடமும் காணப்படும் குப்பைத்தனமாக அரசியல் உறவு முறைகளுக்கான காரணம் அவர்களல்ல. அவர்களின் பாசறைகளேயாகும். தலைமை வெற்றிடத்தை நிரப்புவதற்கான அரசியல் வேலைத் திட்டம் ஒன்றின் கூட்டுருவாக்கமும் அவ் வேலைத் திட்டத்தை நிறைவெற்றுவதற்கான முயற்சிகளுந்தான் குப்பைத்தனத்தைக் களைய உதவும். குப்பையில் விளைந்த மாணிக்கங்களை பட்டை தீட்டி மகுடம் சேர்க்க வழிவகுக்கும். அரசியல் அறிவியலார்கள் அரசியல் நிபுணத்துவம் மிக்கவர்கள் இதற்கு விடை காணட்டும். ஆனால் வெவ்வேறு வர்க்க சமரச சமூக குழுமங்களின் மக்களிடையே பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்துவது என்பது ஒரு அரசியல் வேலைத் திட்டமல்ல. அது பண்பாட்டுக் கட்டுமானத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்களை உள்ளடக்கியதாகும். அதுதான் வெளிவர இருக்கின்ற இந்நூலின் விரிவான விவாதத்திற்குரிய பொருளாகும். ஆகவே அதைத் தொடர்வோம்.

[[ கைமண் அவர்களால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நுலின் ஒரு சிறு பகுதி, தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகத்தினால் லண்டனில் மாதாந்தம் நடாத்தப்பெறும் உரையாடல் அரங்கில் தோழர் எஸ்.சிறீதரன் அவர்களால் வாசிக்கப்பட்டது. சமூக அடிக்கட்டுமானம் தொடர்பாக, வழமையான பாணியில் இருந்து ஆசிரியர் விலகிச் செல்வதையும் - செழுமைப்படுத்துவதையும் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. லக்லாவ் , கிராம்சியை மீள்வாசிப்புச் செய்யும் போது கூறிய விடயங்களுக்குச் சமாந்தரமான கருத்தமைவுடன் இக்கட்டுரை செல்வதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. - சசீவன்  ]]

May 20, 2012

அரசற்ற தேசங்களினது மரபுசார் சட்டங்கள் : தேசவழமைச் சட்டத்தை திருத்துவது யார் என்பதனை முன்வைத்து சில ஆரம்பக் குறிப்புக்கள்




குமாரவடிவேல் குருபரன் [1]
சட்ட விரிவுரையாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.







# அறிமுகம்


தேசவழமைச் சட்டத்தைத் திருத்தும் நோக்கில் கடந்த அரசாங்கத்தில் நீதித்துறை அமைச்சராக இருந்த திரு. மிலிந்த மொறொகொடவால் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. 2010 பொதுத் தேர்தல்களுடன் திரு. மொறொகொடவின் அமைச்சு கைமாற இக்குழுவின் செயற்பாடுகளும் முடிவுக்கு வந்தன. அண்மையில் மீள்சக்தி, வலு அமைச்சரும் ஜாதிக ஹெல உருமயவின் தலைவர்களில் ஒருவருமாகிய திரு. பாட்டாலி சம்பிக்க ரணவக்க தேசவழமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்திருந்தார். இதே கருத்தை எல்லாவல மேதானந்த தேரரும் அண்மையில் தெரிவித்திருந்தார் [2] . காலத்திற்குக் காலம் தீவிர சிங்கள இனவாதிகளால் இத்தகைய கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மே 2009 இற்குப் பின்னராக நிலவுகின்ற தற்கால அரசியல் சூழ்நிலையில் - ஒரு தேசியக் கோட்பாட்டை (one nation theory) உறுதியாக வலியுறுத்தும் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் அதியுச்சமான வடிவமாக இன்றைய அரசாங்கம் இருக்கின்ற சூழ்நிலையில் - மீளவும் தேசவழமைச் சட்டம் மாற்றியமைக்கப்படுவது (அல்லது இல்லாதொழிக்கப்படுவது) தொடர்பில பேசப்படுவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவது இயல்பானதே. சிங்கள இனவாதிகள் தேசவழமையை இல்லாதொழிக்க வேண்டும் எனக் கூறுவது சிங்கள மேலாண்மைக் கருத்தியலிலிருந்து ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது தமிழர் தவிர்ந்த ஏனைய இனத்தவர்களால் யாழ்ப்பாணத்தில் காணி வாங்க முடியாது என்ற பிழையான விளங்கிக் கொள்ளலின் அடிப்படையில் சொல்லப்படுவது [3]. இதுவன்றி தேசவழமைச் சட்டத்தை சீர்திருத்துவதற்கு அல்லது இற்றைப்படுத்துவதற்கான வேறு நியாயமான தேவை இருக்கலாம். அப்படியான சந்தர்ப்பங்களை மட்டும் கருத்தில் கொள்ளும் போது கூட யார் தேசவழமையைத் திருத்தலாம் என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய, சரியான விடையைக் காண வேண்டிய அவசியம் உண்டு.  இக்கட்டுரையின் நோக்கமானது தேசவழமையைத் திருத்துவது தொடர்பிலான  செயன்முறை (process) தொடர்பிலான மேற்கண்ட கேள்வியின்  பல்வேறு பரிமாணங்களைப் பற்றி அலசுவதும் ஆரம்ப கட்ட பதில் ஒன்றைப் பதிவு செய்தலும் ஆகும்.



# (அரசற்ற) தேசங்களும் மரபுரிமைச் சட்டங்களும்


தேசமாகத் தம்மைக் கருதும் ஒரு மக்கள் கூட்டத்தினர் சுயாட்சியைக் கோரி நிற்பவர்கள். தம்மைச் சுயாட்சிக்கு உரித்துடையவர்களாக்கும் சுயநிர்ணயத்திற்கான உரிமையையுடையவர்கள் என்ற கூட்டுச் சிந்தனையைக் கொண்டவர்கள். தம்மைத் தேசமாகக் கருதினும் தமக்கென அரசொன்றைக் கொண்டிராதவர்களை அரசற்ற தேசங்கள் (Stateless Nations) என சில புலமையாளர்கள் வர்ணிப்பர் [4]. (தேசமாக தம்மைத் தக்க வைப்பதற்கு கட்டாயமாகத் தனியரசாக இருக்க வேண்டியதில்லை) தம்மைத் தேசமாகக் கருதும் மக்கள் தம்மை அடையாளப்படுத்தும் விடயங்களில் ஒன்றாகத் தம்மால் தமக்கு தமது முன்னோரால் வழங்கப்பட்ட சட்டப்பாரம்பரியத்தைக் கருதும் தன்மையானவர்கள் [5]. ஸ்கொட்லான்ட் தேசத்தைச் சேர்ந்த ஸ்கொட்டிய (Scottish) மக்கள் ஸ்கொட்ஸ் சட்டத்தை (Scots law) பாதுகாப்பதில் வெகு தீவிரமானவர்கள். அதே போன்று கனடாவில் கியுபெக (Quebec) மாநிலத்தைச் சேர்ந்த கியுபெக்கோஸ் தம்மை ஆங்கிலேயரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் சிவில் சட்டத்தைப் பாதுகாப்பதில் தீவிரம் காட்டுவார்கள். இந்தப் பார்வையிலேயே தமிழர்களும் தேசவழமைச் சட்டம் தொடர்பில் சிந்திக்கின்றனர் என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தேசவழமைச் சட்டமானது ‘இலங்கை அரசு’[6] என்றவொன்று கருத்தாக்கம் பெறுவதற்கு முன்னர் இருந்தே நிலவுகையிலிருந்த ஒன்று. வேறொரு முறையில் கூறுவதானால் தேசவழமை, அரசுக்கு முந்திய சட்டம் (Pre - State Law). பொதுவாகச் சட்டம் என்பது அரசிடமிருந்து ஊற்றுப் பெறுவதாகக் கருதப்படுகின்றது (state centric conception of the law). நவீன அரசக் கட்டமைப்புக்களின் அதிகாரப் படிநிலையாக்கத்தின் அதியுச்சியில் இருக்கும் அரசாங்கமும் அது சார்ந்த நிறுவனங்களுமே சட்டமாக்கும் தத்துவமுடையதாகப் பொதுப் புத்தியில் உறைந்து போயுள்ளது. சட்டம் என்பது மக்களிடமிருந்து அந்நியப்பட்டு இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகவும் நாம் இதனை அவதானிக்கலாம். நிற்க. தேசவழமைச் சட்டமானது அரசுக்கு முந்தியதெனின் அதனைக் காலத்திற்கு ஏற்ப ‘திருத்தும்’ அதிகாரம் / முறை யாது என்ற கேள்வி எழுகின்றது. ஒரு ‘முறையைப்’ பின்பற்றி தேசவழமைச் சட்டம் உருப்பெறவில்லை. வழமைகளின் தொகுப்பாகவே தேசவழமை வருகின்றது. அவ்வாறெனில் வழமைகளில் ஏற்படும் மாற்றங்களிற்கேற்ப அச் சட்டத்தை எவ்வாறு இற்றைப்படுத்தலாம்? வழக்காறுகள் எழுத்தில் தொகுக்கப்பட்டதன் பின்னரேயே இந்தப் பிரச்சினை எழுகின்றது. தேசவழமைக்கும் இது பொருந்தும்.

இன்று நாம் தேசவழமைச் சட்டம் எனக் கருதுவது 1707 ஆம் ஆண்டு அப்போதைய ஒல்லாந்த ஆளுநர் ஜோன் சைமன்ஸ் என்பவரது உத்தரவின் பெயரில் கிளாஸ் ஐசாக்ஸ் (Class Issakz) என்பவரால் தொகுக்கப்பட்டது [7]. அதேவருடம் ஜான் பைரஸ் (Jan Piras) என்பவர் இந்தத் தேசவழமைக் கோவையினைத் தமிழில் மொழிபெயர்த்தார். கிளாஸ் ஐசாக்ஸ் தன்னால் தொகுக்கப்பட்ட தேசவழமைக் கோவையைப் பரிசீலனை செய்வதற்காக அப்போது யாழ்ப்பாணத்தில் வாழந்த / சேர்ந்த கல்வி அறிவு உள்ள முதலியார்கள் பன்னிருவரிடம் அதனைக் கொடுத்திருந்தார். இந்தப் பன்னிரெண்டு முதலியர்களும் இக்கோவையைப் வாசித்துப் பார்த்ததன் பின்னர் எந்தத் திருத்தத்தையும் முன்மொழியவில்லை. இந்த முதலியர்கள் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பைச் சரிவரச் செய்யவில்லை என்றே தோன்றுகின்றது. ஐசாக்ஸ் இன் வேண்டுகோளிற்குப் பதிலளிக்கும் விதத்தில் அப்பன்னிருவரும் கூட்டாக எழுதிய கடிதத்தில், ‘தவறிழைத்ததன் காரணமாக ஆங்கிலேயரது சிறைகளில் இருந்த தமது அடிமைகளைப் பேணும் பொருட்டு ஆங்கிலேயரால் தம்மிடம் இருந்து அறவிடப்படுகின்ற பணம் மிதமிஞ்சியது’, என்ற விண்ணப்பத்தைப் பற்றியதாகவே இருந்தது. தொகுக்கப்பட்ட தேசவழமைக் கோவையைப் பற்றிக் காத்திரமாக இவர்கள் ஒன்றையும் சொல்லி இருக்கவில்லை. ஆகவே ஐசாக்ஸ் தொகுத்த வடிவத்திலேயே கோவை பாவனைக்கு வந்தது. பின்னர் ஆங்கிலேயரது காலத்தில், 1799 இல் வெளியிடப்பட்ட பிரகடனம் ஒன்றின் மூலம் தமது (ஆங்கிலேயரது) கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நிலவுகையிலிருந்த சட்டங்களை அங்கீகரிப்பதாக உறுதியளித்ததன் தொடர்ச்சியாக, 1806 இல் தேவசழமைக் கோவையை ஆங்கிலேயர் அங்கீகரித்தனர்.

ஒல்லாந்தரது காலத்திலேயே ஆங்கில மொழிபெயர்ப்பொன்று செய்யப்பட்டதாயினும் அம் மொழிபெயர்ப்பினது மொழித்தரம் திருப்திகரமானதாக இல்லை எனக் கருதி 1806 இல் இலங்கையின் பிரதம நீதியரசராக இருந்த அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் துரை (Sir Alexander Johnstone) அவர்களால் புதிதாக ஒரு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. அந்நேரத்தில் அவர் இது தொடர்பில் அரசாங்கத்திற்கு அனுப்பிய அறிக்கையொன்றில் ‘வேறெந்த மக்கள் கூட்டம் போன்றல்லாது தமிழர்கள் தமது பண்டைய நிறுவனங்களில் அதீத பற்றுடையவர்களாக இருக்கின்றனர்’ எனக் குறிப்பிட்டிருந்தமை நோக்குதற்குரியது. மேலும் ஆங்கிலேயர்களது நீதி பரிபாலனத்தின் மீது அம்மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமெனின் அவர்களது மரபுகளை நீதிமன்றங்கள் இறுக்கமாகப் பேண வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். தமது ஆட்சி தொடர்பிலான ஏற்புடைத்தன்மையை தமிழ் மக்கள் மத்தியில் உறுதி செய்வதற்கு தேசவழமையைப் பின்பற்ற வேண்டும் என ஆங்கிலேயர் கருதியமையைக் கவனிக்க வேண்டும்.

அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனது முயற்சியால் இவ்வாறாக மொழிபெயர்க்கப்பட்ட கோவையின் பிரதிகளை அவர் அனைத்து நீதிமன்றங்களிற்கும் அனுப்பி வைத்ததோடு தமிழில் மொழிபெயர்த்து அவற்றை பனையோலைகளில் எழுதுவித்து கிராமத் தலைவர்களுக்கு அவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் சாதாரண மக்களுக்கு விளங்கப்படுத்துமாறு கூறி விநியோகம் செய்தார். இதன் பின்னராக ஆங்கிலேயரது காலத்தில் 1911 இலும் 1947 இலும் [8] கொண்டுவரப்பட்ட சட்டங்கள் மூலம் தேசவழமைச் சட்டத்திற்கு சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

தேச வழமைக் கோவையில் உள்ளடக்கப்பட்டவை தேச வழமை தொடர்பிலான பூரணமான கோவையாகக் கருதப்படுவதற்கில்லை. ஆங்கிலேயரது காலத்து நீதிமன்றங்களில் ஏதேனும் விடயம் தொடர்பில் தேசவழமைக் கோவையில் பதில் பெற முடியாதவிடத்து அவ்விடயம் தொடர்பிலான மரபுசார் வழக்காற்றை விசேட சாட்சிகளின் (Expert Witness) கூற்றுக்களின் வாயிலாக ஸ்தாபிக்கலாம் என்ற நடைமுறை இருந்தது [9]. எனினும் வழக்கின் எத்தரப்பினால் நீதிமன்றத்திற்கு சாட்சி அறிமுகப்படுத்தப்பட்டதோ அத்தரப்பிற்குச் சாதகமான வகையில் சாட்சிகள் வழங்கப்பட்டதாகப் பரவலாகக் கருதப்பட்டு இம்முறை கைவிடப்பட்டது. அதனால் இவ்வாறாக தேசவழமைக் கோவைக்கப்பால் உள்ள தேசவழமை மரபுகளைச் சட்டத்தினால் / நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போனது. இன்று, தேசவழமைக் கோவையில் இடைவெளிகள் இனங்காணப்படும் போது தேசவழமைச்சட்டத்தின் பொதுவான பண்புகளை வைத்து நீதிமன்றம் முடிவொன்றுக்கு வர முயற்சிக்கும். இல்லாவிடின் ரோமன் - டச்சுச் சட்டத்தை வைத்து இடைவெளி நிரப்பப்படுகின்றது. மேலைத்தேய சட்டமொன்றை வைத்துத் தேசவழமையில் இருக்கின்ற ‘இடைவெளிகளை’ நிரப்ப முயற்சிக்கின்றமையானது தேசவழமைச் சட்டத்தின் சுயாதீனத்தைப் பாதிப்பதாக உள்ளது. உண்மையில் ‘இடைவெளிகள்’ என்று பேச வேண்டி வந்ததே தேசவழமை கோவைப்படுத்தப்பட்டதனாலேயே. காலம் காலமாக, காலத்திற்கேற்ற வண்ணம் இயைபடைந்து வளர்கின்ற ஓர் முறைமையில் ‘இடைவெளிகள்’ இருப்பதில்லை. ஆனால் எழுத்துருவாக்கத்தை நாம் முற்றிலுமாக வேண்டத்தகாததாகவும் பார்க்க முடியாது. எழுத்துருவாக்கம் செய்யப்படாதிருப்பின் விரைவாக நவீன மயப்பட்டுக் கொண்டிருந்த அரச கட்டமைப்பில் தேசவழமை என்பது முற்றிலுமாக அழிந்து போயிருக்கலாம். ஆகவே எழுத்துருவாக்கம் என்பதைத் தவிர்க்க முடியாத ஒன்றாகவே நாம் பார்க்க வேண்டும். ஆனால் எழுத்துருவாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட இரண்டு பிரச்சினைகளே தேச வழமையைச் சீர்திருத்த வேண்டும் என்ற முன்மொழிவுக்கு இட்டுச் செல்கின்றன என்பதனையும் கவனிக்க வேண்டும். முதலாவது தேசவழமை எழுத்துருவாக்கம் செய்யப்பட்ட காலகட்டத்திலிருந்த  சமூகத்தையே தேசவழமை பிரதிபலிக்கின்றது என்ற பிரச்சினை. இரண்டாவது தேசவழமைக் கோவையானது யாழ்ப்பாணத் தேசவழமை என்று ஒல்லாந்தர் கருதிய விடயங்களையே உள்ளடக்குகின்றது என்பது.



# இலங்கைப் பாராளுமன்றத்தினால் தேசவழமையைத் திருத்த முடியாதா?


இலங்கைப் பாராளுமன்றம் தமிழர் விடயங்களைக் கையாள்வது தொடர்பில் தமிழர்கள் மத்தியில் ஓர் ஏற்புடைத் தன்மைப் பிரச்சினை (legitimacy problem) இருப்பது ஏற்கனவே குறிப்பால் உணர்த்தப்பட்டது. இலங்கைப் பாராளுமன்றத்தில் முடிவுகள் எடுக்கப்படுவது  முற்றிலும் ஓர் பெரும்பானமை முடிவெடுக்கும் முறையைப் (majoritarian decision-making) பின்பற்றியதாகும். ஆகவே பாராளுமன்றம் தேசவழமையை இற்றைப்படுத்தும் முயற்சியை நியாயமாகச் செய்யும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. மேலும் அரசிற்கு முந்திய சட்டம் என்ற வகையில் தேசவழமையை இற்றைப்படுத்தும் தார்மீக உரிமையும் இலங்கைப் பாராளுமன்றத்திற்கில்லை.  முன்னர் குறிப்பிட்டவாறு 1947 இற்குப் பின்னர் இலங்கைப் பாராளுமன்றத்தினால் தேசவழமைச் சட்டத்தைத் திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற நிலைமைக்கு மேற்சொன்ன காரணங்களும் பங்களித்துள்ளனவா என்பது ஆராயத்தக்கது.

அனைத்து மரபுசார் சட்டங்களையும் ஒழித்து அதன் கூறுகளை உள்ளடக்கியதாக ஓர் சீரான சிவில் கோவையை (ரnகைழசஅ உiஎடை உழனந) ஒன்றை உருவாக்க முடியாதா என்ற கேள்வி கேட்கப்படுகின்றது. அப்படியானதோர் முயற்சியின் விளைவாக உருவாக்கப்படும் கோவை இந்த நாட்டில் அரசியலில் மேலாண்மையைக் கொண்டிருக்கும் சமூகத்தின் சமூக வழக்காறுகளையே கூடுதலாகப் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் இத்தகைய சிவில் கோவையை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதனை அரசியல் புலத்தில் வலியுறுத்துபவர்கள் அதிதீவிர வலதுசாரி இந்துத்துவ கட்சிகள் என்பது கவனிக்கத்தக்கது. இலங்கையில் இத்தகைய கோரிக்கைகள் ஜாதிக ஹெல உருமய போன்ற கட்சிகளிடமிருந்து வெளிக்கிளம்புவதையும் நாம் அவதானிக்க வேண்டும்.

சட்டத்தில் பல்வகைமையை (uniform civil code) கண்டு அச்சப்படுகின்ற அல்லது விரும்பாத மனப்பான்மை தான் இத்தகைய ஒரு சீரான சிவில் கோவையொன்றுக்கான கோரிக்கையின் அடிப்படையாக இருக்கின்றது. சட்டப் பல்வகைமையானது தனித்துவங்களை அங்கீகரிக்கும் தன்மையது. பல்தேசிய (legal pluralism)[10] நாடொன்று சட்டப் பல்வகைமையை அங்கீகரிக்கும். இலங்கையைப் பல்தேசிய நாடொன்று என்று அங்கீகரிக்க மறுக்கும் நிலை இருக்கும் வரை, ஒரு தேசியக் கொள்கையைக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் சமூகத்தாலும் அதன் பாராளுமன்றத்தினாலும் மற்றையவொரு தேசியத்தின் மரபுச் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதனை அனுமதிக்கக் கூடாது.



# நீதிமன்றங்களினால் தேசவழமைச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரமுடியாதா?


சட்டத்தின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியில் நீதிமன்றங்களிற்கு குறிப்பாக உயர் நீதிமன்றங்களிற்கு (Superior courts) பெரும் பங்கு உண்டு. நீதிபதிகளால் தீர்ப்புக்களின் வாயிலான இயற்றப்படுகின்ற சட்டம் (Judicial - law making) இன்று சட்டவாக்கத்தில் பெரும் பங்காற்றுகின்றது. கனடாவிலும் ஸ்கொட்லாண்டிலும் மரபுசார் அல்லது ஓர் குறிப்பிட்ட சமூகம் தொடர்பான தனித்துவமான சட்டங்கள் இருப்பதாக இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்விரு இடங்களிலும் நீதிமன்றங்கள் அத்தகைய தனித்துவமான சட்டங்கள் தொடர்பில் எவ்வாறு செயற்படுகின்றன எனப் பார்த்த பின் இலங்கை நீதிமன்றங்கள் தொடர்பில் பார்ப்பது நன்று.

கனடாவின் உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதியரசர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் மூவர் கியூபெக்கைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் [11]. கியூபெக்கில் கனடாவின் மொத்த  சனத்தொகையின் 24 சதவீதமானோரே வாழ்கின்ற போதிலும் அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் 1/3 ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. கியூபெக் சிவில் சட்டத்தைப் பின்பற்றுகின்ற அடிப்படையில் இவ்வேற்பாடு நியாயப்படுத்தப்படுகின்றது. கியூபெக் சிவில் சட்டம் தொடர்பில் வருகின்ற மேன்முறையீடுகள் யாவற்றையும் ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு விசாரிக்கும். இவ் ஐவருள் மூவர் கியுபெக்கைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி.

ஐக்கிய இராச்சியத்தினது உச்ச நீதிமன்றத்தின் பதவி வகிக்கின்ற 12 நீதிபதிகளில் இருவர் ஸ்கொட்லண்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது மரபாக இருந்து வருகின்றது. ஐவரைக் கொண்ட உச்ச நீதிமன்றின் குழுவொன்று ஸ்கொட்லாண்டிலிருந்து வரும் மேன்முறையீடுகளை விசாரிக்கும் போது அந்த ஐவருள் இருவர் இந்த இரண்டு ஸ்கொட்டிய நீதிபதிகளாக இருக்க வேண்டும் என்பதும் மரபாக இருந்து வருகின்றது. இவ்வாறான ஏற்பாடு இருக்கின்ற போதிலும் ஸ்கொட்டிய தேசியவாத கட்சியினர் (ஸ்கொட்லண்டின் ஆளும் கட்சி) அண்மைக் காலத்தில் இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றமானது தேவையற்ற வகையில் ஸ்கொட்டிய நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் தலையிடுவதாக குற்றஞ் சாட்டுகின்றனர் [12]. உச்ச நீதிமன்றில் பதவி வகிக்கும் ஸ்கொட்டிய நீதிபதிகளும் ‘இங்கிலாந்தின் மனநிலையில்’ இருந்து செயற்படுவதாக ஸ்கொட்லாண்டின் தேசியவாதிகள் கருதுகின்றனர்.

இங்கிலாந்திலும் கனடாவிலும் இவ்வாறாக நீதிமன்றங்களின் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகளிற்கு நிகரான ஏற்பாடுகள் இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் இல்லை. தேசவழமை தொடர்பிலோ முஸ்லிம் சட்டம் தொடர்பிலோ வழக்கொன்று விசாரணைக்கு  வரும் போது தமிழ், முஸ்லிம் நீதிபதிகள் அவற்றில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை. இது தொடர்பில் ஏற்படக்கூடிய சிக்கல்களை 1986 - 1988 இல் தீர்க்கப்பட்ட வழக்கொன்றிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம் [13].

முஸ்லிம் தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்ட பிள்ளை ஒன்றிற்கு அத்தம்பதிகளின் இறப்பிற்குப் பின்னர் அவர்களது சொத்துக்களின் மீதான உரித்து உண்டா என்ற கேள்வி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னர் வந்த போது, உண்டு எனப் பெரும்பான்மையான நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். (நீதியரசர் செனவிரட்ண மற்றும் நீதியரசர் சிவா செல்லையா) ஆனால் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த நீதியரசர் ஒருவர் (நீதியரசர் ஜமீல்) பெரும்பான்மையினரது தீர்ப்போடு உடன்படாமல் புனித குரானில் இது தொடர்பில் சொல்லப்பட்டுள்ளவை பற்றிய நீண்ட விளக்கமளித்துத் தனித் தீர்ப்பொன்றை - தத்தெடுத்த பிள்ளைக்கு உரிமை இல்லை - எனத் தீர்ப்பளித்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட போது நீதியரசர் ஜமீலின் தீர்ப்பை அடியொற்றி பிரதம நீதியரசர் சர்வானந்தா தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்போடு வேறு மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் இணைந்து கொண்டனர். இந்தத் தீர்ப்போடு இணங்காத ஒரேயொரு உச்சமன்ற நீதிபதி, நீதியரசர் வனசுந்தர மட்டுமே. நீதியரசர் வனசுந்தர ஒரு போற்றத்தக்க நீதியரசர். ஆனால் இந்த நீதியரசர் வனசுந்தரவே முன்னர் 13 ஆம் திருத்தம் அரசியலமைப்போடு இயைபானதா என்ற வழக்கின் போது தான் வழங்கிய தீர்ப்பில் மாகாணங்களுக்கு சட்டவாக்க அதிகாரம் வழங்கப்படுமானால் வடக்கு கிழக்கில் உள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு விடும் என்ற கவலையைத் தனது தீர்ப்பிலேயே தெரிவித்தவர் [14]. நீதியரசராக இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் இவர் சிங்கள அதிதீவிர தேசியவாத மேலாண்மைவாதிகளால் அமைக்கப்பட்ட சிங்கள ஆணைக்குழுவிற்குத் தலைமை வகித்து இலங்கை அரசின் ஒற்றையாட்சி முறைமைகளில் மாற்றங்கள் கொண்டுவரக் கூடாது என அறிக்கை எழுதினார். நீதியரசர் வனசுந்தர மேற்படி வழக்கின் தீர்ப்பை சிங்கள மேலாண்மை மனநிலையிலிருந்து எழுதினார் என்பதைத் திடமாகக் கூற முடியாது. அவ்வாறு எழுதவில்லை என்றும் உறுதியாகக் கூற முடியாது. இலங்கை உச்ச நீதிமன்றத்திடம் தேச வழமையை வளர்த்தெடுக்கும் பொறுப்பை விடுவதில் உள்ள சிக்கலுக்கு இந்த வழக்கு நல்லதோர் உதாரணம் என்பதையே இந்தக் கட்டுரையாளர் சொல்ல வருவது.



# தேச வழமையைத் திருத்தம் செய்யக்கூடியது யார்?


ஒரு சமூகத்தினது வழக்காறுகளை அந்தச் சமூகம் தான் திருத்த வேண்டும். மாற்றங்கள் என்பது உள்ளிருந்து வரும் போது தான் அம்மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படும. தேச வழமையைத் திருத்துவதும் தமிழ்ச் சமூகமாகவே இருக்க வேண்டும். நவீன அரச கட்டமைப்பில் இதற்கான வழிமுறை தமிழர்களுக்கான சுயாட்சி அலகு ஒன்றின் மூலமாக வரவேண்டும். இந்த சுயாட்சி அலகுக்கு வழங்கப்படுகின்ற பொறுப்புக்களில் ஒன்றாக விசேட சட்டங்களைத் திருத்துதல் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் தமிழருக்கான சுயாட்சி அரசாங்கம் ஒன்றை அமையப் பெறும் போது பல்வேறு தரப்புக்களது ஆலோசனைகளைப் பெற்று ஓர் வெள்ளை அறிக்கை ஒன்று இது தொடர்பில் தயாரிக்கப்பட வேண்டும். அவ்வாறாக ஆலோசிக்கப்படுகின்ற தரப்பில் பெண்களும் தமிழர் மத்தியில் காணப்படும் ஒடுக்கப்படும் சமூகத்தவர்களுக்கும் கூடியளவு முக்கியத்துவம் வழங்க வேண்டும். இன்றைய தமிழ் சமூகத்தினது வழக்காறுகளை சமூக நீதியுடன் இயைபுபட்டதாக அமையும் வண்ணம் நாம் ‘புதிய தேசவழமை’ ஒன்றை உருவாக்கலாம்.

தமிழ்த் தேசம் என்று நாம் கருதுகின்ற சமூகம் எத்தகையது என்பது பற்றிய ஆக்கபூர்வமான கருத்துருவாக்கத்தை நாம் இன்றைய சூழ்நிலையில் செய்ய வேண்டும் என்பதனைப் பற்றி இக்கட்டுரையாளர் வேறொரு இடத்தில் வலியுறுத்தியுள்ளார். தமது அரசியலின் எதிர்காலம் தொடர்பில், முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு தமிழ் மக்கள் விரக்தியுற்றுள்ளவொரு சூழலில் அவ்விரக்தி நிலையை முறியடிப்பதற்கான சமூக ஒன்றுதிரட்டல் ஒன்று அவசியமானது. அந்த ஒன்று திரட்டல் ஆக்கபூர்வமானதாக இருத்தல் வேண்டும். தமிழ்த் தேசியம் என்பது வெற்றுக் கோசமாக அல்லாமல் எமது எதிர்கால ஆட்சியியலைப் பற்றி காத்திரமான பார்வைகளை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறானதொரு நிகழ்ச்சித் திட்டத்தின் ஓரங்கமாகவே இக்கட்டுரையாளர் தேசவழமை தொடர்பான ஓர் பரந்துபட்ட உரையாடலை நாம் செய்ய வேண்டியதான அவசியத்தை வலியுறுத்துகின்றார்.

தேசவழமை பற்றிய இந்தச் செயன்முறையில் இந்தத் தீவில் வாழும் அனைத்துத் தமிழர்களும் பங்குபற்ற முடியும். பெல்ஜியத்தில் ஆள்புல சமஸ்டிப் பாராளுமன்றம் என்பதற்கு மேலதிகமாக ஒவ்வொரு சமூகத்திற்கும் (அந்த சமூகத்தவர்கள் எங்கு வாழ்கின்றனர் என்ற வரையறைக்கப்பால்) சமூகப் பாராளுமன்றம் (Community Parliament) ஒன்றில் பங்குபற்றுவதற்கு ஏற்பாடு உண்டு [15]. இத்தகைய முறைமையைப் பற்றி நாம் சிந்திக்கலாம். மனமும் செயலூக்கமும் இருக்குமானால் தீர்வைத் தேடுவது கடினமான காரியமன்று. கிழக்கைச் சேர்ந்த தமிழர்களின் முக்குவர் சட்டத்தை துயிலெழுப்பவும் அதனை தேசவழமையைப் போன்று புத்துயிர் ஊட்டுவதற்கான வழிவகையைப் பற்றியும் சிந்திக்கலாம்.



# முடிவுரை


தேச வழமையின் இப்போதைய வடிவத்தையோ உள்ளடக்கத்தையோ ஓர் பழமைவாதப் பார்வையிலிருந்து இந்தக் கட்டுரை வக்காலத்து வாங்க முயற்சிக்கவில்லை. ஓர்மைப்படுத்தும் முயற்சிக்கெதிராகவும் பன்மைவாதத்தைப் பாதுகாக்கும் பார்வையிலுமே இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. தேசவழமையை சீர்திருத்துவதில் உள்ள வரைமுறைப் பிரச்சினைக்குத் துணிச்சலாக ஓர் தீர்வை முன்வைக்க முயற்சித்துள்ளது. வைக்கப்பட்டுள்ள தீர்வு நடைமுறைச் சாத்தியமானதா என்ற கேள்வி எழக்கூடும். நடைமுறைவாதத்தை முன்வைத்தால் இன்று எமது சமூகத்தின் மத்தியில் நிலவக்கூடிய அடக்குமுறைச் சூழலை ஒட்டியே சிந்திக்க வேண்டிவரும். அவ்வாறான சிந்தனை ஒடுக்குமுறைக்குத் துணை செய்வதாகவே முடியும்.



அடிக்குறிப்புக்கள்.
[1] LL.B (Hons) (Colombo), B.C.L (Oxford) ; சட்டத்தரணி
[2] உதயன், 04 நவம்பர் 2011
[3] இந்த விளங்கிக் கொள்ளல் தவறானது என்பதற்கு பார்க்க : Dr Shivaji Felix, ‘Introduction’ appearing in Dr. H.W. Thambiah, The Laws and Customs of the Tamils of Jaffna, (Revised Edition, Women’s Education and Research Centre, 2001), pp. vi-vii
[4] பார்க்க : Michael Keating, Plurinational Democracy: Stateless Nations in a Post Sovereignty Era (Oxford: Oxford University Press, 2001)
[5] இத்தகைய சட்டங்களை ‘மரபுசார் சட்டங்கள்’ என வகைப்படுத்துவது காலனியாதிக்கவாதிகளால் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்ட ஒன்று. தமது சட்டங்களை பிரதான நீரோட்டத்திற்கு உரியவை எனவும் தாம் காலனியாதிக்கத்திற்குட்படுத்திய மக்கள் சட்டங்கள் மரபுசார்ந்தவை என வகைப்படுத்தியதில் காலனியாதிக்க மனநிலை வெளிப்படுகின்றது.
[6] சிலோன் அல்லது சிறீலங்கா அரசு என்ற கருத்தாக்கத்தினது நவீன செயன்முறை வடிவம் 1815 உடன் ஆரம்பமாகின்றது எனலாம்.
[7] தேசவழமையைக் கோவைப்படுத்திய வரலாறு தொடர்பில் பார்க்க: H.W Thambiah, ‘The History of Codification’, (Chapter 2), n. 3.
[8] Jaffna Matrimonial Rights and Inheritence Ordinance of 1911 as amended by Oridnance no 58 of 1947.
[9] தேசவழமை தொடர்பிலான முத்துக்கிருஸ்ணா என்பவரது நூலில் மேற்கோள காட்டப்பட்ட Vyrewanadan v Vinasi, Kander v Ramaswamy போன்ற வழக்குகளை கலாநிதி. தம்பையா உதாரணமாகக் காட்டுகின்றார். n. 3இ p. 40இ 41
[10] Legal Pluralism தொடர்பான சுருக்கமானதோர் புலமைத்துவ ஆய்வுக்குப் பார்க்க :  Brian Z Tamanaha, ‘Understanding Legal Pluralism: Past to Present, Local to Global’, 29 Sydney Law Review (2007)
[11] பிரிவு 6, கனடிய உச்ச நீதிமன்றச் சட்டம்
[12] பார்க்க : Guardian, ‘Alex Salmond provokes fury with attack on UK Supreme Court’, 01 June 2011: http://www.guardian.co.uk/uk/2011/jun/01/alex-salmond-scotland-supreme-court
[13] Ghouse v Ghouse 1986 1 Sri. L. R 48 (Court of Appeal), 1988 1 Sri. L. R 25 (Supreme Court)
[14] In Re the Thirteenth Amendment to the Constitution 1987 2 Sri. L. R 312 at 364, 365, 366.
[15] பார்க்க : Ann L. Griffiths (Ed), Handbook of Federal Countries 2005 (Forum of Federations, 2005), pp. 58-72



[[ 1707 இல் ஒல்லாந்தரால் எழுத்து வடிவிற்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் குருபரன் குறிப்பிடுவது போன்று வழமைகளின் தொகுப்பாகவே இருந்திருக்கின்றது. அவ்வாறான வழக்கம் நெகிழ்ச்சியான மாற்றங்களுக்குட்படக்கூடிய நிலையிலேயே இருந்தது. ஒல்லாந்தரால் எழுத்தாவணமாக உருவாக்கப்பட்ட நிகழ்வின் மூலமான நிறுவனமயப்படுத்தல் - அதுவரையிலான நெகிழ்ச்சித்தன்மையைக் கட்டிப் போட்டது குறிப்பிடத்தக்கது. 1707 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்தவாறான பிற்போக்கான கூறுகளுடனேயே தேச வழமையின் நிறுவனமயமாதல் நிகழ்ந்தது. 30 அக்டோபர் 2003 தமிழீழ சட்டத்துறையின் முக்கியஸ்தரான பரராஜசிங்கம் தமிழ்நெட் இணையத்தளத்திற்கு கொடுத்த நேர்காணலில் தேசவழமை தொடர்பான பல முக்கியமான விடயங்களைக் குறிப்பிடுகின்றார். அதில் தமிழீழ சட்டவாக்கத்துறையினரால் தேசவழமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். அடிமைத்தனம், சாதியம் போன்றவை காலத்திற்குப் பொரித்தமற்றவை / அருவருப்பூட்டக்கூடியவை என்பதை மாற்றத்திற்கான காரணமாகக் குறிப்பிடுகின்றார். குருபரனின் கட்டுரை இவ்விடயங்களையும் தொட்டிருக்கலாம். - சசீவன் ]]

July 31, 2010

சாந்தனின் “Whirlwind” ஐ முன்வைத்து சில சமூக, அரசியல் அவதானிப்புக்கள்

- குமாரவடிவேல் குருபரன்

நூல் பெயர்: “The Whirlwind”
நூல் வகை: நாவல் (ஆங்கிலம்)
ஆசிரியர்: ஐயாத்துரை சாந்தன்
பதிப்பு: V.U.S. பதிப்பகம், சென்னை (2010)
பக்கங்கள்: 179
இந்திய விலை: ரூ. 100

ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஆக்க இலக்கியப் படைப்புகளுக்காக சாகித்திய விருது பெற்ற சாந்தன் அவர்களது முதலாவது ஆங்கில நாவல் “The Whirlwind”. இந் நாவல் அண்மையில், இலங்கையிலிருந்து ஆங்கிலத்தில் வெளிவரும் ஆக்க இலக்கியங்களுக்கான கிரேயன் (Gratien) விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஐந்து படைப்புகளுள் ஒன்றாகும். Whirlwind என்ற சொல்லுக்கான அண்மித்த தமிழ்ச் சொல் ‘சுழல் காற்று’ எனலாம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தமிழர் வாழும் பகுதிகளில் இந்திய அமைதிப் படையினரின் நிலைகொள்ளல் தொடர்பாக ஜுலை மாதம் 1987ஆம் ஆண்டு நான்கைந்து நாட்கள் இடைவெளியினூடு இடம்பெற்றவொரு சுற்றிவளைப்பு இராணுவ நடவடிக்கையையும் அதனை ஒட்டிய இடப்பெயர்வு அனுபவத்தையும் கூறும் ஓர் அரசியல் நாவல் இந்த “Whirlwind”.

இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியத் தலையீடு தொடர்பாக (குறிப்பாக 1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் நிகழ்ந்த காலப்பகுதி தொடர்பிலான) ஆக்க இலக்கியம் சாராத (non-fiction) படைப்புகளும் ஆய்வுகளும் ஏராளமாக வெளிவந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அக் காலப்பகுதியில் கடமையாற்றிய இந்திய இராஜதந்திரிகள் இராணுவ உயரதிகாரிகளது மற்றும் ஊடகவியலாளர்களது நினைவுக் குறிப்புகளாக அமைந்துள்ளன. இவற்றைத் தவிர தென்னிலங்கை மற்றும் இந்திய அரசியல் மற்றும் வரலாற்றுப் புலமையாளர்களும் தமது ஆய்வுகளை வெளியீடுகளாக்கியுள்ளனர். இது தொடர்பில் தமிழர் தரப்பில் இக்காலப்பகுதி தொடர்பில் ஆய்வு அல்லது ஆவணப்படுத்தும் வகையிலான முயற்சிகள் மிகக் குறைவு அல்லது இல்லை என்றே கூறலாம். ஒரே ஒரு விதி விலக்காக அமைவது “The Broken Palmyrah” (“முறிந்த பனை”) என்ற நூல். தமிழரது அரசியலில் நிலவுகின்ற சமூக, சட்ட அரசியல் சார்ந்த ஆய்வு இடைவெளி மிகவும் பாரதூரமானது.

இக்காலப்பகுதி தொடர்பிலான ஆக்க இலக்கியங்கள் என்று பார்க்கும் பொழுது தமிழ் ஆக்க இலக்கியத்தில் பல படைப்புக்கள் வெளிவந்தமை ஆச்சரியப்படுவதற்கில்லை. 1980 களுக்குப் பின்னரான ஆக்க இலக்கியப் படைப்புகளினது முனைப்பு கூடுதலாக தமிழரது போராட்டச் சூழல் பற்றிய பிரதிபலிப்புகளாகவே இருந்துள்ளன என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. சாந்தன் அவர்களது தமிழ் ஆக்க இலக்கியங்கள் இந்தியப் படையினரது நிலைகொள்ளல் பற்றி அதன் ஆரம்ப காலத்திலிருந்தே பேசி வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஆங்கில நாவல் இலக்கியப் பரப்பிற்குள் இக் காலப்பகுதி தொடர்பிலான படைப்புக்கள் இல்லை என்றே கூறலாம். இலங்கையின் இன முரண்பாட்டு அரசியல் என்று பொதுவாகப் பார்க்கும் போது கூட ஆங்கில ஆக்கிய இலக்கியப் பரப்பிற்குள் மிகச் சொற்பமான செயற்பாட்டையே அவதானிக்க முடிகின்றது. 1983 இனக்கலவரம் தொடர்பிலான படைப்புகளான சியாம் செல்வத்துரையின் “Funny Boy” மற்றும் மனுகா விஜயசிங்கவின் “Monsoons and Potholes”, 1983 க்குப் பின்னரான சம்பவங்கள் தொடர்பில் நிஹால் டி சில்வாவின் “The Road from Elephant Pass” மற்றும் புண்யகாந்தி விஜயநாயக்கவின் “The Enemy within” போன்ற ஆக்கங்களைக் குறிப்பிடலாம். இவர்கள் யாவரும் தென்னிலங்கையர் அல்லது தென்னிலங்கை அரசியற் பரப்பில் வாழ்ந்து கொண்டு எழுதியவர்கள் என்பது நோக்குதற்குரியது. இந்த வகையில் தமிழ் போராட்டச் சூழலில் வாழ்ந்து ஆங்கிலத்தில் எழுதும் தமிழர் சாந்தன் ஒருவராகவே இருக்க முடியும். (இக்கணிப்பீடு மொழிபெயர்ப்பு இலக்கியப் பரப்பைத் தவிர்த்தே முன்வைக்கப்படுகின்றது. மொழிபெயர்ப்பு இலக்கியப் பரப்பிற்குள் நின்று செயற்படும் சோ.ப. போன்றவர்களது முயற்சிகளும் முக்கியமானவை என்பதில் சந்தேகம் இல்லை).

ஒரு பொது மொழியினூடாக சமூக அரசியல் இலக்கியப் பதிவுகளை மேற்கொள்வதில் ஒரு முக்கியமான சமூகப் பெறுமதி உள்ளது. ஆங்கிலமொழி மூலமான அறிவுச் செயற்பாடானது உயர் மத்தியதர வர்க்க மற்றும் மேட்டுக்குடியினிடத்து உறைநிலைப்பட்டுள்ளதாயினும் இந்த முக்கியமான சமூக தளத்திற்குள்ளும் எமது சமூகம், அரசியல் தொடர்பிலான பதிவுகளை நாம் முன்வைப்பது எதிர்காலத்தில் எமது வரலாறு எங்ஙனம் பேசப்படுகின்றதென்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வகையில் சாந்தனின் “Whirlwind” வரவேற்கப்படவேண்டியது.

“Whirlwind” இன் அரசியல்

இயல்பானதொரு மொழிநடையில் சாதாரண மக்களுக்கிடையிலான உரையாடலினூடாக வெளிவருகின்ற அரசியலை, Whirlwind இல் பதிவு செய்யும் சாந்தன் அதேவேளை பல்வேறு பாத்திரங்களினூடு எமது அரசியல் தொடர்பிலான தனது பார்வையையும் முன்வைக்கின்றார். இச்சமநிலையை நாவல் எங்கணும் அவதானிக்கலாம். மக்கள் மத்தியில் இந்திராகாந்தி மீதிருந்த ஈர்ப்பு, அவரது இறப்பின் பின்னரான இந்திய அரசியலை அவரது அரசியலோடு ஒப்பிட்டு அங்கலாய்க்குமொரு அரசியல் பார்வை (பக்.31), இந்தியப் படையினரை வரவேற்ற மனநிலையும் அது சொற்ப காலத்தில் வெறுப்பாக மாறிய அரசியல் மனப்பாங்கும் (பக்.69), இலங்கை இராணுவத்தை இந்திய இராணுவத்தோடு ஒப்பிட்டு பின்னையதை அதிகமாக வெறுத்த மக்களது மனநிலை (பக். 24) போன்ற IPKF காலப்பகுதியில் நடைபெற்றவை பற்றிப் ‘பொதுப் புத்தி’ (Common sense) மட்டத்தில் சாதாரணமாகப் பேசப்பட்ட அரசியலை சாந்தன் இயல்பாகப் பதிந்து வைத்திருக்கிறார்.

இப் பொதுப்புத்தி அரசியல், பிரதான அரசியல் நீரோட்டத்தின் விவாதத்தில் வெளிப்படுவது மிகக் குறைவு - வெளிப்படுவது இல்லை என்று கூடச் சொல்லலாம். இதற்கு அதன் ‘சாதாரண தன்மை’ அல்லது ‘Sub-altern’ தன்மை காரணமாகவிருக்கலாம். (இது தொடர்பான ஆய்வுப் புலத்தினை Sub-altern studies என்பார்கள்). ஆக்க இலக்கியப் படைப்புக்கள் மூலமாக இவை வெளிக்கொணரப்படலாம் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணம்.

சாந்தனுடைய தனிப்பட்ட கூர்மைப்படுத்தப்பட்ட அரசியல் தத்துவார்த்தமும் நாவலின் பல பாத்திரங்கடாக மேற்சொன்ன பொதுப்புத்தி அரசியலை நளினம் செய்யாமல் முன்வைக்கப்படடிருப்பதை அவதானிக்கலாம். குறிப்பாக சாந்தன் அடையாள அரசியல் (Identity politics) தொடர்பாகக் கொண்டிருக்கும் சந்தேகமும் வெளிப்படையாக நாவலில் சொல்லப்படுகின்றது (பக்கங்கள் 93-96). சாந்தனின் உலக இலக்கியப் பரிச்சயமும் (குறிப்பாக இரஸ்ய இலக்கியத்தில் அவர் கொண்டுள்ள நாட்டமும்) இடதுசாரி அரசியலில் அவர் கொண்டுள்ள பரிச்சயமும் ஒரு சர்வதேசியவாதிக்குரிய சிந்தனைகளாக (Internationalist) வெளிப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. (பக். 140 இல் சாந்தன் இர~ஸ்ய நாவலாசிரியர் Mikhail Sholokhov மற்றும் அமெரிக்க நாவலாசிரியர் Ernest Hemingway ஆகியோரது படைப்புக்களை சிவன் என்ற பாத்திரத்தினூடாக மேற்கோள் காட்டி வேறுபட்ட யுத்த சமூகங்களுடைய அனுபவங்களின் பொதுத் தன்மையைப் பற்றிப் பேசுவதைக் காண்க).

மற்றுமோர் இடத்தில் ‘political behalfism’ த்தைச் சாந்தன் சாடுகிறார். எமது சார்பில் போராட்டம் நடத்துவதாகக் கூறிக் கொள்பவர்களிடமிருந்து நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம் என்று சாந்தனின் ஒரு பாத்திரம் பேசுகிறது. தனியே இந்திய அமைதிப் படையினரைப் பற்றியதாக நாம் இவ்வவதானிப்பைச் சுருக்க முடியாது. அரசியல் விளிம்பின் நுனியில் ஒரு பரிதவித்த சமூகமாக மாறியுள்ள நாம் இது பற்றி சிந்திக்க வேண்டும். நல்ல இலக்கியங்களுடைய உண்மையான சேவை இதுதான்.

40 வருடகால சமூக இலக்கியச் செயற்பாட்டைத் தாண்டி வந்துள்ள சாந்தன் அரசியல் “ism” கள் எவற்றுள்ளும் அடைக்கப்பட விரும்பாதவர் என்பதனைப் பதிவு செய்துள்ளார். ஏலவே இடதுசாரிஃ சர்வதேசியவாத சிந்தனை மரபின் தாக்கங்கள் இந்நாவலில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளேன். பின் நவீனத்துவ மரபின் சாயல்களையும் காணலாம் என்பதையும் இங்கு சேர்க்கலாம். (தேவர் என்ற பாத்திரத்தினூடாக ‘நிலையான உண்மை’ என்றொன்றில்லை என்ற சாந்தனின் வாதத்தை உதாரணமாகப் பார்க்கலாம் (பக். 33).

பக். 32 இல் சிவன் என்ற பாத்திரத்தினூடாக சாந்தனிடத்து வெளிப்படும் பின்வரும் அவதானிப்பு முதல் நோக்கில் அரசியல் மேலெழுந்தவார்த்தனம் உடையதாகத் தெரிந்தாலும் ஒரு ஆழ்நிலையில் அர்த்தபுஷ்டியுடையதாகவே படுகின்றது. சாந்தன் எந்த அடைப்புக்குள்ளும் நின்று தன் இலக்கிய எழுத்தை வரையறை செய்ய விரும்பாத தொனிப்பும் இவ்வவதானிப்பில் வெளிப்படுகிறது.
“இந்தக் கொடுமையான விளையாட்டில் எந்தவொரு (அரசியல்) செயற்பாட்டாளரும் தனது மனசாட்சிக்கு எதிராக செயற்படுவதாக நான் நினைக்கவில்லை. எல்லாத் தரப்புக்களும் தாம் நல்லது என்று நினைப்பதனையும் மக்களுக்குச் சரியானது எனக் கருதுவதனையுமே செய்கின்றனர். இவர்களுடைய செயற்பாடுகள் மற்றையவர்களுடைய செயற்பாடுபாடுகளோடு முரண்படுவது அவர்களை மட்டுமல்ல, யாருக்காக இதனைச் செய்வதாகக் கூறிக் கொள்கிறார்களோ அந்த அப்பாவி மக்களையும் வெகுவாகப் பாதிப்பது துரதிட்டவசமானது”. (மொழிபெயர்ப்புக் கட்டுரையாளரது)

இந்த அரசியல் விளையாட்டில் ஒருவர் மற்றொருவர் மீது குறைகாணும் தன்மையை, நீண்டகாலமாக அவதானித்துச் சோர்வுற்றதால் சாந்தனிடம் ஏற்பட்ட ஒரு வித சலிப்பின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம். ஒரு விதத்தில் இருத்தலியத் தத்துவார்த்தத்தின் (existentialism) சாயலையும் இந்த அவதானிப்பில் காணலாம். இருத்தலியம் முறைசார்ந்த, புலமைவார்ப்பிற்குட்பட்ட தத்துவார்த்தமானது உண்மையான மனித அனுபவத்திலிருந்து தொலைவுபட்டது எனக் கொள்கின்றது. விவாதத்திற்குட்படுத்த வேண்டிய பல விடயங்களைச் சாந்தன் எமக்குத் தந்து உதவியுள்ளார்.

‘Whirldwind’ இல் இடம்பெயர் வாழ்வியல் தொடர்பாக இது தொடர்பில் ‘Whirldwind’ முன்வைக்கும் மூன்று விடயங்களை முன்னிலைப்படுத்த விரும்புகின்றேன்.

முதலாவது, இடப்பெயர்வு வாழ்வு அனுபவமானது அது உருவாக்கித்தரும் ஒரு இறுக்கமான சமூக வெளி காரணமாகத் தமிழர் சமூகத்தில் நிலவிவரும் சாதிக் கட்டுமானங்களை உடைக்கின்றதா அல்லது நெகிழ்வடையவோ அன்றி உறுதி செய்யவோ பங்களிக்கின்றதா என்பது தொடர்பானதாக. ‘Whirldwind’ இல் முத்து என்ற பாத்திரத்தினூடாக (பக்கங்கள் 162-165) இந்தக் கேள்வியை சாந்தன் எம்முன் நிறுத்துகிறார். சாந்தனைப் பொறுத்த வரையில் வாழ்வா சாவா என்ற நிலை வரும்போது (existential threat) இந்த வேறுபாடுகள் தளர்வடைகின்றன. இந்த அனுபவத்தைப் பொதுமைப்படுத்த என்ன செய்ய வேண்டும் என நாம் சிந்திக்க வேண்டும்.

இரண்டாவது, எமது சமூகம் பெண்களது நிலை தொடர்பாகக் கொண்டிருக்கும் பார்வை பற்றியது. மற்றவர்களோடு இடம்பெயராது சற்றுக் காலம் தாழ்த்தி வரும் கலா (எனும் பாத்திரம்) பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கக் கூடுமோ என்று ஏனைய சில பெண் பாத்திரங்கள் சந்தேகப்படுவதும் அது பற்றிக் கலாவுடன் கலந்துரையாட முற்படுவதையும் சாந்தன் கவனமாக எடுத்துக் காட்டியுள்ளார். போர்ச் சூழலில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்களை தனக்கேயுரிய சுருக்க நேர்த்தியோடு சாந்தன் சொல்லியிருக்கிறார்.

மூன்றாவது, சமூகத் தலைமைத்துவம் தொடர்பாக எமது சமூகத்தில் மாறிவரும் பெறுமான மதிப்பீடு தொடர்பாக. தேவி (மனைவி) மற்றும் ராஜு (கணவன்) என்ற கதாபாத்திரங்கடான கலந்துரையாடலை முன்னறுத்தி சாந்தன் சொல்வதை ப.133இல் காண்க.
தொடர்ந்தேர்ச்சியாக எமது சமூகத்தில நிலவி வரும் பாதுகாப்பற்ற சூழல், காரணமாக சமூகப் பிரச்சனைகளில் அக்கறை கொள்வது என்பது விரும்பப்படுவதில்லை என்ற செய்தியை சாந்தன் பதிவு செய்கிறார். “ஏன் நமக்கு இந்த சோலி” என்ற சமூக மனநிலை எம்மத்தியில் ஆழ ஊடுருவியுள்ளது. எமது சமூகத்தில் எதிர்காலம் பற்றிக் கவலைப்பட வைக்கும் மனநிலை இது. இதிலிருந்து நாம் எப்படி வெளிவரப் போகின்றோம் என்பதனைப் பற்றிய சிந்தனையும் விவாதமும் இன்றைய அவசரத் தேவைகள்.

Whirldwind இன் மொழி நடை

பின்காலனித்துவ ஆங்கில மொழிப் பாவனையில் ஆங்கிலத்தை அதன் பிரித்தானிய வடிவில் (British English) தான் உபயோகிக்க வேண்டும் என்ற தூய்மைவாதம் உடைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தை அதன் பல்வேறு சமூகத்திற்காட்பட்ட பல்வகைப் பாவனையை “World Englishes” என்று அழைக்கின்றனர். இலங்கையில் பேராசிரியர் மனிக் குனசேகர, கலாநிதி அர்ச்சுன பராக்கிரம போன்றோர் ஆங்கில மொழிப் போதனையிலும் ஒரு “Sri Lankan English” என்ற தராதரத்தை அங்கீகரித்து கற்றல் கற்பித்தலில் பாவிக்கலாம் என்றும் கூறுகின்றனர். “Sri Lankan Dictionary of English” என்ற ஒன்றையும் பிரித்தானியக் கவுன்சிலில் Michael Meyler அண்மையில் வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்தை குறிப்பிடத்தக்களவு காலம் கற்பித்த சாந்தன் அவர்கள் இதைப் பற்றி என்ன பார்வையைக் கொண்டுள்ளாரோ தெரியவில்லை. ஆனால் சாந்தனின் மொழி நடையில் சமூகத்தின் தாக்கம் (இது தொடர்பான ஆய்வை Social Linguistics சமூக மொழியியல் என்பார்கள்) நிறையவே உள்ளது - Sri Lankanised English இன் கூறுகளும் நிறையவே உள்ளன. உதாரணமாக: “I say, you can’t take this much of space. If you want to sleep comfortably, get back home” (பக். 37) என்பதில் வருகின்ற ““I say”. இந்த “I say” அச்சில் வேறுபடுத்தி Italic இல் காட்டுவது அவதானிக்கத்தக்கது. தமிழ்ப் பழமொழிகள் பலவற்றையும் ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பு (transliterate) செய்து நாவலின் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். சாந்தனுடைய தமிழ் மொழி நடையில் நான் அதிகம் இரசித்தது அவரது ‘economy of language’ மொழியைக் கவனமாகவும் சுருக்கமாகவும் பாவிக்கும் ஆற்றல். அதனை அவர் ஆங்கிலத்திலும் காட்டியுள்ளார்.

(யாழ் உதயன் பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)

சாந்தனின் சில நூல்களை காண இங்கே சொடுக்கவும்

'எதுவரை' இதழில் பிரசுரமான சாந்தனின் நேர்காணல் (2010)

December 21, 2009

பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 4

அல்லைப்பிட்டியில் தியானம் செய்வதற்கு ஒரு இடம் உருவாக்கியிருந்தீர்கள். தனிப்பட்ட ரீதியில் எத்தகைய அநுகூலத்தைப்பெற்றீர்கள் ?

களைப்படைகின்ற போது ஒரு ஓய்விற்காக ஒரு retreat இற்காகவும் இந்த தியான நிலையத்தை அமைத்தேன். இப்போது அது இராணுவமுகாம் ஆக இருக்கிறது.


நீங்கள் தற்போது அவுஸ்திரேலியா சென்றுவிட்ட நிலையில், இறுதிக் காலத்தில் எங்கு வாழ விரும்புகிறீர்கள்? சமூகத்திற்கு இன்னும் ஏதாவது செய்யலாம் என்று கருதுகிறீர்களா ?

சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் ஒரு விதத்தில் அகங்காரந்தான். உண்மையில் எங்களுடைய திருப்திக்காகத்தான் செய்கின்றோம். சில மாற்றங்களைக் கொண்டுவரவும் சில வேலைத்திட்டங்கள் ஊடாக மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளக் கூடிய நிலையையும் ஏற்படுத்தலாம்.


நீங்கள் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்ததற்கும் இன்று வெளிநாட்டில் வசிப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கின்றீர்கள் ?

இப்போது வெளிநாடுகளில் இருப்பதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை உண்மையில் வெளிநாடுகள் எல்லாம் இப்போ எங்கோ போய்விட்டன. Consumer society, தனிமனித தேவைகள் போன்றவற்றை மையப்படுத்தியதாகக் காணப்படுகின்றன. இதில் எனக்கு ஈடுபாடு இல்லை. ஆனால் ஒரு பாதுகாப்பான இடம் இங்குபோல் ஒவ்வொரு நாளும் ஷெல்லோ அல்லது குண்டுவீச்சோ என்று பயமில்லை. ஆனாலும் இப்போது வெளிநாடுகளிலும் இவை வந்துவிட்டன. பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழும் என்ற அச்சம் உள்ளது. சிறுவர் துஸ்பிரயோகம், போதைமருந்து இப்படியான பிரச்சினைகளும் இருக்கின்றன. அதுமட்டுமன்றி street violence போன்றவையும் காணப்படுகின்றன. ஓரிடத்திலிருந்து தப்பி ஓரிடத்திற்கு போகலாம் என்றும் இல்லை.


ஒருவரை ஓரிடத்தில் இருந்து வெளியேற்றுவது என்பதை துயரமாக நினைக்கின்றீர்களா?

ஒருவரை ஓரிடத்தில் இருந்து வெளியேற்றுவது என்றால் துயரமானது. உண்மையிலே ஒருவர் ஓரிடத்தில் வந்து பிறப்பது என்றால் அதற்குக் காரணம் இருக்கிறது. அதிலிருந்து வேறுஇடத்திற்குப் போவது என்பது பிழை. அந்த இடத்தில் அவர் வாழவேண்டும். நாங்களாகவே வெளியேறுவது வேறு. மற்றவர்களால் விருப்பத்திற்கு மாறாக வெளியேற்றப்படுவது என்பது வேறு.


மேற்கு நாடுகளில் வாழ்ந்திருக்கிறீர்கள். அதே நேரம் யாழ்ப்பாணத்திலும் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறீர்கள். மக்களது உளவியல், சமூகவியல் சம்பந்தமாக ஆராய்ந்திருக்கிறீர்கள் அல்லது அவதானித்திருந்தீர்கள். யாழ்ப்பாண சமூகத்திற்கு தனித்துவமான உளப்பாங்கு எதாவது இருக்கின்றதா ?

உண்மையில் எல்லா சமூகங்களுமே ஒரே மாதிரித்தான். நான் அமெரிக்காவில் இருந்து வந்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் பழைய விழுமியங்கள் பண்பாடுகள் இருந்தன. பாரம்பரிய முறைகளில் ஆழமான விடயங்களைக் காணமுடிந்தது. மேற்கில் இல்லாத ஆழம் அங்கிருந்தது. எங்களுடைய சமய விளக்கங்கள், வழிபாடுகளில் நல்ல அர்த்தங்களைக் காணக்கூடியதாக இருந்தது. நான் அந்த மண்ணில் பிறந்த படியால் எனக்கு அது பொருத்தமானதாக இருந்தது. மேற்கத்திய நாடுகளில் கண்டுகொள்ளமுடியாததை அந்த மண்ணில் காண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது. என்னைக் கண்டுகொள்ளக்கூடியதாக இருந்தது. யாழ்ப்பாணத்திலேதான் நான் பிறந்ததிற்கான காரணங்களும் வாழ்க்கையில் நான் கேட்ட கேள்விகளுக்கான முடிவுகளும் இருந்தன. என்னுடைய உணர்வும் அங்குதான் இருக்கிறது.


போரை நோக்கிச் செல்வதற்கு மக்களும் ஒரு காரணமாக இருந்திருக்கின்றார்களா ?

ஆம். Hierarchical அமைப்பு, சமூகம் பெண்களை நடாத்திய விதம் எத்தனையோ வருடங்களாக அடக்குமுறை இருந்திருக்கிறது. இதை நல்ல விடயமாகச் சொல்ல முடியாது. இப்படியான கொடுமைகள் இருந்திருக்கின்றது. எங்களுடைய சமூகத்தில் இவற்றிற்கெதிரான போராட்டங்கள் அவ்வளவாக மேற்கிளம்பவில்லை. மேலாதிக்கம், சாதிரீதியான ஒடுக்குமுறை சமூகத்தின் அமைப்பில் (Structure இல்) இருக்கின்றது. ஒவ்வொரு சாதியும் (தங்களைப்) அவர்களைப் பார்க்கின்ற முறைமை தங்களை மதிக்கின்ற விதம் இருந்துகொண்டே இருக்கிறது. போரினால் இவை ஓரளவிற்கு மாற்றமடைந்துள்ளன. பெண்களுக்கும் ஓரளவு சுதந்திரம் வந்திருக்கின்றது. பெண்களும் தாங்கள் நன்மையானவற்றை செய்ய, தம்மாலும் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கை பிறந்திருக்கிறது. இவையெல்லாம் போரினால் வந்த நன்மையான மாற்றங்கள். சமூகத்தை உடைப்பற்கான ஒரு காரணமாகப் போரைச் சொல்லலாம்.


இருபது வருடங்களுக்ளுக்கும் மேலாக யுத்தம் நிகழ்ந்து வரும் வேளை தனிப்பட்ட ரீதியில் நீங்கள் எத்தகைய துன்பம் அல்லது நெருக்கீட்டை எதிர்கொண்டீர்கள் ?

தனிப்பட்ட ரீதியில் suffer பண்ணியது என்று சொல்ல முடியாது. எனக்குத் தியானத்தில் நல்ல ஈடுபாடு இருக்கின்றது. அதுதான் என்னை நெருக்கடிகளில் இருந்து விடுபட உதவியது. அல்லைப்பிட்டி போன்ற இடங்களை நாடிப்போனது, யோகாவில் ஈடுபட்டுக் கொண்டது எல்லாம் ஒரு சமநிலையைப் பேண உதவியது. கடும் நெருக்கடிகள் இருந்த போதும் அவற்றில் இருந்து விடுபட்டுச் செயற்பட ஆன்மீக ஈடுபாடும் தொழிலும் உதவியது. எல்லோருக்குள்ளும் ஒரு துயரம் இருந்துகொண்டுதான் இருந்தது. 1983 இல் இங்கு (கொழும்பில்) கலவரம் நடக்கும் போது அங்கு யாழ்ப்பாணத்தில் நான் நிற்கும் போது சுடப்பட்டு நிறையப்பேர் தெல்லிப்பளை ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். அந்த நேரத்தில் கஸ்டப்பட்டு வந்தவர்களை பராமரிக்கின்றதோ அல்லது அவர்களது தேவைகளை கவனிக்கின்றதோ எல்லாம் செய்யக் கூடியதாக இருந்தது. இப்போது நான் அவ்விடயங்களைச் செய்வேனோ தெரியாது.


போரினால் ஏற்பட்ட collective trauma கம்போடியாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இங்கு எப்படி இருந்தது ?

கம்போடியாவில் மிக மோசமாக இருந்தது. நான் கம்போடியாவில் இருந்தபோது யாழ்ப்பாணத்தின் நிலமை மற்றைய இடங்களுடன் ஒப்பிடுகையில் பரவாயில்லை மாதிரி இருந்தது. ஆனால் இப்ப உள்ள நிலமையைப் பார்க்கின்ற போது அது மிக மோசமாகப் போய் விட்டது போலேதான் தெரிகின்றது. இப்படியே போனால் நாம் கம்போடியாவின் நிலையை விரைவில் அடைவோம். அதாவது அடிமட்டம் - ground zero நிலைமையை அடைவோம். குடும்ப அமைப்புக்கள், குடும்ப செயற்பாடுகள், சமூக நிர்வாகங்கள் எல்லாமே உடைந்து போய்விடும். ஒன்றுமில்லாத நிலை அதை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறோம்.


உங்களுக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இருக்கின்றதா ?

வரலாற்றைப் பார்க்கும் போது நம்பிக்கை கொள்ளமுடிகிறது. ஒரு கட்டத்தில் யுத்தத்தில் ஈடுபடுகின்றவர்கள் களைப்படைவார்கள். சமூகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவரும். எந்தக் கட்டத்திலே வரும் என்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது. எவ்வளவிற்கு இன்னும் அழிவு நெருங்க வேண்டுமோ, எவ்வளவு காலத்திற்கு நீடிக்குமோ என்பவை ஒரு கேள்வியாகத்தான் இருக்கின்றன. இன்றைய வடகிழக்கு நிலமையை பார்க்கின்ற போது போரில் ஈடுபடுகின்றவர்களைவிட பொதுமக்கள்தான் பெரும் அழிவிற்கும் மீளமுடியாத துயரத்திற்கும் உட்பட்டு வருகின்றார்கள். போரில் ஈடுபடுகின்றவர்கள் களைப்படைவதைவிட மக்களே களைப்படைந்து அதிக நெருக்கடிக்குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் சொல்வதைப் பார்க்கிற போது மக்கள் அழிவடைந்த பின்னர் தான் போர் முடிவுக்குவரும் போல் தெரிகிறது. இன்றைய உலகில் போர்கள் மக்களின் அழிவைத்தான் விரும்புகின்றன. யுத்தத்தில் ஈடுபடுகின்றவர்கள் பாதுகாக்கப்பட, மக்கள்தான் எல்லாவிதத்திலும் அழிகின்றார்கள்.


மீண்டும் எதிர்காலம் நம்பிக்கையானதாக இருக்கின்றது. பழைய நிலைக்கு மக்களது வாழ்வு திரும்பும் என்பதை எதை அடிப்படையாக வைத்துக் கூறுகின்றீர்கள் ?

ஒன்று வரலாறு. மற்றது எல்லோருக்கும் வயது வரும். மேலும் வெளிச்சக்திகளின் தலையீடு. இந்த வெளிச்சக்திகளின் தலையீடு கூடிக்கொண்டு செல்கின்றது. அந்த வெளிச்சக்திகள் இதைக் கட்டாயப்படுத்தி ஒரு முடிவிற்கு கொண்டுவர முயலும். ஐரோப்பாவில் hundred years war என்று நடந்திருக்கின்றது. ஆனால் எங்களுடைய நாட்டில் அவ்வளவு காலத்திற்கு நீடிக்கலாம் என்று நான் நினைக்கவில்லை.

நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த காலம் ?

போர் தொடங்குவதற்கு முன்னிருந்த காலம். 1983 இற்கு முன்பு, பிறகு 2002 இல் சமாதானம் நிலவிய காலம். 1995 இல் சமாதானம் நிலவிய காலத்தையும் குறிப்பிடலாம்.


இன்றைய உளவியல் எவ்வாறு இருக்கிறது?

மேற்கத்தேய நாடுகளில் உளவியலின் முக்கியத்துவம் உணரப்பட்டு அது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு எல்லாத்துறைகளிலுமே அது முக்கிய இடத்தை எடுத்திருக்கின்றது. எல்லாவற்றையும் உளவியல் ரீதியாக பார்க்கின்ற தன்மையும் வந்திருக்கின்றது. நாடகங்களில், கதைகளில் என்று எழுத்தாளர்கள் உளவியலைப் பார்க்கின்ற தன்மை ஒன்று வந்திருக்கிறது. ப்ரெய்ட் இனது காலத்தில் இருந்துபார்க்கும் போது இதுபற்றிய இன்றைய ஆராய்ச்சி எங்கேயோ போய் இருக்கிறது. மூளை பற்றிய ஆராய்ச்சியை Left Brain - Right Brain என்று வேறுபடுத்தி உளவியல் ரீதியாக ஆராய்வு செய்கின்றனர். இது கூடிப்போய் விட்டதோ என்று சொல்லுமளவிற்கு வளர்ந்திருக்கின்றது. அதிகளவில் Psychological ஆகப் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.


உளவியல் பற்றிய அண்மைக்கால ஆய்வுகளில் உங்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பது ?

அவுஸ்திரேலியாவில் யூப்ளி யொங் என்று என்னோடு வேலை செய்கின்ற ஒருவர் இருக்கின்றார். அவருடைய எழுத்துக்களும் சிந்தனைகளும் எனக்குப் பொருத்தமானதாய் இருப்பதாக உணர்கின்றேன். அவருடைய கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இருக்கிறது.


நீங்கள் தற்போது எவ்வகையன நூல்களை திரும்பவும் வாசிக்க விரும்புகின்றீர்கள்?

எங்களது பழைய தேவார திருவாசகங்களில் ஈடுபாடு இருக்கிறது. திருவாசகத்தில் மிக ஆழம் இருப்பதாக உணர்கிறேன். 1987 வரை நான் சேர்த்து வைத்த புத்தகங்கள் ஷெல் தாக்குதல் காரணமாக அழிந்து விட்டன. இப்போது கடந்த 5 நாட்கள் யாழ்ப்பாணம் போய்விட்டுத் திரும்பும் போது 3 புத்தகங்களை எடுத்து வந்தேன். திருவாசகம், தாயுமானவர் மற்றது திருக்கோவையர் இந்த மூன்றையும் தான் வாசிப்பதற்கு என்று கொண்டு போகிறேன்.

(முடிந்தது)

தொடர்புடைய இடுகைகள்.
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 1
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 2
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 3

December 20, 2009

பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 3

நீங்கள் உளமருத்துவத் துறைக்கு வரமுன்பும்சரி வந்த பின்பும்சரி மனிதர்களுடைய நடத்தைகளை அவதானிக்கின்றவர் என்ற வகையில் சமூகம் உங்களை எவ்வாறு பார்த்தது, பார்க்கிறது ?

உண்மையில் ஒருவிதத்தில் சமூகத்தில் இருந்து விலகி இருந்தேன். ஒன்பது பத்து வயதிலே வேடங்களைப் போட்டுக்கொண்டு இருந்திருக்கிறேன். பிச்சைக்காரன் மாதிரித் திரிவேன். பிச்சை எடுத்துக் கொண்டிருப்பேன். இதிலே நோக்கம் என்று இல்லை. பிச்சைக்காரன் என்றால் எப்படி இருப்பான். மற்றவர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதை அறியும் ஆர்வம் இருந்தது. எவரும் என்னை யார் என்று கண்டுகொள்ளமாட்டார்கள்.


இப்படி நீங்கள் வேடம் போட்டு திரிவதை ஒரு ஆராய்ச்சிக்காக என்று சொல்லலாமா ?

அப்படி நான் சொல்ல மாட்டேன். அது என்னுடைய போக்கு. நான் அமெரிக்காவில் படித்துவிட்டு திரும்பி வந்தகாலம் நீண்ட காலம் பிரச்சினைகள் எங்கும் இருக்கவில்லை. ஈராக் - ஈரான் - ஆப்கானிஸ்தான் எங்கும் பிரச்சினைகள் இருந்ததில்லை. hiking என்று ஒரு முறை இருக்கிறது. ரிக்கற் வாங்கிப் பிளேனில் போகாமல் ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்குப் போய் அங்குள்ள மக்களை அறிந்து கொள்வது. இப்படி பல்வேறு நாடுகளுக்கூடாகப் பயணம் செய்திருக்கிறேன். முதுகிலே ஒரு ‘moving bed’ மாதிரி ஒன்றை கொழுவிக் கொண்டு போவேன். அதை அந்த இடத்திலேயே போட்டுவிட்டுப் படுக்கலாம். இதைப் போட்டுக் கொண்டு ஐரோப்பாவில் இருந்து இலங்கைவரையும் வந்தேன். இதற்குப் பல மாதங்கள் எடுத்தது. ஒவ்வொரு நாட்டிலும் நின்று அங்குள்ள மனிதர்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றார்கள் என்று பார்த்து அவர்களுடன் கதைப்பது வித்தியாசமான ஒரு அனுபவம்.


எந்தெந்த நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறீர்கள் ?

ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிற்கும். கிழக்கு ஐரோப்பாவில் பல்கேரியா, யூகோஸ்லாவியா, துருக்கி மற்றும் ஈராக் இப்போது சண்டைகள் நடக்கின்ற இடங்கள், ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்.


இந்தப் பயணங்களின் பினனர் இலங்கை வந்து என்ன செய்தீர்கள் ?

இது உங்களுக்கும் மிக interest ஆக இருக்கும். இலங்கையில் கிட்டத்தட்ட ஒருவருடம் படிப்பு முடிந்த பிறகு சும்மா திரிந்தேன். அப்பதான் கமம் செய்ய வேணும் என்று வெளிக்கிட்டனான் என்று சொன்னேன். யாழ்ப்பாணத்தில் கள்ளுக் கொட்டிலுக்குப் போய் இரவாகி மூடும் வரையும் அங்கு இருப்பேன். கொஞ்சம் குடித்துவிட்டு அவர்கள் பாடுகின்ற பாட்டுக்களை, அவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்பதைக் கேட்டுக்கொண்டிருப்பேன். இது purpose இற்காகச் செய்ததில்லை. அங்கு போய் இருந்தால் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளலாம். அதேபோல சந்தையில் போய் இருப்பது. சந்தையில் என்ன நடக்கிறது, என்ன கதைக்கின்றார்கள் என்று பார்ப்பது என்று சும்மா சுற்றித்திரிவேன். இது அமெரிக்காவில் இருந்து வந்த காலத்தில் மருத்துவம் பயில முன்பு சுற்றித்திரிந்த காலம். இந்தியாவிற்குப் போய் மருத்துவம் படிக்கும் போதும் இந்தியா முழுவதும் சுற்றினேன் - பயணம் செய்தேன். Train இல் ஊர்சுற்றுவது. இந்தியாவில் Train இல் பயணம் செய்வது மிகவும் மலிவு. அத்தோடு எல்லா இடமும் போகலாம். Train ஒவ்வொரு ஊரிலும் நிற்கும் போது அந்த இடத்திலே இறங்கிச் சுற்றித் திரிந்து விட்டு பிறகு ஏறிப் போவது என்று traveling ஒரு பொழுது போக்காய் இருந்தது. இப்போது traveling என்றால் பெரிய கஸ்டம். மேலும் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா என்று போய் இருக்கிறேன் இது சும்மா ஒரு சுற்றல்தான்.


இந்தப் பயணங்களினூடாக வெவ்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும் வெவ்வேறு மொழிகளைப் பின்பற்றும் மக்களை சந்தித்திருப்பீர்கள். மேற்கு நாட்டவர்கள் கீழைத்தேசத்தைப் பார்க்கின்ற சிந்தனைமுறை வேறுபட்டது. இது பற்றிய உங்களது அனுபவம் எவ்வாறு இருக்கின்றது?

நான் படித்தது மேற்கத்திய கல்விமுறையில். மேலைத்தேச முறைக்கூடாகவே எனது பார்வையும் ஆரம்பத்தில் இருந்தது. படிப்படியாக நான் மாறினேன். ஆனால் அமெரிக்காவில் படித்தகாலம் பல்வேறு சிந்தனைகளுக்கு களமாக அமைந்தது. எமது கலாசாரத்தை எமது (Roots) வேர்களைத் தேடிச் செல்கின்ற, செல்ல வேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்தியது. மாட்டின் லூதர்கிங், மல்கம் எக்ஸ் ஆகியோர் இருந்த காலம். கூடியளவு மாணவர்கள் வியட்னாம் போருக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். போரை நிறுத்தியவர்கள் அவர்கள்தான். அந்தக்காலத்தில் இருந்து போரில் ஒருவித விரோதத்தன்மை இருந்து வந்தது. போர்தான் மனிதவாழ்க்கையில் நடக்கக்கூடியவற்றில் மிகமோசமானது என்று கூறுவேன்.


வியட்னாம் போர்தான் 'போர்' தொடர்பான இந்த எண்ணத்தை உங்களிடம் ஏற்படுத்தியதா ?

போர் என்றால் என்ன என்பதை உண்மையாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது.


ஊடகங்களிற்கு ஊடாகத்தானே நீங்கள் பார்த்திருப்பீர்கள் ?

பல்கலைக்கழகங்களில், ஊடகங்களில் போர் எப்படிக் காட்டப்படுகின்றது என்பதுபற்றி மாணவர்கள் கதைப்பதைப் பார்த்தேன். ஒவ்வொரு நாளும் இவ்வளவு இழப்புக்கள் ஏற்பட்டது என்பதை எவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள், அதிகாரத்திற்காக (Power) பிரசாரம் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைப்பற்றி மாணவர்கள் கதைத்துக் கொண்டதை, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. அமெரிக்காவும் நிக்சனும் அதிகாரத்திற்காக எவ்வாறு பிரசாரம் செய்தார்கள், இந்த வியட்னாம் போராளிகளைப்பற்றி எப்படி எண்ணிக்கையை மாற்றிக் காடடினார்கள் என்பதைப்பற்றி அறிய முடிந்தது. வியட்னாமில் என்ன நடந்தது, போர்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்பதை அங்கிருந்த போது உணர்ந்து கொண்டேன். தனி மனிதர்களுடைய தேவைகளுக்காக, அதிகாரத்திற்காக போர் செய்யப்படுகின்றது என்பதை அந்த நேரத்தில் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

பல்கலைக்கழகத்தில் படிக்கிற போது அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்காக ஓரிடத்தில் வேலை செய்தேன் - ஒரு உணவு விடுதியில் வேலை செய்தேன். என்னுடைய சக ஊழியர் வியட்னாமில் டீ-52 விமானங்கள் குண்டு வீசுவதற்கு Bombardier ஆக இருந்தவர். Bombardier என்றால் அந்தநேரத்தில் பிளேனில் இருந்து குண்டுகள் வீழ்வதற்கு அவர்தான் பொறுப்பு. நாங்கள் மணித்தியாலக் கணக்காக இருந்து கதைப்போம். அப்போது அவர் பல கதைகளைச் சொல்வார். டீ-52 விமானங்களில் இருந்து வியட்னாம் முழுவதும் குண்டு வீசப்பட்டது. அவர் சிலகாலத்திற்குப் பிறகு வியட்னாமிற்குப் போனார். ஒரு வருடம் குண்டு வீசுவதற்குப் பொறுப்பாய் இருந்தவர். லீவு கிடைத்த பின்னர் குண்டுவீசப்பட்ட இடங்கள் எப்படி இருக்கின்றது எனப்பார்ப்பதற்காகச் சென்றபோது, நேரடியாகக் குண்டுகள் வீழ்ந்த இடத்தை, அங்கு என்ன நடந்தது என்பதை அறிந்த போது அவருக்குப் பெரிய அதிர்ச்சியாகப் போய்விட்டது. மனதிற்குள் ஒரு வெறுமை - வெற்றிடமாகப் போய்விட்டது. இதனால் அவர் திரும்பி வந்து வேலையை விட்டுவிட்டு உணவுவிடுதியில் வேலைக்குச் சேர்ந்தார். உண்மையில் அங்கு அவரும் நானும் செய்தது பீங்கான் கழுவுகின்ற வேலை. அந்நேரத்தில் இவையெல்லாம் போர் பற்றிய ஒரு படிமானத்தை எனக்குள் ஏற்படுத்தியது. 1ம் உலகப் போர், 2ம் உலகப் போர் போன்றன ஏன் ஏற்பட்டது? எவ்வாறு நடைபெற்றது? என்பதுபோன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்தது. Economic reason என்ன என்று பார்க்கின்ற போது போர் பற்றிய மிக மோசமான கருத்துநிலையைத் தோற்றுவித்தது.


இலங்கையில் தமிழ்மக்கள் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தசாப்தங்களாக உரிமைகேட்டு பல்வேறு வழிகளில் போராடிவருகின்றார்கள். சாத்வீகப் போராட்டங்கள் தோற்ற நிலையிலேதான் ஆயுதப் போராட்டம் தோன்றியது. தமிழ் மக்கள் தற்காப்பிற்காகத்தானே போராடி வருகின்றனர். இதை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள் ?

எனக்கு இது வீணானது போலத்தான் எரிச்சலூட்டுகிறது. போர் மனிதர்களாலேதான் உருவாக்கப்படுகின்றது. பொதுமக்களின் தேவைகளைப் பார்க்காமல் யுத்தத்தில் ஈடுபடுகின்றவர்களின் தேவைகளுக்காகத்தான் போர் நடை பெறுகின்றது. தங்களுடைய தேவைகள், தங்களுடைய அதிகாரம் இவற்றுக்காகத்தான் நிகழ்கிறது. நன்றாக ஆராய்ந்து பார்த்தால் இது விளங்கும்.


எந்தப் பக்கத்தில் நியாயம், நியாயம் இல்லை என்றெல்லாம் நீங்கள் பார்க்க மாட்டீர்களா ? பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து சாத்வீகப் போராட்டங்களில் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாற்றான் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்கு மாறினார்கள். இல்லையா?

அப்படித்தான் போதிக்கப்பட்டிருக்கின்றது. புகட்டப்பட்டிருக்கின்றது. உண்மையாக ஒரு சாத்வீகப் போரோ அல்லது அகிம்சைப் போரோ நடக்கவில்லை. நீங்கள் இப்போது 1983 இற்குப் பிறகு நடந்தவற்றை அதற்கு முதல் நடந்தவற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள். எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எவ்வளவு சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றது. இபோது யாழ்ப்பாணத்தைப் போய்ப் பாருங்கள் யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகள் எவ்வளவு என்று புரியும். எங்களுடைய கல்வியைப் பாருங்கள். நான்காம் வகுப்பில் அடிப்படை மொழிஅறிவு பற்றி ஆய்வு செய்திருக்கின்றார்கள். நாடுமுழுவதும் தமிழ், சிங்களம் இரண்டிலும் அவ்வாய்வு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் யாழ்ப்பாணம் கடைசி இடத்தைப் பெற்றிருக்கிறது. ஆக, யுத்தத்தால் வந்த அழிவுகளை அதற்கு முதல் நடந்தவைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும். உதாரணமாக திருகோணமலையில் இருக்கின்ற தமிழர்கள் திருகோணமலை நகரத்திற்கு வெளியில் இல்லை. colonization ஐத் தவிர்க்கத்தான் போர் என்றுதான் சொல்கிறார்கள் . ஆனால் போரால் colonization தான் ஏற்பட்டிருக்கிறது. போரால் வந்த நன்மையை விடத் தீமைதான் அதிகம். முந்தைய நிலைமைகளிலும் பார்க்க எவ்வளவு மோசமாய் இருக்கின்றோம்.

போராட்டம் என்று பார்த்தால் அகிம்சை வழியில் போராடும்போது தான் மக்களுடைய பங்களிப்பு இருக்கும். போராட்டம் என்று வரும்போது மக்களுடைய பங்கு அதிகமாக இருக்க வேண்டும். ஆயுதப் போராட்டம் என்று வருகின்ற போது சில மனிதர்களின் கைகளில்தான் ஆயுதம் இருக்கும். அவர்கள்தான் தீர்மானம் எடுப்பார்கள். போர் வெற்றிகரமாக முடிந்தாலும் அவர்களின் ஆட்சிதான் நடக்கும்.


போர் வெற்றிகரமாக முடியும் என்று நம்புகின்றீர்களா ?

உண்மையில் போர் என்றும் வெற்றிகரமாக முடிவதில்லை. போரில் எவரும் வெற்றிபெறுவதில்லை. சில குழுக்கள் வெற்றியடையலாம். மக்களுக்கு எதுவும் அழிவுதான். நோக்கங்கள் மக்களுக்கு பொருத்தமான நோக்கங்களா என்பதெல்லாம் பிரச்சினை. விடுதலைக்கான போர் என்று சொல்வதில் விடுதலை என்றால் உண்மையில் என்ன என்று கேள்வி எழுகின்றது. இன்று ஈராக்கில் நடைபெறும் குண்டு வெடிப்புக்களில் கொல்லப்படுவது ஈராக்கியர்கள்தான். அவர்கள் தங்களுக்குள் தாங்களே அடிபட்டுக் கொள்கிறார்கள். இங்கும் தமிழர்களே தமக்குள் அடிபட்டு இறக்கின்றார்கள். இது கிட்டத்தட்ட auto genocide ஆகப் போய் விட்டது. போராட்டத்தில் இது வெற்றியா ?

போர் ஆரம்பிக்கமுதல் தமிழர்களின் சதவீதம் 30 ஆக இருந்தது. இப்போ பிரித்து விட்டார்கள். முஸ்லிம் என்றும் மலையகம் என்றும் - வடக்கு வேறு கிழக்கு வேறு என்று பிரித்திருக்கிறார்கள். அதேநேரம் நாட்டை விட்டு வெளியேறியவர்களின் தொகையைப் பாருங்கள். இலட்சக்கணக்கில் வெளியேறிவிட்டார்கள். இப்போது நாங்கள் 10 வீதத்திற்குக்கும் குறைவாக கீழே வந்து விட்டோம். இப்போது யாழ்ப்பாணத்தைப் பாருங்கள் சனத்தொகை 3 இலட்சத்திற்கு வந்துவிட்டது. வயோதிபரும் பெண்களும் தான் மிஞ்சுகின்றனர். இந்தக் காரணங்களால் தான் போர் எனக்கு உடன்பாடற்றதாக இருக்கின்றது. போரின் விளைவுகள், கால் இழந்தவர்கள், அங்கவீனமானவர்கள் இவை எல்லாம் போருக்கு எதிரான கருத்தை ஏற்படுத்துகின்றது. மனித வாழ்வில் ஏற்படும் மிகவும் மோசமான ஒரு நிகழ்வு போரே.


நீங்கள் மட்டுமல்ல சாதாரண தமிழர்களைக் கேட்டாலும் சமாதானத்திற்கு ஆதராகவே கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் 86 வீதமான சிங்களவர்கள் போருக்கு ஆதரவாகவே கருத்தத் தெரிவித்துள்ளனரே ?

சிங்கள மக்கள் யுத்தத்தை விரும்புகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு தடவையும் அவர்கள் சமாதானத்திற்கே வாக்களித்துள்ளனர். ஊடகங்கள் சில கருத்துக்களை ஊட்டி மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சில கருத்துக்களை ஊட்டி மக்களை அப்படியான முடிவை எடுக்கப்பண்ணலாம். உண்மையாக மக்கள் போரை விரும்புகிறார்கள் என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அந்தக் கருத்துக் கணிப்பில் சில குறைபாடுகள் இருக்கின்றது என்றே என்னால் கூற முடியும்.


யுத்தம் எப்போது முடிவிற்கு வரும் என்று கருதுகின்றீர்களா ?

இருதரப்புக்களும் களைப்படைகின்ற போது யுத்தம் செய்து பயனில்லை என்று வருகின்ற போது யுத்தம் நின்றுவிடும்.

(இன்னும் வரும்)

தொடர்புடைய இடுகைகள்.
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 1
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 2

Statcounter