வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 19, 2009

பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 2

உங்களுக்கு உளநலத்துறை மீது ஆர்வம் எப்போது ஏற்பட்டது எனக்கூற முடியுமா?

சிறுவயதில் இருந்தே எனக்கு psychiatric இல் ஆர்வம் இருந்து வந்துள்ளது. மனிதர்களின் போக்குகள், அவர்கள் என்ன செய்வார்கள், அவர்களின் நடத்தை, மனதிலே என்ன எண்ணங்கள் இருக்கின்றது, எவற்றிலே ஈடுபாடு கொள்கிறார்கள் என்பது பற்றிய சிந்தனை இருந்து வந்தது. உளமருத்துவத்தைப் படிப்பதற்கு முதலே மனிதர்கள் என்ன செய்வார்கள், என்ன எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளங்கப்பார்க்கின்ற, அறியமுயற்சிக்கின்ற தன்மை இருந்தது. நான் வளர்ந்து வருகின்ற போது இவற்றைப்பற்றி வாசிப்பது, கேட்பது, மனிதர்களது எண்ணங்கள், நடத்தைகள் பற்றிய படங்களைப் பார்ப்பது என அதிகம் psychiatric சார்ந்த விடயங்களிலேயே ஆர்வம் கொண்டிருந்தேன். சாதாரண படங்களைப் பார்ப்பதைவிட இப்படியான படங்களையே விரும்பிப்பார்ப்பேன். அந்த ஒரு perspective இருக்கிற படங்களைப் பார்ப்பதில் இயல்பாகவே ஈடுபாடு இருந்தது. இவ்விடயங்களைப்பற்றிச் சிந்திப்பது, உரையாடுவது என்று சிறுவயது முதலே இத்துறை சார்ந்த உந்துதல் இருந்தது.

அக்காலத்தில் நான் கதைப்பதற்குக்கூட ஆட்களைத் தேர்ந்தெடுத்துத்தான் கதைப்பேன். சந்திக்கின்ற பெரியோர்கள் என்றாலும் அதிகமாக இந்த நோக்கத்திலேயே சிந்திக்கின்ற, கதைக்கின்ற ஆட்களைத்தான் தேர்ந்தெடுத்து அவர்களோடு உரையாடுவேன். மனிதனது நடத்தைகள் சிந்தனைகள் பற்றிய தேடல் உள்ளவர்களைக் காட்டிலும் மனித நேயம் மிக்கவர்களில் எனக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. இந்த வகையில் காந்தி மீது அவரது நூல்கள் மீது ஈடுபாடு இருந்தது. சிலருக்கு வரலாறுகள், பெரிய அரசர்களாக இருந்தவர்கள் மீது ஈடுபாடு இருக்கும் எனக்கு அவற்றில் - வரலாற்று நாயகர்கள் மீது அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை. கூட மக்களோடு உறவாடி அவர்களைப் பற்றிச் சிந்தித்த அவர்களில் ஈடுபாடு காட்டியவர்கள் மீது ஆர்வம் இருந்தது. அவர்கள் எப்படிச் சிந்தித்தார்கள் என்பதை நான் சிந்தித்துப் பார்ப்பேன்.


உங்களுக்கு இயல்பாகவே உளநலத் துறை மீது ஆர்வம் வந்ததென்று என்று கூறுகின்றீர்களா?

ஓரளவிற்கு எனது பெற்றோர் மற்றது வளர்ந்தசூழல், சுற்றாடலில் இருந்த பெரியோர்கள் காரணமாக இருந்திருந்திருக்கிறார்கள்.


பிறந்து வளர்ந்த சூழல், உங்களது ஆரம்பகால வாழ்க்கை, உளநல மருத்துவராக வர முன்பு இருந்த ஈடுபாடு பற்றி:

பிறந்தது யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில். ஆரம்பத்திலே யாழ்ப்பாணத்திலேயே வசித்தோம். பின்னர் கொழும்பில். 11 வயது வரை கொழும்பிலேயே இருந்தேன். அப்பா 1987 - 1988 வரையும் கொழும்பில் தான் இருந்தார். பின்னர் UN வேலை ஒன்றிற்காகத் தாய்லாந்து போனார். முதலில் தாய்லாந்தில் இருந்து அங்கு ஒரு International School இல் படித்துவிட்டு அமெரிக்காவிற்கு 1967 இல் சென்றேன். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எனது முதலாவது பட்டப்படிப்பை மேற்கொண்டேன். முதலாவது degree இல் ஆரம்பத்தில் engineering செய்வதே எனது நோக்கமாக இருந்தது. அப்போது பாடங்கள் கூட எனக்கு பொருத்தமானதாக - Maths போன்றவை ஈடுபாடு மிக்கதாக அமைந்திருந்தன. அங்கு போனபிறகு சிந்தனை மாறியது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒரு விரிந்த கற்றலுக்கு ஏற்ற இடம். கட்டாயம் 4 Subject தான் எடுக்க வேண்டும் என்றில்லை. மற்றையது, போன காலமும் மிக வித்தியாசமான ஒரு காலப்பகுதி. வியட்னாம் போருக்கு எதிரான பிரசாரங்கள் பல்கலைக்கழகங்களுக்குள்தான் நடந்ததன. ஒவ்வொரு நாளும் இதைப்பற்றிக் கதைப்பார்கள். எதிர்ப்பு நடவடிக்கைகள், கூட்டங்கள் நடந்துகொண்டிருக்கும்.

மற்றையது, roots (வேர்கள்) தொடர்பான தேடல்கள். எங்கு இருந்து வந்ததோம் என்பது பற்றிய சிந்தனை, ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திற்குள் இருந்தது. எனக்கும் அவைகளைக் கேட்டு அங்கு நடந்தவற்றைப் பார்த்து சிந்திக்கின்ற போது என்னைப் பற்றி அறியும் ஆர்வம் ஏற்பட்டது. நான் எங்கிருந்து வந்தேன், என்ன செய்கிறேன் என்பது பற்றி அறியும் ஆர்வம் வந்தது. இதனால் என்னுடைய பாடங்களை எல்லாம் மாற்றினேன். உளவியலை ஒரு பாடமாக தெரிந்து கலைத்துறைப் பாடங்களைத் தெரிவுசெய்தேன். மீண்டும் இலங்கைக்கு வரவேண்டும் போல் இருந்தது. course முடிய திரும்ப இங்கு வந்தேன். என்னோடு அமெரிக்காவில் படிக்கவந்த எல்லோரும் அங்குதான் இருக்கிறார்கள் திரும்பி வரவில்லை. இலங்கை மட்டுமல்ல எல்லா நாடுகளில் இருந்து வந்தவர்களும் திரும்பத் தங்கள் நாட்டிற்குப் போகவில்லை.

உளவியலைப் படித்து விட்டு இங்கு வந்து கமம் செய்ய வேண்டும் என்று வெளிக்கிட்டேன். பரந்தனில் எனது நண்பர் ஒருவர் இருந்தார். அவரும் ஒரு எஞ்சினியராக இருந்து பின்னர் கமம் செய்தவர். நாங்கள் கமம் செய்வது வீட்டில் பெரிய ஒரு பிரச்சினையாகிவிட்டது. அமெரிக்காவில் படித்துவிட்டு வந்து தோட்டம் செய்வது என்பது குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. என்னை வற்புறுத்தி திரும்பப் படிக்க வைத்தார்கள். Medicine படிக்க ஒழுங்கு செய்து இந்தியாவிற்கு அனுப்பினார்கள். Medicine னிற்குள்ளும் எனக்கு Psychology மீதுதான் ஈர்ப்பு ஏற்பட்டது. Anatomy என்றாலும் Brain இல் தான் ஈடுபாடு. Psychology படிக்கும் போது Neuro Psychology எனது ஆராய்ச்சிக்குரியதாக இருந்தது. இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு சிறிது காலம் வேலைசெய்தேன். பிறகு Psychology துறைக்கு வந்துவிட்டேன். தொடர்ந்தும் அந்தத் துறையிலேயே இருந்து வருகின்றேன். Medicine இற்கு பிறகு Psychology இல் நான் Post graduate செய்தேன்.


நீங்கள் பட்டப் பிற்படிப்பிற்காக Psychology (உளமருத்துவம்) ஐத் தெரிவு செய்யும் போது வீட்டில் எத்தகைய எதிர்பார்ப்பு இருந்தது?

நான் உளமருத்துவம் தான் பயிலப் போகிறேன் என்றபோது வீட்டில் அம்மா உடனே “ஏன் இந்தத் துறைக்குள் போகிறாய் மகன்” என்று அழுதார். எனக்கு Psychology என்பது Natural. இந்தத் துறைக்குள் வேலை செய்யும் போது எனக்கு எந்தக் கஸ்டமும் இல்லை. ஒரு பிரச்சினையைக் கேட்பதோ அல்லது அதனை அணுகுவதோ அதை ஆராய்வதோ கஸ்டமாக இருந்ததில்லை.


மனப்பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களது பிரச்சினைகளைச் சொல்கின்ற போது அவர்களது அனுபவங்கள் உங்களைப் பாதித்ததில்லையா?

அது ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்ததை உணர்ந்திருக்கிறேன்.


உளமருத்துவராக வருவதற்கு முன்பும் - அந்தத் துறையைத் தெரிவுசெய்வதற்கு முன்பும் - உங்களது ஆளுமை இல் எத்தகைய மாற்றத்தை உணருகின்றீர்கள் ?

நிறைய மாற்றங்கள் இருக்கிறது. ஒன்று கூடிய விளக்கங்கள் கூடியளவு தெளிவு வந்திருக்கிறது. இன்னொன்று என்னை இத்துறைக்குள் ஆழமாக இழுத்துக் கொண்டு போய் இருக்கின்றது. உண்மையாக நான் வெளிக்கிட்டதிலும் பார்க்க வேறு எங்கோ போனது போல உணர்ந்திருக்கிறேன். திரும்பி கொஞ்சம் வரவேண்டிய தேவை இருந்திருக்கிறது. கூட இதற்குள் involve ஆகியதால் இளமையில் நான் வெளிக்கிட்டபோது இருந்த சிந்தனைக்கு அப்பால் போய்விட்டேன்.


இலங்கை போன்ற ஒரு நாட்டில் வாழ்வது மிகவும் நெருக்கீடு தருவதாய் இருக்கின்றது எனக் கருதுகிறீர்களா?

இப்போ ஒரு கஸ்டமான காலமாகத்தான் இருக்கிறது. 20 வருடங்களுக்கும் மேலாக இங்கு யுத்தம் நிகழ்ந்துள்ளது. தனிப்பட்ட முறையில் இதனை எவ்வாறு எதிர்கொண்டேன் என்றால், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு - உளரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவமுடிந்தது என்ற ரீதியில் மனத்திருப்தியைத் தந்தது. அப்படி இயங்கிக்கொண்டிருந்ததன் காரணமாக எனக்கு ஏற்பட்ட அழுத்தங்கள் கொஞ்சம் குறைந்தது என்றுதான் சொல்லவேணடும். எப்படிச் சொன்னாலும் வாழ்க்கை முறையிலே கடும் போர் நடக்கின்ற காலம் தவிர மற்றைய காலங்களிலே இங்கு இருக்கின்ற வாழ்க்கை முறையும் கலாசாரங்களும் மற்ற இடங்களை விடக் கூடப்பொருத்தமானதாய் அல்லது தேவையானதைப் பூர்த்தி செய்யக் கூடியதாக இருந்தது. மிகவும் தன்மையான (Qualitatively) வாழ்க்கைமுறை இருந்தது என்று சொல்லலாம்.


உளமருத்துவத் துறையைத் தேர்ந்தெடுக்காமல் இருந்திருந்தால் உங்களால் வாழ்க்கையை எப்படி எதிர் கொண்டிருக்க முடியும்? இங்கு திரும்ப வந்திருக்கமாட்டீர்களா?

ஆம். பெரும்பாலும் இங்கு வந்திருக்கமாட்டேன். அதைத் தேர்ந்தெடுத்த படியால்தான் நான் இங்கு இருக்கக்கூடிய சாதகத்தை, தேவையைத் தந்தது. நான் நினைக்கிறேன், Medicine இற்குள் வேறு துறைக்குள் போயிருந்தாலும் பெரும்பாலும் இங்கு வந்திருக்கமாட்டேன் என்று. வேறு எங்கேயும் போய் இருப்பேன்.


நீங்கள் மனநலத்துறையில் ஆற்றிய சேவைகளில் திருப்தியடைகின்றீர்களா ?

சேவை என்று எவ்வளவு தூரம் சொல்லலாமோ தெரியவில்லை. எனக்கு ஒரு தகைமையைத் தந்தது. குறிப்பிட்ட ஒரு வாய்ப்புக் கிடைத்தது என்று சொல்லலாம். ஓரளவிற்கு வித்தியாசமான, உளமருத்துவத்திலும் பார்க்க கூடிய அளவில் - சமூக அளவில் பொது மக்களில் ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவரக் கூடியதாக இருந்தது. நான் நினைக்கிறேன், இலங்கையைப் பொறுத்தவரை மற்ற இடங்களோடு பார்க்கின்றபோது அதிகம் உளமருத்துவம் என்பது சமூகமட்டத்தைத் சென்றடைந்திருக்கிறது என்று. அதிலேயும் ஒரு திருப்தியிருக்கின்றது. மக்களிற்கு நம்பிக்கையேற்பட்டிருக்கின்றது உளப்பாதிப்பைக் குணப்படுத்தலாம் என்று.


இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

உண்மையில் பணியை ஆரம்பித்திருக்கின்றோம். இன்னும் அதை establish பண்ணவில்லை. establish பண்ண வேண்டும். அடிப்படை உளமருத்துவ சேவையை நாம் இயங்கவைத்திருக்கின்றோம் என்று சொல்லலாம். மக்களிற்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது. அதைப்பற்றி இருக்கின்ற களங்க உணர்வையும் குறைக்கக்கூடியதாய் இருந்திருக்கிறது. முன்பு நான் வந்த காலத்தில் இருந்து ஒப்பிட்டுப் பார்க்கும் போது எவ்வளவோ வித்தியாசம் ஏற்பட்டிருக்கின்றது. நேரத்துடனேயே மருத்துவத்தை நாடிவர ஆரம்பித்திருக்கிறார்கள். முன்பு வேறு முறைகளை நாடித்தான் உளமருத்துவத்திற்குச் சென்றார்கள். தற்போது ஆரம்பத்திலேயே மருத்துவத்தை நாடி வருகின்றார்கள். மற்றத்துறைகளில் ஈடுபடுகின்றவர்களும் எங்களிடம் வரும்படி இனங்காட்டி அனுப்புகிறார்கள்.


நீங்கள் மற்றத்துறை என்று சொல்வது யாரை?

எங்களது பாரம்பரிய முறைகள். பேய் துரத்துவது. கலாசார முறைகளினால் தங்களால் கையாள முடியாது, கடுமையானது என்று கருதுவதை எங்களிடம் உடனே அனுப்பிவிடுகிறார்கள்.


பாரம்பரியச் சடங்குகள் - பேய் துரத்துதல் போன்றவற்றினாலும் மனபாதிப்புக்குள்ளானவர்களைக் குணப்படுத்த முடியும் என்று நம்புகின்றீர்களா ?

ஓம். ஓம். என்னைப் பொறுத்தவரை மிதமான உளப்பிரச்சினைகளுக்கு மனநோய்களுக்கு எங்களுடைய மேற்கத்தைய முறையும் மற்றைய சாதாரண மனநோய்களுக்கு பழைய காலசார முறைகளும் சிறந்தவை. இவற்றினாற்கூடப் பயன் வரும். அதைச் சரியான முறையில் செய்ய வேண்டும். அதிலும் பல பிழைகள் இருக்கிறது. பிரச்சினைகள் இருக்கிறது. அதேபோல மேற்கத்தைய முறையிலும் எத்தனையோ பிழைகள் இருக்கின்றது. தேவையில்லாத ஆய்வுகூடப்பரிசோதனைகள் இருக்கின்றது. அவற்றைப்பற்றி ஆட்கள் அதிகம் கதைப்பதில்லை. எங்களுடைய பாரம்பரிய முறைகளிலும் தேவையில்லாமல் ஆட்களைப் பயமுறுத்துவது. பேய் துரத்துவது என்று சொல்லி ஆளைவைத்து அடித்து, துன்புறுத்தி சித்திரவதை செய்வது. சிலர் இதனால் இறந்தும் இருக்கிறார்கள். ஆயினும், நாங்கள் அதிலே உள்ள நன்மைகளையும் பார்த்து பெரும்பாலான் பிரச்சினைகளை எங்களுடைய பாரம்பரிய முறைகளால் தீர்க்கலாம். நல்ல ஒரு வளம் எமது பாரம்பரிய முறைகளிலே இருக்கின்றது.

நீங்கள் ‘யோகாவை’ (Yoga) எடுத்துக் கொள்ளுங்கள். எங்களுடைய பாடசாலைகளில், சமூகத்தில் யோகாவைக் கற்பிப்பதற்கு விரும்புவதில்லை. அவுஸ்திரேலியாவிற்குப் போய் இருக்கின்றேன். எனது பிள்ளைகளுக்கு முதலாம் வகுப்பில் இருந்து யோகாவைப் படிப்பிக்கின்றார்கள் பாடமாக. அங்கு படிப்பிக்கப்படுகின்றது. இங்கு நாம் ஐந்து வருடங்களாகக் கஸ்டப்பட்டோம். கல்வித்திணைக்களத்திற்கு ஊடாக ஒரு முறையைக் கொண்டு வரச் செய்வதற்கு முயற்சித்தேன். அதற்கு செவிசாய்க்கவே இல்லை. வடகிழக்கில் மெய்வல்லுனர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உதைபந்து netball, drills இவற்றிற்கு முன்னிற்பார்கள். யோகா என்றால் செய்யமாட்டார்கள. இதைப்பற்றி விளக்குவது கஸ்டம்.

(இன்னும் வரும்)

தொடர்புடைய இடுகைகள்.
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 1



No comments:

Post a Comment

Blog Archive

Statcounter