வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

May 08, 2011

புதிய புத்தகம் பேசுது நேர்காணல் (மே 2011)

சசீவன் கணேசானந்தன்
சசீவன் கணேசானந்தன் அவர்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்க்ழகத்தில் ஒரு திட்டப்பணியான 'தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆசியாவில் இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு' என்ற தலைப்பில் ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகின்றார். இவர் ஆய்வு மற்றும் பகுப்பாய்வுச் செயற்பாட்டிற்கான மையத்தினத்தும் நூலகம் பவுண்டேசனினதும் தலைமை நிர்வாகியாகவும் செய்யபட்டு வருகின்றார். இலங்கை தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணங்களைப் பாதுகாக்கூம் ஆவணக்காப்பாளராகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார்.


முதலில் www.noolaham.org வலைத்தளத்தைப் பற்றிக் கூறுங்கள்

www.noolaham.org என்கிற இணைய முகவரியில் இயங்கும் “நூலகம்” வலைத்தளம் ஓர் எண்ணிம நூலகம் ஆகும். அதாவது www.noolaham.org என்ற ஆட்களப்பெயரில் இயங்கும் இணையநூலகத்தை, கணினியும் இணைய இணைப்பும் உள்ள எவரும் பயன்படுத்த முடியும். இப்போது 8,500 க்கும் அதிகமான எழுத்தாவணங்களின் விபரங்களும் இணைப்புக்களும் இந்த இணைய நூலகத்தில் உள்ளன. பருமட்டாகச் சொல்வதானால் இன்றைய தேதியில் 3000 நூல்கள், 3000 சஞ்சிகைகள், 1500 பத்திரிக்கைகள், 1000 சிறுவெளியீடுகள் என 8500 ஆவணங்கள் சகலராலும் பார்க்க்கக்கூடியவாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் ஈழத்து ஆவணங்கள். ஈழத்து ஆவணங்கள் என்னும் போது ஏதோவொருவகையில் ஈழத்துடன் தொடர்புள்ளவை. அவ்வகையில் ஈழத்து எழுத்தாளர்களால் எழுதப்பட்டதோ அல்லது ஈழத்துப் பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்டதோ அல்லது ஈழம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதோ என்றவாறு அமையும்.

இங்கு நான் பயன்படுத்தும் ஈழம் என்ற சொல் பன்மைத்துவ நோக்கிலான இலங்கைத் தமிழ் என்ற அடையாளத்தைப் பிரதிபலிப்பதாகவே அர்த்தப்படுத்தப்பட வேண்டும். நூலகத்திலுள்ள ஆவணங்களது அரசியல் அடையாளங்களது வரைபடத்தை காட்சிப்படுத்த எத்தனிக்கும் ஒருவரால் நிச்சயமாக அதை உணர்ந்து கொள்ள முடியும். தமிழகத்தில் தற்போது பிரயோகிக்கப்படும் 'ஈழம்' என்ற சொல்லின் அர்த்தம், நான் பயன்படுத்தும் அர்த்தத்துடன் பொருந்த முடியாது என்றே நினைக்கின்றேன்.

இவை தவிர சங்க இலக்கியங்கள் முதல் சோவியத் நூல்கள் வரை என பல்வேறுவகையான, ஏறத்தாழ 300 வெளியீடுகளுக்கான இணைப்புக்களும் உள்ளன. இந்த நூலகம் இலவசமானது. திறந்த அணுக்கம் (Open Access) உள்ளது. அதாவது எவரும் எங்கிருந்தும் இதனைப் பயன்படுத்தலாம்.


உங்களுடைய நூலகம் தொடர்பான வேலை தமிழ் மக்களிடம் எப்பொழுது தெரிய வந்தது?

2007 ஆம் ஆண்டு அளவிலேயே ஒரு நாளைக்கு 300 வாசகர்கள் என்ற அடைவை தொட்டிருந்தோம் என்றளவில் இது தொடர்பாக பலர் அறிந்திருந்தார்கள்; பயன்படுத்தினார்கள் என்றே கூறவேண்டியுள்ளது. 2007 ஆம் ஆண்டின் இறுதியிலேயே நாங்கள் இன்று பயன்படுத்தும் மீடியாவிக்கி (Mediawiki) என்ற மென்பொருளைப் (Software) பயன்படுத்தத் தொடங்கினோம். அதற்கு முன்னர் சாதாரண HTML பட்டியல்களே காணப்பட்டன. தேடுவசதிகளற்ற சாதாரண பக்கங்களைக் கொண்ட தளமாகவே காட்சியளித்தது. ஆனால், மீடியாவிக்கி பயன்படுத்தத் தொடங்கியதன் பிற்பாடு இதன் உபயோகம் என்பது பல மடங்கு பெருகியிருக்கின்றது. ஏனெனில் பல்வேறு விதமான முறைகளில் ஓர் ஆவணத்தை அணுகமுடியும் என்பதும் பல்வேறு வகைப்பட்ட Access points அங்கு இருப்பதென்பதும் தேடலுள்ள வாசகனைப் பொறுத்தவரை சாதாரண விடயங்கள் அல்ல. ஆய்வாளர்களுக்கு உபயோகப்படக்கூடிய அளவிற்குக் கட்டமைப்பு முற்றுமுழுதாக மாற்றியமைக்கப்பட்டதன் காரணமாக சாதாரண வாசகர்கள் கூட பெருமளவில் பயன்பெற்றிருக்கின்றார்கள். சாதாரணமாக, ஒரு பிரதியை இணையத்தில் காட்சிப்படுத்துவதுடன் இணைய நூலகத்தின் பங்கு முடிவடைந்துவிடுவதில்லை. பிரதியை வாசகனுடன் ஊடாட வைப்பதும் அதன் மீது கேள்விகளைக் கோரும் பிரதிகளை உற்பத்தி செய்வதும் கூட நூலகத்தின் பணியாக இருக்க முடியும். மரபார்ந்த நூலகங்கள் பிரதிகளைக் கட்டடங்களின் பிரமாண்டத்திற்குள் அமுக்கிவிடுகின்றன. அதற்கான மாற்றுவழிகளைக் கண்டடைய வேண்டியது இம்மாதிரியான இணைய நூலகங்களின் பணியெனக் கருதுகின்றேன். ஆக, அத ஊடாட்ட திறனின் பெறுமானத்தை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கும் அதேநேரம், அதனை உச்சத்தில் வைத்திருக்க வேண்டியுமுள்ளது.

நூலகம் தொடர்பான அறிமுகங்கள் ஆங்காங்கே நிகழ்த்தப்பட்டன. நூலகத்துடன் தொடர்புள்ளவர்களால் நிகழ்த்தப்பட்ட அறிமுகங்கள் போக, அதன் பங்களிப்பு வெளிகளுக்கு அப்பால் நிகழ்த்தப்படும் அறிமுகங்கள் அதிக முக்கியமானவை. உதாரணமாக, 2007ஆம் ஆண்டு எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களால் ஒரு சிறிய அறிமுகம் தீராநதி நேர்காணலில் செய்யப்பட்டது. அந்நேரத்தில் அதை மிக முக்கியமான அறிமுகமாகக் கருதினோம். அது தவிர ‘உங்கள் நூலகம்’ இதழில் செ. தனபாலன் விலாவரியாக கட்டுரையொன்றை எழுதியிருந்தார். ஆனந்தவிகடனில் நூலகம் தொடர்பாக சிறிய அறிமுகக் குறிப்பொன்று பிரசுரமாகியிருந்தத்து. இவை தமிழ்நாட்டு மக்களை எமது பயனாளர்களாக்கிய அறிமுகங்கள். இதே மாதிரிப் புலம்பெயர் சமூகங்களிலும் சில அறிமுகங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. பல வலைப்பதிவுகளிலும் இணையத்தளங்களிலும் நூலகத்திற்கான தொடுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வகையான தொடுப்புக்கள் ஊடாகப் பலர் தளத்தை வந்தடைந்து பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் புலம் பெயர் தமிழர்ளே நூலகத்தின் பெரும்பான்மையான பாவனையாளர்களாகவிருந்தார்கள். இப்போதும் கூட புலம்பெயர் சமூகத்தவரது பாவனையின் அளவு குறைந்து விடாத போதும், அதில் பெருமளவான வளர்ச்சிப் போக்குக் காணப்படவில்லை. ஆனால், இப்போது பார்வையாளர்களில் பெரும்பாலானோர் இலங்கை, இந்திய நாடுகளிலிருந்தே வருகை தருகின்றார்கள். இப்போதுள்ள பாவனையாளர்களில் 40 சதவிகிதமானவர்கள் இலங்கையிலிருந்தும் 40 சதவிகிதமானவர்கள் இந்தியாவிலிருந்தும் மிகுதி 20 சதவிகிதமானவர்கள் ஏனைய நாடுகளிலிருந்தும் என எமது புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மற்றையது, அறிமுகங்களை ஒரு கட்டத்திற்கு மேல் அதில் செயற்படுபவர்களே நிகழ்த்திக் கொண்டிருக்க முடியாது. அவை பரவலாக பாவனையாளர்களாலும் இதனால் பயன்பெறப்போகும் சமூகங்களாலும் நிகழ்த்தப்பட வேண்டியவை. தன்னார்வலர்களது சிறிய பங்களிப்புக்களை ஒருங்கிணைத்து இவ்வாறான விடயங்களைச் செயற்படுத்துவதே மிகக்கடினமான பணியாகவுள்ளது. இந்நேரத்தில் கிடைக்கப்பெறும் குறைந்தளவு வளங்களை அறிமுக நிகழ்வுகளுக்கும் ஒதுக்க முடியாது. இவ்வாறான செயற்றிட்டங்களைப் பொறுத்தவரை அறிமுகம் / பரவலாக்கம் என்பவை அதிக முக்கியமானவை என்ற போதிலும், இவற்றிற்காக அதிகளவான வளங்களை ஒதுக்குவதற்கு மனம் ஒப்பவில்லை என்பதே உண்மை. உங்களைப் போன்ற செயற்பாட்டாளர்களால் நிகழ்த்தப்படும் அறிமுகங்கள் நிச்சயமாக எம்மைப் பொறுத்தவரை மிகப்பெறுமதியானவை.

நூலகத்தின் ஆரம்ப காலத்தில் பெருமளவில் இலக்கியம் சார்ந்த வாசகர்களே பயனாளர்களாக இருந்த நிலமை படிப்படியாக மாறி, தற்போது அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூகவியல் ஆய்வாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பயனாளர்களின் வடிவம் வெகுவாக மாறியுள்ளது. அடுத்த கட்டமாக பாடசாலை மாணவர்களைப் பெருமளவு பயனாளர்களாக மாற்ற வேண்டிய தேவையின் நிமித்தமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில், பாடசாலை மாணவர்களைப் பயனாளர்களாக மாற்றும் போது நீண்ட காலப்போக்கில் அதிகமானோருடன் பரிச்சயமான தன்மை ஏற்படுத்தப்பட்டுவிடும் என்பதோடு, பலதரப்பட்டவர்களாலும் நாளாந்தம் பாவிக்கப்படும் நிலமையை எட்டிவிடும் என்பது முக்கியமானது. அதேநேரம், தனித்தனியான துறைசார்ந்த ஆர்வமுள்ளவர்களை அவர்களுக்கு ஏற்றவாறு அணுக வேண்டிய தேவையும் குறைந்துவிடும்.


உங்கள் நூலக வலைத்தளம் 2005 ஆம் ஆண்டு தொடங்கியதன் பின்னணி என்ன என்பதை பற்றி கூறமுடியுமா?

2005 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னராக மதுரை திட்டம் போன்ற செயற்திட்டங்களில் நண்பர்கள் இயங்கி வந்திருக்கின்றார்கள். இயங்கி வந்த வேளையில் ஈழத்துக்கென, ஈழத்து நூல்களை தனியே பாதுகாப்பதற்கான ஒரு செயற்திட்டம் தேவை என்ற எண்ணம் வலுப்பெற்றிருக்கின்றது. அவ்வேளையில் முக்கியமாக இலக்கியம் சம்பந்தமான நூல்களை மையமாக வைத்து இச்செயற்திட்டம் தொடங்கப் பெற்றிருக்கின்றது. ஆரம்பத்தில் தட்டெழுதப்பட்ட நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆயினும் பிற்காலத்தில் நூல்கள் என்ற வரையறையைத் தாண்டி சஞ்சிகைகளும் சேர்க்கப்பட்டன. அதன்பின்பு பத்திரிகைகள், சிறுவெளியீடுகள் என இதர எழுத்தாவணங்களும் உள்வாங்கப்பட்டு இன்று இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் சகல எழுத்தாவணங்களும் ஆவணப்படுத்தப்படும் ஓர் ஆவணக்காப்பகமாக இது பரிணமித்துள்ளது. எதிர்காலத்தில், எழுத்தாவணங்களைத் தாண்டி இதர ஆவணங்களையும் உள்ளடக்கிய ஆவணக்காப்பகமாக மாற்ற, அதைச் செயற்படுத்துவதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் தொடர்பாக ஆய்வு செய்து கொண்டுள்ளோம். அவ்வகையில் ஒலிக் கோப்பு (audio), நிகழ்படம் (video), இயங்குபடம் (animation), நிகழ்த்தல் (ppt), படங்கள் (images), தரவுகள் (data) போன்றவற்றையும் நாங்கள் எதிர்காலத்தில் சேர்த்துக் கொள்ள இருக்கின்றோம்.

மற்றையது, இந்த மின் நூலகம் (ஏன்) தேவை என்ற விடயம். இலங்கைத் தமிழ்ச் சமூகங்கள் ஏதோவொருவகையில் முற்று முழுதாக சிதைக்கப்பட்ட ஒரு சமூக அமைப்பாகக் காணப்படுகின்றன. தமது நிலம் தொடர்பான ஆதாரங்களிலிருந்து ஏதோ ஒரு வகையில் பெயர்க்கப்பட்டுள்ள ஒரு சமூகம். இலங்கையில் வாழும் எண்ணிக்கைக்குச் சற்றும் குறைவில்லாத அளவானோர் புலம் பெயர்ந்து பல்வேறுபட்ட நாடுகளிலும் திக்கு திக்காக வாழுகிறார்கள். யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் புலம்பெயர்தல் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றது. அதே நேரம், புவியியல் அமைவிடம் சார்ந்து இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களுக்கென ஓர் ஆவணக்காப்பகத்தை அமைப்பதற்கான சூழ்நிலை எங்கும் காணப்படவில்லை. அவ்வாறு குறித்த இடத்தில் அமையப்பெற்றாலும் அதன் மூலம் எல்லோரும் பயன்பெறுவார்கள் எனக்கூற முடியாது. ஆக, இணையமூலமான ஆவணக்காப்பகம் மாத்திரமே ஒரே தெரிவாக உள்ளது. இவ்வாறான காரணங்கள் எமது செயற்திட்டங்களுக்கும் இயக்கத்திற்கும் வலுச் சேர்ப்பதாக அமைகின்றன. ஒருவகையில் இதன் மூலமான அதீத பயனென்பது எம்மை மூர்க்கமாக இயங்க வைக்கின்றது என்றுகூடக் கூற முடியும். ஏனெனில் நீண்டகாலப் போக்கில் இதன் பயனென்பது நினைத்துப் பார்க்க முடியாத விடயம். தகவல் சமூகமும் அதன் நகர்வும் எமக்கு எடுத்தியம்புவதும் அதைத்தான். இவ்வாறு சிதைந்துபோயுள்ள இந்த சமூகங்கள் இணையம் மூலமாக மாத்திரமே ஏதோ ஒரு வகையில் ஒருங்கிணைக்கப்படுகிறது. அவ்வகையில் இச்செயற்திட்டம் - இச்செயற்பாடு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. என்னைப் பொறுத்தவரை தொடங்கியதன் பின்னணி அதன் நகர்வுகளில் பல்வேறுபட்ட காரணங்களையும் சேர்த்துக் கொண்டு இன்று அதன் பெறுமானத்தை அதிகமாக்கியிருக்கின்றது என்றுதான் கூறுவேன்.


2005 இல் தொடங்கும் பொழுது எப்படி உங்கள் குழு எவ்வாறு செயல்பட்டது? செயற்பாடுகள் எப்படி இருந்தது?

இச்செயற்திட்டம் 2005 இல் தொடங்கப்பட்டபோது இதை செயற்படுத்தியது ஆக இரண்டே இரண்டு பேர் மாத்திரம்தான். எவ்விதமான பின்னணியுமற்ற சமூக நோக்குள்ள ஆரம்பமாக அமைந்திருக்கின்றது. 2005 ஆம் ஆண்டு தைப் பொங்கல் தினத்தில், ஒரு மின்நூலகமாக நூலகத் திட்டம் என்ற விடயத்தில் தொடங்கப்பட்டிருக்கின்றது. இரண்டே இரண்டு நபர்கள் ஒரு மடலாடல் குழு ஒரு வலைத்தளம் ஏராளமான மன உறுதி ஆகியவையே நீங்கள் இன்று காணும் 500,000 பக்கங்களை ஆவணப்படுத்தியுள்ள நூலகத்தின் மூலதனமெனில் நம்பக் கடினமாகவே இருக்கும். படிப்படியாக பல்வேறுபட்ட ஆர்வலர்களையும் நலன்விரும்பிகளையும் இணைத்துக் கொண்டு நகர்ந்திருக்கின்றது. 'இணைத்துக்கொள்ளுதல்' என்ற தன்மை - தாய்மையுடன் தொடர்புள்ள அதன் தன்மையே இன்றைய வளர்ச்சி வரைக்கும் காரணமாக இருந்திருக்கின்றது என்றே நம்ப வேண்டியிருக்கின்றது.

நான் நினைக்கின்றேன், முதல் இரண்டரை ஆண்டு நிறைவுறும் காலப்பகுதியில் 60 தன்னார்வலர்கள் பங்களிப்பாளர்களாக இருந்திருக்கின்றார்கள். ஒவ்வொருவருடைய வேலையையும் சமப்படுத்தி நோக்கமுடியாது. ஒவ்வொருவரும் பல்வேறு விதமான பங்களிப்பை வழங்கி இருக்கின்றார்கள். ஒருவிதத்தில் தன்னார்வ்வப் பங்களிப்புக்களில் சமனற்ற பங்களிப்புக்களே அதன் விசேட அம்சம் என்று கூறுவேன். அதுதான் அதன் அழகு பொருந்திய அம்சமும் கூட. சிலர் ஆலோசகர்களாகச் செயல்பட்டிருக்கிறார்கள், தட்டெழுதி நூல்களை இணைத்திருக்கின்றார்கள், தட்டெழுத நூல்களை வழங்கியிருக்கின்றார்கள், தொழில்நுட்பப் பங்களிப்பில் உதவியிருக்கின்றார்கள் என்றவாறாக ஒரே தளத்தில் வைத்து அணுக முடியாத பல்வேறுபட்ட பட்ட பெறுமதியுடைய பல்வேறு தளங்களில் அமைந்த பங்களிப்புக்கள். ஏன், மடலாடல் குழுவில் மடல்களை எழுதுவதன் ஊடாகத் திட்டத்தைச் செழுமைப்படுத்துபவர்களாக உதவியிருக்கின்றார்கள். ஆரம்ப கட்ட பங்களிப்பு நிலவரங்கள் இவ்வாறுதான் அமைதிருந்தன.

அதன் பின்னர், பங்களிப்புக்கள் அல்லது பங்களிப்பு வடிவங்கள் சற்று வித்தியாசப்படுத்தப்படுகின்றன. எல்லோராலும் நூல்களை தட்டெழுதி இணைப்பது என்பது இயலாத காரியம். அதே சமயம் சிலரால் நிதி பங்களிப்பு செய்யக்கூடியதாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் அந்த நிதியை கொண்டு, எங்கள் முயற்சிக்கு வேகம் அளித்தனர். தன்னார்வ குழுவில் இருந்தவர்களிடமிருந்து சிறுதொகை நிதி உதவிகளை பெற்று உள்நாட்டில் சில செயற்திட்டங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டன. அந்த வகையில் பங்களிப்புவடிவம் மாற்றம் பெற்றது. பங்களிப்பு வெளி தனிநபர் பங்களிப்பைத் தாண்டி தனிநபர் மூலமான கூட்டுப் பங்களிப்பு என்னும் கட்டத்தை அடைந்தது. இதில் சில பாதகமான அம்சங்கள் அவதானிக்கப்பட்ட அதே நேரம் சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதிகாரப் படிநிலைகள் விலக்கப்பட்ட நிலையில் செயற்பட்டுக் கொண்டிருந்த செயற்றிட்டம் தன்னை விரைவுபடுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்ட முயற்சிகளால் ஏதோவொரு விதத்தில் தன்னை அதிகாரப்படிநிலைகளுக்குள் உட்புகுத்திக் கொண்டது. கூட்டுச் சமூகச் செயற்பாட்டு நிகழ்வில் இவ்வகையான அணுகுமுறைகள் பாதகமான நிலமைகள் என்ற போதிலும் விரைவுபடுத்தும் நோக்கோடு பங்களிப்பு வடிவங்கள் மாறத்தொடங்கின. பொறுப்புக்கள் மற்றும் முகாமைத்துவங்கள் தொடர்பாகவும் அதிக பங்களிப்புக்களை வழங்கியவர்கள் முக்கியத்துவம் பெற்றார்கள்.

என்னைப் பொறுத்தவரை, இரண்டாவது வருட கால நிறைவின் பின்னரே இச்செயற்திட்டம் தொடர்பாக கூடுதல் அக்கறை செலுத்தத் தொடங்கினேன். நூலகத் திட்டத்தின் முதல் இரண்டு வருட பயணத்தின் பெறுபேற்றைப் பார்த்தோமேயானால், இது மிக மெதுவான பயணம் என்றே கூறமுடியும். அத்துடன் பயன்பாட்டுரீதியில் முழுமையடைய வாய்ப்பு இல்லாத ஒன்றாகக் காணப்பட்டது. அக்காலத்தில் நான் ஈழத்துக் கவிதைகள் - கவிஞர்கள் தொடர்பிலான தேடலில் இருந்தேன். என் தேடலிற் கிடைக்கும் ஆவணங்களை நூலகத்தில் இணைக்க முயன்றேன். இதுதான் நூலகத்துடனான எனது ஊடாட்டத்தின் ஆரம்பமாக அமைந்தது. அந்நேரத்தில் நிறையப் போதாமைகளை அடையாளங் காண முடிந்தது. செயல் ஒழுங்குமுதல் சிந்தனைமுறை வரை நிறைய மாற்றங்கள் தேவைப்பட்டன. ஏற்கனவே உருவாகியிருந்த அதிகாரப்படிநிலைகள் ஏதோவொருவகையில் தேக்கமுற்று அவை நிலைக்கத்தான் போகின்றன என்பதை மனதில் வைத்து பொறுப்பு சார்ந்து அவற்றை வரையறுத்த பின்னர் அதற்கு வெளியே பிறிதொரு பெருமளவானோர் பங்களிக்கக் கூடிய தன்னார்வ வெளியை உருவாக்குவது என்ற எண்ணத்தில் செயற்படத் தொடங்கினேன். இதற்கு விக்கிமீடியா மற்றும் விக்கிபீடியா மாதிரிகளை மனதில் வைத்து நூலகத்தை நகர்த்திச் செல்ல முயன்றேன். தற்போதைக்கு நூலகத்தின் பங்களிப்பாளர்களை, அவர்களின் பங்களிப்பை வைத்து பொறுப்பு சார்ந்த உறுதியான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் நூலகத்திட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் ஆசைப்பட்டது போன்று தன்னார்வ வெளிகளை இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் ஊடாடும் பல்வேறு தளங்களிலும் கட்டமைக்க வேண்டியது மாத்திரமே மிச்சமிருக்கின்றது. பல்வேறுபட்ட நாடுகள் சார்ந்தும் பிரதேசங்கள் சார்ந்தும் பரவலான அறிமுகங்களை நிகழ்த்துவதன் ஊடாக தன்னார்வக் குழுக்களை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது. உருவாக்கப்படும் தன்னார்வக்குழுக்களை, தங்கள் பிரதேசங்கள் சார்ந்த ஆவணப்படுத்தல் நிகழ்வுகளில் பங்குபற்ற வைப்பதே நாம் தற்போதைக்கு எதிர்பார்க்கும் விடயமாகும். வெளியிலிருந்து பார்ப்போருக்கு, இதன் வரைபடம் மேலிருந்து கீழான அணுகுமுறையாகக் காணப்படும் போதிலும் அவ்வரைபடங்கள் கீழிருந்து மேலான அணுகுமுறைகளிலேயே வரையப்பட வேண்டும் அல்லது இறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நான் மிக அவதானமாயிருக்கின்றேன். எவ்வகையான ஆவணங்கள் எவ்வாறு ஆவணப்படுத்த வேண்டும் என்பது அப்பிரதேசக் குழுக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான விடயமெனக் கருதுகின்றேன்.


நூலக நிறுவனம் எப்போதிருந்து, எவ்வாறு இயங்கி வருகிறது?

நூலக நிறுவனம் (www.noolahamfoundation.org) பதிவுசெய்யப்பட்டது சென்ற ஆண்டு, 2010 மே மாதம்தான். 2008 இலிருந்து முக்கிய பங்களிப்பாளர்களை இணைத்துக் கொண்டு நிறுவனமாக இயங்கிவருகிறோம். நூலகத் திட்டத்துக்கு வெளியேயானதாகவே நிறுவனம் உள்ளது. ஆனால் நிறுவனத்தின் பெரும்பாலான வளங்கள் நூலகத் திட்டத்துக்குச் செலுத்தப்படுகின்றன. அவ்வகையில் நூலகம் வலைத்தளத்தை 2009 இல் பொறுப்பெடுத்து அதனை மிகப் பயனுள்ளதொன்றாக வளர்த்தெடுத்துள்ளோம். நிறுவனம் என்பது வேறொருவிதமான விடயம். அந்த நிறுவனம் நூலகம் போன்ற வேறுவகையான செயற்திட்டங்களுக்கும் உதவிபுரிய கூடிய ஒன்றாகும். பல்வேறுதரப்பட்ட நூலகவியல், ஆவணப்படுத்தல் தொடர்பான நிறுவனங்களுடன் ஏதோ ஒரு வகையில் நாங்கள் ஊடாடிக் கொண்டிருக்கின்றோம். அவர்களுடைய உதவியை பெற்றுக் கொண்டுள்ளோம் - பெற்றுக் கொண்டிருக்கின்றோம். அதே நேரம், எங்களால் இயன்ற உதவியை பிற நூலகம் சார்ந்த அமைப்புக்களுக்குச் செய்து கொண்டிருக்கின்றோம். நிறுவனமாக இயங்கினாலும் தன்னார்வ வெளியை (Volunteer space) இயலுமான வரைக்கும் குறுக்காத வரையில் பார்த்துக் கொள்கிறோம். அதை மேலும் மேலும் எவ்வாறு அகலித்துச் செல்வதென்பதே எமக்கு முன்னுள்ள மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில், தன்னார்வ வெளிதான் இந்த செயற்பாட்டின், இந்த சமூக இயக்கத்தின் அடிநாதம். தன்னாவர் வெளியை நாங்கள் குறுக்க முயல்வது ஏதோவொரு கட்டத்தில் எமக்குப் பாதகமானதாகவே அமையும். நாம் அடைய வேண்டிய இலக்கை மாத்திரம் மனதில்கொண்டு நகரும்போது, பல்வேறு விதமான தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். சரியான பாதைகள் சிலவேளை பயணிக்கக்கூடிய சாத்தியமான பாதைகளாக இருப்பதில்லை. அதேநேரம் பயணிக்க இலகுவான பாதைகள் சரியானவையாக இருப்பதில்லை. இவற்றிற்கு இடையிலான புள்ளிகளைக் கண்டடைந்து எமக்கான பாதைகளை வரைந்தவாறு முன்னோக்கிச் செல்வது மிகக்கடினமானது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்ட்டுள்ளோம்.

தற்போது மொத்தமாக தன்னார்வ பங்களிப்பாளர்கள் என்று பார்த்தால் 500 லிருந்து 600 பேர் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. நூலகம் நிறுவனம் என்ற அளவில் வைத்து பார்க்கும் போது அதன் வடிவமே எமது தேவைகள் சாந்தே உருவாக்கப்பட்டது தான். பிற நிறுவன முன்மாதிரிகளைக் கூட நாம் முற்றுமுழுதாகப் பின்பற்றவில்லை. தொழில்நுட்பம் தொடர்பான பொறுப்புக்கள், பரவலாக்கல் தொடர்பான பொறுப்புக்கள், நிறுவன நிதிக்கையாள்கை தொடர்பான பொறுப்புக்கள் என பொறுப்புக்களை வரையறுத்து ஏற்கனவே அவ்வெளிகளில் இயங்கியவர்களை அதற்குப் பொறுப்பாக நியமித்துள்ள அதேநேரம், அவர்கள் சுயமாக தாங்கள் மற்றும் தங்கள் பொறுப்புக்கள் சார்ந்து தன்னார்வக்குழுக்களை அமைத்து செயற்படுகின்றார்கள். இதன்மூலம் அதிகாரப் படிநிலைகளில் இறுக்கத்தை குறைத்து இயங்குவதற்கான பொறிமுறையைக் கட்டமைப்பதே முக்கிய நோக்கம். இவ்வகையான அதிகாரப் பிரிப்புக்களும் அவற்றின் இயங்குகைக்கான வெளிப்படைத்தன்மைகளும் ஜனநாயக ரீதியான அமைப்பை உருவாக்குவதோடு ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்குக் களம் சமைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அடுத்து, செயல்பாட்டுத்தளத்தில் மாணவர் தரப்புக்களை உள்வாங்குவது மிகமுக்கியமானது. முதலாவது அவர்களுக்கு இது தொடர்பான அக்கறையை உண்டாக்குகின்றோம். இரண்டாவது, அவர்களால் சமூகம் சார்ந்த விடயங்களைப் பொறுப்பேற்றுச் செய்யக்கூடிய திறனையும் வளர்க்கின்றோம். மாணவர்கள் இன்றி Volunteerism என்ற விடயம் ஒரு விதத்தில் அடிப்பட்டு போகும் நிலைமை காணப்படுகின்றது. இன்றை முதலீட்டியச் சமூகத்தில் Volunteerism என்பது தொழில்நுட்ப வெளிகளுக்கப்பால் மிகவும் சுருங்கிப் போய்விட்டது. மாணவப்பருவம் மாத்திரமே ஓரளவிற்கு Volunteerism சார்ந்த சாதகமான காலப்பகுதியாகும். தொழில்துறையை வளர்க்கும் நோக்குடைய கல்விமுறைமை, மாணவர்களது சமூகச் செயற்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்ற அதேநேரம், கிடைக்கும் மெல்லிய இடைவெளிகளில் அவர்களை ஈடுபடுத்தித்தான் ஆக வேண்டியிருக்கின்றது. மூன்றாவது, மாணவப்பருவச் செயற்பாடுகள் ஏதோவொருவகையில் அதற்குப் பின்னைய காலத்திய செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தும். வெவ்வேறு பரப்புக்களில் இயங்க நினைப்பவர்களுக்கான களமாக இதனை வளர்த்தெடுத்தவாறிருக்கின்றோம்.


2005 இருந்து தொடர்ந்து Digitize செய்து கொண்டு வருகின்றீர்கள். Gradualize ஆகி வந்தீர்களா? அல்லது ஒரு குறிப்பிட்ட வருடத்தில் அதிக முயற்சி செய்து அதிக ஆவணங்களை Digitize செய்தீர்களா?

முதல் வருடத்தில் 100 (நூறு) ஆவணங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டாம் வருடத்தில் 262 (இருநூற்று அறுபத்தியிரண்டு) ஆவணங்கள். மூன்றாம் வருடம் 1256 ஆவணங்கள். நான்காம் ஆண்டு 1270 ஆவணங்கள். நான்காம் ஆண்டு 2190 ஆவணங்கள். ஐந்தாம் ஆண்டு 3109 ஆவணங்கள். இப்போது ஆறாண்டு முடிவில் எண்ணாயிரத்து நூறு ஆவணங்களை எங்களால் ஆவணப்படுத்த முடிந்திருக்கின்றது.

இனிவரும் காலங்களில் தனியே ஆவணங்களின் எண்ணைக்கையை அதிகரிப்பது என்பதை மாத்திரம் இலக்காகக் கொள்ளாமல், ஆவணங்களைப் பாதுகாப்பது தொடர்பான அக்கறையை பரவலாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கிலான செயற்பாடுகளையும் சமாந்தரமாகச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம். எமது உண்மையான வெற்றி தனியே ஆவணப்படுத்துவதிலும் ஆவண எண்ணிக்கையைக் கூறிப் பெருமைப்படுவதிலும் மாத்திரம் தங்கியில்லை. ஆவணப்படுத்தல் தொடர்பான ஆர்வத்தை சமூகத்தில் எவ்வளவு தூரம் ஏற்படுத்தியிருக்கின்றோம் என்பதிலும் ஆவணப்படுத்தல் தொடர்பான பிரக்ஞையின் மூலமான வெளிப்பாடுகள் எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கின்றது என்பதிலும் தான் தங்கியிருக்கின்றது.


எக்காரணங்களினால் ஆவணப்படுத்துவதில் இரண்டு வருடகாலத்திற்கு பிறகு ஒரு பெரும் பாய்ச்சல் (Gigantic leap) ஏற்பட்டது?

ஆரம்பக்கட்டத்தில் தட்டெழுதப்பட்டு மட்டும் ஆவணங்கள் இணைக்கப்பட்டன. ஒரு கட்டத்திற்குப் பின்னர் எமது வளர்ச்சிப்படியில் Digital Library என்ற கருத்தியலைத்தாண்டிச் சிந்திக்கத் தொடங்கினோம். Digital Library என்ற எண்ணக்கரு ஆவணக்காப்பகமாக மாற்றம் பெற்றது. ஆவணங்களை ஆவணங்களாக அதேவடிவத்தில் அப்படியே காட்சிப்படுத்தல் - பாதுகாத்தல் என்பது தொடர்பான அக்கறையின் காரணமாக மின்பிரதியாக்கம் (Scan) செய்யும் ஒரு முறையை நோக்கி நாம் நகர வேண்டி வந்தது. மின்பிரதியாக்க முறையின் மூலம் தட்டெழுதுவதை விட கிட்டத்தட்ட 30 மடங்கு அதிகமான ஆவணங்களை ஆவணப்படுத்தக்கூடியதாக இருந்தது என்பது முதலாவது முக்கியமான விடயம். இரண்டாவது முக்கியமான விடயம் நூல்கள் என்ற நிலையைத்தாண்டி சஞ்சிகைகளையும் ஆவணப்படுத்தக்கூடிய நிலைமை மின்பிரதியாக்கம் மூலமே சாத்தியமானது. ஆக, தட்டெழுதுவதை விட மின்பிரதியாக்கம் செய்வதன் மூலம் ஆவணப்படுத்துவது அதிகம் வசதியானதாகக் கருதப்பட்டது. ஆவணப்படுத்தலில் துல்லியம், வேகமாக ஆவணப்படுத்தல் ஆகிய காரணங்களால் ஒருகட்டத்தில் தட்டெழுதுவதன் மூலமான ஆவணப்படுத்தல் முறைமை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டு மின்பிரதியாக்க முறைமை ஆதிக்கம் பெற்றது.

அதே நேரம் அந்நேரத்தில் பெரியளவிலான செயற்றிட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டது இன்னொரு முக்கிய காரணமாகும். 20 இற்கும் மேற்பட்ட மின்பிரதியாக்கிகளைப் பயன்படித்திப் பரந்தளவிலான ஆவணப்படுத்தலைச் செய்யவது மூன்றாவது வருடத்திலேயே நிகழ்ந்தது. இதன் காரணமாக பெரும்பாய்ச்சல் நிகழ்ந்தது போன்ற தோற்றம் உருவாகியிருக்கின்றது.
அதேநேரம், எமக்குத் தன்னிடமிருந்த முழு சேகரிப்பையும் தந்துதவிய எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்கள் இச்சடுதியான மாற்றத்திற்கு ஒரு காரணமென்று கூறுவேன். ஏனெனில் அந்நேரத்தில் அவர் தன்னிடமிருந்த முழுச்சேகரங்களையும் எமக்கு தந்துதவினர். அதன் காரணமாக ஒரே வருடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களை இணையத்திற்குக் கொண்டுவருவது சாத்தியமானது. அதேநேரம், அதற்குப் பின்னர் வந்த வருடங்களில் வருடாந்த ஆவணப்படுத்தல் எண்ணிக்கையைக் குறையாமல் பார்த்து கொண்டோம். இனிவரும் காலங்களில், மாதத்திற்கு ஆயிரம் ஆவணங்கள் என்ற இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்றொரு உந்துதலுடன் செயற்பட்டு கொண்டிருக்கிறோம். அது சாத்தியமாகுமா, இல்லையா என்பது தொடர்பாக நிறைய கேள்விகள் இருந்தாலும், ஏதோ ஒரு கட்டத்தில் அதை சாத்தியமாக்கி விடுவோம் என்று நம்புகிறோம். என்னைப் பொறுத்தவரை அவ்வெல்லையையே, உச்ச எல்லையாக வரையறுக்க நினைக்கின்றேன். அவ்வெல்லையை அடைந்ததன் பிற்பாடு நாம் ஆவணப்படுத்தலுடன் சார்ந்த பிற தளங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாக உள்ளது. ஆவணங்களை பல்வேறுவகையாக ஒழுங்குபடுத்தல், ஒழுங்குபடுத்தப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்திய ஆய்வுகள், அரிதான ஆவணங்களைத் தேடிச் செல்லுதல், எழுத்தாவணங்கள் தவிர்ந்த பிற ஆவணப்படுத்தல் செயற்பாடுகளில் கவனத்தைக் குவித்தல் என்பது போன்ற பலவிதமான பொறுப்புக்கள் எம்முன் குவிந்துள்ளன.


தற்போது 8000 இற்கும் மேற்பட்ட Digitized files இருப்பதாகக் கூறுகின்றீர்கள். இதில் முதலில் தட்டெழுதப்பட்டு இணைத்ததையும் மின்பிரதியாக்கம் (Scan) செய்து இணைத்ததையும் பார்க்க முடியும் அல்லவா?

தட்டெழுதப்பட்டவை HTML வடிவத்தில் மாத்திரம் காணப்படும். மின்பிரதியாக்கம் செய்யப்பட்டவை PDF வடிவத்தில் காணப்படும். முதல் 380 நூலக இலக்கங்களுக்குள் உள்ள ஆவணங்கள் முழுவது தட்டெழுதப்பட்டவை. ஆயினும் நாம் பின்வந்த காலங்களில் மின்பிரதியாக்கம் செய்யும்போது அவற்றில் பெரும்பாலான பிரத்திகளை மின்பிரதியாக்கம் செய்தும் இணைத்துள்ளோம். அதனால், 380 என்ற நூலக இலக்கங்களுக்குள் உள்ளவற்றில் பெரும்பாலானவற்றை HTML மற்றும் PDF ஆகிய இரண்டு வடிவங்களிலும் பார்வையிடலாம். 380 இற்குப் பின்னரான நூலக இலக்கமுள்ளவை அனைத்தும் மின்பிரதியாக்கம் செய்யப்பட்டவை. அவற்றில் ஒரு சில மாத்திரம் அச்சுக்குச் சென்ற மூலவடிவத்திலேயே காணப்படுபவை. ஆக மொத்தம் 380 இற்குப் பின்னுள்ள இலக்க ஆவணங்களை PDF வடிவத்திலேயே பார்க்கலாம். தட்டெழுதப்பட்டு இணைக்கப்படுபவை, தேடுபொறிகள் மூலம் குறித்த சொற்களைத் தேடி வருபவர்களுக்கு உதவிய போதிலும் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. எழுத்துப் பிழைகள் மாத்திரமல்லாது, ஆவணங்களின் சில பகுதிகள் கூட இல்லாமல் போயிருக்கும் வாய்ப்புக்கள் உண்டு. அதேநேரம் அதிகாரத்தில் உள்ளவர்கள் தமக்குத் தேவையில்லாத பகுதிகளை நீக்கவும் வாய்ப்பு உண்டு. மேற்குறித்த காரணங்களால் என்னைப் கேட்டால் மின்பிரதியாக்கம் செய்யப்படுவதே சிறந்தது என்பேன். எழுத்துணரி (OCR) தமிழில் சாத்தியப்படும்போது PDF வடிவத்தில் உள்ள அனைத்தையும் உரைக் கோப்புக்களாவும் மாற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.


எண்ணிமப்படுத்தி இணைப்பதற்கு ஆவணங்களை எப்படி நிர்ணயம் செய்வீர்கள்?

ஆரம்ப காலக்கட்டத்தில் பெரும்பாலும் இலக்கியம் சார்ந்த நூல்களே ஆவணப்படுத்தப்பட்டன. புனைவுகள், அபுனைவுகள் என்று பார்த்தால் கூட பெரும்பாலும் இலக்கியம் சார்ந்தவையாகவே காணப்படுகின்றன. திட்டத்துடன் தொடர்புள்ளவர்களது தெரிவுகள் முதன்மை பெற்றிருந்ததனால் அவ்வாறு காணப்பட்டிருந்தாலும் பிரேத்தியேகமான காரணங்கள் இருந்திருக்கும் என நினைக்கவில்லை. அதன்பின்பு, சஞ்சிகைகள் மற்றும் இதர எழுத்தாவணங்கள் என எவ்வகையான எழுத்தாவணங்களாக இருப்பினும் அவை அச்சில் வெளிவந்திருப்பின், ஆவணப்படுத்தத் தகுதியானவை என்றவாறாக மாற்றம் பெற்றது. அச்சில் வெளிவந்திருக்க வேண்டும் என்பது மாத்திரமே எமது நிபந்தனையாகத் தொடர்கின்றது.

தரமானது / தரமற்றது, பயனுள்ளது / பயனற்றது போன்ற தணிக்கைகள் எதனையும் நாம் பின்பற்றுவதில்லை. அது எமது வேலையும் அல்ல. அவை விமர்சகர்களும் சமூகமும் தீர்மானிக்க வேண்டியவை. எதிர்காலச் சந்ததிக்கு இன்றைய காலப்பகுதியிலும் கடந்த காலப்பகுதியிலும் அச்சில் வெளிவந்த ஆவணங்களை விட்டுச் செல்வது மாத்திரமே நூலகத்திற்கூடான எமது பணியாகும். உதாரணத்துக்குச் சொல்வதானால் இன்றைக்கு நாங்கள் 'கல்வெட்டு' என்று அழைக்கப்படும் நினைவுமலர்களைக் கூட ஆவணப்படுத்துகின்றோம். ஏனெனில் கல்வெட்டுக்களில் கூட முக்கியமான விடயங்கள் காணப்படக்கூடும். நாம் ஆவணப்படுத்தும் நினைவுமலரொன்று சிலவேளை ஒரேயொரு ஆய்வுக்காவது மாத்திரமே எதிர்காலத்தில் பயன்படக்கூடும். உதாரணமாக ஒரு கல்வெட்டிலிருந்து வம்சாவளி, பரம்பரை சம்பந்தமான தகவல் எதிர்காலத்தில் ஆய்வுகளுக்குத் தேவைப்படக்கூடும். ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அப்படியான ஆய்வுகள் எதிர்காலத்தில் நிச்சயமாக முக்கியத்துவம் பெறக்கூடியவை. சிதைவுக்குள்ளாகிப் பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு மொழிகளைப் பேசி வாழும் சமூகம் தனது உறவுகளை தேட முற்படும்போது இவ்வாறான நினைவுமலர்கள் பயன்படக்கூடும்

மற்றொரு முக்கியமான விடயம் வரலாறு தொடர்பானது. இன்றைய வரலாறு இன்று அதிகாரத்தில் உள்ளவர்களால் எழுதப்படும் வரலாறு. பல்வேறு வகையில் பிளவுற்று அதிகாரப்படிநிலைகளைக் கொண்டுள்ள சமூகம் என்றளவில் இன்றுள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எதிர்காலத்தில் இன்றைய அதிகார வர்க்கத்தால் எழுதப்பட்ட பிரதிகளில் இருந்தே தமது வரலாற்றை மீள்வாசிப்புச் செய்ய வேண்டியிருக்கும். ரணஜித் குகா அவர்களால் எழுதப்பட்ட 'சந்திராவின் மரணம்' என்ற கட்டுரை மிக நல்ல உதாரணம். எந்தவொரு ஆவணத்தையும் அழிய விடப்போவதில்லை என்ற குறிக்கோளுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

மருத்துவப் பதிவேடு (Medical Records), நில உரிமைப் பதிவுகள் (Landrights documents) போன்ற ஆவணங்களைக் கூட ஆவணப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. எதிர்காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் (Public Institution) போன்றவற்றின் ஆவணங்களையும் நாங்கள் ஆவணப்படுத்த வேண்டும் என்று கரிசனையுடன் செயற்பட்டு நினைக்கின்றோம். எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்று தெரியவில்லை. ஆயினும் நாம் சாத்தியங்கள் தொடர்பிலும் அலட்டிக் கொள்வதில்லை. அசாத்தியங்களைச் சாத்தியமாக்குவது தானே செயற்பாட்டாளர்களின் பணி.


உங்களின் திட்டம் இலங்கை அரசுக்கு தெரிந்திருந்ததா?

அரசாங்கத்திற்கு இப்படி ஒரு திட்டம் இயங்கி கொண்டிருக்கிறது என்பது தெரியுமோ, தெரியாதோ என்று எனக்கு தெரியாது. எமது நிறுவனம் இலங்கையில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது எனற வகையில் அரசாங்கத்திற்கு நாம் தெரியப்படுத்தியிருக்கின்றோம் என்றுதான் நினைக்கவேண்டியிருக்கின்றது. மேலும், அரசாங்கத்தைக் கண்டு பயப்பட, நாம் அரசாங்கத்திற்கு எதிராக இயங்கவில்லையே. அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையைத்தான் நாம் செய்துகொண்டிருக்கின்றோம். தமிழ் பேசும் மக்களின் ஆவணக்காப்பகம் என்றளவில் அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள், அரச ஆதரவாளர்கள், அரச எதிர்ப்பாளர்கள் என பலரது பங்களிப்பும் நூலகத்தில் உண்டு. நூலகத்தை, அதன் பயன் சார்ந்து அரசியல் நோக்கோடு அணுக முடிந்தாலும், அதை உருவாக்கும் எமது செயற்பாடுகள் நிச்சயமாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டவை.

அதேநேரம், மிகவும் வெளிப்படையாக இயங்குகின்றோம் என்றளவில் எமது செயற்பாடு தொடர்பில் அச்சப்பட ஏதுமில்லை. ஆனால், எமது செயற்பாடுகள் பெருமளவில் நிகழ்ந்தால், சில வேளை ஏதாவதொரு வகையில் பிரச்சனைகள் ஏற்படுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, சிறிய அளவில் செயற்பட்டுக் கொண்டிருந்தோம் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. சில வேளைகளில் தமிழர்களின் அடையாளம், தமிழர்களின் பண்பாடு, தமிழர்களின் வாழ்வியல் தொடர்பான விடயங்களை ஆவணப்படுத்துவதென்பது அதில் ஈடுபடுபவர்களுக்கு பிரச்சனைகள் வரக்கூடும் என்ற பயம் இன்று வரைக்கும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்காக முழுவதுமாக இயங்காமல் இருக்கவும் முடியாதே.


தமிழ்நாட்டில் உங்கள் முயற்சிகளுக்கு எந்த அளவிற்கு ஊக்கம் கிடைத்திருக்கிறது?

இன்று வரைக்கும் எந்த விதமான ஆதரவும் தமிழக அரசாங்கத்திடம் இருந்தும் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டுவதிலும் பார்க்க நாம் அணுகவில்லை என்பதுதான் உண்மையானது. ஆயினும், இம்முறை எனது இந்த இந்திய பயணத்தின் நோக்கங்களில் ஒன்று, தமிழ்நாட்டில் காணப்படும் ஈழத்து ஆவணங்களை பட்டியலிடுவதும், அவற்றை சேகரித்து ஆவணப்படுத்துவதும். அதற்கான கட்டமைப்புக்களை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன்.
அதே நேரத்தில் சில ஆவணப்படுத்தலுடன் தொடர்புடைய நிறுவனங்களை - அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதற்கான அடித்தளத்தை இடும் நோக்கோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். பலர் பல்வேறு உதவிகளை அளிப்பதாக உறுதி அளித்திருக்கின்றார்கள். காலப்போக்கில் ஒரு செயற்திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்க முயற்சி எடுக்கும் போது பல்வேறு தரப்பட்டவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என நினைக்கிறேன். ஆயினும் தமிழ்நாட்டு அரசை நேரடியாக இதுவரை அணுகவில்லை. அதற்கான சந்தர்ப்பங்கள் சிலவற்றை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன். பெரும்பாலும் சாத்தியப்படும் என நம்புகின்றேன். சாதகமான சூழ்நிலைகள் அமைந்தால் மேற்கொண்டு பெரியளவிலான செயற்றிட்டங்களை ஆரம்பிக்க முடியும்.


தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. இவ்வந்தஸ்து கிட்டிய பிறகு மத்திய அரசாங்கத்திடமிருந்து பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. தமிழ் செவ்வியல் இலக்கியம் என்று கூறும் பொழுது ஈழத்து அறிஞர்களின் பங்களிப்பும் அதில் அடங்கியுள்ளது. அக்கூறுகளை பாதுகாப்பதும் அரசின் கடமையாகின்றது. அவ்வெளியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதா?

தமிழ் என்ற ஒட்டுமொத்த பரப்பில் இயங்கும்போது இந்த ஏட்டுச்சுவடிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நீங்கள் கூறியவாறு தமிழக அரசுக்கும் உண்டு. நீங்கள் கூறுவது தொடர்பாக சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றேன். எமது நிறுவனத்துடன் தொடர்புடைய ஆய்வாளர் ஒருவர் அதற்கான முயற்சிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். இவ்விடயம் எவ்வளவு தூரம் செயற்பாட்டுத்தளத்தை நோக்கி நகரும் என்பதைப் பற்றி இப்பொழுது கூற முடியாது.

இலங்கையில், வடக்கு கிழக்கு எங்கும் பல ஏட்டுச்சுவடிகள் அழிந்துபோகும் நிலைமையில் உள்ளன. கிழக்கில் சுனாமியின் போது பல ஏட்டுச்சுவடிகள், முக்கியமாக மருத்துவக்குறிப்புக்கள் அடங்கிய ஏட்டுச்சுவடிகள் பல அழிந்து போனதாக கூறப்படுகிறது. இன்று எவ்வித பராமரிப்பும், பாதுகாப்பும் அற்று பல்வேறு இடங்களில் ஏட்டுச் சுவடிகள் அநாதரவாக விடப்பட்டிருக்கின்றன. யுத்தம் காரணமாக பல்வேறு வகைப்பட்ட ஏட்டுச் சுவடிகளும் அரிதான ஆவணங்களும் அழிந்து போயிருக்கின்றன. விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய சேகரத்திற்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. பெரும்பாலும் முற்றாக அழிந்து போயிருக்கலாம். இவ்வாறு ஏதோவொருவகையில் அழிந்து போயுள்ளவற்றில் இருந்துதான் எஞ்சியவற்றைச் சேகரித்து ஆவணப்படுத்த வேண்டியிருக்கின்றது. யுத்தத்தின் பின்னைய காலப்பகுதியில், யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களே சகல தரப்புகளாலும் அநாதரவாக விடப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாமல் இவ்வாறான வேலைகளில் ஈடுபடுவதை நினைத்து குற்றவுணர்வுக்குள்ளாகிய சந்தர்ப்பங்களும் உண்டு.


உங்கள் நிறுவனத்தை நடாத்துவதற்கு நிதி எவ்வாறு சமாளிக்கப்படுகிறது? ஒரு புத்தகத்தை எண்ணிம வடிவத்திற்கு (Digital Format) மாற்றுவதென்பது நீண்ட செயற்பாடல்லவா? அதற்கு நிதியும் அதிகமாக தேவைப்படும் அல்லவா?

நாம் நிறுவனமயமாகாமல் இயங்குவது என்ற விடயத்தில், கவனம் செலுத்தி வந்திருந்த போதிலும், ஒரு கட்டத்தில் நிறுவனக் கட்டமைப்பிற்குள் உட்படாமல் அடுத்த கட்டத்திற்குச் செல்லமுடியாது என்ற நிலமை வந்தபோதே நிறுவனமாகப் பதிவு செய்தோம். நிறுவனமாகப் பதிவு செய்த போதிலும், வழமையான நிறுவனங்களுக்குள்ள பண்புகளுடன் இயங்காமல் இச்செயற்பாட்டை ஒரு சமூக இயக்கமாக வளர்த்து செல்லும் பாணியில்தான் இயக்கிக் கொண்டிருக்கிறோம். எமக்கென அலுவலகம் எதுவுமில்லை. பல்வேறுபட்ட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அவற்றின் உதவிகளைப் பெற்றவாறே இயங்கிக் கொண்டிருக்கின்றோம். செலவுகளை இயன்றவரை மிகவும் கட்டுப்படுத்தியவாறே இயங்குகின்றோம். எமது வரவு செலவு விபரங்களை வெளிப்படையாக வலைத்தளத்தில் வெளியிடுகிறோம். எமது செயற்பாடுகளை நிறுவன தளத்தின் மூலமாக வெளியுலகிற்குத் தொடர்ச்சியாகத் தெரியபப்டுத்திக் கொண்டிருக்கின்றோம்.

எமக்குக் கிடைக்கும் நிதியுதவிகள் அனைத்தும் எமது செயற்பாடுகளைப் பார்த்தவர்களும் பயனடைந்தோரும் வழங்கியவை தான். ஓரிருவரே மிகப்பெரிய நிதியுதவியை அளிக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க நினைக்கின்றோம். மாறாக, ஆயிரக்கணக்கான பயனாளர்களது சிறிய அன்பளிப்புக்களைக் கொண்டு இயங்குவதே ஆரோக்கியமானது. இவ்வகையான அணுகுமுறை பெருமளவான உழைப்பைக் கோரும் செயற்பாடென்ற போதிலும் இயன்றவரை பங்களிப்பாளர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதே சிறந்தது. இயன்றவரை நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் மூலமான செயற்பாடுகளை இழிவாக்கி, இதர பங்களிப்பு முறைகளை ஊக்குவித்தவாறிருக்கின்றோம். சமூக இயக்கமாக மாற்றிக் கொண்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் தொடர்ச்சியாகப் பெருமளவு நிதி கையாளுகை இருக்காது என்ற போதிலும், பத்திரிகைகளை ஆவணப்படுத்துவது போன்ற செயற்பாடுகளுக்கு இன்னும் அதிகமான நிதி தேவைப்படும். அதுமட்டுமல்லாது அசைபடங்கள் மூலமான ஆவணப்படுத்தல்கள் இன்னும் அதிகமான நிதியைக் கோரும் செயற்பாடுகளாகும்.

பல்வேறுபட்ட சமூக அக்கறையுள்ளவர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஒரு சில நிறுவனங்களிடமிருந்துமே நிதி பெறப்படுகின்றது. இன்றைய தேதி வரையில் பெரியளவான நிறுவனங்களது எவ்வித நிதியுதவியையும் பெற்றுக் கொள்ளவில்லை. ஒருவகையில் இச்செயற்றிட்டத்தினூடான எமது ஆத்மார்த்தமான பிணைப்பிற்கு இதுவே காரணமென்பேன். பெரும் நிதிக்கையாள்கை நிச்சயமாக இச்செயற்றிட்டத்தின் உயிர்ப்பைச் சிதைத்துவிடும் தன்மை கொண்டது.


நிறுவனமான பிறகும் உங்களுக்கு நிதியைப் பெறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகி இருக்கின்றது அல்லவா? நிறுவனம் என்ற பெயரில் ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது. அதன் மூலம் உங்கள் திறமையான செயல்பாடுகளைத் கொண்டு நிதியை கேட்கலாம். அதற்காக விண்ணப்பிக்கலாம் அல்லவா?

அப்படியிருந்தும் கூட நாங்கள் இன்று வரைக்கும் தனிப்பட்ட நபர்கள் அல்லது தனிப்பட்ட நபர்கள் சார்ந்த மிகச்சிறிய நிறுவனங்கள் ஊடாகத்தான் நிதியைப் பெற்று வருகின்றோம். எதிர்காலத்தில் பெருமளவு நிதித்தேவையுள்ள செயற்திட்டங்களுக்கு நிதியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கமிருப்பினும் கூட நிறுவனத்தை பல தன்னார்வலர்களது சின்னஞ்சிறிய பங்களிப்புக்கள் மூலம் இயக்குவதே சிறந்தது. குறிப்பிட்ட செயற்றிட்டங்களுக்கு மாத்திரம் நிதி கேட்டு விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் அடிப்படைச் செயற்பாடுகள் எப்போது தன்னார்வலர்களாலும் தன்னார்வலர்களது சின்னஞ்சிறிய நிதிப்பங்களிப்புகளாலும் மாத்திரம் நிறைந்திருக்க வேண்டுமென்பதே எனது விருப்பமாகும்.


தொழில்நுட்ப விடயங்களுக்கு நீங்கள் எங்கிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்கிறீர்கள்?

ஆரம்பத்தில் பெரும்பாலான தொழில்நுட்ப விடயங்களை மயூரன் பார்த்துக் கொண்டிருந்தார். மீடியாவிக்கியை நூலகத் தளமாக ஒழுங்கமைத்தவர் கோபிநாத் என்றபோதிலும், அதன் பின்னர் அதனை ஒவ்வொரு விடயங்களையும் மாற்றம் செய்தவாறு, அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஓர் இளைஞர் - வினோத்ராஜன் என்னும் தோழர். தமிழ் விக்கிப்பீடியாவினூடாக அறிமுகமாகிய அவர் தன்னார்வலராக இன்று வரைக்கும் எம்முடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார். அவரைப் போன்றோரது தன்னார்வ உதவிகள், எமக்குப் பெரிய உந்து சக்தியை அளித்ததோடு, நாம் இன்று இவ்வளவு தூரம் வளர்வதற்குக் காரணமாக இருந்திருக்கின்றது. நிமலபிரகாசன் போன்றோருடன் இணைந்து வினோத் தன்னார்வத் தொழில்நுட்பக் குழுவொன்றை செயற்படுத்தி வருகின்றார். தொழில்நுட்பம் தொடர்பான விடயங்கள் என்று வரும்போது பல்வேறுபட்ட தொழில்நுட்பத் தன்னார்வலர்களுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்பதோடு அவர்களது பங்களிப்பின் மூலம் அவற்றைச் செயற்படுத்தியும் வருகின்றோம்.
தமிழா முகுந்த் என்ற தமிழ்நாட்டு இளைஞர் (தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கின்றார்) தனது Server இல் Host பண்ணலாம் என்று கூறி, நூலகத்திற்கொரு இடத்தை ஒதுக்கித் தந்தார். அதன்பின்னர் லோகேஷ் எனும் இன்னொரு இந்தியர் அந்த உதவியை இன்றுவரைக்கும் தொடர்கின்றார். தமிழ் விக்கிப்பீடியாவின் தன்னார்வப் பங்களிப்பாளர்களாகிய சுந்தர் போன்றோரும் நுட்ப உதவிகளை வழங்குகின்றனர். இன்றுவரைக்கும் நுட்பப்பிரச்சனைகளையும் நுட்பச் செயற்பாடுகளையும் தன்னார்வலர்கள் மூலமே பெற்றும் தீர்த்தும் வந்திருக்கின்றோம்.


நூலக வலைத்தளத்தின் பயன்பாடு, நிறுவனமாக இதுவரை சாதித்தவை என்று எவற்றைச் சொல்லலாம்?

நூலகத் தளத்தின் பயன்பாடு தொடர்பில் நேரடியாக அளவீடு சாத்தியமில்லை. ஆனால் பல வலைப் பதிவுக் கட்டுரைகளிலும், ஆய்வுக் கட்டுரைகளிலும், தமிழ் விக்கிப்பீடியா போன்றவற்றிலும் நூலகம் பெருமளவில் உசாத்துணையாகப் பயன்படுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல இலங்கை, இந்தியப் பயன்பாடு மிக அதிகரித்துள்ளது. எண்ணிம ஆவணப்படுத்தல் தொடர்பில் தமிழ்ச்சூழலில் முன்மாதிரிச் செயற்திட்டமாக உள்ளோம் என்பதைக் குறிப்பிடலாம். இதற்கு நல்ல உதாரணங்கள் பொள்ளாச்சி நசனின் நாள் ஒரு நூல் திட்டம், தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள் ஆகியவை. பொள்ளாச்சி நசன் எண்பதுகளிலிருந்தே சிற்றிதழ்ச் சேகரிப்பாளராக, ஆவணக் காப்பாளராகச் செயற்படுபவர். அவர் நூலகத்தை முன்மாதிரியாகக் கொண்டு தொடங்கிய நாள் ஒரு நூல் எனும் செயற்திட்டம் இப்போது 2000 ஆவணங்களைக் கொண்டிருப்பதோடு வேகமாக வளர்ந்து வருகிறது. இதுபோல தமிழரங்கத்தினர் நூலகத்துக்கு நிதியுதவி செய்பவர்கள். இப்பொழுது தாமும் ஆவணப்படுத்தலில் செயற்படுகின்றனர். அவ்வகையில் நல்லதொரு முன்மாதிரியாக, ஊக்குவிப்பாக இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியே. இன்னும் நிறைய, இன்னும் வேகமாக இத்தகைய செயற்பாடுகள் நடைபெற வேண்டும்.

நிறுவனமாக நாம் சாதிக்க வேண்டியவை பல. வெறும் ஆவணப்படுத்தல் நிகழ்வுகளைத் தாண்டி அவற்றின் தேவை தொடர்பாகத் தொடர்ச்சியாக சமூகத்தின் மத்தியில் இயங்குவதோடு, ஆவணப்படுத்தல் என்னும் புள்ளிகளைத் தாண்டிய செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மரபறிவுப் பாதுகாப்பு, தகவல் அறிதிறன், அறிவுப்பரம்பல், கல்வி மேம்பாடு என நாம் இயங்கவேண்டிய தளங்கள் எம் கண்முன்னே எண்ணற்றுப் பெருகிக்கொண்டிருக்கின்றன. இவ்விடயங்களை தனிமனித நிகழ்வு என்ற புள்ளியில் இருந்து நிறுவனத்தின் செயற்பாடு என்ற புள்ளியை நோக்கி நகர்த்தியிருக்கின்றோம். இவ்விடைநிலைப்புளியில் இருந்து சமூகப் பேரியக்கமாக மாற்ற வேண்டிய மிகப்பெரும் கடப்பாடு எமக்குள்ளதாகக் கருதுகின்றோம்.

நம்பிக்கையளிக்கும் சூழல் நிலவுகிறது என்றே நினைக்கிறேன்.

May 04, 2011

இது எரிக்கமுடியாத நூலகம்

சசீவன் கணேசானந்தன். இலங்கைத் தமிழ் பேசும் சமூஉகங்களின் எழுத்தாவணங்களை டிஜிட்டல் முறையில் இணையத்தில் ஆவணப்படுத்தும் ‘நூலகம்’ அறக்கட்டளையின் தலைமை நிர்வாக இயக்குநர். இந்த இணையத்தளத்தில் ஈழத்துத் தமிழ் நூல்களை இலவசமாகப் படிக்கலாம் என்பது சிறப்பம்சம். அவரிடம் பேசினோம். - (த சண்டே இந்தியன், 06 பெப்ரவரி 2011, பக்கம் 25)

இலங்கைத் தமிழ்ச் சமூகம் என்பது ஏதோவொரு விதத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிற ஒரு சமூகமாக இருக்கிறது. புவியியல் ரீதியாக ஒரே இடத்தில் வாழக்கூடிய சூழலின்றி, அது பரந்து வாழ்கிறது. சாதாரணமாக ஒரு நூலகத்தை யாழ்ப்பாணத்தில் தொடங்கினால் பார்வையாளர்கள் மட்டுப்படுத்தப்படுவார்கள். யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்தக்கூடிய நிலைமை இருக்கும். இது இலண்டன், கனடா என எங்கே தொடங்கினாலும் அதுதான் நடக்கும்.

ஆனால் இணையப்பரப்பில் தொடங்கப்படும்போது, அதை எல்லா இடங்களிலும் எல்லோருமே பார்க்ககூடிய நிலைமை சாத்தியமாகும். அதுதான் அதன் முக்கிய நோக்கம். எமது வரலாறு, இலக்கியம், மொழி, பண்பாடு, சமயங்கள், கலைகள், நாட்டார் வழக்காறுகள் உள்ளிட்ட அனைத்தும் ஆவணப்படுத்தப்படுகின்றன. அழியும் நிலையிலுள்ள எழுத்துக்கள், ஆவணங்கள் அடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கும் வண்ணம் www.noolaham.org என்ற எங்களுடைய டிஜிட்டல் நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

நூல்களை திரட்ட, ஒவ்வொருவிதமான செயற்பாட்டிற்கும் தனித்தனி கூகுள் குழுமங்களை உருவாக்கி வைத்திருக்கின்றோம். இக்குழுக்களை ஒருங்கிணைப்பதில் சில இடர்ப்பாடுகள் இருக்கின்றன. அதை மீறித்தான் தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதில் சவால் என்னவென்றால், எல்லோராலும் எல்லா நேரத்திலும் வேலை செய்யமுடியாது. அவரவர் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதுதான் அந்தப் பணிகளைச் செய்வார்கள் என்பதுதான். இந்த நூலக வலைத்தளத்தில் நேரடியாக எழுத்து ஆவணங்கள் தொடர்பான தகவல்களைச் சரிபார்த்தும் இணைத்தும் தளத்தில் உள்ளடக்கத்தை விரிவாக்கலாம். இணையத்தில் கிடைக்கும் மின்னூல்களுக்கான புதிய விவரப் பக்கங்களைத் தொடங்கலாம். எங்களுக்கு உதவிய ஒருவருக்கு நேரமின்மை காரணமாகப் பங்களிப்பு குறையும் போது, வேறொருவர் வருவார். இப்படி புதியவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு செயல்திட்டமாகத் தொடங்கப்பட்டது நிறுவனமாக வளர்ந்துள்ளது. 2010 நவம்பர் வரையில் எட்டாயிரம் ஆவணங்களை ஆவணபடுத்தியிருக்கின்றோம். இது மிகப்பெரிய அடைவாக இருக்கிறது. அதற்கப்பால் இனி ஆண்டுக்கு 12 ஆயிரம் ஆவணங்கள் என்ற இலக்கை வைத்திருக்கின்றோம்.

இதில் பாடப்புத்தகங்களையும் கூட ஆவணப்படுத்துகிறோம். இணையத்தின் மூலமாக சகல பாடங்களையும் படிக்கக்கூடிய நிலைமை உருவாகும். டியூசன் கல்சர் பூதாகாரமாக வளர்ந்திருக்கிறது. அதை ஒழிக்க வேண்டிய தேவையிருக்கிறது. அதை ஒழிக்கும் போதுதான் சுயகல்வி என்பது வளரும். இதை ஊக்குவிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

இதற்கு பெரிய நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி இதவிகளையும் நாங்கள் பெற்றுக் கொள்ளவில்லை. தனிநபர்களிடமிருந்து கிடைக்கும் உதவிகளைத்தான் பெற்றுக் கொள்கிறோம். இதுவொரு தன்னார்வக் கூட்டுமுயற்சி என்பதால் ஆர்வமுள்ள எவரும் பங்குபெறலாம்.

1887 முதல் 2010 வரையிலான காலப்பகுதியில் வெளியான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. இலங்கைத் தமிழ் அல்லாத வெளியீடுகளைக் கொண்டிருக்கும் ‘அயலகம்’ பகுதியில் ஏறத்தாழ 300 ஆவணங்கள் உள்ளன.

இப்போது தமிழர் வரலாறு தொடர்பான ஆவணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அவை யாரிடமாவது இருப்பின் கொடுத்து உதவலாம். இலவசமாக இணையத்தில் யார் வேண்டுமானாலும் அதைப்படிக்கும் விதத்தில் பதிவேற்றுவோம்.

December 12, 2009

நேத்ரா தொலைக்காட்சியில் எனது நேர்காணல் (20.12.2008)

நூலகம் திட்டத்தினூடாக 'முஸ்லிம் பிரதிகள் செயற்றிட்டம்' என்ற உபதிட்டம் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தன் பின்னர் நேத்ரா தொலைக்காட்சி அவ்விடயம் தொடர்பாக திட்ட ஒருங்கிணைப்பாளர் க.சசீவனுடன் நேர்காணலை ஒழுங்கு செய்திருந்தது. அந்நேர்காணல் 'புன்னகை' நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எம். ஐ. ஜாபிர் (ஆத்மா) அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டது. நேர்காணலை நிகழ்த்தியவர் இர்ஃபான் அவர்களாவார்.

இர்ஃபான்:- ஈழத்து நூல்கள், சஞ்சிகைகளுக்கான ஆவணக்காப்பகமான நூலகம் திட்டம் பற்றிய அறிமுகம் எமது நேயர்களுக்கு அதிகமாகத் தேவையில்லை. நூலகம் பற்றிய அறிமுகம் ஏற்கனவே எமது தொலைக்காட்சியில் இடம்பெற்றுள்ளது. ஆயினும் அந்நிகழ்ச்சியைப் பார்க்க கிடைத்திருக்காதவர்களுக்காக நூலகம் திட்டம் பற்றிய சிறிய அறிமுகம் ஒன்றைத் தரமுடியுமா?

சசீவன்:- 'ஈழத்து நூல்களையும் இதழ்களையும் மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி.' என நூலகம் திட்டம் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. ஆரம்பத்தில் நூல்களை மாத்திரம் ஆவணப்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயற்பட்ட நூலகம் திட்டம் காலப்போக்கில் நூல்கள் மாத்திரமன்றி இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள், ஆய்வேடுகள் என தனது பரப்பை விரித்துக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் சகலவகையான ஆவணங்களையும் உள்ளடக்கியவாறு நகரமுற்படும் நிலையில் தன்னை கட்டமைத்துக்கொண்டிருக்கின்றது. இந்நேரத்தில் 'வலை அடைவு' ஒன்றைத் தொகுக்கும் முயற்சியிலும் இருக்கின்றோம். தொடர்பற்று தனித்தியங்கும் இணையத்தளங்களை இணைக்கும் முயற்சியாகவோ அல்லது தொகுக்கும் முயற்சியாகவோ இதனைக் கொள்ள முடியும். ஒருவகையில் இதுகூட ஒரு சேகரிப்பு முயற்சியே.

உள்ளடக்க வகைகளில் எம்மை விசாலித்துக்கொண்டது போலவே தொழில்நுட்பத்திலும் மற்றும் இதரவிடயங்களிலும் எம்மை வளம்படுத்தியவாறு நகர்ந்துகொண்டிருக்கின்றோம். தொழில்நுட்பத்தின் புதிய சாத்தியங்களை பரிசீலித்தவாறு நகரக்கூடியதாக இருப்பது புதிய தலைமுறையை முழுமையாக உள்வாங்கும் முயற்சியாகவும் நாம் தேங்கிப்போவதைத் தடுக்கும் முயற்சியாகவும் கொள்ளமுடியும். ஆரம்பத்தில் சாதாரணமாக, மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டிருந்த இணையத்தளம் அதன் பின்னர் 'ஜூம்லா' மென்பொருள் மூலம் வடிவமைக்கப்பட்டது. அதன் பின்னர் 'மீடியாவிக்கி'யில் இயங்குகின்றது. ஆயினும், தற்போது மீடியாவிக்கியில் கூட பிரச்சனையை எதிர்கொள்கின்றோம். எதிர்காலத்தில் புதிய வடிவில் எம்மை வெளிபடுத்த வேண்டிய கட்டத்தையும் எதிர்பார்த்தே இருக்கின்றோம்.

நூல்களை ஆவணப்படுத்திய காலங்களில், அதாவது ஆரம்ப காலங்களில் நூல்களைத் தட்டெழுதியே இணைத்தோம். ஆயினும், இதழ்களை ஆவணப்படுத்த முற்பட்டவேளை தட்டெழுதுவதை விட அவற்றை மின்பிரதி செய்வதே உகந்தது என்ற அடிப்படையில் மின்பிரதியாக்கம் செய்யத்தொடங்கினோம். மின்பிரதியாக்க ஆவணப்படுத்தல் பாதகமான அம்சங்களை விட பல சாதகமான அம்சங்களைக் கொண்டிருந்ததன் காரணமாக நூல்களையும் மின்பிரதியாக்கம் செய்யத் தொடங்கினோம். இதனால் உள்ளடக்க அளவில் தமிழில் ஒரு புரட்சியே செய்ய முடிந்தது. மிகவிரைவாகப் பெருமளவு விடயங்களை ஆவணப்படுத்த முடிந்ததென்பது மிகப்பெரும் சாதனையாகக் கொள்ள முடியும்.

அடுத்து, நூலகம் 2.0 இனைச் சாத்தியப்படுத்தல். வெப் 2.0 இனது வரவு இணையத்தில் பெரும் புரட்சியை உண்டாக்கிய நிகழ்வு. வழங்குபவன் X பார்வையிடுபவன் என்ற துவித எதிர் இருமை நிகழ்வின் உடைவும், பார்வையிடுபவன், பங்களிப்பவன் என்ற நிலை நோக்கிய நகர்வும் உள்ளடக்கங்களின் கட்டுமானங்களை உடைத்தெறிந்தது மட்டுமல்லாது இணையப்பாவனையாளர்கள் அனைவரையும் பங்களிப்பாளர்களாக மாற்றியது. தொடர்பாடல் மற்றும் தகவல் பரிமாற்றம் போன்வற்றை எளிய நிலைக்கு கொண்டுவர உதவியது. அதுமட்டுமல்லாது பாவனையாளர்களை பங்களிப்பாளர்களாக மாற்றிய கட்டத்தில் பாவனையாளர்களின் பாவனையின் இலகுத்தன்மையை கட்டற்றுச்செழுமைப்படுத்தியது. இவ்விடத்தில் நூலகம் 2.0 என்ற கருத்துருவாக்கத்தை நூலகத்திட்ட இணையத்தளத்தில் சாத்தியப்படுத்துவதென்பது அதன் பாவனையாளர்களுக்கு வரப்பிரசாதகமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஏற்கனவே அதன் சில கட்டங்களை சாத்தியப்படுத்தியுள்ள போதிலும், அதன் முழுமையை அடையும் எமது முன்னெடுப்புகள் தொடர்ந்தவாறேயிருக்கின்றன.

நூலகம் திட்டத்தைப் பொறுத்த்வரை நாம் சில நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கின்றோம். சாதனைகளை சொல்லிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் பிரச்சனைகளையும் சொல்லியே ஆகவேண்டும். 'பங்களிப்பு' என்ற விடயம் எமக்கு பெரியளவில் பிரச்சனையாக இருந்திருக்கின்றது. இன்றும் இருந்துகொண்டிருக்கிறது. நூலகம் திட்டம் தன்னார்வக்கூட்டுழைப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் தன்னார்வலர்களைப் பெற்றுக்கொள்வதிலும் எம்முடன் இணைந்து பங்களிக்கும் தன்னார்வலர்களை ஒழுங்குபடுத்துவதிலும் நாம் பாரிய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றோம். திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு பெருமளவில் தன்னார்வலர்களின் பங்களிப்புத் தேவைப்படுகின்றது. எம்முடன் இன்றுவரைக்கும் இணைந்துள்ள 70 இற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை எம்மால் சரியாக ஒழுங்குபடுத்த முடியவில்லை. தொழில்நுட்பப் பங்களிப்புத் தவிர மற்றைய அனைத்து விடயங்களிலும் எமக்கு மேன்மேலும் தன்னார்வப்பங்களுப்புகள் தேவைப்படுகின்றன. நூலகம் திட்டம் என்பதை தனியே 'தொழில்நுட்ப மாற்றம்' என்பதுடன் மட்டுப்படுத்திவிட முடியாது. நூலகம் திட்டத்தைச் சாத்தியப்படுத்தும் ஒருபகுதியே தொழில்நுட்பத்தின் தேவை சாரப்பட்டது. நாம் அதனின்றும் மேவி பலதளங்களில் பயணிக்க வேண்டியுள்ளது. விசேடமாக பல்வேறு தன்னார்வலர்களும் நன்கொடையாக அளிக்கும் நிதிவளங்களைப் பெற்றுக்கொள்வதிலும் நாம் சிரமத்தை எதிர்நோக்கின்றோம். நாம் உள்ளூரில் ஒழுங்குபடுத்தும் திட்டங்களுக்கும் உரிய நேரத்தில் நிதியினைப் பெற்றுக்கொள்வதென்பது முக்கியமானது. அதுமட்டுமல்லாது மேலதிக நிதியினைப் பெற்றுக்கொள்ளுமிடத்து புதிய திட்டங்களை ஆரம்பித்து ஆவணப்படுத்தை விரைவுபடுத்தவும் முடியும்.

உள்ளடக்க வகைகளில் ஏற்பட்ட விரிவுநிலை, தொழில்நுட்ப மாற்றங்களுடனான நூலகம் திட்டத்தின் வளர்ச்சி, ஆவணப்படுத்தும் முறைகளில் ஏற்பட்ட மாற்றமும் விரைவும், நூலகம் 2.0 இனைச் சாத்தியப்படுத்தல், தன்னார்வப்பங்களிப்பை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிரமங்கள் போன்ற நான்கு விடயங்களையும் கூறியிருக்கின்றேன். இவை நூலகத்திட்டம் பற்றிய எளிய அறிமுகத்திற்கு உதவும் என நினைக்கின்றேன்.


இர்ஃபான்:- நூலகத்திட்டத்தைப் பற்றிய அறிமுகத்தைத் தொடர்ந்து முக்கியமான விடயங்களுக்கு வருவோம். நூலகத்திட்டத்தில் ஏற்கனவே பலவகையான உபதிட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றீர்கள். ஆயினும் தற்போது 'முஸ்லிம் பிரதிகள் செயற்றிட்டம்', 'மலையக மின்பிரதியாக்கம்' போன்ற சமூகக் குழுக்கள் சார்ந்து செயற்திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகக் கூறுகின்றீர்கள். இவற்றின் முக்கியத்துவம் மற்றும் தேவை பற்றிக் கூற முடியுமா?

சசீவன்:- நூலகத்திட்டம் 'இலங்கைத்தமிழ்' என்ற விடயம் சார்ந்த ஆவணப்படுத்தல் நிகழ்வாக தன்னை தகவமைத்துக்கொண்டுள்ளது. 'இலங்கைத்தமிழ்' என்ற விடயம் இடைவெட்டும் அனைத்துப்பரப்புக்களையும் உள்ளடக்கியதாக ஆவணமாக்கலை மேற்கொள்கின்றது. இவ் ஒற்றை அடையாளம் தெளிவான வரையறைகளைத் தனக்குள் கொண்டிருக்கவில்லை. இலங்கைத்தமிழ் என்ற ஒற்றை அடையாளம் தனக்குள் பல்வேறு உபபரப்புக்களையும், அடையாளங்களையும் உள்ளடக்கியது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஒற்றை அடையாளம் என்பதுடன் நாம் ஆவணமாக்கல் சார்ந்து இயங்கும் போது யாழ்மையவாத ஆவணங்கள் நூலகத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டதை நினைவுகூருகின்றோம். ஏனெனில் இவ் ஒற்றை அடையாளம் அதன் ஆதிக்கசக்திகளின் ஆளுகைக்குட்பட்ட நிலையில் யாழ்-இந்து-வேளாள-ஆண் என்ற ஆதிக்கநிலைப்பட்ட பிரதிகளின் தொகை அதிகமானது மட்டுமல்லாது பரவலானது. அவ்வகையில் அதுசாரப்பட்ட பிரதிகள் பெருமளவில் ஆவணமாக்கப்பட்டது. இந்நிலையில் மேற்குறித்த ஒற்றை அடையாளத்தாலும் ஆதிக்கக்கருத்தியலாலும் விளிம்பாக்கப்பட்ட ஆவணங்களை நூலகத்திட்டத்தில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டிய தேவை எமக்குள்ளது.

வரலாறு என்பது அதிகாரவர்க்கத்தின் வரலாறே என்பது நாம் அறிந்தவிடயமே. ஆவணமாக்கல்- பாதுகாத்தல் செயற்பாடுகள் என்பது அதன் அனைத்துப் பரப்புகக்ளையும் உள்ளடக்காத போது அல்லது அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காத போது அதனோடு தொடர்புபட்ட அனைவரும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தியவர்களாக அர்த்தப்படவேண்டும். நாம் இலகுவாக மறந்து போகும் விடயங்கள் ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தின் மீதான மீள்வாசிப்புக்கு விளிம்புக்கருத்தியல்கள் மிக முக்கியமானவை. அவ்வகையில் அவற்றை உரிய முக்கியத்துவத்துடன் ஆவணமாக்க வேண்டியதென்பது சமூகத்தின் வளர்ச்சிக்கு மிக அவசியமானது. ஆவணமாக்கல் செயற்பாட்டில் இவ்விடயம் தொடர்பாக ஏற்பட்ட கவனமே விளிம்பு அடையாளங்கள் சார்ந்த ஆவணமாக்கல் செயற்பாட்டுக்கு உதவியது. இவ்வகையில் 'இலங்கைத்தமிழ்' என்ற பெரும்பரப்பால் விளிம்பாக்கப்பட்ட முஸ்லிம், மலையகம், தலித்தியம், பெண், புலம்பெயர்வாழ்வு போன்ற அடையாளம் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஆவணப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. 'பெண்' என்ற அடையாளம் சார்ந்து முழுமையான ஆய்வு நோக்குடன் கூடிய செயற்திட்டம் இதுவரை முன்னெடுக்கப்படாத போதிலும் 'பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன மின்பிரதியாக்கம்' என்ற செயற்திட்டத்தினுடாக கணிசமான பிரதிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறே 'புலம்பெயர் சஞ்சிகைகள் மின்பிரதியாக்கம்' என்ற செயற்திட்டத்தினூடாக மாற்றுக்கருத்தைச் சாத்தியமாக்கிய பல சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதன் இரண்டாம் கட்டத்தினூடாக மேலும் பல விடயங்கள் ஆவணப்படுத்தப்பட உள்ளன. மேற்கூறிய இரு திட்டங்கள் மேற்படி விளிம்பு அடையாளம் சார்ந்த ஆவணப்படுத்தல் நிகழ்வு என்ற போதிலும் அவை முழுமையானவை அல்ல. அவற்றை முழுமையாக்க முடியாமைக்கு பல காரணங்கள் உள்ளன. நாட்டின் போர்ச்சூழல், பிரதிகளின் சிதறல், ஆய்வுமுயற்சிக்கு தன்னார்வலர்களின் போதமை, நிதிப்பற்றாக்குறை, ஒருங்கிணைப்பின் கடினம் போன்வற்றை முக்கியமானவையாகக் கூற முடியும்.

2009 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள 'முஸ்லிம் பிரதிகள் செயற்றிட்டம்', 'மலையக மின்பிரதியாக்கம்' ஆகிய இரண்டு திட்டங்களும் ஓரளவாவது முழுமையாகச் செய்யக்கூடியவை. இவ்விளிம்பு அடையாளங்கள் சார்ந்து ஆய்வுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. ஆக, ஆய்வை முழுமைப்படுத்துவதும் ஆவணங்களை பெற்றுக்கொள்வதும் ஆவணமாக்கலுமே மிகுதி அம்சங்களாகும்.


இர்ஃபான்:- இரண்டு செயற்திட்டங்களினதும் தேவை பற்றிக் கூறினீர்கள். அடுத்து 'முஸ்லிம் பிரதிகள் செயற்றிட்டம்' இனை எவ்வாறு நீங்கள் செயற்படுத்தப்போகின்றீர்கள்? எமது நேயர்களிடம் நீங்கள் என்ன வேண்டுகோளை முன்வைக்கின்றீர்கள்? இத்திட்டம் தொடர்பான உங்களது எதிர்பார்ப்பைக் கூற முடியுமா?

சசீவன்:- ஒரு செயத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு சிலவகையான ஒழுங்குமுறைகள் முக்கியமானவை. எமது ஏற்கனவேயன செயற்பாட்டு அனுபவங்களில் இருந்து அவற்றைக் கண்டடைய முடிந்துள்ளது. குறிப்பிட்ட விடயம் சார் ஆவணங்கள் தொடர்பான ஆய்வு என்பது எந்தவொரு செயற்திட்டத்தைப் பொறுத்தவரையுமான மிகமுக்கியமான கட்டமாகும். எமது சமூகத்தைப் பொறுத்தவரை ஆவணப்படுத்தலின் தேவையை-கட்டாயத்தை உணராத நிலை காணப்படுகின்றது. இவ்விடத்தில் ஆவணங்கள் தொடர்பான ஆய்வு என்பதற்கு கடினமான உழைப்பைச் செலுத்த வேண்டியுள்ளது. முஸ்லிம் பிரதிகள் தொடர்பாக ஏற்கனவே இரு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு அவ்விரு ஆய்வுகளும் மிக முக்கியமானவை. ஒன்று எஸ். எச். எம். ஜெமீல் அவர்களால் வெளியிடப்பட்ட சுவடி ஆற்றுப்படை என்ற நூலும் பி. எம். புன்னியாமீன் அவர்களால் எழுதப்பட்ட 'இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு' என்ற நூற்தொகுதியும். இவற்றில் இருந்தே மேலதிக ஆய்வை செய்வதாக இருக்கின்றேன்.

ஆய்வின் பின்பான இரண்டாம் கட்டமென்பது பிரதிகளைச் சேகரித்துக்கொள்வதென்பது. இவ்விடத்திலும் ஆவணமாக்கலின் அவசியத்தை உணர்த்தியவாறே பிரதி உரிமைகாளரை அணுகவேண்டும். இக்கடத்தின் பின்பு ஆவணங்களை மின்பிரதியாக்கம் செய்தல். முதல் இரண்டு கட்டங்களுடன் ஒப்பிடும் போது மூன்றாம் கட்டம் இலகுவானது. ஆயினும், அவற்றிலும் பல தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அவற்றை மின்னூலாக்க வேண்டும்.

நேயர்களிடம் நான் முவைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் செயற்திட்டத்தின் மூன்றுகட்டங்களுக்கும் உதவமுடியும். ஆய்வு என்ற முதல்கட்டத்திற்கான தகவல்களை எம்மைத் தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும். அவ்வாறே ஆவணங்களைச் சேகரித்தல் என்ற இரண்டாம் கட்டத்திற்கு எம்மைத் தொடர்புகொண்டு தாங்கள் வெளியிட்ட பிரதிகளை அனுப்பி வைக்க முடியும். அதுமட்டுமல்லாது அரிதான பிரதிகள் இருக்குமிடத்தை எமக்குத் தெரிவித்து அதைப் பெற்றுக்கொள்வதற்கு எமக்குதவ முடியும். ஆவணமாக்கல் என்ற மூன்றாம் கட்டத்திற்கு, மின்பிரதியாக்கத்தில் ஈடுபட்டோ அல்லது அதற்குத் தேவையான நன்கொடைகளை எமக்கு அளித்தோ உதவ முடியும். நண்பர்களிடம் இததேவையை வலியுறுத்துவதும் தெரியப்படுத்துவதும் கூட மேற்படி ஆவணமாக்கல் செயற்பாட்டிற்கான பங்களிப்பே.

இர்ஃபான்:- நேயர்கள் உங்களது வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பார்கள் என நம்புகின்றேன். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்காக நன்றியைக் கூறிக் கொள்கின்றேன்.

நேத்ரா தொலைக்காட்சியில் எனது நேர்காணல் (06.07.2008)

நேத்ரா தொலைக்காட்சி 'நூலகத் திட்டம்' பற்றிய அறிமுகம் ஒன்றைத் தமது பார்வையாளர்களுக்கு நிகழ்த்த வேண்டி நூலகத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் க. சசீவனுடன் நேர்காணல் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. இதனை ஒழுங்கு செய்தவர் நேத்ரா தொலைக்காட்சியின் 'புன்னகை' நிகழ்ச்சித்தயாரிப்பாளர் என். ஜாபிர் (ஆத்மா) அவர்களாகும். புன்னகை நிகழ்ச்சிக்காக நேர்காணலை செய்தவர் வாசுகி சிவகுமார் அவர்கள்.

வாசுகி:- நூலகம் திட்டம் இணையத்தில் முக்கியமான திட்டம் என்ற நிலையை அடைந்திருக்கிறது. நூலகம்.நெட் மூலம் பல்வேறு வகையான நூல்கள் சஞ்சிகைகளை இணையத்தின் வழியே நாம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. அரிய நூல்களையும் சஞ்சிகைகளையும் உடனடியாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கின்றது. இணையப் பாவனையாளர்களுக்கு நூலகத் திட்டம் காத்திரமான பங்களிப்பை வழங்குகின்றது. அவ்வகையில் தற்போதைய திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற ரீதியில் நூலகத்திட்டத்தினது வளர்ச்சி பற்றி கூற முடியுமா?

சசீவன்:- 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நூலகத்திட்டம் தற்போது 3 1/2 ஆண்டுகள் கடந்த நிலையில் அண்ணளவாக 1800 நூல்கள், சஞ்சிகைகளை உள்ளடக்கிய தமிழின் மிகப்பெரிய உள்ளடகங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கின்றது. ஆரம்பத்தில் நூல்கள் தட்டெழுதப்பட்டே பதிவேற்றம் செய்யப்பட்டன. நூல்களைத் தட்டெழுதிப் பதிவேற்றம் செய்யும் போது பலவித நன்மைகள் இருந்தன. தேடுபொறிகள் மூலம் குறிப்பிட்ட சொல்லைத் தேடி வருவோர் நூலகத்தை வந்தடைந்து பயன் பெற்றார்கள். நூலகத்திட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் நூல்களைத் தட்டெழுதி நூலகம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள். அதனைத் திருத்தம் செய்து பதிவேற்றம் செய்யக்கூடியதாக இருந்தது. தட்டெழுதச் சாத்தியமற்றவர்கள் தனிப்பட உப திட்டங்களை ஒழுங்கமைத்தார்கள். அதாவது பணக்கொடுப்பனவின் மூலம் தட்டெழுதுவித்து அதனை நூலகத்தில் சேர்ப்பித்தார்கள். நூலகத்திட்டம் எதுவிதமான பணக்கொடுக்கல் வாங்கல்களையும் செய்யவில்லை. முழுக்க முழுக்க திறந்த நிலையில் தன்னார்வலர்கள் ஊடாடும் களமாகத் தன்னைப் பேணிக்கொண்டிருந்தது.

ஆயினும் தட்டெழுதல் மூலம் பலவித சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிட்டது. நூலகத்தில் நூல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது மெதுவாகவே நிகழ்ந்தது. பண்ணக்கொடுப்பனவின் மூலம் செய்யப்பட்ட உப திட்டங்களைப் பொறுத்தவரை, தட்டெழுதலுக்கான பணக்கொடுப்பனவென்பது சற்று அதிகமாகவே காணப்பட்டது. மேலும் அதனை ஊக்கத்துடன் செய்வதற்குப் போதியளவு தன்னார்வலர்களின் ஒத்துழைப்பும் காணப்படவில்லை. மேலும் தட்டெழுதப்பட்ட நூல்கள் பூரணமாக மெய்ப்புப் பார்க்காமலேயே பதிவேற்றம் செய்யப்பட்டன. மெய்ப்பு பார்க்கவேண்டிய அளவுக்கான தன்னார்வலர்களையும் நூலகம் கொண்டிருக்கவில்லை.

இவ்விடத்தில் நூலகத்திட்டத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த கோபி புதியவகை முடிவு ஒன்றுக்கு நூலகத்தைத் தயார்ப்படுத்தினார். அதாவது நூல்களை மின்பிரதியாக்கம் செய்தலே அதுவாகும். மின்பிரதியாக்கலின் மூலம் நூல்களின் பக்கங்கள் 'படங்களாகச்' சேமிக்கப்பட்டன. தெடுபொறிகளில் இருந்து வருவோரை இதன் மூலம் இழக்க நேரிட்டாலும் பலவித நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அதாவது வாசகர் ஒருவருக்கு நேரடியாகப் புத்தகம் வாசிக்கும் உணர்வை தொற்றவைக்கக் கூடியதாக இருந்தது. அதாவது படங்களாகச் சேமிக்கபப்ட்ட பக்கங்கள் ஒன்றாகச் சேர்க்கபப்ட்டு pdf ஆக்கப்பட்டன. இதன் மூலம் இதனைப் பதிவிறக்கம் செய்து பார்வையிட முடியும். இதை விட குறைந்தளவான ஆளணி மற்றும் பொருளாதார வளங்களைப் பயன்படுத்தி தட்டெழுதல் மூலம் ஆவணப்படுத்தப்பட்டதை விட அதிகமான அளவில் நூல்களை ஆவணப்படுத்த முடிந்தது. அந்நேரத்தைய சூழலில், இம்மாற்றத்தின் மூலம் முன்னரை விட 10 மடங்கு அதிகமான நூல்களை ஆவணப்படுத்த முடிந்தது.

இநேரத்தில் நூல்களை மட்டுமல்லாது சஞ்சிகைகளையும் ஆவணப்படுத்தும் பணியும் ஆரம்பிக்கப்பட்டது. சஞ்சிகைகளைப் பொறுத்தவரை தட்டெழுதல் என்பதை விட மின்பிரதியாக்கம் செய்தல் இலகுவானதாக இருந்தது. இதன் மூலம் இலங்கையில் இருந்தும் புலம்பெயர் பிரதேசங்களில் இருந்தும் வெளிவந்த சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டது. தன்னார்வலர்களின் போதாமையால் திட்டம் மெதுமெதுவாகவே வளர்ச்சியடைந்து வந்தது.

ஒரு கட்டத்தில் தன்னார்வலர்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் அண்ணளவாக 20 மின்வருடிகள் மூலம் வேகமாக மின்பிரதியாக்கம் நிகழக்கூடியதாக நூலகத்திட்டத்தின் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அதன் மூலம் பெருமளவான நூல்கள், சஞ்சிகைகள் குறுகிய காலத்திற்குள் ஆவணப்படுத்தப்பட்டன. இதன் மூலம் அரிதான பலவிடயங்கள் ஆவணப்படுத்தப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டன.

இந்நேரத்தில் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் தம்மால் வெளியிடப்பட்ட நூல்கள், சஞ்சிகளை நூலகத்திட்டத்தில் வெளியிட அனுமதி தந்ததோடு மட்டுமல்லாது தமது வளங்களைப் பயன்படுத்தவும் அனுமதி தந்தனர். இதன் மூலம் முதன் முறையாக ஒரு நிறுவனம் சார்ந்த அனைத்து விடயங்களும் அவர்களின் அனுமதியுடன் ஆவணப்படுத்தப்பட்டன. இது நூலகத்திட்டத்தைப் பொறுத்தவரை மிக முக்கியமான விடயமாகும்.

வலைத்தளத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் அடிப்படை அறிவைப் பயன்படுத்தி செய்யப்பட்ட தளத்திலேயே நூலகத் திட்டம் காட்சிப்படுத்தப்பட்டது. ஆயினும் ஓரளவான நூல்களின் வருகைக்குப் பின்னர் 'ஜூம்லா' மென்பொருள் மூலம் தளம் வடிவமைக்கப்பட்டது. ஆயினும் சிறிது காலத்தின் பின்னர் உடனடியாகவே 'மீடியாவிக்கி' நிறுவப்பட்டு தளம் வடிவமைக்கப்பட்டது. இன்று வரை தளம் மீடியாவிக்கியிலேயே இயங்கி வருகின்றது. இது பல தன்னார்வலர்களால் ஒவ்வொரு நாளும் அபிவிருத்தி செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பலரது கூட்டுழைப்பும் தளத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுகின்றது.


வாசுகி:- நூலகம் திட்டத்தின் வளர்ச்சி பற்றிய விரிவான விளக்கம் ஒன்று கிடைத்தது. உங்களை ஊக்குவிக்கவும் உங்களுடன் இணைந்து பணியாற்றவும் உங்களிடம் போதுமான வளம் இல்லை என்று சொல்கின்றீர்கள். தற்போது இத்திட்டத்தில் அண்ணளவாக எத்தனை பேர் இணைந்து பணியாற்றுகிறார்கள்.? மேலும் வளர்ச்சியினூடாக நீங்கள் எவ்வகையான சிக்கல்களை எதிர்கொள்கிறீர்கள்?

சசீவன்:- தற்போது அண்ணளவாக 60 இற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்தே இத்திட்டத்தினை முன்னெடுக்கிறார்கள். பலவிதமான வயதுகளிலும் பலவிதமான நாடுகளில் இருந்தும் அவர்களின் உழைப்பு நூலகத்திட்டத்திற்குச் சாத்தியமாகின்றது. எனினும், தன்னார்வலர்களின் போதாமை என்பது நூலகத்திட்டத்தைப் பொறுத்தவரை பெரும் சவாலாகவே விளங்குகின்றது. தன்னார்வலர்களினதும் பங்களிப்பாளர்களினதும் எண்ணிக்கையைக் கூட்டும் நோக்கில நாமும் எம்மால் இயன்றளவான முயற்சிகளை எடுத்தவாறே இருக்கின்றோம். ஆயினும் நாம் நினைத்தபடி எம்மால் முற்றுமுழுதான தன்னார்வக் கூட்டுழைப்புத்திட்டமாக நூலகத்திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் தடுமாற வேண்டியுள்ளது. இவ்விடத்த்தில் நாம் சில விட்டுக்கொடுப்புகளுக்கு இணங்கி திட்டத்தின் வளர்ச்சியும் தொடர்ச்சியும் வேண்டி கொள்கை அமைப்புகளில் சில தளர்ச்சிகளைச் செய்ய வேண்டி ஏற்பட்டது. அதன் மூலம் தன்னார்வலர்களால் ஒருங்கிணைக்கப்படும் திட்டங்களில் பணக்கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுவதை அனுமதிக்க வேண்டி இருந்தது. இவ்விடத்தில் எமது வளங்களுக்கும் சூழலுக்கும் ஏற்ற விதத்தில் நேரடியாகப் பங்களிக்க முடியாத நிதிப்பங்களிப்பாளர்களிடம் இருந்து பெறப்படும் நிதியின் மூலம் தன்னார்வலர்களைக் கொண்டு சில திட்டங்களை ஒருங்கிணைத்தோம். இதன் மூலம் எம்மால் நூல்களின் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க முடிந்தது. திட்டம் தன்னார்வலர்களின் கண்காணிப்பின் கீழ் வளரக்கூடியதாகவும் இருந்தது.

இவ்விடத்தில் தொடர்ந்து சில சிக்கல்களை எதிர்நோக்கியவாறிருக்கிறோம். நான் ஏற்கனவே கூறியபடி நூலகம் வலைத்தளம் பலரும் பங்களிக்கக் கூடியவகையில் அமைந்த மென்பொருள் மூலம் அமைந்திருக்கின்றது. அதன் மூலம் தினமும் பலர் பங்களித்த வண்ணம் உள்ளார்கள். ஆயினும் அப்பங்களிப்பிலும் போதாமைகள் இருப்பதாக உணரக்கூடியதாக உள்ளது. இணையத்தைப் பயன்படுத்தும் பலருக்கும் இது தொடர்பான பரிச்சயம் இருக்குமென்று கூற முடியாது. அதை விட இங்கே பங்களிக்க ஆர்வமுள்ளவர்களின் தொகையும் மிகக்குறைவாகவே உள்ளது. இது நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும். போதிய விக்கி பங்களிப்பாளர்கள் கிடைக்குமிடத்து தளத்தை இன்னும் பலபரிமாணங்களைத் தாண்டி புதிய பலவிடயங்களையும் சாத்தியப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.

அடுத்து நிதிப்பங்களிப்பாளர்களிடம் இருந்து எமக்கான நிதியுதவிகள் கிடைத்தாலும், பதிவு செய்யப்பட்ட அமைப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட பங்களிப்பாளர்களும் தன்னார்வலர்களும் தம்மை மாற்றிக்கொள்ளவில்லை. நூலகத்திட்டம் என்பது மிகவும் சுதந்திரமானது. அதனைப் பதிவு செய்ய முடியாது. அதற்கான தேவையும் இல்லை. அதன் பங்களிப்பாளர்கள் ஒன்றிணைந்து நூலகத்திட்டத்திற்கு பக்கபலமான அமைப்பு ஒன்றைப் பதிவு செய்யுமிடத்து நிதிப்பங்களிப்பாளர்களிடம் இருந்து பெறப்படும் நிதியினை இன்னும் நல்லவிதமாக ஒழுங்குபடுத்த முடியும் என்று நினைக்கிறேன். அதன் மூலம் ஏற்படுத்தப்படும் நம்பிக்கையின் மூலம் இன்னும் அதிகமான நிதிப்பங்களிப்பினைப் பெற்றுக் கொண்டு அதிகளவிலான ஆவணப்படுத்தல் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆயினும் சில அசாதாரண சூழ்நிலைகளால் தன்னார்வப் பங்களிப்பாளர்களை இணைக்கும் அமைப்பொன்றை பதிவு செய்ய முடியாத நிலையில் உள்ளோம். ஆயினும் அதற்கான தயார்ப்படுத்தல்களை நாம் ஏற்கனவே ஆரம்பித்தாயிற்று. எதிர்காலத்தில் அதற்கான சூழ்நிலைகள் வரும் போது நிச்சயமாக நூலகத்திட்டத்தினைப் பலப்படுத்தும் நோக்கில் ஒரு அமைப்பைப் பதிவு செய்து அதனை ஒருங்கிணைக்க முடியும் என நம்புகின்றேன்.

அடுத்து, நூலகத்திட்டம் தொடர்பான அறிமுகம் போதியளவில் இல்லை என்பதும் எமக்கு முன்னுள்ள ஒரு சவாலே. போதியளவான அறிமுகங்களின் மூலமே பலரையும் எம்மை அணுகவைக்க முடியும். தற்போது நாமே ஒவ்வொருவரையும் அணுகிக் கொண்டிருக்கிறோம். இந்நிலை மாற வேண்டுமாயின் பரந்தளவிலான அறிமுகத்திற்கான வேலையை நாம் செய்தே ஆக வேண்டும். முக்கியமாக எழுத்தாளர்களுக்கு நூலகத்திட்டத்தைப் பற்றிய அறிமுகங்களை வழங்க வேண்டிய தேவை பலருக்கும் உள்ளது. அது மிக முக்கியமானதும் கூட.


வாசுகி:- பார்வையாளர்கள் உங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பார்கள் என நம்புகின்றேன். அடுத்து, நூலகத்திட்டத்தின் தற்போதைய நகர்வைச் சாத்தியமாக்கும் திட்டங்கள் என்ன? மற்றும் எதிர்காலத்தில் எவ்வகையான திட்டங்களுடன் இருக்கின்றீர்கள்?

சசீவன்:- தற்போது இயன்றவரை சில முழுமையாக்கல்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே நகர்ந்துகொண்டிருக்கிறோம். அதாவது, தளத்தில் இன்னும் சில அடிப்படை விடயங்கள் பூர்த்தியாக்கப்படாமல் இருக்கின்றது. அவற்றை உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் நூலகத்திட்டத்திற்கான தகவல் தளம் இன்னும் முறையாகப் பூர்த்திசெய்யப்படவில்லை. அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சியில் உள்ளோம். 2008 ஆம் ஆண்டு இறுதிவரை இவற்றின் பூர்த்தியாக்கலுக்குச் செலவளிக்க வேண்டிய தேவை உள்ளது. அதனைச் சாத்தியமாக்கும் பட்சத்தில் மட்டுமே எதிர்காலத்தில் எளிதாகவும் வேகமாகவும் திட்டச்செயற்பாடுகளை நகர்த்திச் செல்ல முடியும். அத்துடன், சில செயற்திட்டங்களை நடைமுறப்படுத்திக் கொண்டும் இருக்கிறோம். அதாவது தினமொரு மின்னூல் என்ற செயற்திட்டத்தின் கீழ் மின்பிரதியாக்கம் செய்த நூல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறோம். இதனை விட நூலகத்திற்குச் சமாந்தரமான விடயம் ஒன்று நூலகம் தளத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சேகரம் என அழைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் தெரிவு செய்யப்படும் புதிய தலைப்பின் கீழ் சில முக்கியமான கட்டுரைகள் தட்டெழுதப்பட்டு வெளியிடப்படுகின்றன.

இதனை விட எதிர்காலத்தில் பரவலான வகையில் அறிமுகங்களை நிகழ்த்தக் கூடியதான செயற்திட்டங்களை முன்னெடுக்கும் போது மாத்திரமே அடுத்தக்கட்டமாக சில விடயங்களைச் செய்ய முடியும் என்று நினைக்கிறோம். இதை விட மாதம் ஒரு எழுத்தாளரைத் தெரிவு செய்து அவரது புத்தகங்களை நூலகத்தில் முழுமையாக ஆவணப்படுத்தும் எண்ணமும் உண்டு. மேலும், இதழகம் என்னும் பெயரில் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளை உடனுக்குடன் நூலகத்தில் வெளியிடும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. பல்கலைக்கழங்களில் மாணவர்கள் சமர்ப்பிக்கும் ஆய்வுகள் வெளி உலகத்திற்கு பார்க்கக் கிடைப்பதுமில்லை. பயன்படுவதுமில்லை. அதைக் கருத்தில் கொண்டு ஆய்வுகளை ஆவணப்படுத்தும் முயற்சிகளைக் கட்டாயம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அதற்கான சூழ்நிலைகள் வாய்க்குமிடத்து அதனைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்களுடைய பல ஆவணக்கங்கள் நுண்படச்சுருளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை டிஜிட்டலைஸ் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.


Statcounter