வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 20, 2009

பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 3

நீங்கள் உளமருத்துவத் துறைக்கு வரமுன்பும்சரி வந்த பின்பும்சரி மனிதர்களுடைய நடத்தைகளை அவதானிக்கின்றவர் என்ற வகையில் சமூகம் உங்களை எவ்வாறு பார்த்தது, பார்க்கிறது ?

உண்மையில் ஒருவிதத்தில் சமூகத்தில் இருந்து விலகி இருந்தேன். ஒன்பது பத்து வயதிலே வேடங்களைப் போட்டுக்கொண்டு இருந்திருக்கிறேன். பிச்சைக்காரன் மாதிரித் திரிவேன். பிச்சை எடுத்துக் கொண்டிருப்பேன். இதிலே நோக்கம் என்று இல்லை. பிச்சைக்காரன் என்றால் எப்படி இருப்பான். மற்றவர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதை அறியும் ஆர்வம் இருந்தது. எவரும் என்னை யார் என்று கண்டுகொள்ளமாட்டார்கள்.


இப்படி நீங்கள் வேடம் போட்டு திரிவதை ஒரு ஆராய்ச்சிக்காக என்று சொல்லலாமா ?

அப்படி நான் சொல்ல மாட்டேன். அது என்னுடைய போக்கு. நான் அமெரிக்காவில் படித்துவிட்டு திரும்பி வந்தகாலம் நீண்ட காலம் பிரச்சினைகள் எங்கும் இருக்கவில்லை. ஈராக் - ஈரான் - ஆப்கானிஸ்தான் எங்கும் பிரச்சினைகள் இருந்ததில்லை. hiking என்று ஒரு முறை இருக்கிறது. ரிக்கற் வாங்கிப் பிளேனில் போகாமல் ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்குப் போய் அங்குள்ள மக்களை அறிந்து கொள்வது. இப்படி பல்வேறு நாடுகளுக்கூடாகப் பயணம் செய்திருக்கிறேன். முதுகிலே ஒரு ‘moving bed’ மாதிரி ஒன்றை கொழுவிக் கொண்டு போவேன். அதை அந்த இடத்திலேயே போட்டுவிட்டுப் படுக்கலாம். இதைப் போட்டுக் கொண்டு ஐரோப்பாவில் இருந்து இலங்கைவரையும் வந்தேன். இதற்குப் பல மாதங்கள் எடுத்தது. ஒவ்வொரு நாட்டிலும் நின்று அங்குள்ள மனிதர்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றார்கள் என்று பார்த்து அவர்களுடன் கதைப்பது வித்தியாசமான ஒரு அனுபவம்.


எந்தெந்த நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறீர்கள் ?

ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிற்கும். கிழக்கு ஐரோப்பாவில் பல்கேரியா, யூகோஸ்லாவியா, துருக்கி மற்றும் ஈராக் இப்போது சண்டைகள் நடக்கின்ற இடங்கள், ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்.


இந்தப் பயணங்களின் பினனர் இலங்கை வந்து என்ன செய்தீர்கள் ?

இது உங்களுக்கும் மிக interest ஆக இருக்கும். இலங்கையில் கிட்டத்தட்ட ஒருவருடம் படிப்பு முடிந்த பிறகு சும்மா திரிந்தேன். அப்பதான் கமம் செய்ய வேணும் என்று வெளிக்கிட்டனான் என்று சொன்னேன். யாழ்ப்பாணத்தில் கள்ளுக் கொட்டிலுக்குப் போய் இரவாகி மூடும் வரையும் அங்கு இருப்பேன். கொஞ்சம் குடித்துவிட்டு அவர்கள் பாடுகின்ற பாட்டுக்களை, அவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்பதைக் கேட்டுக்கொண்டிருப்பேன். இது purpose இற்காகச் செய்ததில்லை. அங்கு போய் இருந்தால் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளலாம். அதேபோல சந்தையில் போய் இருப்பது. சந்தையில் என்ன நடக்கிறது, என்ன கதைக்கின்றார்கள் என்று பார்ப்பது என்று சும்மா சுற்றித்திரிவேன். இது அமெரிக்காவில் இருந்து வந்த காலத்தில் மருத்துவம் பயில முன்பு சுற்றித்திரிந்த காலம். இந்தியாவிற்குப் போய் மருத்துவம் படிக்கும் போதும் இந்தியா முழுவதும் சுற்றினேன் - பயணம் செய்தேன். Train இல் ஊர்சுற்றுவது. இந்தியாவில் Train இல் பயணம் செய்வது மிகவும் மலிவு. அத்தோடு எல்லா இடமும் போகலாம். Train ஒவ்வொரு ஊரிலும் நிற்கும் போது அந்த இடத்திலே இறங்கிச் சுற்றித் திரிந்து விட்டு பிறகு ஏறிப் போவது என்று traveling ஒரு பொழுது போக்காய் இருந்தது. இப்போது traveling என்றால் பெரிய கஸ்டம். மேலும் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா என்று போய் இருக்கிறேன் இது சும்மா ஒரு சுற்றல்தான்.


இந்தப் பயணங்களினூடாக வெவ்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும் வெவ்வேறு மொழிகளைப் பின்பற்றும் மக்களை சந்தித்திருப்பீர்கள். மேற்கு நாட்டவர்கள் கீழைத்தேசத்தைப் பார்க்கின்ற சிந்தனைமுறை வேறுபட்டது. இது பற்றிய உங்களது அனுபவம் எவ்வாறு இருக்கின்றது?

நான் படித்தது மேற்கத்திய கல்விமுறையில். மேலைத்தேச முறைக்கூடாகவே எனது பார்வையும் ஆரம்பத்தில் இருந்தது. படிப்படியாக நான் மாறினேன். ஆனால் அமெரிக்காவில் படித்தகாலம் பல்வேறு சிந்தனைகளுக்கு களமாக அமைந்தது. எமது கலாசாரத்தை எமது (Roots) வேர்களைத் தேடிச் செல்கின்ற, செல்ல வேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்தியது. மாட்டின் லூதர்கிங், மல்கம் எக்ஸ் ஆகியோர் இருந்த காலம். கூடியளவு மாணவர்கள் வியட்னாம் போருக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். போரை நிறுத்தியவர்கள் அவர்கள்தான். அந்தக்காலத்தில் இருந்து போரில் ஒருவித விரோதத்தன்மை இருந்து வந்தது. போர்தான் மனிதவாழ்க்கையில் நடக்கக்கூடியவற்றில் மிகமோசமானது என்று கூறுவேன்.


வியட்னாம் போர்தான் 'போர்' தொடர்பான இந்த எண்ணத்தை உங்களிடம் ஏற்படுத்தியதா ?

போர் என்றால் என்ன என்பதை உண்மையாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது.


ஊடகங்களிற்கு ஊடாகத்தானே நீங்கள் பார்த்திருப்பீர்கள் ?

பல்கலைக்கழகங்களில், ஊடகங்களில் போர் எப்படிக் காட்டப்படுகின்றது என்பதுபற்றி மாணவர்கள் கதைப்பதைப் பார்த்தேன். ஒவ்வொரு நாளும் இவ்வளவு இழப்புக்கள் ஏற்பட்டது என்பதை எவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள், அதிகாரத்திற்காக (Power) பிரசாரம் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைப்பற்றி மாணவர்கள் கதைத்துக் கொண்டதை, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. அமெரிக்காவும் நிக்சனும் அதிகாரத்திற்காக எவ்வாறு பிரசாரம் செய்தார்கள், இந்த வியட்னாம் போராளிகளைப்பற்றி எப்படி எண்ணிக்கையை மாற்றிக் காடடினார்கள் என்பதைப்பற்றி அறிய முடிந்தது. வியட்னாமில் என்ன நடந்தது, போர்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்பதை அங்கிருந்த போது உணர்ந்து கொண்டேன். தனி மனிதர்களுடைய தேவைகளுக்காக, அதிகாரத்திற்காக போர் செய்யப்படுகின்றது என்பதை அந்த நேரத்தில் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

பல்கலைக்கழகத்தில் படிக்கிற போது அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்காக ஓரிடத்தில் வேலை செய்தேன் - ஒரு உணவு விடுதியில் வேலை செய்தேன். என்னுடைய சக ஊழியர் வியட்னாமில் டீ-52 விமானங்கள் குண்டு வீசுவதற்கு Bombardier ஆக இருந்தவர். Bombardier என்றால் அந்தநேரத்தில் பிளேனில் இருந்து குண்டுகள் வீழ்வதற்கு அவர்தான் பொறுப்பு. நாங்கள் மணித்தியாலக் கணக்காக இருந்து கதைப்போம். அப்போது அவர் பல கதைகளைச் சொல்வார். டீ-52 விமானங்களில் இருந்து வியட்னாம் முழுவதும் குண்டு வீசப்பட்டது. அவர் சிலகாலத்திற்குப் பிறகு வியட்னாமிற்குப் போனார். ஒரு வருடம் குண்டு வீசுவதற்குப் பொறுப்பாய் இருந்தவர். லீவு கிடைத்த பின்னர் குண்டுவீசப்பட்ட இடங்கள் எப்படி இருக்கின்றது எனப்பார்ப்பதற்காகச் சென்றபோது, நேரடியாகக் குண்டுகள் வீழ்ந்த இடத்தை, அங்கு என்ன நடந்தது என்பதை அறிந்த போது அவருக்குப் பெரிய அதிர்ச்சியாகப் போய்விட்டது. மனதிற்குள் ஒரு வெறுமை - வெற்றிடமாகப் போய்விட்டது. இதனால் அவர் திரும்பி வந்து வேலையை விட்டுவிட்டு உணவுவிடுதியில் வேலைக்குச் சேர்ந்தார். உண்மையில் அங்கு அவரும் நானும் செய்தது பீங்கான் கழுவுகின்ற வேலை. அந்நேரத்தில் இவையெல்லாம் போர் பற்றிய ஒரு படிமானத்தை எனக்குள் ஏற்படுத்தியது. 1ம் உலகப் போர், 2ம் உலகப் போர் போன்றன ஏன் ஏற்பட்டது? எவ்வாறு நடைபெற்றது? என்பதுபோன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்தது. Economic reason என்ன என்று பார்க்கின்ற போது போர் பற்றிய மிக மோசமான கருத்துநிலையைத் தோற்றுவித்தது.


இலங்கையில் தமிழ்மக்கள் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தசாப்தங்களாக உரிமைகேட்டு பல்வேறு வழிகளில் போராடிவருகின்றார்கள். சாத்வீகப் போராட்டங்கள் தோற்ற நிலையிலேதான் ஆயுதப் போராட்டம் தோன்றியது. தமிழ் மக்கள் தற்காப்பிற்காகத்தானே போராடி வருகின்றனர். இதை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள் ?

எனக்கு இது வீணானது போலத்தான் எரிச்சலூட்டுகிறது. போர் மனிதர்களாலேதான் உருவாக்கப்படுகின்றது. பொதுமக்களின் தேவைகளைப் பார்க்காமல் யுத்தத்தில் ஈடுபடுகின்றவர்களின் தேவைகளுக்காகத்தான் போர் நடை பெறுகின்றது. தங்களுடைய தேவைகள், தங்களுடைய அதிகாரம் இவற்றுக்காகத்தான் நிகழ்கிறது. நன்றாக ஆராய்ந்து பார்த்தால் இது விளங்கும்.


எந்தப் பக்கத்தில் நியாயம், நியாயம் இல்லை என்றெல்லாம் நீங்கள் பார்க்க மாட்டீர்களா ? பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து சாத்வீகப் போராட்டங்களில் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாற்றான் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்கு மாறினார்கள். இல்லையா?

அப்படித்தான் போதிக்கப்பட்டிருக்கின்றது. புகட்டப்பட்டிருக்கின்றது. உண்மையாக ஒரு சாத்வீகப் போரோ அல்லது அகிம்சைப் போரோ நடக்கவில்லை. நீங்கள் இப்போது 1983 இற்குப் பிறகு நடந்தவற்றை அதற்கு முதல் நடந்தவற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள். எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எவ்வளவு சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றது. இபோது யாழ்ப்பாணத்தைப் போய்ப் பாருங்கள் யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகள் எவ்வளவு என்று புரியும். எங்களுடைய கல்வியைப் பாருங்கள். நான்காம் வகுப்பில் அடிப்படை மொழிஅறிவு பற்றி ஆய்வு செய்திருக்கின்றார்கள். நாடுமுழுவதும் தமிழ், சிங்களம் இரண்டிலும் அவ்வாய்வு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் யாழ்ப்பாணம் கடைசி இடத்தைப் பெற்றிருக்கிறது. ஆக, யுத்தத்தால் வந்த அழிவுகளை அதற்கு முதல் நடந்தவைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும். உதாரணமாக திருகோணமலையில் இருக்கின்ற தமிழர்கள் திருகோணமலை நகரத்திற்கு வெளியில் இல்லை. colonization ஐத் தவிர்க்கத்தான் போர் என்றுதான் சொல்கிறார்கள் . ஆனால் போரால் colonization தான் ஏற்பட்டிருக்கிறது. போரால் வந்த நன்மையை விடத் தீமைதான் அதிகம். முந்தைய நிலைமைகளிலும் பார்க்க எவ்வளவு மோசமாய் இருக்கின்றோம்.

போராட்டம் என்று பார்த்தால் அகிம்சை வழியில் போராடும்போது தான் மக்களுடைய பங்களிப்பு இருக்கும். போராட்டம் என்று வரும்போது மக்களுடைய பங்கு அதிகமாக இருக்க வேண்டும். ஆயுதப் போராட்டம் என்று வருகின்ற போது சில மனிதர்களின் கைகளில்தான் ஆயுதம் இருக்கும். அவர்கள்தான் தீர்மானம் எடுப்பார்கள். போர் வெற்றிகரமாக முடிந்தாலும் அவர்களின் ஆட்சிதான் நடக்கும்.


போர் வெற்றிகரமாக முடியும் என்று நம்புகின்றீர்களா ?

உண்மையில் போர் என்றும் வெற்றிகரமாக முடிவதில்லை. போரில் எவரும் வெற்றிபெறுவதில்லை. சில குழுக்கள் வெற்றியடையலாம். மக்களுக்கு எதுவும் அழிவுதான். நோக்கங்கள் மக்களுக்கு பொருத்தமான நோக்கங்களா என்பதெல்லாம் பிரச்சினை. விடுதலைக்கான போர் என்று சொல்வதில் விடுதலை என்றால் உண்மையில் என்ன என்று கேள்வி எழுகின்றது. இன்று ஈராக்கில் நடைபெறும் குண்டு வெடிப்புக்களில் கொல்லப்படுவது ஈராக்கியர்கள்தான். அவர்கள் தங்களுக்குள் தாங்களே அடிபட்டுக் கொள்கிறார்கள். இங்கும் தமிழர்களே தமக்குள் அடிபட்டு இறக்கின்றார்கள். இது கிட்டத்தட்ட auto genocide ஆகப் போய் விட்டது. போராட்டத்தில் இது வெற்றியா ?

போர் ஆரம்பிக்கமுதல் தமிழர்களின் சதவீதம் 30 ஆக இருந்தது. இப்போ பிரித்து விட்டார்கள். முஸ்லிம் என்றும் மலையகம் என்றும் - வடக்கு வேறு கிழக்கு வேறு என்று பிரித்திருக்கிறார்கள். அதேநேரம் நாட்டை விட்டு வெளியேறியவர்களின் தொகையைப் பாருங்கள். இலட்சக்கணக்கில் வெளியேறிவிட்டார்கள். இப்போது நாங்கள் 10 வீதத்திற்குக்கும் குறைவாக கீழே வந்து விட்டோம். இப்போது யாழ்ப்பாணத்தைப் பாருங்கள் சனத்தொகை 3 இலட்சத்திற்கு வந்துவிட்டது. வயோதிபரும் பெண்களும் தான் மிஞ்சுகின்றனர். இந்தக் காரணங்களால் தான் போர் எனக்கு உடன்பாடற்றதாக இருக்கின்றது. போரின் விளைவுகள், கால் இழந்தவர்கள், அங்கவீனமானவர்கள் இவை எல்லாம் போருக்கு எதிரான கருத்தை ஏற்படுத்துகின்றது. மனித வாழ்வில் ஏற்படும் மிகவும் மோசமான ஒரு நிகழ்வு போரே.


நீங்கள் மட்டுமல்ல சாதாரண தமிழர்களைக் கேட்டாலும் சமாதானத்திற்கு ஆதராகவே கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் 86 வீதமான சிங்களவர்கள் போருக்கு ஆதரவாகவே கருத்தத் தெரிவித்துள்ளனரே ?

சிங்கள மக்கள் யுத்தத்தை விரும்புகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு தடவையும் அவர்கள் சமாதானத்திற்கே வாக்களித்துள்ளனர். ஊடகங்கள் சில கருத்துக்களை ஊட்டி மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சில கருத்துக்களை ஊட்டி மக்களை அப்படியான முடிவை எடுக்கப்பண்ணலாம். உண்மையாக மக்கள் போரை விரும்புகிறார்கள் என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அந்தக் கருத்துக் கணிப்பில் சில குறைபாடுகள் இருக்கின்றது என்றே என்னால் கூற முடியும்.


யுத்தம் எப்போது முடிவிற்கு வரும் என்று கருதுகின்றீர்களா ?

இருதரப்புக்களும் களைப்படைகின்ற போது யுத்தம் செய்து பயனில்லை என்று வருகின்ற போது யுத்தம் நின்றுவிடும்.

(இன்னும் வரும்)

தொடர்புடைய இடுகைகள்.
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 1
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 2

No comments:

Post a Comment

Blog Archive

Statcounter