வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 23, 2009

சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 1

இறந்து போன ஓர் உலகத்தை அதன் முழுமையான வடிவில் மீட்டுருவாக்க தங்களால் இயலாது என்ற வேதனை உணர்வுடன், என்றென்றும் நிழல்களைத் துரத்தும்படி விடப்பட்டுள்ளார்கள் வரலாற்றாசிரியர்கள். - சைமன் ஷாமா

1. சிறுபான்மைச் சமூகங்களும் ஆவணங்களும்.
'வரலாறு' என்னும் கருத்தியலின் சொந்தக்காரர்களாக ஐரோப்பாச் சமூகம் அறியப்படுகின்றது. எழுத்தாவணங்களையும் தொல் பொருள்களையும் ஆதாரங்களாக வைத்து வரலாறு எழுதும் முறையைத் தோற்றுவித்தது ஐரோப்பியச் சமூகமே. ஆதாரங்களை முன்வைத்து எழுதப்படும் வரலாறாக இருக்கும் போதிலும் அவ்வரலாறு எப்போதும் முழுமையானதாக இருக்கப் போவதில்லை என்ற போதிலும் கூட ஆவணங்களில் இருந்து 'மீள்வாசிப்பு' என்ற புதிய வகைமாதிரி தோற்றுவிக்கப்பட்டது என்ற அளவில் ஆவணங்கள் முக்கியமானவை ஆகின்றன. அதிகார வர்க்கத்தின் கதையாடலே வரலாறு என்ற எண்ணப்பாடு 1980 களில் வலுப்பட்டது. அதிகார வர்க்கம் வரலாற்றுக்கு ஆவணங்களையும் தொல்லியல் பொருள்களையும் சான்றாக முன்வைத்த போதிலும் பிற்காலத்தில் அதே ஆவணங்களில் இருந்து 'ஒற்றை வரலாற்றுப் போக்கிற்கு' மாற்றீடான அல்லது 'ஒற்றை வரலாற்றுப் போக்கிற்குச்' சமாந்தரமாகச் சிறுபான்மையினரால் உப வரலாறுகள் எழுதப்பட்டன. ஐரோப்பிய - தந்தைமை ஆதிக்க வரலாற்றுப் போக்கானது புறமொதுக்கிய பெண், அடிமைத்துவம், சமப்பாலுறவு , கிறிஸ்தவ எதிர்ப்பு போன்ற கருத்தாக்கங்களுக்கு எதிராகப் பிற்காலத்தில் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்ட அதே ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டது முக்கியமான முரண்நகையான விடயமாகும்.

ஐரோப்பிய சமூகங்களில் மட்டுமல்லாது பிற்காலத்தைய ஐரோப்பிய சமூகமல்லாத பிற சமூகத்தவர்களது வரலாறுகளும் ஐரோப்பிய சமூகத்தால் எழுதப்பட்டவை. ஐரோப்பிய சமூகமல்லாத இப்பிற சமூகங்களும் தமது மீளுருவாக்கத்திற்கு அதே வரலாற்றையும் ஆவணங்களையும் பயன்படுத்தின என்பதே முக்கியமாக்கப்படுகின்றது. இதுவே ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. பின்காலனித்துவ சிந்தனைகளின் அடிப்படை காலனிய எதிர்ப்பு நிலை என்பதைத் தாண்டி தம் சமூகங்கள் மீதான ஐரோப்பியர்களது பார்வையை மறுதலிப்பதாகவே அமைந்தது. 'அடித்தட்டு மக்களது' பார்வையை முன்வைத்த Sabaltern கருத்தியலை முவைப்பவர்கள் ஐரோப்பிய ஆவணங்களில் இருந்து தம்மை மீள்வாசிப்புச் செய்தது இங்கே கவனிக்கத்தக்கது. ஒடுக்கப்படும் அனைத்து சிறுபான்மையினரும் அதிகார வலையமைப்பில் இருந்து வெளியேறுவதற்கும் தமது சமூகம் பற்றிய பார்வையை முன்வைப்பதற்கும் அவர்களது சமூகம் மீதான ஆவணப்படுத்தல்கள் அவசியமாகின்றன. இவை பற்றிய விரிவான பார்வையை கீழ்வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

1.1 வரலாறு, தொல்லியல் மற்றும் ஆவணங்கள்.
வரலாற்றை உருவாக்குவதற்கு வரலாற்றாசிரியர்கள் தொல்லியல் பொருள்களையும் எழுத்தாவணங்களையும் பயன்படுத்தினர். வரலாறு தமக்குச் சாதகமாக அல்லது தமது அதிகாரத்தை வலியுறுத்தும் நோக்கில் எழுதப்பட்டன. எழுதப்பட்ட அவ்வரலாறுகள் தமக்குச் சாதகமற்ற ஆவணங்களை அழித்தது அதிகார வர்க்கம் சார்பான கருத்தியலை நிறுவ முயன்றன. கருத்தியல் ரீதியான மேன்மையை வலியுறுத்துவதற்காக அதற்குப் பாதகமான ஆவணங்கள் அழிக்கப்பட்டது என்றும் கூற முடியும். இவ்விடயம் சார்பாகப் பல உதாரணங்களைக் கூற முடியும். இவ்விடத்தில் ஒரு உதாரணத்தைக் கூறி விளக்க முற்படுகின்றேன்.

கி.பி 275 ஆண்டை அண்மித்தே பைபிள் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது. கிறிஸ்தவ மேன்மைவாதம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் அக்காலத்தைய அதிகார வர்க்கம் புதிய ஏற்பாட்டை எழுதுவித்ததாகக் கூறப்படுகின்றது. அப்புதிய ஏற்பாட்டில் பலவிடயங்கள் மறைக்கப்பட்டதாகவும் யேசுநாதரை புனிதராகக் காட்டும் பொருட்டு பல புதிய விடயங்கள் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ மேன்மை வாதம் பைபிளுக்கு மாற்றீடான எதுவித கருத்துருவாக்கங்களையும் அனுமதிக்கவில்லை. தான் உருவாக்கிய கருத்துருவாக்கத்திற்கு எதிரான அனைத்து ஆவணங்களையும் அழித்தொழித்தது. அதன் மூலம் சமூகத்தில் தன்னைத்தக்க வைப்பதற்கான கருத்தியல் மேலாட்சி ஒன்றை நிறுவிக் கொண்டது. 2000 வருடங்கள் கழிந்த நிலையிலும் அக்கருத்தியல் மேலாட்சி எவ்வகையில் தொழில்படுகின்றது என்பதை நாம் அனுபவ பூர்வமாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.

கிறிஸ்தவ மேலாதிக்கத்தை அசைத்துப் பார்க்கும் நோக்கில் மீள்வாசிப்புச் செய்யப்பட்ட பலவிதமான வாசிப்புப் பிரதிகளும் கிறிஸ்தவ சமூகத்தின் அதிகாரக் கட்டமைப்பால் பலத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டன. புறமொதுக்கல் செய்யப்பட்டன. 1960 களில் Nikos Kazantzakis எழுதப்பட்டு வெளியாகிய Last temptation of christ என்னும் நூல் யேசுநாதரின் வாழ்க்கையை புதிய கோணத்தில் கூற முற்பட்டது. ஆயினும் பலத்தை கண்டனத்துக்கு உட்பட்ட அந்நூல் கிறிஸ்தவ அதிகார சமூகத்தால் தடைசெய்யப்பட்ட நூலாக அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில் மேலும் பல எழுத்துக்கள் வெளிவந்த போதிலும் கிறிஸ்தவ மேலாட்சியை அசைப்பதென்பது கடினமானதாகவே அமைந்தது. ஆவணங்களால் வரலாறு உருவாக்கப்பட்டு கருத்தியல் மேலாட்சியை சமூகத்தில் ஏற்படுத்த்தியதே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஜோன் எச். ஆர்னல்ட் கூறுவதை இவ்விடத்தில் கூற வேண்டும். 'அதிகாரத்தின் மீது தமக்கிருந்த உரிமையை நிலைநாட்ட புரோடஸ்டண்டுகள், கத்தோலிக்கர்கள் ஆகிய இருவருமே வரலாற்றைத் தமது ஆதாரமாகப் பயன்படுத்தினார்கள். காலத்தால் முற்பட்டவர்கள் என்று கூறிக்கொள்வதன் மூலமோ அல்லது ரோமன் திருச்சபை கண்டனத்துக்குரியது என்று நிறுவுவதன் மூலமோ தமது பிரிந்தியங்கும் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கான கருவியாக புரோடஸ்டண்டுகளால் வரலாறு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.' அதிகாரப் போட்டி என்ற வகைமாதிரியில் இக்கருத்து விளங்கிக் கொள்ளப்படக்கூடியதாக இருப்பினும் ஒன்றனது அதிகார மேலாதிக்கம் குறித்த ஒருவிடயத்தால் நிறுவமுற்படுத்தப்படும் போது அதே விடயத்தைக் கொண்டு விளிம்பு நிலைச்சமூகம் தன்னை காத்துக் கொள்வது என்ற அடிப்படையிலும் வாசிப்புச் செய்ய முடியும்.

அதிகாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்திற்காக ஆவணங்களும் அதன் வழி உருவாக்கப்பட்ட வரலாறும் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களால் எதிர்ப்பரசியல் செய்யும் பலராலும் ஆவணங்கள் என்பதே ஒட்டுமொத்த அதிகார வர்க்க வடிவமாக நோக்கப்படுகின்றது. இவ்வாதத்தில் ஒடுக்கப்படும் சமூகத்தை மேன்மேலும் ஒடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்து விடும் அபாயம் இருக்கின்றது என்பதைக் கூறியாக வேண்டும். அதற்கு மாற்றீடாக சிறுபான்மை அல்லது ஒடுக்கப்படும் சமூகங்கள் தமது ஆவணங்களையும் பதிவுகளையும் அதிகாரத்திற்கு முன் நிலைநிறுத்துவதே அதிகாரத்தை எதிர்ப்பதற்கான சரியான வழியாக இருக்க முடியும். அது மட்டுமல்லாது நிறுவப்படும் அதிகாரத்திற்கு எதிரான கருத்தியல் தளத்தை ஆவணங்கள் மூலம் உருவாக்குவதன் மூலம் அதில் இருந்து மீண்டெழ முடியும் என்பதே எனது கருத்து.

ரங்கே போன்ற வரலாற்றாசிரியர்கள் ஆவணங்களில் இருந்து தேசங்கள், அரசுகள், போர்கள் என்பவற்றுக்கூடாக வரலாறு என்பதை எழுதிச் சென்றார்கள். ஆவணங்களில் இருந்து வரலாற்றை எழுதும் வரலாற்றாசிரியர்கள் என்ற பொதுமைக் கருத்தாக்கம் இன்று பெரும்பாலும் மறைந்து போய்விட்டது. ஜோன் எச். ஆர்னல்ட் கூறுவது போன்று வரலாறு என்னும் பெரும்துறை இன்று பலவிடயங்களிலும் பலபிரிவுகளாக அணுகப்படுகின்றது. 'சமூக வரலாற்றாசிரியர்கள்', 'கலாச்சார வரலாற்றாசிரியர்கள்', 'பெண்ணிய வரலாற்றாசிரியர்கள்', 'அறிவியல் வரலாற்றாசிரியர்கள்' என்ற பலவிதமான வகைகளில் வரலாற்றாசிரியர்கள் நோக்கப்படுகின்றார்கள். சமூக ஆய்வில் புதிய துறைகளின் தோற்றத்திற்கும் புதிய வகை வாசிப்பிற்கும் இப்பார்வை முக்கியமானதாகின்றது. தொல்லியல் ஆய்வில் முக்கியமாகப் பெண்களைச் சேர்த்துக் கொள்ளுதல் என்ற வாதம் பிற்கால அறிவுஜீவிகளிடம் வலுப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக புதிய/மாற்று பார்வைகளின் அவசியத்தையும் வரலாற்றுப் போக்கிலான முழுமையான பார்வைக்கு 'பிற' பக்கங்களில் இருந்தான பார்வைகளும் அவசியமானவை என்பதை உணர்ந்து கொண்டதே இதன் முக்கியமான காரணமெனலாம். மருத்துவ ஏடுகளில் இருந்து பெண்ணிய வரலாறு எழுதப்படுவதும் நெசவுத் தொழிற்துறை தொடர்பான ஏடுகளில் இருந்து 'கலாச்சார வரலாறு' எழுதப்படுவதும் இன்றைய உலகின் பன்முகப்பார்வையின் போக்கையும் பன்முகப்பார்வையினூடான முழுமையையும் நோக்கியே என்று உறுதியாகக் கூற முடியும்.

1.2 மானிடவியலின் வரலாறும் ஆவணங்களும்.
சமூக - பண்பாட்டு மானிடவியல் என்ற நூலை எழுதிய ஜோன் மோனகன் மற்றும் பீட்டர் ஜஸ்ட் ஆகியோர் 'மானிடவியலின் வளர்ச்சியானது ஐரோப்பாவின் கண்டுபிடிப்பு, காலனியவாதம், இயற்கை அறிவியல் ஆகியவற்றிற்கு இடையேயான ஊடாட்டத்தால் நிகழ்ந்தது.' எனக் குறிப்பிடுகின்றார்கள். இதில் 'ஐரோப்பாவின் கண்டுபிடிப்பு' என்று அவர்கள் கருதியது ஐரோப்பா அல்லாத தேசத்தையே. இவ்வகை 'ஐரோப்ப மையவாதமே' மானிடவியலின் அடிநாதமாக இருந்தது என்கின்ற கருத்தியல் பிற்காலத்தில் ரனஜித் குகா போன்ற பின்காலனிய அறிஞர்களால் முன்வைக்கப்பட்டது. ஐரோப்பாவில் இருந்து உலகம் சுற்றக் கிளம்பியவர்களின் 'கண்டுபிடிப்பே' ஐரோப்பா அல்லாத பிறதேசங்கள் என்ற கருத்தியலின் வழியேயே மனிடவியல் தோற்றம் பெற்று வளர்ந்திருக்கின்றது. வி. சுஜாதா அவர்கள் கூறும் 'தம்மையும் தமது சமுதாயத்தையும் ஆராய சமூகவியலையும் பிற்பட்ட சமுதாயங்களைத் தெரிந்துகொள்ள மானுடவியலையும் ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் ஏற்படுத்தினர்.' என்ற கருத்தில் பொதிந்துள்ள உண்மையை எடுத்துக் கூற வேண்டியது ஐரோப்பா அல்லாத சமூகங்களின் கடப்பாடாகவும் அவசியமான தேவையாகவும் இருக்கின்றது.

ஆரம்பகாலப் பொதுமைப்படுத்தப்பட்ட மானிடவியல் என்னும் கருத்துருவாக்கத்தில் இருந்து இவ்விடயத்தைச் சிந்திப்போமாயின் இவ்வகைப்போக்குகளை எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். ஐரோப்பாவில் இருந்து உலகின் எல்லாப் பக்கங்களுக்கும் செல்லத் தொடங்கிய ஐரோப்பியர்கள் வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா என பெரியளவிலான பிரதேசங்களைக் கண்டார்கள். அவர்களது பார்வையில் அவை கண்டுபிடிப்பாக அமைந்தது. 'அமெரிக்காவைக் கண்டு பிடித்தது கொலம்பஸ்' என்பது மாதிரியான கருத்தாடல்கள் அமெரிக்க பூர்வகுடியினரை எவ்வகையில் அவமதிப்புக்குள்ளாக்கும் என்பதை யாரும் யோசிப்பதில்லை. ஐரோப்பியர்கள் சென்றடைந்த பிரதேசங்களில் ஏற்கனவே அந்நிலங்களில் அந்நிலத்து மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களது வாழ்வுமுறையை அறியும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஆய்வுமுறையே பிற்காலத்தில் மானிடவியலாக அறியப்பட்டது.

ஐரோப்பியர்கள் சென்றடைந்த இடங்களில் எல்லாம் தமது அதிகாரத்தை நிறுவிய அதே நேரம் தமது மரபார்ந்த முறைகளுக்கமைய அம்மக்கள் மீதான தமது பார்வையைப் பதிவு செய்தார்கள். அம்மக்கள் கூட்டத்தில் இருந்து தாம் மேம்பட்டவர்கள் (வேறுபட்டவர்கள் அல்ல) என்னும் மனோபாவத்தில் ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட ஆய்வுமுறையே பின்வரும் காலங்களில் மானிடவியலாக வளர்ச்சி பெற்று இன்று தனக்குள் பல உபதுறைகளையும் உருவாக்கி நிற்கின்றது. சமூக, பண்பாட்டு, கலாச்சார, பரிணாம, உயிரியல், மொழியியல் மானிடவியல் என்றவாறான உபதுறைகள் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டாலும் அவை அனைத்திலும் 'ஐரோப்பிய மையவாதம்' அடிநாதமாக உள்ளதை யாராலும் மறுக்க முடியாதுள்ளது. அப்பார்வைகளின் அடிப்படை ஐரோப்பியர்கள் உருவாக்கிய ஆவணங்களில் இருந்து தோன்றுகின்றது. காலனியாதிக்க காலத்தில் அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலங்களெங்கும் பிரயாணம் செய்த இராணுவ அதிகாரிகள், ஆட்சியாளர்கள், மருத்துவர்கள், சுற்றுலாப் பிரயாணிகள் போன்றோரது ஆவணங்களின் (முக்கியமாக எழுத்தாவணங்கள்) அடிப்படையில் மானிடவியல் வளர்ச்சி பெற்ற துறையாகியது. காலனியாதிக்கம் இல்லாதொழிக்கப்பட்டதன் பிற்பாடு ஐரோப்பிய மனநிலை சார்ந்த ஆய்வாளர்களது கவனத்தைப் பெற்ற ஐரோப்பியர் அல்லாத பிரதேசங்களில் ஆய்வுசெய்யும் பொருட்டு ஆய்வு மாணவர்களுக்கு பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டு மானிடவியல் ஆய்வு ஐரோப்பிய மைய சிந்தனை முறையில் தொடர்ந்தது.

உதாரணமாக இனவரைவியல் சார் மானிடவியல் ஆய்வுகளுக்கு களப்பணிகள் முக்கியமாக அமைகின்ற போதிலும் களப்பணிகள் அல்லாத ஆய்வுகள் (ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்கப் பிரதேச) பலவற்றைப் பல ஆய்வாளர்கள் ஆவணங்களை மட்டும் மையப்படுத்திச் செய்வதாகக் கூறப்படுகின்றது. இவ்வகையில் ஐரோப்ப மைய வாதக் கருத்துக்களே மேன்மேலும் இதர சமூகங்கள் மீதான பார்வையைத் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. எட்வார்ட் சைட் இனது ஓரீயன்டலிசம் நூலுக்குப் பின்னர் ஐரோப்பா அல்லாத சமூகங்களின் பார்வைகள் தனித்துவமாக முன்வைக்கப்பட்டாலும் அவற்றின் போதாமை யதார்த்த்தில் காணப்படுவதை யாரும் மறுக்க முடியாது. பின்காலனித்துவ மானிடவியல் ஆய்வுகள் அதே ஐரோப்பிய ஆதிக்க ஆவணங்களில் இருந்து அதிகாரப் பார்வையை நீக்கி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குச் சார்பாகச் செய்யப்படுவது வரவேற்கத்தக்க விடயம் என்ற போதிலும் ஆய்வுக்குத் தேவையான மூலவிடயங்கள் ஐரோப்பிய மைய வாதப் பார்வையில் அமைந்திருப்பதும் இன்னும் ஐரோப்பிய அல்லாத சமூக மூலவிடயங்களின் அளவு அதிகரிக்காமல் இருப்பதும் பாதகமான விடயங்களே.

மானிடவியலுக்கு உறுதுணையாக அமைந்த ஆவணங்கள் தொடர்பான பார்வையை 'ஐரோப்ப மையவாதமும் பிற சமுகங்களும்' என்னும் பகுதியில் விரிவாகப் பார்க்க முடியும். அதிகாரக் கருத்துருவாக்கம் ஆவணங்கள் மூலம் நிறுவப்படுவது எவ்வாறு என்பது மட்டுமே இப்பகுதிக்குரிய நோக்கமாகும்.

1.3 ஐரோப்ப மையவாதமும் 'பிற' சமூகங்களும்.
ஐரோப்ப மையவாதச் சமூகமும் அதன் உற்பத்தியான கருத்தியலுமே உலகு முழுமைக்குமான கருத்தியல் மேலாட்சியாக இருந்தது என்பதை ஆதார பூர்வமாக எட்வார்ட் சைட் நிறுவியதன் பிற்பாடு எட்வார்ட் சைட் இன் கருத்தியலைப் பின்பற்றிப் பின்காலனித்துவ கருத்தியல் எழுச்சி பெற்றது எனக்கூற முடியும். ஐரோப்பா அல்லாத காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலனித்துவ ஆட்சியின் காரணமாக தமது அதிகாரத்தை முற்றிலுமாக இழந்திருந்த அமெரிக்க, அவுஸ்திரேலியப் பூர்வகுடிகள் தொடர்பான கரிசனை என்பதற்குமப்பால் ஆபிரிக்க, தென்னமெரிக்க, ஆசியச் சமூகங்களின் பார்வையுடன் கூடிய கருத்தியல் வளர்ச்சி பெற்றது எனலாம். இதன் தொடர்ச்சியேலேயே தேசிய அரசுகளின் ஆளுகைக்கு உட்பட்ட அடையாள அரசியலின் தோற்றங்கள் எனவும் கூற முடியும்.

ஐரோப்ப - ஆண் மையவாத சிந்தனை முறைகளின் எதிர்ப்பரசியலாக பெண்ணியச் சிந்தனைகளும் சமப்பாலுறவுக் கருத்தியல்களும் ஐரோப்ப சமூகத்தில் முன்வைக்கப்பட்டதே ஐரோப்ப மையவாதக் கருத்தியலுக்கெதிரான முதலாவது எதிர்க்கருத்தியல் எனக்கூற முடியும். இதே நேரத்தில் ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. அதேபோல் அமெரிக்காவில் 'கறுப்பு அடிமைகள்' தங்களது எழுச்சிகளை முன்னெடுத்தார்கள். அவர்களது போராட்டம் தமது 'வேர்களைத் தேடுவது' என்ற அடிப்படையில் தமது உரிமைகளை வேண்டியதாகக் காணப்பட்டது. இதற்கு முன்னரே காலனித்துவத்திற்கெதிரான போராட்டங்கள் ஆசியப் பிராந்தியத்தில் நடைபெற்றிருந்தாலும் அவற்றின் கருத்தியல் பலம் ஐரோப்ப மையவாதச் சிந்தனைகளைத் தோற்கடிப்பதாக அமையவில்லை. மால்கம் எக்ஸ் போன்ற கறுப்பர்களது உரிமைக்காக அமெரிக்காவில் போராடியவர்கள் கூட அடிமைத்துவத்திற்கெதிரான கருத்தியல்களை முவைத்த போதிலும் அவை ஐரோப்ப சிந்தனை மறுப்பாகப் பூரணமாக வடிவம் பெறவில்லை. அதே நேரத்தில் ஆபிரிக்காவில் இடம்பெற்ற போராட்டங்களும் காலனித்துவ எதிர்ப் போராட்டங்கள் என்ற அளவில் நின்றுகொண்டிருந்தன. பெரும்பாலான நாடுகள் சுதந்திரமும் பெற்றன. ஆயினும் அவர்களாலும் ஐரோப்பச் சிந்தனை மரபை முற்றாக மறுதலிக்க முடியவில்லை. மாறாகா காலனித்துவத்திற்கெதிராக ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகள் முக்கண்ட கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டன. அதற்கப்பால் அவர்களால் செல்ல முடியவில்லை.

இந்நேரத்தில் எட்வார்ட் சைட் இனது கருத்தியல்கள் தோற்றம்பெற்றன. அவை ஆதாரபூர்வமாக ஐரோப்ப சிந்தனை மரபை விமர்சிக்கவும் மறுதலிக்கவும் தலைப்பட்டன. எட்வார்ட் சைட் இன் கருத்தியல், காலனித்துவக் கருத்தியல் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் தாம் கருத்தியல் ரீதியாகவும் விடுதலை பெறவேண்டும் என்ற மனநிலையைத் தோற்றுவித்தது. காலனித்துவத்திற்குள் ஆட்பட்டிருந்த நாடுகள் ஐரோப்பச் சிந்தனை மரபில் இருந்து விடுபட்டுத் தமக்கான வாசிப்பை மேற்கொள்ள எட்வார்ட் சைட் இனது ஓரீயன்டலிசக் கருத்துக்கள் உதவின எனக்கூறின் அதை யாராலும் மறுக்க முடியாது. அதன் தொடர்ச்சியிலேயே 'சபால்டன் குழு'வின் தோற்றமும் கருத்தியல் பரிணாமமும் முக்கியத்துவம் பெறுகின்றன. ரனஜித் குகா அவர்களது 'மாற்று வரலாறு' எழுத வேண்டிய தேவையின் பாற்பட்ட சிந்தனைகள் இங்கே ஐரோப்பா மையவாதச் சிந்தனையை முற்றுமுழுதாகத் தோற்கடிக்கக் கூடிய சிந்தனை முறைகளாகும். 'விளிம்பு நிலை ஆய்வுகள்' இதை ஓரளவுக்காவது சாத்தியப்படுத்தின என்றே கூற வேண்டியுள்ளது.

ரனஜித் குகாவைப் பின்பற்றிக் குறிப்பாக ஆசியாவில் அதிலும் இந்தியாவில் மாற்று வரலாறு தொடர்பான சிந்தனை முறை வளர்ச்சியடைந்தது. இதில் முக்கியமான ஆளுமைகளாகக் கோஹ்ன் ஐயும் காயத்ரி ஸ்பிவாக் ஐயும் குறிப்பிட முடியும். அமெரிக்க மானுடவியலாளரான கோஹ்ன், ரனஜித் குகாவின்டுடைய பார்வையை மேன்மேலும் செழுமைப்படுத்தியவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். இவரது களப்பணிகள் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் அமைந்த போதிலும் இவர் அதனை மையமாக வைத்து கலாச்சாரம், சமூக, தேசம் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பை ஆய்வு செய்தார். காலனித்துவ அறிவை மீறும் வகையில் கலாச்சாரப் பகுப்பாய்வு மூலமாக இனம் சார் சமூகவியல் கருத்தை வலுப்படுத்தினார் எனக்கூற வேண்டியுள்ளது. இதன் ஆரம்பமாக கிராம்சியைக் கருத முடியும். Colonialism and its forms of Knowledge என்ற நூல் இது பற்றி விரிவாக ஆய்வுசெய்கின்றது. அதே நேரம் காயத்ரி சக்கரவர்த்தி ஸ்பிவாக் பின்காலனித்துவக் கருத்தியலை ஐரோப்ப மையவாதத்திற்கெதிராக வலுவாக முன்னிறுத்தினார். A Critique of Post-Clonial Reason என்னும் தனது நூலில் தத்துவம், கலாச்சாரம், வரலாறு, இலக்கியம் ஆகிய துறைகளில் காணப்பட்ட காலனித்துவக் கூறுகளையும் ஐரோப்ப மையவாதக் கூறுகளையும் இனம் காண்கின்றார். அது மட்டுமன்றி அதன் இறுதி அத்தியாயத்தில் ழாக் தெரிதாவின் 'மீள்கட்டுமானம்' என்னு கருத்தியலை பின்காலத்துவ சமூகங்கள் உள்வாங்க வேண்டியதன் தேவையையும் வலியுறுத்துகின்றார். பின்காலனித்துவ சமூகங்களது மீள்கட்டுமானம் என்பது ஐரோப்ப சிந்தனை மரபகன்ற தமது சமூகப் பார்வையுடன் கூடிய பார்வையை வலியுறுத்தல் என்பதாகவே கருத வேண்டியுள்ளது.

ஹெகல் மற்றும் மார்க்ஸ் போன்றவர்கள் எவ்வாறு ஐரோப்ப சமூகத்தின் பிரதிநிதியாக இருந்தார்கள் என்பதை இன்று பலரும் விளக்கியுள்ளார்கள். அவர்களிடம் இருந்த ஐரோப்ப மைய வாதச் சிந்தனை மரபு அவர்களை ஐரோப்பா அல்லாத சமூகங்களின் பார்வையில் சிந்திக்க விடவில்லை. இவ்வகையில் ஐரோப்பா அல்லாத தேசங்களில் மார்க்சியம் மீள்வாசிப்பை வேண்டி நின்றது. பிற்காலத்தில் கலாச்சாரத்தை மையமாக வைத்து மார்க்சியம் செழுமைப்படுத்தப்பட்டதற்கான காரணமாக இவ்விடயத்தைக் கூற முடியும். வரலாறு என்பதைத் தொடர்ச்சியான நிகழ்வாகப் பார்க்கும் தன்மையை ஃபூக்கோ கடுமையாக எதிர்த்தார். அதற்கு மாற்றான வரலாறு எழுதப்பட வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. வரலாற்றின் வழிநெடுகிலும் தவறான தெரிவுகளும் மதிப்பீடுகளும் காணப்படுகின்றன என்பது ஃபூக்கோவின் கருத்தாக இருந்தது. வரலாறு பற்றிய ஹெகலிய சிந்தனை மறுப்புக்கான முக்கிய தருணமாக ஃபூக்கோவைக் கூற முடியும்.

1.4 பின்காலனித்துவ காலப்பகுதியும் ஆவணங்களும்.
பின்காலனித்துவ காலகட்டத்தில் ஐரோப்பா அல்லாத சமூகங்கள் தம்மைத் தமது பார்வையில் மீள்வாசிப்புக்கு உட்படுத்த காலனித்துவ காலத்து ஆவணங்களைப் பயன்படுத்திய விடயத்தை மேலே கூறியிருந்தேன். ஹெகல் கூறியதைப் போன்று ஐரோப்பா அல்லாத சமூகங்கள் தம்மை நாகரிகமடைந்த அல்லது ஐரோப்பா சமூகத்திற்குச் சமனாக வைத்துப் பேசக் கூடிய அளவிற்கு இல்லை. ஏனெனில் அவர்களிடம் வரலாறோ தேசமோ இருக்கவில்லை. ஆக, அவர்களது வரலாறை ஐரோப்பியர்கள் தமது பார்வையில் எழுதிக் கொண்டார்கள். அவர்களுக்கான ஆவணங்களை தமது பார்வையில் தயாரித்தும் கொண்டார்கள். இன்றைய நிலையில் எங்களைப் போன்ற ஐரோப்பா அல்லாத சமூகங்களுக்கு, எமது கடந்த காலத்தை அறிந்து கொள்ள ஐரோப்பிய ஆவணங்களும் ஐரோப்பிய வரலாற்றுக் குறிப்புக்களுமே உள்ளன.

ஐரோப்பியர்கள் ஐரோப்பா அல்லாத பூர்வீக சமூகங்களை ஆளத் தொடங்குவதற்கு முன்னர் அச்சமூகங்கள் தமக்கான தெரிவுகளுடன் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தமக்கான தனித்துவமான மரபையும் அறிவையும் கொண்டிருந்தார்கள். ஆயினும் காலனித்துவ காலத்தின் பின்னர் தமக்கான அறிவை இழந்து ஐரோப்பிய மையமான அறிவு அவர்கள் மீது திணிக்கப்பட்டது. அனைத்து வகையிலும் ஐரோப்ப மையச் சிந்தனை முறை அவர்கள் மீது திணிக்கப்பட்டது. ஆயினும் இன்று காலனித்துவ சிந்தனை மரபில் இருந்து விடுபடும் நோக்கிலான சிந்தனை பரவலாக்கப்படும் தருண்ங்களில் அவர்களிடம் தமக்கான அறிவுத் தொடர்ச்சி இல்லாமல் போய்விட்டிருக்கின்றது. பாரிய இடைவெளி தோன்றியுள்ளது. இவ்விடத்தில் தனித்துவமான சமூகங்கள் தம்மை மீள்வாசிப்புச் செய்வதற்கு ஐரோப்பிய காலனித்துவ கால ஆவணங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. (தொன்மங்கள் தொடர்பான வாய்வழிக்கதை மரபு அவ்வவ் சமூகங்களுக்கான அறிவுத் தொடர்ச்சியை ஓரளவாவது சாத்தியமாக்கியுள்ள போதிலும் அவை 'முறையாக' ஆவணப்படுத்தப்படவில்லை. இவ்விடத்திலேயே மேற்கின் மருத்துவத்திற்கு எதிராக சித்த மருத்துவத்தை முன்னிறுத்துவதன் சாதகமான அம்சங்களை நாம் பேச வேண்டியுள்ளது.)

பின்காலத்துவ காலச் சிந்தனை மரபிற்கு முக்கியமாக 'சந்திராவின் இறப்பு' என்ற சம்பவத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். இந்திய சமூகத்தில் பின்காலனித்துவத்தை ஆய்வுசெய்த ரனஜித் குகா இவ்விடயத்தை முன்வைத்தார். காலனித்துவ கால பதிவேடுகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த குகா 'சந்திராவின் மரணம்' என்னும் சம்பவத்தைப் படிக்க நேர்ந்தது. அதன் மீள்வாசிப்பு தலித் அரசியலுக்கு அவசியமான பார்வையைக் கொடுத்தது. சந்திரா என்னும் தலித் பெண்ணின் கருக்கலைப்பை கலனித்துவ காலத்தில் எவ்வாறு அசட்டையாகக் கருதினார்கள் என்பதை அச்சம்பவம் தொடர்பான பதிவேட்டில் இருந்து குகா மீள்வாசிப்புச் செய்தார். அக்கருக்கலைப்பில் சந்திராவும் கருவில் இருந்த குழந்தையும் இறந்து போயினர். இச்சம்பவம் தலித் மக்கள் மீதான காலனித்துவ கால ஒடுக்குமுறையை ரனஜித் குகா கண்டார். சாதாரணமா பதிவேடு என்ற ஆவணத்தில் இருந்து எவ்வாறு ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தம்மை மீள்வாசிப்புச் செய்யமுடியும் அல்லது தமது வரலாற்றை எழுத முடியும் என்பதை இச்சம்பவம் உணர்த்தி நிற்கின்றது. ஒடுக்கப்படும் சமூகங்கள் தமது விடுதலைக்கு அதிகார வர்க்க ஆவணங்களில் இருந்தும் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை நிரூபித்து நிற்பதே 'சந்திராவின் மரணம்' என்கின்ற சம்பவமாகும். 'மற்றமைகளாலேயே வரலாறு முழுமையடைகின்றது' என்னும் வரலாறு தொடர்பான ரோலன்ட் பார்த்தின் கூற்றுக்கு 'சந்திராவின் மரணம்' என்கின்ற சம்பவம் எவ்வளவு தூரம் உண்மையாகி நிற்கின்றது.

1.5 ஒடுக்கப்படும் சிறுபான்மையினரும் ஆவணங்களும்.
மேலே கூறிய நான்கு பகுதிகளும் ஓரளவுக்குச் சிறுபான்மைச் சமூகங்கள் தம்மை ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாகக் கூறப்பட்ட கருத்துக்கு வலுச்சேர்ப்பனவாக அமைந்தன. அத்துடன் மேற்கூறப்பட்ட பகுதிகளூடாக அதிகார வர்க்க ஆவணங்களில் இருந்து ஒடுக்கப்படும் சமூகங்கள் தம்மை மீள்சாசிப்புச் செய்து கொள்வது எப்படி என ஊகித்திருக்க முடியும். ஐரோப்பா - ஐரோப்பா அல்லாத சமூகங்களுடன் காலனித்துவத்தை இணைத்து கூறப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக ஐரோப்ப சமூகத்திற்குள் ஒடுக்கப்பட்ட நிறுவனமயமாக்கப்பட்ட கிறிஸ்துவ அமைப்பிற்கு எதிரான குரல்கள் தொடர்பாகவும் சில விடயங்கள் கூறப்பட்டுள்ளன.

ஐரோப்ப சமூகம் பொதுவாகத் தந்தைமை அல்லது ஆண் அதிகாரமயப்பட்ட சமூகமாக அறியப்படுகின்றது. அதுவே காலனியாதிக்கத்தையும் கிறிஸ்துவ அமைப்பையும் பலப்படுத்தியது எனக்கூறலாம். அதே நேரத்தில் அச்சமூகக் கட்டமைப்பு பெண்கள் மற்றும் ச்மப்பாலுறவாளர்கள் ஆகிய சிறுபான்மைத் தரப்பினரைப் பலமாக மறுத்து வந்திருக்கின்றது. ஆண்வயப்பட்ட சமூகக் கட்டமைப்பின் வெளிப்பாடுகளில் இருந்தே பெண்ணியம் தோற்றம்பெற்றது. ஆண் மைய ஆவணங்களில் இருந்து பெண்ணியம் தன்னை மீளுருவாக்கம் செய்து கொண்டது அல்லது புத்துயிராக்கம் செய்து கொண்டது. ஆண் மையப்பிரதிகளை மறுக்கும் நோக்கில் பிரதிகள் மீள்வாசிப்புச் செய்யப்பட்டதை இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது.

ஐரோப்பா - ஐரோப்பா அல்லாத பிற சமூகங்கள் தொடர்பான வேறுபாடுகள் கணிசமான அளவு கூறப்பட்டாலும் ஐரோப்பா அல்லாத சமூகங்களுக்கிடையில் அல்லது உள்ளே காணப்பட்ட சிறுபான்மை வெளிகள் தொடர்பாக நான் அதிகம் பேசவில்லை. இந்தியச் சமூக அமைப்பில் காணப்பட்ட படிநிலைச் சாதியமைப்பு மற்றும் பெண்கள் அடக்குமுறை தொடர்பான விடயங்கள், ஆரிய மேலாதிக்கம், பிற சமயங்கள் மீதான வெறுப்பு நிலை போன்றவை பற்றி மீள்வாசிப்புச் செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். உதாரணமாகத் தொன்மங்களை சிறுபான்மைக் கருத்தியல் சார்ந்து மீளுருவாக்கம் செய்தல் மற்றும் ஆதிக்கக் கருத்தியலுக்குட்பட்ட வாய்வழி ஆவணங்களான புராணங்களை மீள்வாசிப்புச் செய்தல் போன்ற விடயங்கள் முக்கியமானவையாகும். இங்கே ஆரியக் கடவுகளுக்கெதிராக சிறுதெய்வங்களை முன்னிலைப்படுத்தலும் ஆண்வயப்பட்ட புராணங்களில் பெண்களை முன்னிறுத்தி மீள்வாசிப்புச் செய்வதும் சமூகத்தின் கருத்தியல் மேலாட்சியைத் தகர்த்து விளிம்புக் கதையாடல்களை முன்னிலைப்படுத்த உதவும். 'சிலப்பதிகாரம் - மணிமேகலை : பெண்மையின் நாடகம் - பின்னவீனத்துவ ஆய்வு' என்னும் பிரதியில் பிரேம்-ரமேஷ், புராணங்களை பெண்மையை மையமாக வைத்து அணுக முற்படுகின்றார்கள். இவ்வகை மீள்வாசிப்புக்கள் ஆவணங்கள் மற்றும் வரலாறு வழியாக நிறுவப்பட்ட கருத்தியல் மேலாட்சியைச் சிதைக்கும். அதிகார வர்க்க ஆவணங்களை சிறுபான்மையினர் மீள்வாசிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் அதிகாரத்தை சிதைக்கும் அசைவியக்கத்தைச் சாத்தியமாக்க முடியும்.

உசாத்துணை.
1. வரலாறு, ஜோன் எச்.அர்னால்ட், தமிழில்: பிரேம்
2. சமூக - பண்பாட்டு மானிடவியல், ஜான் மோனகன் - பீட்டர் ஜஸ்ட், தமிழில்: பக்தவத்சல பாரதி

3. The Secret of world History: Selected Writings on the Art ana Science of History, Leopord von Ranke.

4. Mapping subaltern studies and the postcolonial, Vinayak Chaturvedi

5. The Last Temptation of Christ, Nikos Kazantzakis

6. Power/Knowledge: Selected Interviews and Other Writings, 1972-1977, Michel Foucault

7. Orientalism, Said, Edward (1977)
8. Colonialism and its forms of knowledge: the British in India, Bernard S. Cohn

9. A critique of postcolonial reason: toward a history of the vanishing present, Gayatri Chakravorty Spivak

10. Dominance without Hegemony: History and Power in Colonial India, Ranajit Guha

11. History at the Limit of World-History, Ranajit Guha

12. Subaltern Studies: Writings on South Asian History and Society, Vol. 6

13. Return to the Source: Selected Speeches, Amilcar Cabral

14. Is Hegel's Philosophy of History Eurocentric, Andrew Buchwalter

15. சிலப்பதிகாரம் - மணிமேகலை : பெண்மையின் நாடகம் - பின்னவீனத்துவ ஆய்வு, பிரேம்-ரமேஷ்


இக்கட்டுரை 2009 யூன் மாதமளவில் ஒஸ்லோவில் நடைபெற்ற 37 ஆவது இலக்கியச் சந்திப்பிற்காக எழுதப்பட்டது.

(இன்னும் வரும்)

No comments:

Post a Comment

Blog Archive

Statcounter