வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 09, 2011

வெள்ளாளமயமாதல்

கடந்த ஜனவரியில் ஒரு இணையச் சஞ்சிகைக்காகக் கொடுத்த மிக விரிவான நேர்காணலின் ஒரு கேள்வியையும் பதிலையும் இப்பதிவில் கொடுக்கின்றேன். நேர்காணல் முழுமையாகச் செப்பனிடப்படாத காரணத்தினால் இன்னமும் வெளியாகவில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

கேள்வி : ஈழத்தில் சாதியம் என்பது புலிகளுக்கு முன்பு எப்படி இருந்தது? புலிகள் காலத்தில் எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? சாதிய அரசியலின் எதிர்காலம் என்ன?

பதில் : ஒட்டுமொத்த சமூக அசைவியக்கத்தின் போக்கை முன்வைத்து அதை, புலிகளுக்கு முன் - புலிகள் காலத்தில் - புலிகளுக்குப் பின் என மூன்று கூறுகளாக்கி ஆய்வுக்கு உட்படுத்துவதனூடாக இவ்விடயத்தை அணுகமுடியும் என நினைக்கின்றேன். இந்த மூன்று கூறுகளையும் பல்வேறுபட்ட நோக்கு நிலைகளில் இருந்து பார்க்க வேண்டியுள்ளது.

புலிகளுக்கு முற்பட்ட சமூகக் கட்டமைப்பும் அதில் சாதியநிலை பற்றியுமான ஆய்வுகள் பலரால் செய்யப்பட்டுள்ளது. மைக்கேல் பாங்க்ஸ், ஹோம்ஸ், பஃபன்பேர்கர் ஆகிய வெளிநாட்டவர்களில் இருந்து சிவத்தம்பி வரை மிக விரிவான ஆய்வுகளைச் செய்துள்ளார்கள். அதேநேரம், அவ்வாய்வுகளை இந்திய சமூகக் கட்டமைப்புடன் பொருத்திப் பார்த்து அதன் வித்தியாசங்கள் - ஒற்றுமைகள் பற்றியும் விரிவாகவே பேசியுள்ளார்கள். ஆயினும் புலிகள் காலத்திலும் சரி அதற்குப் பின்னரும் சமூகக் கட்டமைப்பு எவ்வாறான மாற்றத்தைக் கண்டுள்ளது என்ற ஆய்வுகள் முறையாகச் செய்யப்படவில்லை. இதேநேரம், 'அக்கடமிக்' நோக்கிலான ஆய்வுகளுக்கு அப்பால் டானியல், டொமினிக் ஜீவா தொடங்கி இன்றுவரைக்கும் சாதியத்திற்கு எதிரான ஏராளமான அரசியல் பிரதிகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஏராளமான வித்தியாசமான பார்வைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாதியக் கட்டமைப்பிற்கு எதிரான பிரதிகள், சாதியம் எதிர் தேசியம் என்ற கருத்தியலை முதன்மைப்படுத்தும் பிரதிகள், வர்க்க அடையாள முதன்மைப்படுத்தல்களுடன் கூடிய சாதியக்கட்டமைப்பிற்கு எதிரான பிரதிகள், தேசிய அடையாள முதன்மைப்படுத்தல்களுடன் கூடிய சாதியக்கட்டமைப்பிற்கு எதிரான பிரதிகள், பௌத்த பேரினவாத சார்பு நிலையுடைய சாதியக்கட்டமைப்பு எதிரான பிரதிகள், அடையாளம் சார்ந்து ஒடுக்கப்படும் சமூகங்களுக்கெதிரான பிரதிகளில் காணப்படும் சாதியப்பாகுபாட்டுக்கெதிரான குரல் என பல்வேறுவகையான வித்தியாசமான பார்வைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை ஒருவரது வாழ்நிலை, அனுபவங்கள் சார்ந்து பல்வேறு சார்பு நிலைகளில் வெளிப்பட்டுள்ளன.

இவ்விடத்தில், சாதியம் தொடர்பாகச் சில விடயங்களைத் தொட்டதாக "சாதியின்மையா? சாதிமறைப்பா?" என்ற நூலில் இடம்பெற்ற 'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதிப் பாகுபாடு' என்ற கட்டுரையை மையமாகக் கொண்டு சிலவிடயங்களைக் கூறலாம் என்று நினைக்கின்றேன். புலிகளுக்கு முன்னர் அந்தஸ்து மற்றும் அதிகாரப் படிநிலைகளுடன் கூடிய சாதியக்கட்டமைப்பாகவே யாழ்ப்பாணச் சமூகம் இருந்தது. சமூகக் கட்டமைப்பிற்குள் நிகழ்ந்த அசைவியக்கம் பற்றிய விடயங்களை வேறாக அணுகுவது உகந்தது. மேற்கூறிய கட்டுரையாளர் கூறுவது போன்று புலிகள் காலப்பகுதி, சமூகத்தில் சாதிப்படிநிலை ஒரு வலிமைமிக்க சக்தியாக இருப்பதனை இல்லாதுசெய்தது. அதற்காகப் பல காரணங்களை அவர் பட்டியலிடுகின்றார். யுத்தகாலப்பகுதி, விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர்கள் பலர் வெள்ளாள சாதிக்கு மாறாக பிற சாதிகளில் இருந்து வந்திருந்தமை, தமிழ்த்தேசிய இராணுவம் என்ற புலிகளது நகர்வில் சாதியப்பாகுபாடுகளும் கதையாடல்களும் ஏற்படுத்தக்கூடிய உடைவு, சாதியப்பாகுபாட்டிற்கு எதிரான கதையாடல், தமது இலக்கில் முற்றுமுழுதாகக் கவனம் குவிப்பதை குழப்பும் என்ற கருத்துநிலை போன்றவற்றால் அது தொடர்பான கதையாடல்களை முற்றுமுழுதாகத் தடை செய்திருந்தனர்.

புலிகள் செய்தது சரியா? தவறா? என்ற விவாதத்திற்குள் மூழ்கிவிடுவோமேயானால், நமது நிலைப்பாடுகளுக்கான காரணங்களைப் பட்டியலிடுவதோடு அதன் நீட்சியில் சம்பவங்களைப் பட்டியலிடத் தொடங்குவோம். கட்டுரையாளர் பரம்சோதி தங்கவேல் அவர்கள் புலிகள் செய்த விடயங்களைக் கோட்பாட்டுருவாக்கம் செய்ய முற்பட்டிருந்தால், ஆய்வின் பிற திசைகளுக்குப் போயிருக்க வேண்டியிருக்கும். சாதியை ஓரளவு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் என்று புலிகளுக்குக் கொடுக்கும் வெகுமதியைக் கொடுக்க முடியாதிருந்திருக்கும் என்றே நினைக்கின்றேன். கட்டுரையாளர் கூறும் விடயங்களுடன் என்னால் முற்றுமுழுதாகச் சில காலங்களுக்கு முன்புவரைக்கும் ஒத்துப் போக முடிந்திருக்கின்றது. புலிகள், சாதியின் அதிகாரப் படிக்கட்டுக்களை நீர்த்துப் போகச் செய்துள்ளார்கள் - அவற்றை முற்றாக உடைக்க முடியவில்லையே தவிர அவற்றின் கொடுமையை இல்லாமல் ஆக்குவதற்கு பெரும்பங்களிப்பைச் செய்திருக்கினார்கள் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. இதேநேரம், ஒரு ஆய்வுநிறுவனத்திற்கூடாக இவ்வாய்வை மையப்படுத்தி அதனை விரிவாக்கி, தொடாத புள்ளிகளையும் இணைத்து விரிவான ஆய்வொன்றைச் செய்வதற்கான செய்யும் நோக்கில் - முன்வடிவ மாதிரியொன்றை உருவாக்கும் நோக்கில் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்தேன். ஆனால், ஒருகட்டத்திற்கு மேல் போக முடியவில்லை. மாறாக பிறிதொரு திசைவழி பயணிப்பதே சரியாக இருக்கும் என்று தோன்றியது.

இவ்விடயத்தை மேற்கொண்டு பார்த்தால், மீண்டும் புலிகளது வளர்ச்சிப் போக்குத் தொடர்பான எனது ஏற்கனவேயான சட்டகத்திற்கே வர வேண்டியுள்ளது. பல்வேறுபட்ட இயக்கங்களும் இருந்த காலப்பகுதியில் சாதிய விடுதலை தொடர்பாக அதிகம் ஆர்வம் கொண்டிருந்த இயக்கம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆகும். ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஏராளமான தலித் இளைஞர்களைக் கொண்டிருந்த காரணம் அதில் ஒன்றாக இருந்திருந்ததாகக் கூறுகின்றார்கள். அதேநேரம் 1920 இல் இருந்து 60 கள் வரை நிகழ்ந்த கோவில் உள்நுழைவுப் போராட்டங்கள் காரணமாக, தலித் விடுதலை தொடர்பான பிரக்ஞை சமூக மட்டத்தில் ஓங்கியிருந்திருக்கின்றது. தேசிய விடுதலை என்ற நோக்கம் பிற இயக்கங்கள் சாதிய விடுதலை தொடர்பாக அக்கறைப்படாமல் இருப்பதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் அல்லது ஆதிக்கசாதியைச் சேர்ந்த இளைஞர்களால் நிரம்பியிருந்த முற்போக்கான இளைஞர்கள் கூட சாதிய விடுதலை தொடர்பில் அக்கறையற்று இருந்திருக்கலாம். பல்வேறு இயக்கங்களும் காணப்பட்ட நேரத்தில் ஒவ்வொரு தேசிய இயக்கத்திற்கும் அவர்களது பின்னணி சார்ந்து வர்க்கம், சாதி, பால் விடுதலைகள் தொடர்பாக, வெவ்வேறு சதவிகிதங்களில் ஆர்வம் இருந்திருப்பத்தை அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆயினும், நான் ஏற்கனவே கூறியபடிக்கு 90 ஆண் ஆண்டிற்குப் பின்பான விடுதலைப்புலிகளின் இரண்டாவது வளர்ச்சிக் காலப்பகுதியை நோக்கினால், அது அவர்கள் குறைநிலை அரசாக தங்களை வடிவமைத்துக் கொண்ட காலப்பகுதி. இக்காலப்பகுதியில் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதே நான் கவனப்படுத்தவிரும்பும் பகுதி.

தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பாத்திரத்தைத் தொடர்ந்து தமிழர்களுக்கான அரசு என்ற பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார்கள். இக்காலப்பகுதியிலேயே தமிழீழ சட்டக் கோவையைத் தயாரித்தார்கள். காவல்துறையை உருவாக்கினார்கள். நீதிமன்றத்தையும் உருவாக்கினார்கள். தமிழீழ சட்டக் கோவையில் சில முக்கியமான விடயங்களை உள்ளடக்கினார்கள். யாழ்ப்பாண படிநிலைச் சமூகக்கட்டமைப்பிற்கு ஆதாரமாக இருக்கின்ற தேசவழமைச் சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தியதோடு, சீதனத் தடைச் சரத்துக்கள், குடிமைத்தொழிலை ஒழிப்பதற்கான சரத்துக்கள், சாதிப்பாகுபாட்டிற்கு எதிரான சரத்துக்கள் போன்றவற்றை இயற்றினார்கள். தமிழீழ அரசு என்ற தமது பாத்திரத்தில், அசமத்துவங்களுக்கு எதிரான விடயங்களை சட்டம், காவல்துறை, நீதிமன்றம் என்ற போக்கில் அணுக முற்பட்டார்கள். அதாவது, சட்ட அமுலாக்கத்தின் மூலம் சாதியப்பாகுபாட்டை எதிர்கொள்ள முற்பட்டனர். குறைநிலை அரசு தனது சகல பலவீனங்களுடனும் தொடர்ச்சியாக இயங்கியது என்றுதான் கூற வேண்டும். கட்டுரையாளர் விடுதலைப்புலிகளை விடுதலை இயக்கம் என்ற கருத்துநிலையில் இருந்தே இறுதிவரைக்கும் அணுகியிருக்கின்றார். தனது அணுகுமுறையில் குறைநிலை அரசு என்ற என்ற விடயத்தைச் சேர்த்திருந்தால் தனது ஆய்வில் மேலும் சில சாதகமான கருத்துநிலைகள் நோக்கி நகர்ந்திருக்கலாம் என்பதே எனது கருத்து.

ஆனால், எனது கருத்தியல் மேற்கூறிய ஆய்வாளரது பாதையில் வழி பயணிப்பதல்ல. 90 இற்குப் பின்னரான குறைநிலை அரசுருவாக்கக் காலப்பகுதியில் புலிகள் சாதிப் பாகுபாட்டிற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை வேறுவிதமாக அணுகமுற்படுகின்றேன். மேற்கொண்ட நடவடிக்கைகளது விளைவுகளைக் கொண்டு, அதன் சாதக நோக்கிற்கு மாற்றான வேறொரு புள்ளியை வந்தடையலாம். ஒரு அரசு என்ற பாத்திரத்திலான புலிகளது அணுகுமுறை சாதிய ரீதியான பாகுபாடுகளைச் சட்ட விரோதமாக்கிய அதேநேரம், அவர்களது 'ஆட்சியில்', பன்மைத்துவக் கதையாடல்களோ சுதந்திரமான சிவில் சமூக இயக்கங்களோ தொழிற்பட வாய்ப்பிருக்கவில்லை. இவ்விடத்தில், சாதிய நோக்கில் விடுதலைக்கான கதையாடல்களும் தடுக்கப்பட்டன. சாதிய இயக்கங்களது செயற்பாடுகளும் இல்லாமலாக்கப்பட்டன. இருந்து கொண்டிருந்த அசமத்துவ சமூக அமைப்பு அந்தரத்தில் விடப்பட்டது.

இதன் அடுத்த கட்டத்தில் நிகழ்ந்ததை நான் "வெள்ளாளமயமாதல்" என்ற வார்த்தையால் குறிப்பிட விரும்புகின்றேன். இக்காலப்பகுதியை நான் சிறீனிவாசனின் "சமஸ்கிருதமயமாக்கல்" என்ற கோட்பாட்டை பயன்படுத்திப் பொருத்திப் பார்க்க முற்படுகின்றேன். ஏற்கனவே வழிபாட்டு முறைகளின் மாற்றங்களூடாக 'மேல்நிலையாக்கல்' எவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் பற்றிய ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஜனநாயகச் சமூகச் சூழலில் நிகழ்ந்த அவ்வகையான சமூக அசைவியக்கங்களுடன் ஒப்பிடும் போது, 90 களின் பிற்பட்ட காலப்பகுதி என்பது விசேட நிபந்தனைகள் நிரம்பியதாகும். நிபந்தனைகளின் விளைவுகள் தொடர்பாகவே நாம் அதிகமாகப் பேச வேண்டியிருக்கின்றது. அண்மையில், நண்பரொருவர் தெரிவித்த கருத்தை முக்கியமானதாகக் கருதுகின்றேன். அதாவது "சகல ஆலயங்களும் தமது முகப்பையும் அலங்காரத்தையும் நல்லூர் கோயிலை முன்மாதிரியாகக் கொண்டு, மாற்றத்திற்கு உட்படுத்தி வருகின்றமை". ஏற்கனவே வல்லியக்கன், வல்லிபுரநாதராக மாறியதைப் பற்றி ரகுபதி எழுதியிருக்கின்றார். சிறுதெய்வ வழிபாடுகள் பெருங்கடவுளரை நோக்கி நகர்ந்தமையை சமஸ்கிருதமயமாகல் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கக்கூடியதாக இருந்தாலும், சாதியக் கதையாடல்களை முற்றாகத் தவிர்த்தன் பின்னர் வழிபாட்டு முறைகள் முற்றாக வெள்ளாயமயமாகின என்ற புள்ளிக்கே வந்தடைய முடியும். அதாவது, தலித் சமூகங்களைப் பொறுத்தவரை அவர்கள் தமக்கேயான தனித்துவமான வழிபாட்டு முறைகளையும், வாழ்வுமுறைகளையும், தனித்துவமான கலை வெளிப்பாடுகளையும் கரைத்து வெளியேறி வெள்ளாளமயமாகினர் என்று தான் கூற வேண்டியுள்ளது. ஒருவகையில் தலித் சமூகங்கள் நிலம் சார்ந்தல்லாமல், தமது பண்பாடு சார்ந்து புலப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகவே கருதவேண்டும். உள்ளூர் அறிவுப் பாதுகாப்பு என்ற தளத்தில் இயங்கிவரும் ஜெயசங்கர் போன்றவர்கள் சமூக அசைவியக்கத்தின் போது இழக்கப்படும் சமூகப்பெறுமானங்கள் தொடர்பாகத் தொடர்ச்சியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தலித் சமூகங்கள் 'அடையாளத்துறப்பை' மேற்கொண்டமையை வெவ்வேறு புள்ளிகளில் வைத்து பரவலாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான சமூக இயக்கம் ஒருவகையில் அவரவர் தெரிவு என்ற போதிலும் அவற்றின் சாதக பாதங்களைப் பேசுவதும் பாதகங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாகச் செயற்படுவதும் மிக முக்கியமானது.

தலித் விடுதலை என்பது தலித் அடையாளத் துறப்பை மேற்கொள்வதல்ல. தலித் அடையாளப் பேணுகையுடன் தலித் பண்பாடு, தலித் வரலாறு, தலித்திய வாழ்வுமுறைகளுக்கான கட்டமைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதனூடான சமத்துவமே. தலித் மக்களைத் பண்பாடற்றவர்களாகவும், தனித்துவமான வாழ்வுமுறையற்றவர்களாகவும் நினைக்கும் போக்கே 'வெள்ளாளமயமாதல்' மனநிலையின் அடியில் இருப்பது. ஆதிக்க சாதிகள் மத்தியில் வேலை செய்பவர்கள் கரிசனை கொள்ள வேண்டிய பகுதி 'மற்றமையை ஏற்றுக்கொள்ளுதல்' தொடர்பானது. மாறாக 'மற்றமையைத்' தனக்குள் கரைத்துக்கொள்ளுதல் ஒரு வித 'காலனித்துவமாகவே' கருத வேண்டும். கடந்த தேர்தலில் 'சிறுபான்மைத் தமிழர் மகாசபை' போட்டியிட்ட போதிலும், வாக்குகளை பெறமுடியாமைக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று என்பது எனது நிலைப்பாடு. தலித் அடையாளங்கள் கரைக்கப்பட்ட சமூகமாகவே தற்போதைய தலித் சமூகம் காணப்படுகின்றது. ஆக, இனிமேல் தலித் விடுதலை தொடர்பான செயற்பாடுகளின் போது வேலை இரட்டிப்பாகின்றது. 'வெள்ளாள நீக்கம்' செய்வதனூடாக - அதாவது தலித் சமூகங்களது தனித்துவத்தை மீட்டெடுப்பதுன் ஊடாகவே தலித் அரசியலைச் செய்ய முடியும். பின் காலனித்துவம் மற்றும் பெண்ணியப் பிரதிகள் தத்தமது அரசியலில் மேற்கண்ட விதத்தில் இயங்கியிருப்பதைக் காணலாம். 'எட்வேர்ட் சைட்' இன் ஓரியன்டலிசம் கருத்தியலில் இருந்து 'சபல்ரன் குழுவின்' பிரதிகள் வரை 'காலனிய நீக்கம்' தொடர்பாக உரையாடப்பட்டுள்ளது. மூன்றாமுலக நாடுகள் தம்மை 'காலனிய நீக்கம்' செய்து கொள்வது தொடர்பான ஏராளமான பிரதிகளை உற்பத்தி செய்துள்ளதை நாம் அறிவோம். இதற்குச் சமாந்தரமாகவே ஈழத்து தலித் சமூகங்கள் தொடர்பான விடயங்களைப் பார்க்க முற்படுகின்றேன்.

மேற்படி இருவித பார்வைகளிலுமுள்ள சாதகங்களும் பாதகங்களும் மிக விரிவாக உரையாடப்பட வேண்டியுள்ளது. முதலாவது, தீண்டாமையின் வீரியத்தைக் குறைக்கும் நோக்கோடு செய்யப்பட்ட விடயங்கள் தொடர்பானது. அதன் காரணமான சாதகமான விளைவுகள் எவை? பாதகமான விளளவுகள் எவை? என்பது தொடர்பான உரையாடல்கள் மேலும் மேலும் நிகழ்த்தப்பட வேண்டியுள்ளது. அதே நேரம், இரண்டாவது பார்வையில் இருந்தான உரையாடல்கள் கருத்தியல் தளத்தில் தலித் அரசியலை மேலும் பலப்படுத்தும் என்றே நினைக்கின்றேன். இழக்கபட்ட தலித் வாழ்வு தொடர்பான - தலித் ஆவணகம் என்ற ஆவணப்படுத்தல் செயற்றிட்டம் ஒன்றை நூலகத்தூடாக முன்னெடுக்க உள்ள அதே வேளை, இவை தொடர்பான - தற்போதைய சமூகக் கட்டமைப்புத் தொடர்பான விரிவான ஆய்வொன்றையும் செய்வதற்கான வகையில் நகர்ந்து கொண்டிருக்கின்றேன். இச்செயற்பாடுகள் தலித் அரசியல் தொடர்பாக மேலும் பல புதிய வெளிகளைத் திறந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு உண்டு.

கேள்விக்கான பதில் மிகவும் நீண்டுவிட்ட போதிலும், இயன்றவரை சுருக்கமாக அளிக்கப்பட்டுள்ளதாகவே கருதுகின்றேன். புலிகள் காலத்தைய நடவடிக்கைகளில், சமூகத்தில் சாதியத்தின் விளைவுகள் தொடர்பாக இன்னமும் விரிவான பார்வையில் உரையாடப்பட வேண்டியுள்ளது. சம்பவங்களை மட்டும் மையமாக வைத்து, இடம்பெறும் உரையாடல்கள் தலித் அரசியலுக்கு வலுச்சேர்க்கும் என்று நினைக்கவில்லை. 'எதிரியை வரையறை செய்து கொண்டு' தலித் கருத்தியலை வளர்த்தெடுக்கப்படுவதை விட, சகல ஒடுக்குமுறைப் புள்ளிகளில் இருந்தும் கட்டமைக்கப்படும் நிலை சாத்தியப்படும் போது ஈழத்து மைய அரசியலாக தலித்திய அரசியல் மாற்றம் பெறும் என்று கூற முடியும். தலித்திய அரசியலின் அத்திவாரத்திலேயே இனத்துவ அரசியல் கட்டமைக்கப்பட வேண்டும். இனத்துவ அரசியலின் நிழலில் தலித்திய அரசியல் சாத்தியப்படாது. இவ்விரு அரசியல் போக்குகளுக்குமிடையிலும் நேச முரண்களை உருவாக்கி, முரணியத்தைச் சாத்தியப்படுத்த வேண்டியது தலித்திய விடுதலை விரும்பிகளது முக்கிய கடமையாகும்.

December 01, 2011

சோபாசக்தி : குற்றச்சாட்டா? அவதூறா?

முன்னைய பதிவு - சோபாசக்தி : மாற்றுக்கருத்து மாணிக்கம்

சோபாசக்தி, நான்தான் நாடோடிப் பாடகன் என்ற அடிப்படையில் என்மீதுவைத்த குற்றச்சாட்டுக்களில் மிக முக்கியமானது ஒன்றுக்கு மேற்பட்ட பெயரில் கருத்திடுகின்றேன் என்பது. சோபாசக்தி முன்வைத்த குற்றச்சாட்டுக்கான எந்தவிதமான ஆதாரங்களுமற்று அக்குற்றச்சாட்டை முன்வைத்தது சோபாசக்தி நீண்டகாலமாக போராடிவரும் எந்த அறத்திற்குள் வருமென்று உண்மையிலேயே புரியவில்லை. ஆக, சோபாசக்தியின் இவ்வறிவிப்பு திட்டமிட்ட அவதூறு என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

2009 நடுப்பகுதியின் பின்னர் நான் எந்தவிதமான புனைபெயர்களிலும் எழுதுவதில்லை என்பதைப் பல நண்பர்கள் அறிவார்கள். அதுமட்டுமல்லாது நான் ஏற்கனவே புனைபெயரில் எழுதியவற்றை வலைப்பூவில் சேகரித்தும் வைத்துள்ளேன். அதை யாரும் பார்த்து எனது அரசியல் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். 2009 வரையான எனது அரசியல் நிலைப்பாடுகளின் பின்னர் சில விடயங்களில் எனது கருத்துக்களைப் புடம்போட்டுக் கொண்டேன். அதேநேரம் முன்னைய சில கருத்துக்கள் மேலும் கூர்மையடைந்திருக்கின்றன என்பதையும் கூறிக்கொள்ள வெட்கப்படவில்லை. ஒளித்து வைக்கவும் விரும்பவில்லை. [ http://unidentifiedspace.blogspot.com/ ]

2009 இன் பின்னர், எனது தனிப்பட்ட செயற்பாடுகள் போக பொதுச்செயற்பாடு என்று வரும்போது முற்றுமுழுதாக நூலக இணைய ஆவணக்காப்பகம் என்ற அரசியல் சார்பற்ற செயற்பாட்டில் ஈடுபடுத்திக் கொண்டேன். குறித்த செயற்பாடு அரசியல் சார்பற்ற தளமாக இருக்க வேண்டும் என்பதற்காக அச்செயற்பாட்டில் ஈடுபடும் நண்பர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் உரையாடல்களும் ஏராளமானவை. ஆவணச்சேகரிப்பு - ஆவணப்படுத்தல் செயற்பாடு மூலம் இலங்கை தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்த அனைத்து வகையான ஆவணங்களையுமே எண்ணிமப்படுத்தி வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றோம்.


சோபாசக்தியின் குற்றச்சாட்டுக்களைப் பட்டியல்படுத்துவோம்.

# பொதுக்காரியமும் நிதிச்சேகரிப்பும்

குறிப்பாக என்னை இலக்குவைத்து நாடோடிப் பாடகனிடம் கேட்கப்பட்ட கேள்வியாயிருந்தாலும், நானும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டதனாலும் இதற்கான பதில் சோபாசக்தி போன்று சில விடயங்களை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கும் அவசியமாகின்றது. நூலகம் என்ற இணைய ஆவணக்காப்பகத்தில் உள்ள ஆவணங்கள் என்றைக்கும் புலி சார்பு - புலி எதிர்ப்பு என்ற வகையில் இணைக்கப்படவில்லை. ஆக, அதில் பங்களீப்பவர்களும் நேர்மையாக புலி சார்பு - புலி எதிர்ப்பு கதையாடல்களது தாக்கத்திற்கு உள்ளாகவுமில்லை. யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியுடன் தொடர்புடைய சி.வி.கே சிவஞானம் பங்களித்திருக்கின்றார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட்ட சிவச்சந்திரன் பங்களித்திருக்கின்றார். புலியெதிர்ப்பாளராக அறியப்பட்ட ரட்ணஜீவன் ஜூல் இனது பங்களிப்பு இதில் இருந்திருக்கின்றது. புலியாதரவாளராக அறியப்பட்ட பத்மநாப ஐயர் முக்கிய பொறுப்பில் உள்ளார். இடதுசாரிக் கண்ணோட்டத்துடன் கூடிய அரசியலை முன்வைக்கும் ராசநாயகம், கங்காதரன் போன்றோர் நூலகம் : ஐக்கிய இராச்சிய குழுவில் அங்கம் வகிக்கின்றார்கள். முறிந்தபனை ஆசிரியர்களில் ஒருவரான தயா சோமசுந்தரம் ஆலோசனைக்குழுவில் அங்கம் வகிக்கின்றார். சேரனது பங்களிப்பு நூலகத்தில் இருந்திருக்கின்ற்றது. ராகவனது பங்களிப்பு நூலகத்தில் இருந்திருக்கின்றது. இதுதான் நூலகம்.

நூலகம் இணைய ஆவணக்காப்பகம் சசீவனது தனிப்பட்ட செயற்றிட்டம் அல்ல. சசீவன் சில காலங்கள் முக்கிய பொறுப்பில் செயற்பட்டிருக்கின்றார். மாபெரும் ஆவணச்சேகரிப்பு இயக்கத்தின் அங்கமாகப் பலரும் செயற்பட்டுள்ளார்கள். இவ்விடயத்த்தில் செயற்படுபவர்கள் தங்கள் அரசியல் கருத்துக்களைக் களைந்துவிட்டு வந்தே இப்பொதுத்தளத்தில் பங்களித்துள்ளார்கள் என்று நான் நிச்சயமாகவே நம்புகின்றேன். சிலவேளை அவர்களது பங்களிப்புக்களை உறிதிப்படுத்துபவனாக நான் செயற்பட்டிருக்கலாம். மற்றபடிக்குச் சகலருடைய பங்களிப்புக்களும் 'தந்திரமாகப்' பெறப்படவில்லை. நூலகச் செயற்ப்பாட்டின் பன்முகத்தன்மை விளங்கப்படுத்தப்பட்டே அவர்களது பங்களிப்புக்கள் உறுதி செய்யப்பட்டது.

# டபுள் கேம் அல்ல ட்ரிபிள் கேம்

அனைத்து தரப்புக்களுடைய நூலகத்தின் பங்களிப்புக்களை உறுதிப்படுத்துவதை - அதனை அரசியல் சார்புகளற்ற பொதுத்தளமாக வளர்த்துச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எனக்கிருந்தது. அதனைச் செவ்வனே செய்துள்ளேன் என்று நிச்சயமாக திருப்திப்படவே முடிகின்றது. இது டபுள் கேம் ஆகவோ அல்லது ட்ரிள் கேம் ஆகவோ அர்த்தப்படுமாக இருந்தால், அது அவரவரது புரிதலுடன் தொடர்புபட்ட விடயமாகவே பார்க்க வேண்டும். சமூகத்தில் வித்தியாசமான புரிதல்களுடைய நபர்கள் இருப்பார்கள் என்ற ரீதியில் அவர்களது கேள்விகளுக்குப் பதில் சொல்வதை நினைத்து சந்தோசப்பட முடியுமே தவிர கவலைப்பட முடியாது. அரசியல் சார்பற்ற தளத்திற்கு வெளியே வெறும் அறிவுத்தளத்தில் செயற்படும் ஒருவரது எல்லைகள் தொடர்பான புரிதலை சோபாசக்தி மேலும் வளர்த்துச் செல்வது அவசியமானது. அல்லது, ராஜன்குறை சொல்வதை புரிந்து கொள்ளக்கூட முடியாமல் மீண்டும் மீண்டும் ஒரே எல்லைக்குள் ராஜனை 'இழுத்து வந்து' பேசுவது போல் பேசிக்கொண்டிருக்க வேண்டும். ராஜன் குறை போன்று அனைவரும் பொறுமைசாலிகளாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

தட்டையாக வரையறை செய்யப்பட்ட ஒற்றை அறக்கருத்தை வைத்துக் கொண்டு உலகத்தையே அளந்துவிட சோபாசக்தி துடியாய்த் துடிப்பது ஏனென்றுதான் புரியவில்லை. இந்த உலகத்தை அரசியல் என்ற அளவுகோலால் மாத்திரம் அளந்துவிட முடியாது. அதைத்தாண்டி பல்வேறு கோணங்களில் உலகைப் புரிந்து கொள்ளும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமாக வர்க்கநிலைப்பாடு சார்ந்து மாத்திரம் இவ்வுலகத்தை புரிந்து கொண்டு விடலாம் அல்லது அதன் அசமத்துவத்தைப் போக்கிவிடலாம் என்ற மரபார்ந்த மார்க்சியக் கருத்துக்கள் கேள்விக்கு உட்பட்டதையும் அவ்வுடைப்பாற்றில் பல்வேறுபட்ட கருத்தியல்கள் பல்கிப் பெருகியதும் நம் கண்முன்னால் நிகழ்ந்த சம்பவங்களல்லவா?

ஒரு அறிவுத்தளத்தில் - அரசியல் சார்பற்ற பொதுத்தளத்தில் இயங்கும் ஒருவருடைய தொடர்புகளையும் செயற்பாடுகளையும் அதே தளத்தில் உள்ள அறநிலைப்பாடுகளை முன்வைத்தல்லவா அளவிட முடியும்? ராஜன்குறையின் மொழியில் சொல்வதானால் ஒரே கத்தியை எங்கும் பாவிக்க முடியாது என்று கூற முடியும். எம்மிடம் ஒரேயொரு கத்திதான் உண்டென்பதற்காக அதையே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்திவிட முடியுமா என்ன?

சோபாசக்தி போன்று அரசியல் தளத்தில் மிகக்கறாராகத் தொழிற்படுவதாக என்னைச் சமூகத்தில் முன்னிறுத்திக் கொண்டு - புலிகளை 100 வீதம் எதிர்க்கின்றேன். அதேநேரம் இலங்கை அரசை 200 வீதம் எதிர்க்கின்றேன் என்று 'அரசியல் ரீதியாகச் சரியான' வெற்று சவடால்களை கூறிக் கொண்டு - நானாக இருந்தால் நிச்சயமாக வாசுதேவ நாணயக்காரவின் மயிருக்குப் பக்கத்தில் நின்று கூடப் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்பதை சோபாசக்தியால் புரிந்து கொள்ள முடியாது.

# அரசியல் தளமும் கருத்துக்களும்

சோபாசக்தியின் தலைமுறையைப் பொறுத்தவரை தியாகி - துரோகி கதையாடல் அவர்கள் கண்முன்னால் பிறந்தது. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதும் ஒவ்வொருவர் மீதும் இருவேறு நிழல்கள் படர்ந்தன. ஆனால், எமது தலைமுறைக்கோ நமக்கு நினைவு தெரிந்த நாள்முதல் இருந்தது. உலகை அறிந்து கொள்ளச் சென்றபோதே இருந்து கொண்டிருந்த யதார்த்தம். அதனை மீறிச் சிந்திக்க முடியவில்லை என்பதிலும் பார்க்க அதனை மீறிச் சிந்திக்கும் வாய்ப்போ சந்தர்ப்பமோ வாய்க்கவில்லை. அதனை நம்பும்படியாகவே புற யதார்த்தமும் இருந்தது. அதாவது சிறீலங்கா இராணுவம் சார்ந்த அனுபவங்களும் அதையே பலமுறை மெய்ப்பித்தன. ஒருகட்டத்தில் மாற்றுக்கதையாடலில் ஈடுபடும் தோழர்களுடனும் உரையாடிப் பார்த்துவிடுவது என்ற முடிவில் அணுகியபோது, துரதிஸ்டவசமாக எம்மைப் போன்று அவர்களும் பெரும் பட்டியலுடன் இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் தனது நிலைப்பாடுகள் சார்ந்து கருத்தியல் சட்டகத்திற்கு அப்பால் சம்பவங்களின் பெரும்பட்டியலே முன்னுக்கு நின்றது பெரும் சோர்வைக் கொடுத்தது. ஏனெனில் எல்லாரிடமிருக்கும் பட்டியலும் மிக உண்மையானவை. பொய்க்கலப்பற்றவை. ரத்தத்தாலும் சதையாலும் நிரம்பிய பட்டியல்கள் அவை. அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டுப் பேச வாருங்கள் என்று யாரையும் கேட்க முடியாது. அதேநேரம், இந்த இரத்தப்பட்டியலை வைத்துக் கொண்டு எம்மால் ஒரு அடிகூட நகர முடியாது. பட்டியல்களையும் வைத்துக் கொண்டு முன்னோக்கியும் நகர வேண்டுமெனில் எமது உரையாடல்களின் ஒவ்வொரு சிறிய இடைவேளைகளின் போதும் புன்னகைப்பதையும் கட்டித் தழுவுவதையும் தவிர வேறு எந்தத் தெரிவும் எமக்கில்லை. அப்போதுதான் பரஸ்பரம் நாம் பட்டியல்களை மறந்துவிட்டு முன்னோக்கிச் செல்வோம் என்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு.

அடுத்த பதிவு - சோபாசக்தி : Intellectual status and Political correctness

(இன்னும் வரும்)

November 29, 2011

சோபாசக்தி : மாற்றுக்கருத்து மாணிக்கம்



1989 இல் இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதி. ரோந்து சென்று கொண்டிருந்த இந்திய இராணுவ சிப்பாய் ஒருவர் தாகத்திற்கு ஒரு வீட்டுக்குச் சென்று தாகத்திற்கு நீர் கேட்கின்றார். அந்த வீட்டிலுள்ளவர்கள் அச்சிப்பாய்க்கு நீர் கொடுக்கின்றனர். நீரை அருந்தியவர்கள் சென்றுவிட்டனர். இதுவும் ஒரு கதையென்று யாரோ இயக்கத்திற்குப் போய்ச் சொல்லிவிட்டார்கள். அந்த ஊருக்குப் பொறுப்பாக இருந்தவனுக்கு ஏற்கனவே அந்த வீட்டாருடன் சிறு சண்டை சச்சரவுகள் இருந்து வந்தது. இதுதான் சந்தர்ப்பம் என்று துவக்குடன் அந்த வீட்டிற்குச் செல்கின்றான். இங்கே இந்தியன் ஆமிக்கு 'அடைக்கலம்' கொடுத்தது யாரென்று கேட்கின்றான். (வார்த்தையைக் கவனியுங்கள். அடைக்கலம் என்ற வார்த்தைதான் அவன் அடுத்ததாக எடுக்கப்போகும் நடவடிக்கைக்கான ஆதாரமாக அமையும் சொல்.) அந்த வீட்டில் யாருமே பதில் பேசவில்லை. எந்த இந்தியன் ஆமிக்கு யார் அடைக்கலம் கொடுத்தது என்று அவர்களுக்கே ஒரே சந்தேகம். நாங்கள் யாருக்கும் அடைக்கலம் கொடுக்கவில்லை என்று அந்த வீட்டுக்காரர்கள் ஒருமித்த குரலில் பதில் சொல்கின்றனர். இவனும் விடாமல் திரும்பத் திரும்ப யார் அடைக்கலம் கொடுத்தது என்று கேட்கின்றான். அவர்கள் விக்கித்து நிற்கின்றனர். பொறுப்பாளரின் உதவியாளருக்கு உண்மை தெரிந்தபடியால் 'இங்கே யார் தண்ணி கொடுத்தது' என்று கேட்கின்றார். அந்த வீட்டுக்காரர்கள் 'அவன் தண்ணி கேட்டவன். நாங்கள் கொடுத்தனாங்கள்' என்று சொல்கின்றனர். அதுவரை அமைதியாக இருந்தவன் 'அப்ப அடைக்கலம் கொடுத்தனீங்கள் எண்டு ஒப்புக் கொள்ளுறீங்கள் தானே' என்று கூறுகின்றான். 'நாங்கள் தண்ணி தான் கொடுத்தனாங்கள்' என்று அவர்கள் திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். இவனோ மீண்டும் 'இந்தியன் ஆமி எங்கள் மண்ணை ஆக்கிரமித்துள்ளான். அந்நிய இராணுவத்துக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று தெரியாதோ? என்று மீண்டும் தனது பாணியில் கேட்கின்றான். தண்ணி என்ற சொல்லை அவன் மறந்தும் உச்சரிக்கவில்லை பாருங்கள். முன்பொருமுறை அந்த வீட்டிற்கு இரவு களவுக்கு வரும்போது தன்னை உதைத்த இரண்டாவது மகன் சாரத்துடன் அவன் கண்ணுக்குத் தட்டுப்படுகின்றான். அவனைப் போய்த் தர தவென்று இழுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து விட்டு, கூடி நின்ற சனத்தை நோக்கி 'அந்நிய இராணுவத்துக்கு அடைக்கலம் கொடுத்தால். இதுதான் நிலமை என்று கூறிவிட்டு மண்டையில் சுடுகின்றான். கபாலம் பிளந்து இரத்தம் தெறிக்கின்றது. துவக்கை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு உதவியாளர் மோட்டார் சைக்கிள் ஓட பின்னால் இருந்து செல்கின்றான். சேட்டில் இருந்த இரத்தத்தைத் துடைக்கும் போது நல்லவேளை அடைக்கலம் என்ற வார்த்தைக்குப் பதிலாக தண்ணி என்ற வார்த்தையை ஒருக்காலும் உச்சரிக்கவில்லை என்ற மனதிற்குள் நினைத்துக் கொள்கின்றான்.

ஏற்கனவே கேட்ட கதை போன்று உள்ளதே என்று மூளையைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள் தோழர்களே. சோபாசக்தி இரவும் பகலும் யாரும் பார்க்காத நேரத்தில் கசங்கிய கடதாசித் துண்டொன்றை எடுத்து மனப்பாடம் செய்து கொள்வதைப் பலர் கண்டிருக்கின்றார்கள். பின்னர் அதை அறுணாக்கொடியில் ஒளித்து வைப்பதைக்கூட கண்டிருக்கின்றார்கள். சோபாசக்தி மிகப்பெரிய எழுத்தாளனாக உலாவருவதற்கான மந்திரமே இந்தக்கதைத்தான் என்ற விடயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க இப்போது நேரம் போதாது. அதுமட்டுமல்லாது இப்போது அது பிரச்சனையுமல்ல.

உண்மையில் நடந்தது என்ன?

கடந்த நவம்பர் 17 ஆம் திகதியன்று இரவு 9 மணியளவில் ஃபேஸ்புக்கில் இருந்தேன். அந்நேரத்தில் ஷோபாசக்தி ப்ரகீத் எக்னொலிகொட தொடர்பாக இட்டிருந்த நிலைத்தகவலுக்கு நாடோடிப் பாடகன் ஒரு மிக முக்கியமான கருத்தொன்றை இட்டிருந்தார். அந்தக் கருத்தை நான் 'லைக்' செய்திருந்தேன். அதன் பின்னர் என்.எல்.எஃப்.ரி யுடன் தொடர்புடைய நண்பர் ஒருவர் எனது வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் நீண்ட நேரமாகப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் வீட்டில் இருந்து புறப்பட்டதன் பிற்பாடு மீண்டும் ஃபேஸ்புக் கை நோட்டமிட்ட போது இவ்வளவு சம்பவங்களும் நடைபெற்றிருந்ததைக் கண்டு திணுக்குற்றேன். உரையாடலில் சோபாசக்தி நான்தான் நாடோடிப் பாடகன் என்ற கருத்துப்பட உரையாடியிருந்ததை உணர்ந்து கொண்டேன். உடனடியாகக் சோபாசக்தியின் நண்பர் ஒருவருக்குத் தொலைபேசி அழைப்பெடுத்தேன். எடுத்து உண்மையைக் கூறினேன். குறித்த என்.எல்.எஃப்.ரி உடன் தொடர்புள்ள நபர் எனக்கு கடந்த 6 மாதகாலமாகவே அறிமுகம். ஆனால், சோபாசக்தியின் நண்பருக்கோ கடந்த 20 வருட காலமாக அறிமுகம். நீங்கள் உண்மையை அறிந்து கொள்வதற்கு உங்களுக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம். உடனடியாகக் குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து சசீவன் இடைப்பட்ட நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தான் என்பதைக் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். இதெல்லாம் பெரிய விடயமல்ல. ஃபேஸ்புக் சண்டையால் ஒன்றும் நடைபெற்றுவிடப் போவதில்லை என்ற சாரப்பட்ட சோபாசக்தியின் நண்பர் கூறினார். அதன்பின்பு, எனது நிலைப்பாடுகளைக் கருத்தாக இட்டுவிட்டு இவ்விடயத்தை முடித்துக் கொண்டேன். அடுத்தநாள், சோபாசக்தியின் நண்பர் அதே இழையில் கருத்தொன்றை இட்டிருந்தார். தொலைபேசியில் பேசும் போது தான் பகிடியாக ஒரு கருத்தை இட்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அதே கருத்தை ஆதாரமாக முன்வைத்து சோபாசக்தி தனது ஃபேஸ்புக்கில் இருந்து என்னைத் தடைசெய்ததோடு நான்தான் நாடோடிப் பாடகன் என்ற தனது கருத்தை எதுவிதமான ஆதாரமுமற்றுப் பதிவு செய்திருந்தார்.

சோபாசக்திக்கும் மேலுள்ள கதைக்கும் என்ன சம்பந்தம்?

இந்தக் கதையைத்தான் சோபாசக்தி கடந்த 20 வருடங்களாகப் பாத்திரங்களையும் இடத்தையும் மாத்தி மாத்தி எழுதிக் கொண்டிருக்கின்றார் என்று யாராவது நினைக்கக்கூடும். அதைவிட வேறு என்ன சம்பந்தம் இருக்கின்றது? கதையில் உள்ள பாத்திரங்களையும் சம்பவங்களையும் உடைத்துப் பார்ப்போம் தோழர்களே...!

இந்தியன் ஆமி, இயக்கப் பொறுப்பாளர், தண்ணி கொடுத்த சம்பவம், 'அடைக்கலம்' கொடுத்ததாகக் கேட்ட தோரணை, போட்டுத் தள்ளப்பட்டவன், களவெடுக்கும் போது பிடிபட்ட சம்பவம் போன்றவற்றை பின்னர் ஃபேஸ்புக்கில் நடந்த சம்பவத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

பொறுப்பாளர் - சோபாசக்தி
போட்டுத்தள்ளப்பட்டவன் - சசீவன்
இந்திய இராணுவச் சிப்பாய் - நாடோடிப் பாடகன்
தண்ணி கொடுத்த சம்பவம் - சசீவன் நாடோடிப் பாடகனின் கருத்துக்கு 'லைக்' செய்தது
அடைக்கலம் கொடுத்ததாகக் கேட்கப்பட்ட தோரணை - 'லைக்' செய்ததற்காக நீதான் நாடோடிப் பாடகன் என்று கூறியமை.
களவெடுக்கும் போது பிடிபட்ட சம்பவம் - புலிகளின் பாசிச நடவடிக்கையால் வெளியேறினேன் என்று இவ்வளவு காலமும் கூறிக் கொண்டிருந்த சோபாசக்தி 1993 ஆம் ஆண்டுவரை புலிகளுக்கு எதிராகப் பேசவில்லை என்று கூறியதும், அதற்கு நான் கேட்ட கேள்விக்குக் கொடுத்த சளாப்பல் பதில்களும்.

இப்போது மேலுள்ள கதையை மீண்டும் வாசித்துப் பாருங்கள் தோழர்களே..! சோபாசக்தியின் மனக்கட்டமைப்பு எவ்விதத்தால் அமைந்தது என்பதைப் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அதிகாரம் கிடைக்காத - அதிகார வேட்கை கொண்ட மனமே அன்றி வேறெதுவும் அல்ல.

அடுத்த பதிவு - சோபாசக்தி : குற்றச்சாட்டா? அவதூறா?

(இன்னும் வரும்)

May 08, 2011

புதிய புத்தகம் பேசுது நேர்காணல் (மே 2011)

சசீவன் கணேசானந்தன்
சசீவன் கணேசானந்தன் அவர்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்க்ழகத்தில் ஒரு திட்டப்பணியான 'தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆசியாவில் இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு' என்ற தலைப்பில் ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகின்றார். இவர் ஆய்வு மற்றும் பகுப்பாய்வுச் செயற்பாட்டிற்கான மையத்தினத்தும் நூலகம் பவுண்டேசனினதும் தலைமை நிர்வாகியாகவும் செய்யபட்டு வருகின்றார். இலங்கை தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணங்களைப் பாதுகாக்கூம் ஆவணக்காப்பாளராகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார்.


முதலில் www.noolaham.org வலைத்தளத்தைப் பற்றிக் கூறுங்கள்

www.noolaham.org என்கிற இணைய முகவரியில் இயங்கும் “நூலகம்” வலைத்தளம் ஓர் எண்ணிம நூலகம் ஆகும். அதாவது www.noolaham.org என்ற ஆட்களப்பெயரில் இயங்கும் இணையநூலகத்தை, கணினியும் இணைய இணைப்பும் உள்ள எவரும் பயன்படுத்த முடியும். இப்போது 8,500 க்கும் அதிகமான எழுத்தாவணங்களின் விபரங்களும் இணைப்புக்களும் இந்த இணைய நூலகத்தில் உள்ளன. பருமட்டாகச் சொல்வதானால் இன்றைய தேதியில் 3000 நூல்கள், 3000 சஞ்சிகைகள், 1500 பத்திரிக்கைகள், 1000 சிறுவெளியீடுகள் என 8500 ஆவணங்கள் சகலராலும் பார்க்க்கக்கூடியவாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் ஈழத்து ஆவணங்கள். ஈழத்து ஆவணங்கள் என்னும் போது ஏதோவொருவகையில் ஈழத்துடன் தொடர்புள்ளவை. அவ்வகையில் ஈழத்து எழுத்தாளர்களால் எழுதப்பட்டதோ அல்லது ஈழத்துப் பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்டதோ அல்லது ஈழம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதோ என்றவாறு அமையும்.

இங்கு நான் பயன்படுத்தும் ஈழம் என்ற சொல் பன்மைத்துவ நோக்கிலான இலங்கைத் தமிழ் என்ற அடையாளத்தைப் பிரதிபலிப்பதாகவே அர்த்தப்படுத்தப்பட வேண்டும். நூலகத்திலுள்ள ஆவணங்களது அரசியல் அடையாளங்களது வரைபடத்தை காட்சிப்படுத்த எத்தனிக்கும் ஒருவரால் நிச்சயமாக அதை உணர்ந்து கொள்ள முடியும். தமிழகத்தில் தற்போது பிரயோகிக்கப்படும் 'ஈழம்' என்ற சொல்லின் அர்த்தம், நான் பயன்படுத்தும் அர்த்தத்துடன் பொருந்த முடியாது என்றே நினைக்கின்றேன்.

இவை தவிர சங்க இலக்கியங்கள் முதல் சோவியத் நூல்கள் வரை என பல்வேறுவகையான, ஏறத்தாழ 300 வெளியீடுகளுக்கான இணைப்புக்களும் உள்ளன. இந்த நூலகம் இலவசமானது. திறந்த அணுக்கம் (Open Access) உள்ளது. அதாவது எவரும் எங்கிருந்தும் இதனைப் பயன்படுத்தலாம்.


உங்களுடைய நூலகம் தொடர்பான வேலை தமிழ் மக்களிடம் எப்பொழுது தெரிய வந்தது?

2007 ஆம் ஆண்டு அளவிலேயே ஒரு நாளைக்கு 300 வாசகர்கள் என்ற அடைவை தொட்டிருந்தோம் என்றளவில் இது தொடர்பாக பலர் அறிந்திருந்தார்கள்; பயன்படுத்தினார்கள் என்றே கூறவேண்டியுள்ளது. 2007 ஆம் ஆண்டின் இறுதியிலேயே நாங்கள் இன்று பயன்படுத்தும் மீடியாவிக்கி (Mediawiki) என்ற மென்பொருளைப் (Software) பயன்படுத்தத் தொடங்கினோம். அதற்கு முன்னர் சாதாரண HTML பட்டியல்களே காணப்பட்டன. தேடுவசதிகளற்ற சாதாரண பக்கங்களைக் கொண்ட தளமாகவே காட்சியளித்தது. ஆனால், மீடியாவிக்கி பயன்படுத்தத் தொடங்கியதன் பிற்பாடு இதன் உபயோகம் என்பது பல மடங்கு பெருகியிருக்கின்றது. ஏனெனில் பல்வேறு விதமான முறைகளில் ஓர் ஆவணத்தை அணுகமுடியும் என்பதும் பல்வேறு வகைப்பட்ட Access points அங்கு இருப்பதென்பதும் தேடலுள்ள வாசகனைப் பொறுத்தவரை சாதாரண விடயங்கள் அல்ல. ஆய்வாளர்களுக்கு உபயோகப்படக்கூடிய அளவிற்குக் கட்டமைப்பு முற்றுமுழுதாக மாற்றியமைக்கப்பட்டதன் காரணமாக சாதாரண வாசகர்கள் கூட பெருமளவில் பயன்பெற்றிருக்கின்றார்கள். சாதாரணமாக, ஒரு பிரதியை இணையத்தில் காட்சிப்படுத்துவதுடன் இணைய நூலகத்தின் பங்கு முடிவடைந்துவிடுவதில்லை. பிரதியை வாசகனுடன் ஊடாட வைப்பதும் அதன் மீது கேள்விகளைக் கோரும் பிரதிகளை உற்பத்தி செய்வதும் கூட நூலகத்தின் பணியாக இருக்க முடியும். மரபார்ந்த நூலகங்கள் பிரதிகளைக் கட்டடங்களின் பிரமாண்டத்திற்குள் அமுக்கிவிடுகின்றன. அதற்கான மாற்றுவழிகளைக் கண்டடைய வேண்டியது இம்மாதிரியான இணைய நூலகங்களின் பணியெனக் கருதுகின்றேன். ஆக, அத ஊடாட்ட திறனின் பெறுமானத்தை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கும் அதேநேரம், அதனை உச்சத்தில் வைத்திருக்க வேண்டியுமுள்ளது.

நூலகம் தொடர்பான அறிமுகங்கள் ஆங்காங்கே நிகழ்த்தப்பட்டன. நூலகத்துடன் தொடர்புள்ளவர்களால் நிகழ்த்தப்பட்ட அறிமுகங்கள் போக, அதன் பங்களிப்பு வெளிகளுக்கு அப்பால் நிகழ்த்தப்படும் அறிமுகங்கள் அதிக முக்கியமானவை. உதாரணமாக, 2007ஆம் ஆண்டு எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களால் ஒரு சிறிய அறிமுகம் தீராநதி நேர்காணலில் செய்யப்பட்டது. அந்நேரத்தில் அதை மிக முக்கியமான அறிமுகமாகக் கருதினோம். அது தவிர ‘உங்கள் நூலகம்’ இதழில் செ. தனபாலன் விலாவரியாக கட்டுரையொன்றை எழுதியிருந்தார். ஆனந்தவிகடனில் நூலகம் தொடர்பாக சிறிய அறிமுகக் குறிப்பொன்று பிரசுரமாகியிருந்தத்து. இவை தமிழ்நாட்டு மக்களை எமது பயனாளர்களாக்கிய அறிமுகங்கள். இதே மாதிரிப் புலம்பெயர் சமூகங்களிலும் சில அறிமுகங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. பல வலைப்பதிவுகளிலும் இணையத்தளங்களிலும் நூலகத்திற்கான தொடுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வகையான தொடுப்புக்கள் ஊடாகப் பலர் தளத்தை வந்தடைந்து பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் புலம் பெயர் தமிழர்ளே நூலகத்தின் பெரும்பான்மையான பாவனையாளர்களாகவிருந்தார்கள். இப்போதும் கூட புலம்பெயர் சமூகத்தவரது பாவனையின் அளவு குறைந்து விடாத போதும், அதில் பெருமளவான வளர்ச்சிப் போக்குக் காணப்படவில்லை. ஆனால், இப்போது பார்வையாளர்களில் பெரும்பாலானோர் இலங்கை, இந்திய நாடுகளிலிருந்தே வருகை தருகின்றார்கள். இப்போதுள்ள பாவனையாளர்களில் 40 சதவிகிதமானவர்கள் இலங்கையிலிருந்தும் 40 சதவிகிதமானவர்கள் இந்தியாவிலிருந்தும் மிகுதி 20 சதவிகிதமானவர்கள் ஏனைய நாடுகளிலிருந்தும் என எமது புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மற்றையது, அறிமுகங்களை ஒரு கட்டத்திற்கு மேல் அதில் செயற்படுபவர்களே நிகழ்த்திக் கொண்டிருக்க முடியாது. அவை பரவலாக பாவனையாளர்களாலும் இதனால் பயன்பெறப்போகும் சமூகங்களாலும் நிகழ்த்தப்பட வேண்டியவை. தன்னார்வலர்களது சிறிய பங்களிப்புக்களை ஒருங்கிணைத்து இவ்வாறான விடயங்களைச் செயற்படுத்துவதே மிகக்கடினமான பணியாகவுள்ளது. இந்நேரத்தில் கிடைக்கப்பெறும் குறைந்தளவு வளங்களை அறிமுக நிகழ்வுகளுக்கும் ஒதுக்க முடியாது. இவ்வாறான செயற்றிட்டங்களைப் பொறுத்தவரை அறிமுகம் / பரவலாக்கம் என்பவை அதிக முக்கியமானவை என்ற போதிலும், இவற்றிற்காக அதிகளவான வளங்களை ஒதுக்குவதற்கு மனம் ஒப்பவில்லை என்பதே உண்மை. உங்களைப் போன்ற செயற்பாட்டாளர்களால் நிகழ்த்தப்படும் அறிமுகங்கள் நிச்சயமாக எம்மைப் பொறுத்தவரை மிகப்பெறுமதியானவை.

நூலகத்தின் ஆரம்ப காலத்தில் பெருமளவில் இலக்கியம் சார்ந்த வாசகர்களே பயனாளர்களாக இருந்த நிலமை படிப்படியாக மாறி, தற்போது அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூகவியல் ஆய்வாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பயனாளர்களின் வடிவம் வெகுவாக மாறியுள்ளது. அடுத்த கட்டமாக பாடசாலை மாணவர்களைப் பெருமளவு பயனாளர்களாக மாற்ற வேண்டிய தேவையின் நிமித்தமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில், பாடசாலை மாணவர்களைப் பயனாளர்களாக மாற்றும் போது நீண்ட காலப்போக்கில் அதிகமானோருடன் பரிச்சயமான தன்மை ஏற்படுத்தப்பட்டுவிடும் என்பதோடு, பலதரப்பட்டவர்களாலும் நாளாந்தம் பாவிக்கப்படும் நிலமையை எட்டிவிடும் என்பது முக்கியமானது. அதேநேரம், தனித்தனியான துறைசார்ந்த ஆர்வமுள்ளவர்களை அவர்களுக்கு ஏற்றவாறு அணுக வேண்டிய தேவையும் குறைந்துவிடும்.


உங்கள் நூலக வலைத்தளம் 2005 ஆம் ஆண்டு தொடங்கியதன் பின்னணி என்ன என்பதை பற்றி கூறமுடியுமா?

2005 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னராக மதுரை திட்டம் போன்ற செயற்திட்டங்களில் நண்பர்கள் இயங்கி வந்திருக்கின்றார்கள். இயங்கி வந்த வேளையில் ஈழத்துக்கென, ஈழத்து நூல்களை தனியே பாதுகாப்பதற்கான ஒரு செயற்திட்டம் தேவை என்ற எண்ணம் வலுப்பெற்றிருக்கின்றது. அவ்வேளையில் முக்கியமாக இலக்கியம் சம்பந்தமான நூல்களை மையமாக வைத்து இச்செயற்திட்டம் தொடங்கப் பெற்றிருக்கின்றது. ஆரம்பத்தில் தட்டெழுதப்பட்ட நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆயினும் பிற்காலத்தில் நூல்கள் என்ற வரையறையைத் தாண்டி சஞ்சிகைகளும் சேர்க்கப்பட்டன. அதன்பின்பு பத்திரிகைகள், சிறுவெளியீடுகள் என இதர எழுத்தாவணங்களும் உள்வாங்கப்பட்டு இன்று இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் சகல எழுத்தாவணங்களும் ஆவணப்படுத்தப்படும் ஓர் ஆவணக்காப்பகமாக இது பரிணமித்துள்ளது. எதிர்காலத்தில், எழுத்தாவணங்களைத் தாண்டி இதர ஆவணங்களையும் உள்ளடக்கிய ஆவணக்காப்பகமாக மாற்ற, அதைச் செயற்படுத்துவதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் தொடர்பாக ஆய்வு செய்து கொண்டுள்ளோம். அவ்வகையில் ஒலிக் கோப்பு (audio), நிகழ்படம் (video), இயங்குபடம் (animation), நிகழ்த்தல் (ppt), படங்கள் (images), தரவுகள் (data) போன்றவற்றையும் நாங்கள் எதிர்காலத்தில் சேர்த்துக் கொள்ள இருக்கின்றோம்.

மற்றையது, இந்த மின் நூலகம் (ஏன்) தேவை என்ற விடயம். இலங்கைத் தமிழ்ச் சமூகங்கள் ஏதோவொருவகையில் முற்று முழுதாக சிதைக்கப்பட்ட ஒரு சமூக அமைப்பாகக் காணப்படுகின்றன. தமது நிலம் தொடர்பான ஆதாரங்களிலிருந்து ஏதோ ஒரு வகையில் பெயர்க்கப்பட்டுள்ள ஒரு சமூகம். இலங்கையில் வாழும் எண்ணிக்கைக்குச் சற்றும் குறைவில்லாத அளவானோர் புலம் பெயர்ந்து பல்வேறுபட்ட நாடுகளிலும் திக்கு திக்காக வாழுகிறார்கள். யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் புலம்பெயர்தல் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றது. அதே நேரம், புவியியல் அமைவிடம் சார்ந்து இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களுக்கென ஓர் ஆவணக்காப்பகத்தை அமைப்பதற்கான சூழ்நிலை எங்கும் காணப்படவில்லை. அவ்வாறு குறித்த இடத்தில் அமையப்பெற்றாலும் அதன் மூலம் எல்லோரும் பயன்பெறுவார்கள் எனக்கூற முடியாது. ஆக, இணையமூலமான ஆவணக்காப்பகம் மாத்திரமே ஒரே தெரிவாக உள்ளது. இவ்வாறான காரணங்கள் எமது செயற்திட்டங்களுக்கும் இயக்கத்திற்கும் வலுச் சேர்ப்பதாக அமைகின்றன. ஒருவகையில் இதன் மூலமான அதீத பயனென்பது எம்மை மூர்க்கமாக இயங்க வைக்கின்றது என்றுகூடக் கூற முடியும். ஏனெனில் நீண்டகாலப் போக்கில் இதன் பயனென்பது நினைத்துப் பார்க்க முடியாத விடயம். தகவல் சமூகமும் அதன் நகர்வும் எமக்கு எடுத்தியம்புவதும் அதைத்தான். இவ்வாறு சிதைந்துபோயுள்ள இந்த சமூகங்கள் இணையம் மூலமாக மாத்திரமே ஏதோ ஒரு வகையில் ஒருங்கிணைக்கப்படுகிறது. அவ்வகையில் இச்செயற்திட்டம் - இச்செயற்பாடு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. என்னைப் பொறுத்தவரை தொடங்கியதன் பின்னணி அதன் நகர்வுகளில் பல்வேறுபட்ட காரணங்களையும் சேர்த்துக் கொண்டு இன்று அதன் பெறுமானத்தை அதிகமாக்கியிருக்கின்றது என்றுதான் கூறுவேன்.


2005 இல் தொடங்கும் பொழுது எப்படி உங்கள் குழு எவ்வாறு செயல்பட்டது? செயற்பாடுகள் எப்படி இருந்தது?

இச்செயற்திட்டம் 2005 இல் தொடங்கப்பட்டபோது இதை செயற்படுத்தியது ஆக இரண்டே இரண்டு பேர் மாத்திரம்தான். எவ்விதமான பின்னணியுமற்ற சமூக நோக்குள்ள ஆரம்பமாக அமைந்திருக்கின்றது. 2005 ஆம் ஆண்டு தைப் பொங்கல் தினத்தில், ஒரு மின்நூலகமாக நூலகத் திட்டம் என்ற விடயத்தில் தொடங்கப்பட்டிருக்கின்றது. இரண்டே இரண்டு நபர்கள் ஒரு மடலாடல் குழு ஒரு வலைத்தளம் ஏராளமான மன உறுதி ஆகியவையே நீங்கள் இன்று காணும் 500,000 பக்கங்களை ஆவணப்படுத்தியுள்ள நூலகத்தின் மூலதனமெனில் நம்பக் கடினமாகவே இருக்கும். படிப்படியாக பல்வேறுபட்ட ஆர்வலர்களையும் நலன்விரும்பிகளையும் இணைத்துக் கொண்டு நகர்ந்திருக்கின்றது. 'இணைத்துக்கொள்ளுதல்' என்ற தன்மை - தாய்மையுடன் தொடர்புள்ள அதன் தன்மையே இன்றைய வளர்ச்சி வரைக்கும் காரணமாக இருந்திருக்கின்றது என்றே நம்ப வேண்டியிருக்கின்றது.

நான் நினைக்கின்றேன், முதல் இரண்டரை ஆண்டு நிறைவுறும் காலப்பகுதியில் 60 தன்னார்வலர்கள் பங்களிப்பாளர்களாக இருந்திருக்கின்றார்கள். ஒவ்வொருவருடைய வேலையையும் சமப்படுத்தி நோக்கமுடியாது. ஒவ்வொருவரும் பல்வேறு விதமான பங்களிப்பை வழங்கி இருக்கின்றார்கள். ஒருவிதத்தில் தன்னார்வ்வப் பங்களிப்புக்களில் சமனற்ற பங்களிப்புக்களே அதன் விசேட அம்சம் என்று கூறுவேன். அதுதான் அதன் அழகு பொருந்திய அம்சமும் கூட. சிலர் ஆலோசகர்களாகச் செயல்பட்டிருக்கிறார்கள், தட்டெழுதி நூல்களை இணைத்திருக்கின்றார்கள், தட்டெழுத நூல்களை வழங்கியிருக்கின்றார்கள், தொழில்நுட்பப் பங்களிப்பில் உதவியிருக்கின்றார்கள் என்றவாறாக ஒரே தளத்தில் வைத்து அணுக முடியாத பல்வேறுபட்ட பட்ட பெறுமதியுடைய பல்வேறு தளங்களில் அமைந்த பங்களிப்புக்கள். ஏன், மடலாடல் குழுவில் மடல்களை எழுதுவதன் ஊடாகத் திட்டத்தைச் செழுமைப்படுத்துபவர்களாக உதவியிருக்கின்றார்கள். ஆரம்ப கட்ட பங்களிப்பு நிலவரங்கள் இவ்வாறுதான் அமைதிருந்தன.

அதன் பின்னர், பங்களிப்புக்கள் அல்லது பங்களிப்பு வடிவங்கள் சற்று வித்தியாசப்படுத்தப்படுகின்றன. எல்லோராலும் நூல்களை தட்டெழுதி இணைப்பது என்பது இயலாத காரியம். அதே சமயம் சிலரால் நிதி பங்களிப்பு செய்யக்கூடியதாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் அந்த நிதியை கொண்டு, எங்கள் முயற்சிக்கு வேகம் அளித்தனர். தன்னார்வ குழுவில் இருந்தவர்களிடமிருந்து சிறுதொகை நிதி உதவிகளை பெற்று உள்நாட்டில் சில செயற்திட்டங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டன. அந்த வகையில் பங்களிப்புவடிவம் மாற்றம் பெற்றது. பங்களிப்பு வெளி தனிநபர் பங்களிப்பைத் தாண்டி தனிநபர் மூலமான கூட்டுப் பங்களிப்பு என்னும் கட்டத்தை அடைந்தது. இதில் சில பாதகமான அம்சங்கள் அவதானிக்கப்பட்ட அதே நேரம் சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதிகாரப் படிநிலைகள் விலக்கப்பட்ட நிலையில் செயற்பட்டுக் கொண்டிருந்த செயற்றிட்டம் தன்னை விரைவுபடுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்ட முயற்சிகளால் ஏதோவொரு விதத்தில் தன்னை அதிகாரப்படிநிலைகளுக்குள் உட்புகுத்திக் கொண்டது. கூட்டுச் சமூகச் செயற்பாட்டு நிகழ்வில் இவ்வகையான அணுகுமுறைகள் பாதகமான நிலமைகள் என்ற போதிலும் விரைவுபடுத்தும் நோக்கோடு பங்களிப்பு வடிவங்கள் மாறத்தொடங்கின. பொறுப்புக்கள் மற்றும் முகாமைத்துவங்கள் தொடர்பாகவும் அதிக பங்களிப்புக்களை வழங்கியவர்கள் முக்கியத்துவம் பெற்றார்கள்.

என்னைப் பொறுத்தவரை, இரண்டாவது வருட கால நிறைவின் பின்னரே இச்செயற்திட்டம் தொடர்பாக கூடுதல் அக்கறை செலுத்தத் தொடங்கினேன். நூலகத் திட்டத்தின் முதல் இரண்டு வருட பயணத்தின் பெறுபேற்றைப் பார்த்தோமேயானால், இது மிக மெதுவான பயணம் என்றே கூறமுடியும். அத்துடன் பயன்பாட்டுரீதியில் முழுமையடைய வாய்ப்பு இல்லாத ஒன்றாகக் காணப்பட்டது. அக்காலத்தில் நான் ஈழத்துக் கவிதைகள் - கவிஞர்கள் தொடர்பிலான தேடலில் இருந்தேன். என் தேடலிற் கிடைக்கும் ஆவணங்களை நூலகத்தில் இணைக்க முயன்றேன். இதுதான் நூலகத்துடனான எனது ஊடாட்டத்தின் ஆரம்பமாக அமைந்தது. அந்நேரத்தில் நிறையப் போதாமைகளை அடையாளங் காண முடிந்தது. செயல் ஒழுங்குமுதல் சிந்தனைமுறை வரை நிறைய மாற்றங்கள் தேவைப்பட்டன. ஏற்கனவே உருவாகியிருந்த அதிகாரப்படிநிலைகள் ஏதோவொருவகையில் தேக்கமுற்று அவை நிலைக்கத்தான் போகின்றன என்பதை மனதில் வைத்து பொறுப்பு சார்ந்து அவற்றை வரையறுத்த பின்னர் அதற்கு வெளியே பிறிதொரு பெருமளவானோர் பங்களிக்கக் கூடிய தன்னார்வ வெளியை உருவாக்குவது என்ற எண்ணத்தில் செயற்படத் தொடங்கினேன். இதற்கு விக்கிமீடியா மற்றும் விக்கிபீடியா மாதிரிகளை மனதில் வைத்து நூலகத்தை நகர்த்திச் செல்ல முயன்றேன். தற்போதைக்கு நூலகத்தின் பங்களிப்பாளர்களை, அவர்களின் பங்களிப்பை வைத்து பொறுப்பு சார்ந்த உறுதியான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் நூலகத்திட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் ஆசைப்பட்டது போன்று தன்னார்வ வெளிகளை இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் ஊடாடும் பல்வேறு தளங்களிலும் கட்டமைக்க வேண்டியது மாத்திரமே மிச்சமிருக்கின்றது. பல்வேறுபட்ட நாடுகள் சார்ந்தும் பிரதேசங்கள் சார்ந்தும் பரவலான அறிமுகங்களை நிகழ்த்துவதன் ஊடாக தன்னார்வக் குழுக்களை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது. உருவாக்கப்படும் தன்னார்வக்குழுக்களை, தங்கள் பிரதேசங்கள் சார்ந்த ஆவணப்படுத்தல் நிகழ்வுகளில் பங்குபற்ற வைப்பதே நாம் தற்போதைக்கு எதிர்பார்க்கும் விடயமாகும். வெளியிலிருந்து பார்ப்போருக்கு, இதன் வரைபடம் மேலிருந்து கீழான அணுகுமுறையாகக் காணப்படும் போதிலும் அவ்வரைபடங்கள் கீழிருந்து மேலான அணுகுமுறைகளிலேயே வரையப்பட வேண்டும் அல்லது இறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நான் மிக அவதானமாயிருக்கின்றேன். எவ்வகையான ஆவணங்கள் எவ்வாறு ஆவணப்படுத்த வேண்டும் என்பது அப்பிரதேசக் குழுக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான விடயமெனக் கருதுகின்றேன்.


நூலக நிறுவனம் எப்போதிருந்து, எவ்வாறு இயங்கி வருகிறது?

நூலக நிறுவனம் (www.noolahamfoundation.org) பதிவுசெய்யப்பட்டது சென்ற ஆண்டு, 2010 மே மாதம்தான். 2008 இலிருந்து முக்கிய பங்களிப்பாளர்களை இணைத்துக் கொண்டு நிறுவனமாக இயங்கிவருகிறோம். நூலகத் திட்டத்துக்கு வெளியேயானதாகவே நிறுவனம் உள்ளது. ஆனால் நிறுவனத்தின் பெரும்பாலான வளங்கள் நூலகத் திட்டத்துக்குச் செலுத்தப்படுகின்றன. அவ்வகையில் நூலகம் வலைத்தளத்தை 2009 இல் பொறுப்பெடுத்து அதனை மிகப் பயனுள்ளதொன்றாக வளர்த்தெடுத்துள்ளோம். நிறுவனம் என்பது வேறொருவிதமான விடயம். அந்த நிறுவனம் நூலகம் போன்ற வேறுவகையான செயற்திட்டங்களுக்கும் உதவிபுரிய கூடிய ஒன்றாகும். பல்வேறுதரப்பட்ட நூலகவியல், ஆவணப்படுத்தல் தொடர்பான நிறுவனங்களுடன் ஏதோ ஒரு வகையில் நாங்கள் ஊடாடிக் கொண்டிருக்கின்றோம். அவர்களுடைய உதவியை பெற்றுக் கொண்டுள்ளோம் - பெற்றுக் கொண்டிருக்கின்றோம். அதே நேரம், எங்களால் இயன்ற உதவியை பிற நூலகம் சார்ந்த அமைப்புக்களுக்குச் செய்து கொண்டிருக்கின்றோம். நிறுவனமாக இயங்கினாலும் தன்னார்வ வெளியை (Volunteer space) இயலுமான வரைக்கும் குறுக்காத வரையில் பார்த்துக் கொள்கிறோம். அதை மேலும் மேலும் எவ்வாறு அகலித்துச் செல்வதென்பதே எமக்கு முன்னுள்ள மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில், தன்னார்வ வெளிதான் இந்த செயற்பாட்டின், இந்த சமூக இயக்கத்தின் அடிநாதம். தன்னாவர் வெளியை நாங்கள் குறுக்க முயல்வது ஏதோவொரு கட்டத்தில் எமக்குப் பாதகமானதாகவே அமையும். நாம் அடைய வேண்டிய இலக்கை மாத்திரம் மனதில்கொண்டு நகரும்போது, பல்வேறு விதமான தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். சரியான பாதைகள் சிலவேளை பயணிக்கக்கூடிய சாத்தியமான பாதைகளாக இருப்பதில்லை. அதேநேரம் பயணிக்க இலகுவான பாதைகள் சரியானவையாக இருப்பதில்லை. இவற்றிற்கு இடையிலான புள்ளிகளைக் கண்டடைந்து எமக்கான பாதைகளை வரைந்தவாறு முன்னோக்கிச் செல்வது மிகக்கடினமானது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்ட்டுள்ளோம்.

தற்போது மொத்தமாக தன்னார்வ பங்களிப்பாளர்கள் என்று பார்த்தால் 500 லிருந்து 600 பேர் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. நூலகம் நிறுவனம் என்ற அளவில் வைத்து பார்க்கும் போது அதன் வடிவமே எமது தேவைகள் சாந்தே உருவாக்கப்பட்டது தான். பிற நிறுவன முன்மாதிரிகளைக் கூட நாம் முற்றுமுழுதாகப் பின்பற்றவில்லை. தொழில்நுட்பம் தொடர்பான பொறுப்புக்கள், பரவலாக்கல் தொடர்பான பொறுப்புக்கள், நிறுவன நிதிக்கையாள்கை தொடர்பான பொறுப்புக்கள் என பொறுப்புக்களை வரையறுத்து ஏற்கனவே அவ்வெளிகளில் இயங்கியவர்களை அதற்குப் பொறுப்பாக நியமித்துள்ள அதேநேரம், அவர்கள் சுயமாக தாங்கள் மற்றும் தங்கள் பொறுப்புக்கள் சார்ந்து தன்னார்வக்குழுக்களை அமைத்து செயற்படுகின்றார்கள். இதன்மூலம் அதிகாரப் படிநிலைகளில் இறுக்கத்தை குறைத்து இயங்குவதற்கான பொறிமுறையைக் கட்டமைப்பதே முக்கிய நோக்கம். இவ்வகையான அதிகாரப் பிரிப்புக்களும் அவற்றின் இயங்குகைக்கான வெளிப்படைத்தன்மைகளும் ஜனநாயக ரீதியான அமைப்பை உருவாக்குவதோடு ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்குக் களம் சமைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அடுத்து, செயல்பாட்டுத்தளத்தில் மாணவர் தரப்புக்களை உள்வாங்குவது மிகமுக்கியமானது. முதலாவது அவர்களுக்கு இது தொடர்பான அக்கறையை உண்டாக்குகின்றோம். இரண்டாவது, அவர்களால் சமூகம் சார்ந்த விடயங்களைப் பொறுப்பேற்றுச் செய்யக்கூடிய திறனையும் வளர்க்கின்றோம். மாணவர்கள் இன்றி Volunteerism என்ற விடயம் ஒரு விதத்தில் அடிப்பட்டு போகும் நிலைமை காணப்படுகின்றது. இன்றை முதலீட்டியச் சமூகத்தில் Volunteerism என்பது தொழில்நுட்ப வெளிகளுக்கப்பால் மிகவும் சுருங்கிப் போய்விட்டது. மாணவப்பருவம் மாத்திரமே ஓரளவிற்கு Volunteerism சார்ந்த சாதகமான காலப்பகுதியாகும். தொழில்துறையை வளர்க்கும் நோக்குடைய கல்விமுறைமை, மாணவர்களது சமூகச் செயற்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்ற அதேநேரம், கிடைக்கும் மெல்லிய இடைவெளிகளில் அவர்களை ஈடுபடுத்தித்தான் ஆக வேண்டியிருக்கின்றது. மூன்றாவது, மாணவப்பருவச் செயற்பாடுகள் ஏதோவொருவகையில் அதற்குப் பின்னைய காலத்திய செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தும். வெவ்வேறு பரப்புக்களில் இயங்க நினைப்பவர்களுக்கான களமாக இதனை வளர்த்தெடுத்தவாறிருக்கின்றோம்.


2005 இருந்து தொடர்ந்து Digitize செய்து கொண்டு வருகின்றீர்கள். Gradualize ஆகி வந்தீர்களா? அல்லது ஒரு குறிப்பிட்ட வருடத்தில் அதிக முயற்சி செய்து அதிக ஆவணங்களை Digitize செய்தீர்களா?

முதல் வருடத்தில் 100 (நூறு) ஆவணங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டாம் வருடத்தில் 262 (இருநூற்று அறுபத்தியிரண்டு) ஆவணங்கள். மூன்றாம் வருடம் 1256 ஆவணங்கள். நான்காம் ஆண்டு 1270 ஆவணங்கள். நான்காம் ஆண்டு 2190 ஆவணங்கள். ஐந்தாம் ஆண்டு 3109 ஆவணங்கள். இப்போது ஆறாண்டு முடிவில் எண்ணாயிரத்து நூறு ஆவணங்களை எங்களால் ஆவணப்படுத்த முடிந்திருக்கின்றது.

இனிவரும் காலங்களில் தனியே ஆவணங்களின் எண்ணைக்கையை அதிகரிப்பது என்பதை மாத்திரம் இலக்காகக் கொள்ளாமல், ஆவணங்களைப் பாதுகாப்பது தொடர்பான அக்கறையை பரவலாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கிலான செயற்பாடுகளையும் சமாந்தரமாகச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம். எமது உண்மையான வெற்றி தனியே ஆவணப்படுத்துவதிலும் ஆவண எண்ணிக்கையைக் கூறிப் பெருமைப்படுவதிலும் மாத்திரம் தங்கியில்லை. ஆவணப்படுத்தல் தொடர்பான ஆர்வத்தை சமூகத்தில் எவ்வளவு தூரம் ஏற்படுத்தியிருக்கின்றோம் என்பதிலும் ஆவணப்படுத்தல் தொடர்பான பிரக்ஞையின் மூலமான வெளிப்பாடுகள் எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கின்றது என்பதிலும் தான் தங்கியிருக்கின்றது.


எக்காரணங்களினால் ஆவணப்படுத்துவதில் இரண்டு வருடகாலத்திற்கு பிறகு ஒரு பெரும் பாய்ச்சல் (Gigantic leap) ஏற்பட்டது?

ஆரம்பக்கட்டத்தில் தட்டெழுதப்பட்டு மட்டும் ஆவணங்கள் இணைக்கப்பட்டன. ஒரு கட்டத்திற்குப் பின்னர் எமது வளர்ச்சிப்படியில் Digital Library என்ற கருத்தியலைத்தாண்டிச் சிந்திக்கத் தொடங்கினோம். Digital Library என்ற எண்ணக்கரு ஆவணக்காப்பகமாக மாற்றம் பெற்றது. ஆவணங்களை ஆவணங்களாக அதேவடிவத்தில் அப்படியே காட்சிப்படுத்தல் - பாதுகாத்தல் என்பது தொடர்பான அக்கறையின் காரணமாக மின்பிரதியாக்கம் (Scan) செய்யும் ஒரு முறையை நோக்கி நாம் நகர வேண்டி வந்தது. மின்பிரதியாக்க முறையின் மூலம் தட்டெழுதுவதை விட கிட்டத்தட்ட 30 மடங்கு அதிகமான ஆவணங்களை ஆவணப்படுத்தக்கூடியதாக இருந்தது என்பது முதலாவது முக்கியமான விடயம். இரண்டாவது முக்கியமான விடயம் நூல்கள் என்ற நிலையைத்தாண்டி சஞ்சிகைகளையும் ஆவணப்படுத்தக்கூடிய நிலைமை மின்பிரதியாக்கம் மூலமே சாத்தியமானது. ஆக, தட்டெழுதுவதை விட மின்பிரதியாக்கம் செய்வதன் மூலம் ஆவணப்படுத்துவது அதிகம் வசதியானதாகக் கருதப்பட்டது. ஆவணப்படுத்தலில் துல்லியம், வேகமாக ஆவணப்படுத்தல் ஆகிய காரணங்களால் ஒருகட்டத்தில் தட்டெழுதுவதன் மூலமான ஆவணப்படுத்தல் முறைமை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டு மின்பிரதியாக்க முறைமை ஆதிக்கம் பெற்றது.

அதே நேரம் அந்நேரத்தில் பெரியளவிலான செயற்றிட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டது இன்னொரு முக்கிய காரணமாகும். 20 இற்கும் மேற்பட்ட மின்பிரதியாக்கிகளைப் பயன்படித்திப் பரந்தளவிலான ஆவணப்படுத்தலைச் செய்யவது மூன்றாவது வருடத்திலேயே நிகழ்ந்தது. இதன் காரணமாக பெரும்பாய்ச்சல் நிகழ்ந்தது போன்ற தோற்றம் உருவாகியிருக்கின்றது.
அதேநேரம், எமக்குத் தன்னிடமிருந்த முழு சேகரிப்பையும் தந்துதவிய எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்கள் இச்சடுதியான மாற்றத்திற்கு ஒரு காரணமென்று கூறுவேன். ஏனெனில் அந்நேரத்தில் அவர் தன்னிடமிருந்த முழுச்சேகரங்களையும் எமக்கு தந்துதவினர். அதன் காரணமாக ஒரே வருடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களை இணையத்திற்குக் கொண்டுவருவது சாத்தியமானது. அதேநேரம், அதற்குப் பின்னர் வந்த வருடங்களில் வருடாந்த ஆவணப்படுத்தல் எண்ணிக்கையைக் குறையாமல் பார்த்து கொண்டோம். இனிவரும் காலங்களில், மாதத்திற்கு ஆயிரம் ஆவணங்கள் என்ற இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்றொரு உந்துதலுடன் செயற்பட்டு கொண்டிருக்கிறோம். அது சாத்தியமாகுமா, இல்லையா என்பது தொடர்பாக நிறைய கேள்விகள் இருந்தாலும், ஏதோ ஒரு கட்டத்தில் அதை சாத்தியமாக்கி விடுவோம் என்று நம்புகிறோம். என்னைப் பொறுத்தவரை அவ்வெல்லையையே, உச்ச எல்லையாக வரையறுக்க நினைக்கின்றேன். அவ்வெல்லையை அடைந்ததன் பிற்பாடு நாம் ஆவணப்படுத்தலுடன் சார்ந்த பிற தளங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாக உள்ளது. ஆவணங்களை பல்வேறுவகையாக ஒழுங்குபடுத்தல், ஒழுங்குபடுத்தப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்திய ஆய்வுகள், அரிதான ஆவணங்களைத் தேடிச் செல்லுதல், எழுத்தாவணங்கள் தவிர்ந்த பிற ஆவணப்படுத்தல் செயற்பாடுகளில் கவனத்தைக் குவித்தல் என்பது போன்ற பலவிதமான பொறுப்புக்கள் எம்முன் குவிந்துள்ளன.


தற்போது 8000 இற்கும் மேற்பட்ட Digitized files இருப்பதாகக் கூறுகின்றீர்கள். இதில் முதலில் தட்டெழுதப்பட்டு இணைத்ததையும் மின்பிரதியாக்கம் (Scan) செய்து இணைத்ததையும் பார்க்க முடியும் அல்லவா?

தட்டெழுதப்பட்டவை HTML வடிவத்தில் மாத்திரம் காணப்படும். மின்பிரதியாக்கம் செய்யப்பட்டவை PDF வடிவத்தில் காணப்படும். முதல் 380 நூலக இலக்கங்களுக்குள் உள்ள ஆவணங்கள் முழுவது தட்டெழுதப்பட்டவை. ஆயினும் நாம் பின்வந்த காலங்களில் மின்பிரதியாக்கம் செய்யும்போது அவற்றில் பெரும்பாலான பிரத்திகளை மின்பிரதியாக்கம் செய்தும் இணைத்துள்ளோம். அதனால், 380 என்ற நூலக இலக்கங்களுக்குள் உள்ளவற்றில் பெரும்பாலானவற்றை HTML மற்றும் PDF ஆகிய இரண்டு வடிவங்களிலும் பார்வையிடலாம். 380 இற்குப் பின்னரான நூலக இலக்கமுள்ளவை அனைத்தும் மின்பிரதியாக்கம் செய்யப்பட்டவை. அவற்றில் ஒரு சில மாத்திரம் அச்சுக்குச் சென்ற மூலவடிவத்திலேயே காணப்படுபவை. ஆக மொத்தம் 380 இற்குப் பின்னுள்ள இலக்க ஆவணங்களை PDF வடிவத்திலேயே பார்க்கலாம். தட்டெழுதப்பட்டு இணைக்கப்படுபவை, தேடுபொறிகள் மூலம் குறித்த சொற்களைத் தேடி வருபவர்களுக்கு உதவிய போதிலும் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. எழுத்துப் பிழைகள் மாத்திரமல்லாது, ஆவணங்களின் சில பகுதிகள் கூட இல்லாமல் போயிருக்கும் வாய்ப்புக்கள் உண்டு. அதேநேரம் அதிகாரத்தில் உள்ளவர்கள் தமக்குத் தேவையில்லாத பகுதிகளை நீக்கவும் வாய்ப்பு உண்டு. மேற்குறித்த காரணங்களால் என்னைப் கேட்டால் மின்பிரதியாக்கம் செய்யப்படுவதே சிறந்தது என்பேன். எழுத்துணரி (OCR) தமிழில் சாத்தியப்படும்போது PDF வடிவத்தில் உள்ள அனைத்தையும் உரைக் கோப்புக்களாவும் மாற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.


எண்ணிமப்படுத்தி இணைப்பதற்கு ஆவணங்களை எப்படி நிர்ணயம் செய்வீர்கள்?

ஆரம்ப காலக்கட்டத்தில் பெரும்பாலும் இலக்கியம் சார்ந்த நூல்களே ஆவணப்படுத்தப்பட்டன. புனைவுகள், அபுனைவுகள் என்று பார்த்தால் கூட பெரும்பாலும் இலக்கியம் சார்ந்தவையாகவே காணப்படுகின்றன. திட்டத்துடன் தொடர்புள்ளவர்களது தெரிவுகள் முதன்மை பெற்றிருந்ததனால் அவ்வாறு காணப்பட்டிருந்தாலும் பிரேத்தியேகமான காரணங்கள் இருந்திருக்கும் என நினைக்கவில்லை. அதன்பின்பு, சஞ்சிகைகள் மற்றும் இதர எழுத்தாவணங்கள் என எவ்வகையான எழுத்தாவணங்களாக இருப்பினும் அவை அச்சில் வெளிவந்திருப்பின், ஆவணப்படுத்தத் தகுதியானவை என்றவாறாக மாற்றம் பெற்றது. அச்சில் வெளிவந்திருக்க வேண்டும் என்பது மாத்திரமே எமது நிபந்தனையாகத் தொடர்கின்றது.

தரமானது / தரமற்றது, பயனுள்ளது / பயனற்றது போன்ற தணிக்கைகள் எதனையும் நாம் பின்பற்றுவதில்லை. அது எமது வேலையும் அல்ல. அவை விமர்சகர்களும் சமூகமும் தீர்மானிக்க வேண்டியவை. எதிர்காலச் சந்ததிக்கு இன்றைய காலப்பகுதியிலும் கடந்த காலப்பகுதியிலும் அச்சில் வெளிவந்த ஆவணங்களை விட்டுச் செல்வது மாத்திரமே நூலகத்திற்கூடான எமது பணியாகும். உதாரணத்துக்குச் சொல்வதானால் இன்றைக்கு நாங்கள் 'கல்வெட்டு' என்று அழைக்கப்படும் நினைவுமலர்களைக் கூட ஆவணப்படுத்துகின்றோம். ஏனெனில் கல்வெட்டுக்களில் கூட முக்கியமான விடயங்கள் காணப்படக்கூடும். நாம் ஆவணப்படுத்தும் நினைவுமலரொன்று சிலவேளை ஒரேயொரு ஆய்வுக்காவது மாத்திரமே எதிர்காலத்தில் பயன்படக்கூடும். உதாரணமாக ஒரு கல்வெட்டிலிருந்து வம்சாவளி, பரம்பரை சம்பந்தமான தகவல் எதிர்காலத்தில் ஆய்வுகளுக்குத் தேவைப்படக்கூடும். ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அப்படியான ஆய்வுகள் எதிர்காலத்தில் நிச்சயமாக முக்கியத்துவம் பெறக்கூடியவை. சிதைவுக்குள்ளாகிப் பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு மொழிகளைப் பேசி வாழும் சமூகம் தனது உறவுகளை தேட முற்படும்போது இவ்வாறான நினைவுமலர்கள் பயன்படக்கூடும்

மற்றொரு முக்கியமான விடயம் வரலாறு தொடர்பானது. இன்றைய வரலாறு இன்று அதிகாரத்தில் உள்ளவர்களால் எழுதப்படும் வரலாறு. பல்வேறு வகையில் பிளவுற்று அதிகாரப்படிநிலைகளைக் கொண்டுள்ள சமூகம் என்றளவில் இன்றுள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எதிர்காலத்தில் இன்றைய அதிகார வர்க்கத்தால் எழுதப்பட்ட பிரதிகளில் இருந்தே தமது வரலாற்றை மீள்வாசிப்புச் செய்ய வேண்டியிருக்கும். ரணஜித் குகா அவர்களால் எழுதப்பட்ட 'சந்திராவின் மரணம்' என்ற கட்டுரை மிக நல்ல உதாரணம். எந்தவொரு ஆவணத்தையும் அழிய விடப்போவதில்லை என்ற குறிக்கோளுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

மருத்துவப் பதிவேடு (Medical Records), நில உரிமைப் பதிவுகள் (Landrights documents) போன்ற ஆவணங்களைக் கூட ஆவணப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. எதிர்காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் (Public Institution) போன்றவற்றின் ஆவணங்களையும் நாங்கள் ஆவணப்படுத்த வேண்டும் என்று கரிசனையுடன் செயற்பட்டு நினைக்கின்றோம். எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்று தெரியவில்லை. ஆயினும் நாம் சாத்தியங்கள் தொடர்பிலும் அலட்டிக் கொள்வதில்லை. அசாத்தியங்களைச் சாத்தியமாக்குவது தானே செயற்பாட்டாளர்களின் பணி.


உங்களின் திட்டம் இலங்கை அரசுக்கு தெரிந்திருந்ததா?

அரசாங்கத்திற்கு இப்படி ஒரு திட்டம் இயங்கி கொண்டிருக்கிறது என்பது தெரியுமோ, தெரியாதோ என்று எனக்கு தெரியாது. எமது நிறுவனம் இலங்கையில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது எனற வகையில் அரசாங்கத்திற்கு நாம் தெரியப்படுத்தியிருக்கின்றோம் என்றுதான் நினைக்கவேண்டியிருக்கின்றது. மேலும், அரசாங்கத்தைக் கண்டு பயப்பட, நாம் அரசாங்கத்திற்கு எதிராக இயங்கவில்லையே. அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையைத்தான் நாம் செய்துகொண்டிருக்கின்றோம். தமிழ் பேசும் மக்களின் ஆவணக்காப்பகம் என்றளவில் அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள், அரச ஆதரவாளர்கள், அரச எதிர்ப்பாளர்கள் என பலரது பங்களிப்பும் நூலகத்தில் உண்டு. நூலகத்தை, அதன் பயன் சார்ந்து அரசியல் நோக்கோடு அணுக முடிந்தாலும், அதை உருவாக்கும் எமது செயற்பாடுகள் நிச்சயமாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டவை.

அதேநேரம், மிகவும் வெளிப்படையாக இயங்குகின்றோம் என்றளவில் எமது செயற்பாடு தொடர்பில் அச்சப்பட ஏதுமில்லை. ஆனால், எமது செயற்பாடுகள் பெருமளவில் நிகழ்ந்தால், சில வேளை ஏதாவதொரு வகையில் பிரச்சனைகள் ஏற்படுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, சிறிய அளவில் செயற்பட்டுக் கொண்டிருந்தோம் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. சில வேளைகளில் தமிழர்களின் அடையாளம், தமிழர்களின் பண்பாடு, தமிழர்களின் வாழ்வியல் தொடர்பான விடயங்களை ஆவணப்படுத்துவதென்பது அதில் ஈடுபடுபவர்களுக்கு பிரச்சனைகள் வரக்கூடும் என்ற பயம் இன்று வரைக்கும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்காக முழுவதுமாக இயங்காமல் இருக்கவும் முடியாதே.


தமிழ்நாட்டில் உங்கள் முயற்சிகளுக்கு எந்த அளவிற்கு ஊக்கம் கிடைத்திருக்கிறது?

இன்று வரைக்கும் எந்த விதமான ஆதரவும் தமிழக அரசாங்கத்திடம் இருந்தும் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டுவதிலும் பார்க்க நாம் அணுகவில்லை என்பதுதான் உண்மையானது. ஆயினும், இம்முறை எனது இந்த இந்திய பயணத்தின் நோக்கங்களில் ஒன்று, தமிழ்நாட்டில் காணப்படும் ஈழத்து ஆவணங்களை பட்டியலிடுவதும், அவற்றை சேகரித்து ஆவணப்படுத்துவதும். அதற்கான கட்டமைப்புக்களை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன்.
அதே நேரத்தில் சில ஆவணப்படுத்தலுடன் தொடர்புடைய நிறுவனங்களை - அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதற்கான அடித்தளத்தை இடும் நோக்கோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். பலர் பல்வேறு உதவிகளை அளிப்பதாக உறுதி அளித்திருக்கின்றார்கள். காலப்போக்கில் ஒரு செயற்திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்க முயற்சி எடுக்கும் போது பல்வேறு தரப்பட்டவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என நினைக்கிறேன். ஆயினும் தமிழ்நாட்டு அரசை நேரடியாக இதுவரை அணுகவில்லை. அதற்கான சந்தர்ப்பங்கள் சிலவற்றை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன். பெரும்பாலும் சாத்தியப்படும் என நம்புகின்றேன். சாதகமான சூழ்நிலைகள் அமைந்தால் மேற்கொண்டு பெரியளவிலான செயற்றிட்டங்களை ஆரம்பிக்க முடியும்.


தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. இவ்வந்தஸ்து கிட்டிய பிறகு மத்திய அரசாங்கத்திடமிருந்து பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. தமிழ் செவ்வியல் இலக்கியம் என்று கூறும் பொழுது ஈழத்து அறிஞர்களின் பங்களிப்பும் அதில் அடங்கியுள்ளது. அக்கூறுகளை பாதுகாப்பதும் அரசின் கடமையாகின்றது. அவ்வெளியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதா?

தமிழ் என்ற ஒட்டுமொத்த பரப்பில் இயங்கும்போது இந்த ஏட்டுச்சுவடிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நீங்கள் கூறியவாறு தமிழக அரசுக்கும் உண்டு. நீங்கள் கூறுவது தொடர்பாக சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றேன். எமது நிறுவனத்துடன் தொடர்புடைய ஆய்வாளர் ஒருவர் அதற்கான முயற்சிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். இவ்விடயம் எவ்வளவு தூரம் செயற்பாட்டுத்தளத்தை நோக்கி நகரும் என்பதைப் பற்றி இப்பொழுது கூற முடியாது.

இலங்கையில், வடக்கு கிழக்கு எங்கும் பல ஏட்டுச்சுவடிகள் அழிந்துபோகும் நிலைமையில் உள்ளன. கிழக்கில் சுனாமியின் போது பல ஏட்டுச்சுவடிகள், முக்கியமாக மருத்துவக்குறிப்புக்கள் அடங்கிய ஏட்டுச்சுவடிகள் பல அழிந்து போனதாக கூறப்படுகிறது. இன்று எவ்வித பராமரிப்பும், பாதுகாப்பும் அற்று பல்வேறு இடங்களில் ஏட்டுச் சுவடிகள் அநாதரவாக விடப்பட்டிருக்கின்றன. யுத்தம் காரணமாக பல்வேறு வகைப்பட்ட ஏட்டுச் சுவடிகளும் அரிதான ஆவணங்களும் அழிந்து போயிருக்கின்றன. விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய சேகரத்திற்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. பெரும்பாலும் முற்றாக அழிந்து போயிருக்கலாம். இவ்வாறு ஏதோவொருவகையில் அழிந்து போயுள்ளவற்றில் இருந்துதான் எஞ்சியவற்றைச் சேகரித்து ஆவணப்படுத்த வேண்டியிருக்கின்றது. யுத்தத்தின் பின்னைய காலப்பகுதியில், யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களே சகல தரப்புகளாலும் அநாதரவாக விடப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாமல் இவ்வாறான வேலைகளில் ஈடுபடுவதை நினைத்து குற்றவுணர்வுக்குள்ளாகிய சந்தர்ப்பங்களும் உண்டு.


உங்கள் நிறுவனத்தை நடாத்துவதற்கு நிதி எவ்வாறு சமாளிக்கப்படுகிறது? ஒரு புத்தகத்தை எண்ணிம வடிவத்திற்கு (Digital Format) மாற்றுவதென்பது நீண்ட செயற்பாடல்லவா? அதற்கு நிதியும் அதிகமாக தேவைப்படும் அல்லவா?

நாம் நிறுவனமயமாகாமல் இயங்குவது என்ற விடயத்தில், கவனம் செலுத்தி வந்திருந்த போதிலும், ஒரு கட்டத்தில் நிறுவனக் கட்டமைப்பிற்குள் உட்படாமல் அடுத்த கட்டத்திற்குச் செல்லமுடியாது என்ற நிலமை வந்தபோதே நிறுவனமாகப் பதிவு செய்தோம். நிறுவனமாகப் பதிவு செய்த போதிலும், வழமையான நிறுவனங்களுக்குள்ள பண்புகளுடன் இயங்காமல் இச்செயற்பாட்டை ஒரு சமூக இயக்கமாக வளர்த்து செல்லும் பாணியில்தான் இயக்கிக் கொண்டிருக்கிறோம். எமக்கென அலுவலகம் எதுவுமில்லை. பல்வேறுபட்ட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அவற்றின் உதவிகளைப் பெற்றவாறே இயங்கிக் கொண்டிருக்கின்றோம். செலவுகளை இயன்றவரை மிகவும் கட்டுப்படுத்தியவாறே இயங்குகின்றோம். எமது வரவு செலவு விபரங்களை வெளிப்படையாக வலைத்தளத்தில் வெளியிடுகிறோம். எமது செயற்பாடுகளை நிறுவன தளத்தின் மூலமாக வெளியுலகிற்குத் தொடர்ச்சியாகத் தெரியபப்டுத்திக் கொண்டிருக்கின்றோம்.

எமக்குக் கிடைக்கும் நிதியுதவிகள் அனைத்தும் எமது செயற்பாடுகளைப் பார்த்தவர்களும் பயனடைந்தோரும் வழங்கியவை தான். ஓரிருவரே மிகப்பெரிய நிதியுதவியை அளிக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க நினைக்கின்றோம். மாறாக, ஆயிரக்கணக்கான பயனாளர்களது சிறிய அன்பளிப்புக்களைக் கொண்டு இயங்குவதே ஆரோக்கியமானது. இவ்வகையான அணுகுமுறை பெருமளவான உழைப்பைக் கோரும் செயற்பாடென்ற போதிலும் இயன்றவரை பங்களிப்பாளர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதே சிறந்தது. இயன்றவரை நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் மூலமான செயற்பாடுகளை இழிவாக்கி, இதர பங்களிப்பு முறைகளை ஊக்குவித்தவாறிருக்கின்றோம். சமூக இயக்கமாக மாற்றிக் கொண்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் தொடர்ச்சியாகப் பெருமளவு நிதி கையாளுகை இருக்காது என்ற போதிலும், பத்திரிகைகளை ஆவணப்படுத்துவது போன்ற செயற்பாடுகளுக்கு இன்னும் அதிகமான நிதி தேவைப்படும். அதுமட்டுமல்லாது அசைபடங்கள் மூலமான ஆவணப்படுத்தல்கள் இன்னும் அதிகமான நிதியைக் கோரும் செயற்பாடுகளாகும்.

பல்வேறுபட்ட சமூக அக்கறையுள்ளவர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஒரு சில நிறுவனங்களிடமிருந்துமே நிதி பெறப்படுகின்றது. இன்றைய தேதி வரையில் பெரியளவான நிறுவனங்களது எவ்வித நிதியுதவியையும் பெற்றுக் கொள்ளவில்லை. ஒருவகையில் இச்செயற்றிட்டத்தினூடான எமது ஆத்மார்த்தமான பிணைப்பிற்கு இதுவே காரணமென்பேன். பெரும் நிதிக்கையாள்கை நிச்சயமாக இச்செயற்றிட்டத்தின் உயிர்ப்பைச் சிதைத்துவிடும் தன்மை கொண்டது.


நிறுவனமான பிறகும் உங்களுக்கு நிதியைப் பெறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகி இருக்கின்றது அல்லவா? நிறுவனம் என்ற பெயரில் ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது. அதன் மூலம் உங்கள் திறமையான செயல்பாடுகளைத் கொண்டு நிதியை கேட்கலாம். அதற்காக விண்ணப்பிக்கலாம் அல்லவா?

அப்படியிருந்தும் கூட நாங்கள் இன்று வரைக்கும் தனிப்பட்ட நபர்கள் அல்லது தனிப்பட்ட நபர்கள் சார்ந்த மிகச்சிறிய நிறுவனங்கள் ஊடாகத்தான் நிதியைப் பெற்று வருகின்றோம். எதிர்காலத்தில் பெருமளவு நிதித்தேவையுள்ள செயற்திட்டங்களுக்கு நிதியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கமிருப்பினும் கூட நிறுவனத்தை பல தன்னார்வலர்களது சின்னஞ்சிறிய பங்களிப்புக்கள் மூலம் இயக்குவதே சிறந்தது. குறிப்பிட்ட செயற்றிட்டங்களுக்கு மாத்திரம் நிதி கேட்டு விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் அடிப்படைச் செயற்பாடுகள் எப்போது தன்னார்வலர்களாலும் தன்னார்வலர்களது சின்னஞ்சிறிய நிதிப்பங்களிப்புகளாலும் மாத்திரம் நிறைந்திருக்க வேண்டுமென்பதே எனது விருப்பமாகும்.


தொழில்நுட்ப விடயங்களுக்கு நீங்கள் எங்கிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்கிறீர்கள்?

ஆரம்பத்தில் பெரும்பாலான தொழில்நுட்ப விடயங்களை மயூரன் பார்த்துக் கொண்டிருந்தார். மீடியாவிக்கியை நூலகத் தளமாக ஒழுங்கமைத்தவர் கோபிநாத் என்றபோதிலும், அதன் பின்னர் அதனை ஒவ்வொரு விடயங்களையும் மாற்றம் செய்தவாறு, அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஓர் இளைஞர் - வினோத்ராஜன் என்னும் தோழர். தமிழ் விக்கிப்பீடியாவினூடாக அறிமுகமாகிய அவர் தன்னார்வலராக இன்று வரைக்கும் எம்முடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார். அவரைப் போன்றோரது தன்னார்வ உதவிகள், எமக்குப் பெரிய உந்து சக்தியை அளித்ததோடு, நாம் இன்று இவ்வளவு தூரம் வளர்வதற்குக் காரணமாக இருந்திருக்கின்றது. நிமலபிரகாசன் போன்றோருடன் இணைந்து வினோத் தன்னார்வத் தொழில்நுட்பக் குழுவொன்றை செயற்படுத்தி வருகின்றார். தொழில்நுட்பம் தொடர்பான விடயங்கள் என்று வரும்போது பல்வேறுபட்ட தொழில்நுட்பத் தன்னார்வலர்களுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்பதோடு அவர்களது பங்களிப்பின் மூலம் அவற்றைச் செயற்படுத்தியும் வருகின்றோம்.
தமிழா முகுந்த் என்ற தமிழ்நாட்டு இளைஞர் (தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கின்றார்) தனது Server இல் Host பண்ணலாம் என்று கூறி, நூலகத்திற்கொரு இடத்தை ஒதுக்கித் தந்தார். அதன்பின்னர் லோகேஷ் எனும் இன்னொரு இந்தியர் அந்த உதவியை இன்றுவரைக்கும் தொடர்கின்றார். தமிழ் விக்கிப்பீடியாவின் தன்னார்வப் பங்களிப்பாளர்களாகிய சுந்தர் போன்றோரும் நுட்ப உதவிகளை வழங்குகின்றனர். இன்றுவரைக்கும் நுட்பப்பிரச்சனைகளையும் நுட்பச் செயற்பாடுகளையும் தன்னார்வலர்கள் மூலமே பெற்றும் தீர்த்தும் வந்திருக்கின்றோம்.


நூலக வலைத்தளத்தின் பயன்பாடு, நிறுவனமாக இதுவரை சாதித்தவை என்று எவற்றைச் சொல்லலாம்?

நூலகத் தளத்தின் பயன்பாடு தொடர்பில் நேரடியாக அளவீடு சாத்தியமில்லை. ஆனால் பல வலைப் பதிவுக் கட்டுரைகளிலும், ஆய்வுக் கட்டுரைகளிலும், தமிழ் விக்கிப்பீடியா போன்றவற்றிலும் நூலகம் பெருமளவில் உசாத்துணையாகப் பயன்படுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல இலங்கை, இந்தியப் பயன்பாடு மிக அதிகரித்துள்ளது. எண்ணிம ஆவணப்படுத்தல் தொடர்பில் தமிழ்ச்சூழலில் முன்மாதிரிச் செயற்திட்டமாக உள்ளோம் என்பதைக் குறிப்பிடலாம். இதற்கு நல்ல உதாரணங்கள் பொள்ளாச்சி நசனின் நாள் ஒரு நூல் திட்டம், தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள் ஆகியவை. பொள்ளாச்சி நசன் எண்பதுகளிலிருந்தே சிற்றிதழ்ச் சேகரிப்பாளராக, ஆவணக் காப்பாளராகச் செயற்படுபவர். அவர் நூலகத்தை முன்மாதிரியாகக் கொண்டு தொடங்கிய நாள் ஒரு நூல் எனும் செயற்திட்டம் இப்போது 2000 ஆவணங்களைக் கொண்டிருப்பதோடு வேகமாக வளர்ந்து வருகிறது. இதுபோல தமிழரங்கத்தினர் நூலகத்துக்கு நிதியுதவி செய்பவர்கள். இப்பொழுது தாமும் ஆவணப்படுத்தலில் செயற்படுகின்றனர். அவ்வகையில் நல்லதொரு முன்மாதிரியாக, ஊக்குவிப்பாக இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியே. இன்னும் நிறைய, இன்னும் வேகமாக இத்தகைய செயற்பாடுகள் நடைபெற வேண்டும்.

நிறுவனமாக நாம் சாதிக்க வேண்டியவை பல. வெறும் ஆவணப்படுத்தல் நிகழ்வுகளைத் தாண்டி அவற்றின் தேவை தொடர்பாகத் தொடர்ச்சியாக சமூகத்தின் மத்தியில் இயங்குவதோடு, ஆவணப்படுத்தல் என்னும் புள்ளிகளைத் தாண்டிய செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மரபறிவுப் பாதுகாப்பு, தகவல் அறிதிறன், அறிவுப்பரம்பல், கல்வி மேம்பாடு என நாம் இயங்கவேண்டிய தளங்கள் எம் கண்முன்னே எண்ணற்றுப் பெருகிக்கொண்டிருக்கின்றன. இவ்விடயங்களை தனிமனித நிகழ்வு என்ற புள்ளியில் இருந்து நிறுவனத்தின் செயற்பாடு என்ற புள்ளியை நோக்கி நகர்த்தியிருக்கின்றோம். இவ்விடைநிலைப்புளியில் இருந்து சமூகப் பேரியக்கமாக மாற்ற வேண்டிய மிகப்பெரும் கடப்பாடு எமக்குள்ளதாகக் கருதுகின்றோம்.

நம்பிக்கையளிக்கும் சூழல் நிலவுகிறது என்றே நினைக்கிறேன்.

May 05, 2011

ஆவணப்படுத்தல் இயக்கம்

அறிமுகம்
இன்று தமிழ்மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட ஆவணப்படுத்தல் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. ஆயிரக்கணகானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் 'நூலகம்' செயற்றிட்டம் - நிறுவனம் என்ற கட்டங்களைத் தாண்டி சமூக இயக்கமாகத் தொழிற்படத் தொடங்கியுள்ளது. பல்வேறு துறை சார்ந்தோர் - பல்வேறு அரசியல் சார்ந்தோர் - பல்வேறு சமூகச் செயற்பாடுகள் சார்ந்தோர் என பல்வேறுதரப்பினரையும் உள்வாங்கியுள்ளதோடு ஆவணப்படுத்தல் என்ற புள்ளியில் ஒன்றிணையக்கூடிய சகல தரப்பினரையும் இணைத்துக்கொண்டு இயங்க முயற்சிப்பதை அவதானிக்கலாம். நிறுவனம் என்ற கட்டமைப்பிற்கு வெளியே பிரதேச ரீதியான கட்டமைப்புக்கள், சர்வதேச ரீதியான கட்டமைப்புக்கள் மற்றும் செயற்றிட்டங்கள் சார்ந்த கட்டமைப்புக்கள் என தன்னை விரிவாக்கிக் கொண்டு, சுயாதீனமாக இயங்கக்கூடிய கட்டமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது. தகவல் வளங்கள் தொடர்பான திறந்த அணுகுமுறை, நூலகவியல் சேவைகள், எண்ணிம ஆவணப்படுத்தல் முயற்சிகள், எண்ணிம உள்ளடக்க உருவாக்கம், தகவன் அறிதிறன், அறிவு முகாமைத்துவம், அபிவிருத்திச் செயற்பாடுகளும் ஆய்வுகளும் ஆகிய வெளிகளில் இயங்குவோரை இணைத்துக் கொண்டும் ஊடாடியும் தனது நகர்வை நெறிப்படுத்த முயற்சிக்கின்றது.

மக்கள் சொத்து
சமூக அசைவியக்கத்தில் இருந்து உருவான - வெளிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல் வளங்கள் அதை உருவாக்கிய மக்களுக்கானவை. அவற்றை வேண்டியபோது பயன்படுத்தவும் பார்வையிடவும் அந்த மக்களுக்கு இருக்கும் உரிமை என்ற புள்ளியில் ஒன்றிணையும் எவரும் அவற்றைப் பாதுகாக்கவே முயற்சிப்பார்கள். ஆவணங்கள் மற்றும் தகவல் வளங்களை தனியுரிமை என்ற புள்ளியைத் தாண்டிப் பொதுவுடமையானதாகக் கருதும் நிலையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை மக்கள் சார்ந்து - சமூகம் என்ற பொதுவுண்மை நிலையில் இருந்து சிந்திக்கும் அனைவரும் உணர்ந்துகொள்வர். தற்காலத்தைய முதலாளித்துவ சமூக அமைப்பின் தனியுரிமைக் கருத்துநிலையில், ஆவணங்களும் அறிவும் தனியுரிமையாக்கப்பட்டுள்ளது. இந்நிலவரத்தின் பாதகமான அம்சங்களை பொதுச்சமூகம் படிப்படியாக உணர்ந்து கொண்டு வருகின்றது. தனியுடமையாக்கப்பட்டுள்ள அறிவை பொதுச்சமூகவெளியில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய நிலமையைச் சாத்தியப்படுத்த வேண்டியதன் தேவை பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டுவருகின்றது. நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றது.

அறிவைப் பொதுவுடமையாக்கும் செயல்முறை
தனியுடமையான அறிவைப் பொதுவுடமையாக்க வேண்டியதன் அவசியம் பல்வேறு தரப்பினரால் உணரப்பட்டுள்ள போதிலும் அதனை நடைமுறையில் செயற்படுத்துபவர்கள் ஒருசிலரே. வெவ்வேறு தரப்பட்ட செயற்பாட்டாளர்களும் வெவ்வேறுவிதமான அணுகுமுறையுடன் மேற்கூறிய விடயங்களை அணுகமுற்படுகின்றனர். அணுகுமுறை வேறுபாடுகளைக் கடந்து அறிவைப் பொதுவுடமையாக்கும் அல்லது தகவல் வளங்களை அனைவரும் பயன்படுத்தும் நிலையைச் சாத்தியமாக்கல் என்ற ஒத்த புள்ளியில் இணைந்து இயங்க வேண்டியதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய அதேநேரம் தமது அணுகுமுறைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் உரையாட வேண்டியதும் அவசியமானதாகும். சமாந்தரமாக இயங்குபவர்களது அணுகுமுறைகளை கற்றுக் கொண்டிருக்கும் அதேநேரம் தமது அணுகுமுறையை மீள்பரிசீலனைக்கு உட்படுத்திக் கொண்டிருக்க வேண்டியதும் மிக அவசியமானதாகும். இது பொதுப்புள்ளியில் இணைந்து இயங்கும் நிலமையைச் சாத்தியமாக்கும். இவ்வகையான செயல்முறைகள் சட்ட எல்லைக்குள்ள்ளும், சட்ட எல்லையை சில இடங்களில் மீறியும் சட்டதிட்டங்களை முற்றாக நிராகரித்தும் என இயக்கமுறுகின்றன.

சட்ட எல்லை
சட்ட எல்லைகளுக்குள் தமது இயங்குதளத்தை வரையறுத்துக் கொள்வோர் தொடர்பாகப் பார்ப்போமேயானால், தற்போதுள்ள தனியுடமைச் சமூக அமைப்பு என்ற சட்ட எல்லையைக் கருத்தில் கொண்டியங்கும் விடயத்தைக் கூறலாம். காப்புரிமை என்ற விடயப்பரப்பின் எல்லைப்பரப்பிற்குள் நின்று இயங்கக்கூடிய - இயங்கச் சாத்தியமான வெளிகளில் இயங்குதல். தனியுடமையாக்கப்பட்டுள்ள அறிவை ஆவணப்படுத்துவது மிகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. தகவல் வளங்களை பொதுவெளியில் காட்சிப்படுத்துவதற்கும் பிரதிசெய்வதற்கும் குறிப்பிட்ட காலப்பகுதிவரைக்கும் இன்றையசட்டம் தடைவிதித்துள்ளது. சட்ட எல்லைகளுக்குள் நின்று கொண்டு செயற்படுவதென்பது மிகவும் வரையறுக்கப்பட்டுள்ள நன்மைகளை மாத்திரமே பெற்றுத்தரக்கூடியது.

சட்ட எல்லைக்கோடுகளை மீறுதலும் மாற்றம் செய்தலும்
இன்றிருக்கும் சட்ட எல்லைகள் எப்போதும் இவ்வாறு இருந்தவையல்ல. வரலாற்றோட்டத்தில் மீறல்கள் காரணமாகவும் மக்களது வேண்டுகோள்கள் - எதிர்ப்புக்கள் காரணமாகவும் படிப்படியாக மாற்றத்திற்குள்ளாகி வந்தவை. இன்றிருக்கும் எல்லைகள் கூட நாளை மாற்றத்திற்குள்ளாகக் கூடியவையே. மக்கள் திரளினது மீறல்கள் புதிய சட்டமாக எதிர்காலத்தில் புதிய எல்லைகளுடன் வரையறுக்கப்படும். அவ்வகையில், மக்கள் நலன் சார்ந்த மீறல்கள் மக்களுடன் இணைந்து மக்கள் திரட்சியை மையமாகக் கொண்டு செய்யப்பட வேண்டியவை. அறிவைப் பொதுவுடமையாக்கும் செயற்பாடுகளாகட்டும் அல்லது தகவல் வளங்களைப் பொதுவெளியில் காட்சிப்படுத்தும் செயற்பாடுகளாகட்டும் இத்துடன் இணைந்த இதர செயற்பாடுகளாகட்டும் அனைத்தும் சமூக இயக்கம் என்ற வகைமாதிரிக்கு உட்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். அவ்வகையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பல்வேறு தரப்பினரையும் இணைத்துக் கொண்ட சமூக இயக்கம் என்னும் தன்மை ஆகிய இரண்டு தன்மைகளுடன் கூடிய செயற்பாடுகளே மக்கள் சார்பான சரியான இயக்கமாகக் கொள்ளப்படும்.

சமூகவியக்கப் பண்பு
மக்கள் சார்பான இயக்கம் நிச்சயமாக தனிநபரால் செயற்படுத்தப்பட முடியாதது. தனி ஒரு நிறுவனத்தால் சாதிக்கப்பட முடியாதது. மக்கள் சார்பான அதன் சாதகமான அம்சங்களைத் தொடர்ச்சியாக வலியுறுத்துவதன் மூலமும் அதன்பால் ஈர்க்கப்படுவோரைத் தொடர்ச்சியாக இணைத்துக் கொண்டு திரட்சியாகச் செயற்படுவதன் மூலமுமே சரியான திசையில் பயணிக்க முடியும். இவ்வகையான சமூக இயக்கப் பண்பு ஏதோவொருவிதத்தில் அச்செயற்பாட்டிற்கு மக்கள் அங்கீகாரத்தை வழங்குவதோடு மறைமுகமான சட்ட அங்கீகாரத்தையும் வழங்கிவிடுகின்றது. மக்கள் ஆதரவையும் மக்கள் திரட்சியையும் சட்டத்தால் எதுவுமே செய்ய முடியாத நிலமைக்கு உள்ளாக்கிவிடுகின்றது. அதேநேரம், அதை அங்கீகரிக்க வேண்டிய நிலமையையும் சட்டத்திற்கு உருவாக்கிவிடுகின்றது. அதிகாரத்திற்குச் சார்பான சட்ட எல்லைகள் தொடர்பில் தொடர்ச்சியாக மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு அவர்களை இணைத்துக் கொண்டு இயங்குவதே சட்ட எல்லைகளுக்கு வெளியே மக்கள் சார்பாக இயங்க முற்படுவோருக்கான சிறந்த வழிமுறையாக இருக்க முடியும்.

வெளிப்படைத்தன்மை
மக்கள் சார்பான செயற்பாடுகளை சட்ட எல்லைகளுக்குள் நின்று கொண்டு மாத்திரம் செயற்படுத்திவிட முடியாது. சில இடங்களில் சட்டத்தின் கடினமான சுவர்களை அசைத்துப் பார்க்க வேண்டியிருக்கும். இன்னும் சில இடங்களில் சட்டத்துடன் மூர்க்கமாக மோத வேண்டியிருக்கும். அதிகாரத்தால் வடிவமைக்கப்பட்ட சட்டத்தின் சுவர்களை உடைத்தெறிய வேண்டியிருக்கும். தனிநபராலோ அல்லது நிறுவனத்தாலோ சாத்தியமாக்க முடியாத நிலையில் மக்கள் திரட்சியை மாத்திரமே நம்ப வேண்டியிருக்கும். வெளிப்படைத்தன்மையான செயற்பாடுகளாலும் இணைத்துக் கொள்ளும் தன்மையிலான செயற்பாடுகளாலும் மாத்திரமே மக்களை இணைத்துச் செயற்பட முடியும். பல்வேறுதரப்பட்ட மக்களையும் இணைத்துக் கொள்வதற்கு நிச்சயமாக ஏற்கனவே இயங்கிக் கொண்டிருப்பவர்கள் வெளிப்படையாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இவ்வகையான வெளிப்படைத்தன்மை சமூக இயக்கமாக அணுகுவதற்கான முன்நிபந்தனையாக அமைவதோடு ஒவ்வொருவரையும் குறிப்பிட்ட செயற்பாடுகள் சார்ந்து நெருக்கமாககப் பிணைத்திருக்கும். அதேநேரம், அதிகாரத்திற்கு எதிராக இயங்க வேண்டிய மனநிலையையும் வழங்கிவிடுகின்றது.

பிரச்சனைகள்
மேற்படி பண்புகளை மறுத்தியங்குவது மக்கள் விரோதச் செயற்பாடாகக் கருதப்படுவதோடு அதிகாரம் சட்டத்தின் மூலம் அச்செயற்பாட்டை முடக்குவதற்கும் குறிப்பிட்ட விடயம் சார்ந்து தன்னை மேன்மேலும் இறுக்கிக் கொள்ளவதற்கும் வழிசமைக்கும். உதாரணமாக ரகசிய இயக்கமாக முன்னெடுக்கப்படும் எண்ணிம ஆவணச் செயற்பாடுகள் இதர மக்கள் சார்ந்த எண்ணிம ஆவணச் செயற்பாடுகளையும் முடக்கும் தன்மை கொண்டவை. சமூக இயக்கப் பண்பைக் கொண்டமையாத வெளிப்படையற்ற செயற்பாடுகளுக்கு சமூகத்தில் உள்ள மக்களிடமிருந்தே எதிர்ப்பு வருவதோடு, அவ்விடயம் சார்ந்து இயங்கும் ஏனையோரையும் - அவ்விடயம் சார்ந்து இயங்கும் மக்கள் கூட்டத்தையும் அதிகார வர்க்கத்தின் முன் குற்றவாளியாக்கும் இயல்பு கொண்டது.

நூலகத்தின் செயற்பாட்டியக்கம்
நூலகமானது செயற்றிட்டம் - நிறுவனம் என்ற வெளிகளைக் கடந்து சமூக இயக்கம் என்ற வெளியில் காலடி எடுத்து வைக்க முயற்சிக்கின்றது. இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் வாழும் பல்வேறு பிரதேசங்கள் மற்றும் நாடுகளில் ஆவணப்படுத்தல் இயக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதோடு வெவ்வேறு அரசியல் - சமூகப் பார்வைகள் உள்ளவர்களை இணைத்துக் கொண்டியங்கிக் கொண்டிருக்கின்றது. அதேநேரம், பல்வேறுவகைப்பட்ட சமூகப் பொது நிறுவனங்களைப் பங்காளர்களாக்கிக் கொண்டிருப்பதோடு ஆவணங்களின் உடைமையாளர்களைத் தொடர்ச்சியாகத் தனது செயற்பாட்டியக்கத்தில் இணைத்துக் கொண்டு வருகின்றது. குறிப்பிட்ட நபர்களது செயற்பாடுகள் என்ற நிலையைத்தாண்டி நூற்றுக்கணக்கானோரின் செயற்பாடுகளது இணைந்த வடிவம் என்ற நிலையை அடைந்து கொண்டிருக்கின்றது. தமிழ் எழுத்தாளர்கள் இணைந்த கூட்டுச் செயற்பாடு - தமிழ் பேசும் மக்களது கூட்டுச்செயற்பாடு என்ற பரந்த தளத்தை இலக்காகக் கொண்டு நூலகம் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரம், வெளிப்படைத்தன்மை என்ற விடயத்தை மேன்மேலும் அதிகரித்துக் கொண்டுவருவதோடு முற்றுமுழுதான வெளிப்படைத்தன்மையான இயக்கம் என்ற புள்ளியைத் தனது இலக்காகக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

May 04, 2011

இது எரிக்கமுடியாத நூலகம்

சசீவன் கணேசானந்தன். இலங்கைத் தமிழ் பேசும் சமூஉகங்களின் எழுத்தாவணங்களை டிஜிட்டல் முறையில் இணையத்தில் ஆவணப்படுத்தும் ‘நூலகம்’ அறக்கட்டளையின் தலைமை நிர்வாக இயக்குநர். இந்த இணையத்தளத்தில் ஈழத்துத் தமிழ் நூல்களை இலவசமாகப் படிக்கலாம் என்பது சிறப்பம்சம். அவரிடம் பேசினோம். - (த சண்டே இந்தியன், 06 பெப்ரவரி 2011, பக்கம் 25)

இலங்கைத் தமிழ்ச் சமூகம் என்பது ஏதோவொரு விதத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிற ஒரு சமூகமாக இருக்கிறது. புவியியல் ரீதியாக ஒரே இடத்தில் வாழக்கூடிய சூழலின்றி, அது பரந்து வாழ்கிறது. சாதாரணமாக ஒரு நூலகத்தை யாழ்ப்பாணத்தில் தொடங்கினால் பார்வையாளர்கள் மட்டுப்படுத்தப்படுவார்கள். யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்தக்கூடிய நிலைமை இருக்கும். இது இலண்டன், கனடா என எங்கே தொடங்கினாலும் அதுதான் நடக்கும்.

ஆனால் இணையப்பரப்பில் தொடங்கப்படும்போது, அதை எல்லா இடங்களிலும் எல்லோருமே பார்க்ககூடிய நிலைமை சாத்தியமாகும். அதுதான் அதன் முக்கிய நோக்கம். எமது வரலாறு, இலக்கியம், மொழி, பண்பாடு, சமயங்கள், கலைகள், நாட்டார் வழக்காறுகள் உள்ளிட்ட அனைத்தும் ஆவணப்படுத்தப்படுகின்றன. அழியும் நிலையிலுள்ள எழுத்துக்கள், ஆவணங்கள் அடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கும் வண்ணம் www.noolaham.org என்ற எங்களுடைய டிஜிட்டல் நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

நூல்களை திரட்ட, ஒவ்வொருவிதமான செயற்பாட்டிற்கும் தனித்தனி கூகுள் குழுமங்களை உருவாக்கி வைத்திருக்கின்றோம். இக்குழுக்களை ஒருங்கிணைப்பதில் சில இடர்ப்பாடுகள் இருக்கின்றன. அதை மீறித்தான் தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதில் சவால் என்னவென்றால், எல்லோராலும் எல்லா நேரத்திலும் வேலை செய்யமுடியாது. அவரவர் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதுதான் அந்தப் பணிகளைச் செய்வார்கள் என்பதுதான். இந்த நூலக வலைத்தளத்தில் நேரடியாக எழுத்து ஆவணங்கள் தொடர்பான தகவல்களைச் சரிபார்த்தும் இணைத்தும் தளத்தில் உள்ளடக்கத்தை விரிவாக்கலாம். இணையத்தில் கிடைக்கும் மின்னூல்களுக்கான புதிய விவரப் பக்கங்களைத் தொடங்கலாம். எங்களுக்கு உதவிய ஒருவருக்கு நேரமின்மை காரணமாகப் பங்களிப்பு குறையும் போது, வேறொருவர் வருவார். இப்படி புதியவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு செயல்திட்டமாகத் தொடங்கப்பட்டது நிறுவனமாக வளர்ந்துள்ளது. 2010 நவம்பர் வரையில் எட்டாயிரம் ஆவணங்களை ஆவணபடுத்தியிருக்கின்றோம். இது மிகப்பெரிய அடைவாக இருக்கிறது. அதற்கப்பால் இனி ஆண்டுக்கு 12 ஆயிரம் ஆவணங்கள் என்ற இலக்கை வைத்திருக்கின்றோம்.

இதில் பாடப்புத்தகங்களையும் கூட ஆவணப்படுத்துகிறோம். இணையத்தின் மூலமாக சகல பாடங்களையும் படிக்கக்கூடிய நிலைமை உருவாகும். டியூசன் கல்சர் பூதாகாரமாக வளர்ந்திருக்கிறது. அதை ஒழிக்க வேண்டிய தேவையிருக்கிறது. அதை ஒழிக்கும் போதுதான் சுயகல்வி என்பது வளரும். இதை ஊக்குவிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

இதற்கு பெரிய நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி இதவிகளையும் நாங்கள் பெற்றுக் கொள்ளவில்லை. தனிநபர்களிடமிருந்து கிடைக்கும் உதவிகளைத்தான் பெற்றுக் கொள்கிறோம். இதுவொரு தன்னார்வக் கூட்டுமுயற்சி என்பதால் ஆர்வமுள்ள எவரும் பங்குபெறலாம்.

1887 முதல் 2010 வரையிலான காலப்பகுதியில் வெளியான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. இலங்கைத் தமிழ் அல்லாத வெளியீடுகளைக் கொண்டிருக்கும் ‘அயலகம்’ பகுதியில் ஏறத்தாழ 300 ஆவணங்கள் உள்ளன.

இப்போது தமிழர் வரலாறு தொடர்பான ஆவணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அவை யாரிடமாவது இருப்பின் கொடுத்து உதவலாம். இலவசமாக இணையத்தில் யார் வேண்டுமானாலும் அதைப்படிக்கும் விதத்தில் பதிவேற்றுவோம்.

Statcounter