வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 21, 2009

பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 4

அல்லைப்பிட்டியில் தியானம் செய்வதற்கு ஒரு இடம் உருவாக்கியிருந்தீர்கள். தனிப்பட்ட ரீதியில் எத்தகைய அநுகூலத்தைப்பெற்றீர்கள் ?

களைப்படைகின்ற போது ஒரு ஓய்விற்காக ஒரு retreat இற்காகவும் இந்த தியான நிலையத்தை அமைத்தேன். இப்போது அது இராணுவமுகாம் ஆக இருக்கிறது.


நீங்கள் தற்போது அவுஸ்திரேலியா சென்றுவிட்ட நிலையில், இறுதிக் காலத்தில் எங்கு வாழ விரும்புகிறீர்கள்? சமூகத்திற்கு இன்னும் ஏதாவது செய்யலாம் என்று கருதுகிறீர்களா ?

சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் ஒரு விதத்தில் அகங்காரந்தான். உண்மையில் எங்களுடைய திருப்திக்காகத்தான் செய்கின்றோம். சில மாற்றங்களைக் கொண்டுவரவும் சில வேலைத்திட்டங்கள் ஊடாக மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளக் கூடிய நிலையையும் ஏற்படுத்தலாம்.


நீங்கள் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்ததற்கும் இன்று வெளிநாட்டில் வசிப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கின்றீர்கள் ?

இப்போது வெளிநாடுகளில் இருப்பதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை உண்மையில் வெளிநாடுகள் எல்லாம் இப்போ எங்கோ போய்விட்டன. Consumer society, தனிமனித தேவைகள் போன்றவற்றை மையப்படுத்தியதாகக் காணப்படுகின்றன. இதில் எனக்கு ஈடுபாடு இல்லை. ஆனால் ஒரு பாதுகாப்பான இடம் இங்குபோல் ஒவ்வொரு நாளும் ஷெல்லோ அல்லது குண்டுவீச்சோ என்று பயமில்லை. ஆனாலும் இப்போது வெளிநாடுகளிலும் இவை வந்துவிட்டன. பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழும் என்ற அச்சம் உள்ளது. சிறுவர் துஸ்பிரயோகம், போதைமருந்து இப்படியான பிரச்சினைகளும் இருக்கின்றன. அதுமட்டுமன்றி street violence போன்றவையும் காணப்படுகின்றன. ஓரிடத்திலிருந்து தப்பி ஓரிடத்திற்கு போகலாம் என்றும் இல்லை.


ஒருவரை ஓரிடத்தில் இருந்து வெளியேற்றுவது என்பதை துயரமாக நினைக்கின்றீர்களா?

ஒருவரை ஓரிடத்தில் இருந்து வெளியேற்றுவது என்றால் துயரமானது. உண்மையிலே ஒருவர் ஓரிடத்தில் வந்து பிறப்பது என்றால் அதற்குக் காரணம் இருக்கிறது. அதிலிருந்து வேறுஇடத்திற்குப் போவது என்பது பிழை. அந்த இடத்தில் அவர் வாழவேண்டும். நாங்களாகவே வெளியேறுவது வேறு. மற்றவர்களால் விருப்பத்திற்கு மாறாக வெளியேற்றப்படுவது என்பது வேறு.


மேற்கு நாடுகளில் வாழ்ந்திருக்கிறீர்கள். அதே நேரம் யாழ்ப்பாணத்திலும் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறீர்கள். மக்களது உளவியல், சமூகவியல் சம்பந்தமாக ஆராய்ந்திருக்கிறீர்கள் அல்லது அவதானித்திருந்தீர்கள். யாழ்ப்பாண சமூகத்திற்கு தனித்துவமான உளப்பாங்கு எதாவது இருக்கின்றதா ?

உண்மையில் எல்லா சமூகங்களுமே ஒரே மாதிரித்தான். நான் அமெரிக்காவில் இருந்து வந்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் பழைய விழுமியங்கள் பண்பாடுகள் இருந்தன. பாரம்பரிய முறைகளில் ஆழமான விடயங்களைக் காணமுடிந்தது. மேற்கில் இல்லாத ஆழம் அங்கிருந்தது. எங்களுடைய சமய விளக்கங்கள், வழிபாடுகளில் நல்ல அர்த்தங்களைக் காணக்கூடியதாக இருந்தது. நான் அந்த மண்ணில் பிறந்த படியால் எனக்கு அது பொருத்தமானதாக இருந்தது. மேற்கத்திய நாடுகளில் கண்டுகொள்ளமுடியாததை அந்த மண்ணில் காண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது. என்னைக் கண்டுகொள்ளக்கூடியதாக இருந்தது. யாழ்ப்பாணத்திலேதான் நான் பிறந்ததிற்கான காரணங்களும் வாழ்க்கையில் நான் கேட்ட கேள்விகளுக்கான முடிவுகளும் இருந்தன. என்னுடைய உணர்வும் அங்குதான் இருக்கிறது.


போரை நோக்கிச் செல்வதற்கு மக்களும் ஒரு காரணமாக இருந்திருக்கின்றார்களா ?

ஆம். Hierarchical அமைப்பு, சமூகம் பெண்களை நடாத்திய விதம் எத்தனையோ வருடங்களாக அடக்குமுறை இருந்திருக்கிறது. இதை நல்ல விடயமாகச் சொல்ல முடியாது. இப்படியான கொடுமைகள் இருந்திருக்கின்றது. எங்களுடைய சமூகத்தில் இவற்றிற்கெதிரான போராட்டங்கள் அவ்வளவாக மேற்கிளம்பவில்லை. மேலாதிக்கம், சாதிரீதியான ஒடுக்குமுறை சமூகத்தின் அமைப்பில் (Structure இல்) இருக்கின்றது. ஒவ்வொரு சாதியும் (தங்களைப்) அவர்களைப் பார்க்கின்ற முறைமை தங்களை மதிக்கின்ற விதம் இருந்துகொண்டே இருக்கிறது. போரினால் இவை ஓரளவிற்கு மாற்றமடைந்துள்ளன. பெண்களுக்கும் ஓரளவு சுதந்திரம் வந்திருக்கின்றது. பெண்களும் தாங்கள் நன்மையானவற்றை செய்ய, தம்மாலும் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கை பிறந்திருக்கிறது. இவையெல்லாம் போரினால் வந்த நன்மையான மாற்றங்கள். சமூகத்தை உடைப்பற்கான ஒரு காரணமாகப் போரைச் சொல்லலாம்.


இருபது வருடங்களுக்ளுக்கும் மேலாக யுத்தம் நிகழ்ந்து வரும் வேளை தனிப்பட்ட ரீதியில் நீங்கள் எத்தகைய துன்பம் அல்லது நெருக்கீட்டை எதிர்கொண்டீர்கள் ?

தனிப்பட்ட ரீதியில் suffer பண்ணியது என்று சொல்ல முடியாது. எனக்குத் தியானத்தில் நல்ல ஈடுபாடு இருக்கின்றது. அதுதான் என்னை நெருக்கடிகளில் இருந்து விடுபட உதவியது. அல்லைப்பிட்டி போன்ற இடங்களை நாடிப்போனது, யோகாவில் ஈடுபட்டுக் கொண்டது எல்லாம் ஒரு சமநிலையைப் பேண உதவியது. கடும் நெருக்கடிகள் இருந்த போதும் அவற்றில் இருந்து விடுபட்டுச் செயற்பட ஆன்மீக ஈடுபாடும் தொழிலும் உதவியது. எல்லோருக்குள்ளும் ஒரு துயரம் இருந்துகொண்டுதான் இருந்தது. 1983 இல் இங்கு (கொழும்பில்) கலவரம் நடக்கும் போது அங்கு யாழ்ப்பாணத்தில் நான் நிற்கும் போது சுடப்பட்டு நிறையப்பேர் தெல்லிப்பளை ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். அந்த நேரத்தில் கஸ்டப்பட்டு வந்தவர்களை பராமரிக்கின்றதோ அல்லது அவர்களது தேவைகளை கவனிக்கின்றதோ எல்லாம் செய்யக் கூடியதாக இருந்தது. இப்போது நான் அவ்விடயங்களைச் செய்வேனோ தெரியாது.


போரினால் ஏற்பட்ட collective trauma கம்போடியாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இங்கு எப்படி இருந்தது ?

கம்போடியாவில் மிக மோசமாக இருந்தது. நான் கம்போடியாவில் இருந்தபோது யாழ்ப்பாணத்தின் நிலமை மற்றைய இடங்களுடன் ஒப்பிடுகையில் பரவாயில்லை மாதிரி இருந்தது. ஆனால் இப்ப உள்ள நிலமையைப் பார்க்கின்ற போது அது மிக மோசமாகப் போய் விட்டது போலேதான் தெரிகின்றது. இப்படியே போனால் நாம் கம்போடியாவின் நிலையை விரைவில் அடைவோம். அதாவது அடிமட்டம் - ground zero நிலைமையை அடைவோம். குடும்ப அமைப்புக்கள், குடும்ப செயற்பாடுகள், சமூக நிர்வாகங்கள் எல்லாமே உடைந்து போய்விடும். ஒன்றுமில்லாத நிலை அதை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறோம்.


உங்களுக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இருக்கின்றதா ?

வரலாற்றைப் பார்க்கும் போது நம்பிக்கை கொள்ளமுடிகிறது. ஒரு கட்டத்தில் யுத்தத்தில் ஈடுபடுகின்றவர்கள் களைப்படைவார்கள். சமூகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவரும். எந்தக் கட்டத்திலே வரும் என்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது. எவ்வளவிற்கு இன்னும் அழிவு நெருங்க வேண்டுமோ, எவ்வளவு காலத்திற்கு நீடிக்குமோ என்பவை ஒரு கேள்வியாகத்தான் இருக்கின்றன. இன்றைய வடகிழக்கு நிலமையை பார்க்கின்ற போது போரில் ஈடுபடுகின்றவர்களைவிட பொதுமக்கள்தான் பெரும் அழிவிற்கும் மீளமுடியாத துயரத்திற்கும் உட்பட்டு வருகின்றார்கள். போரில் ஈடுபடுகின்றவர்கள் களைப்படைவதைவிட மக்களே களைப்படைந்து அதிக நெருக்கடிக்குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் சொல்வதைப் பார்க்கிற போது மக்கள் அழிவடைந்த பின்னர் தான் போர் முடிவுக்குவரும் போல் தெரிகிறது. இன்றைய உலகில் போர்கள் மக்களின் அழிவைத்தான் விரும்புகின்றன. யுத்தத்தில் ஈடுபடுகின்றவர்கள் பாதுகாக்கப்பட, மக்கள்தான் எல்லாவிதத்திலும் அழிகின்றார்கள்.


மீண்டும் எதிர்காலம் நம்பிக்கையானதாக இருக்கின்றது. பழைய நிலைக்கு மக்களது வாழ்வு திரும்பும் என்பதை எதை அடிப்படையாக வைத்துக் கூறுகின்றீர்கள் ?

ஒன்று வரலாறு. மற்றது எல்லோருக்கும் வயது வரும். மேலும் வெளிச்சக்திகளின் தலையீடு. இந்த வெளிச்சக்திகளின் தலையீடு கூடிக்கொண்டு செல்கின்றது. அந்த வெளிச்சக்திகள் இதைக் கட்டாயப்படுத்தி ஒரு முடிவிற்கு கொண்டுவர முயலும். ஐரோப்பாவில் hundred years war என்று நடந்திருக்கின்றது. ஆனால் எங்களுடைய நாட்டில் அவ்வளவு காலத்திற்கு நீடிக்கலாம் என்று நான் நினைக்கவில்லை.

நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த காலம் ?

போர் தொடங்குவதற்கு முன்னிருந்த காலம். 1983 இற்கு முன்பு, பிறகு 2002 இல் சமாதானம் நிலவிய காலம். 1995 இல் சமாதானம் நிலவிய காலத்தையும் குறிப்பிடலாம்.


இன்றைய உளவியல் எவ்வாறு இருக்கிறது?

மேற்கத்தேய நாடுகளில் உளவியலின் முக்கியத்துவம் உணரப்பட்டு அது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு எல்லாத்துறைகளிலுமே அது முக்கிய இடத்தை எடுத்திருக்கின்றது. எல்லாவற்றையும் உளவியல் ரீதியாக பார்க்கின்ற தன்மையும் வந்திருக்கின்றது. நாடகங்களில், கதைகளில் என்று எழுத்தாளர்கள் உளவியலைப் பார்க்கின்ற தன்மை ஒன்று வந்திருக்கிறது. ப்ரெய்ட் இனது காலத்தில் இருந்துபார்க்கும் போது இதுபற்றிய இன்றைய ஆராய்ச்சி எங்கேயோ போய் இருக்கிறது. மூளை பற்றிய ஆராய்ச்சியை Left Brain - Right Brain என்று வேறுபடுத்தி உளவியல் ரீதியாக ஆராய்வு செய்கின்றனர். இது கூடிப்போய் விட்டதோ என்று சொல்லுமளவிற்கு வளர்ந்திருக்கின்றது. அதிகளவில் Psychological ஆகப் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.


உளவியல் பற்றிய அண்மைக்கால ஆய்வுகளில் உங்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பது ?

அவுஸ்திரேலியாவில் யூப்ளி யொங் என்று என்னோடு வேலை செய்கின்ற ஒருவர் இருக்கின்றார். அவருடைய எழுத்துக்களும் சிந்தனைகளும் எனக்குப் பொருத்தமானதாய் இருப்பதாக உணர்கின்றேன். அவருடைய கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இருக்கிறது.


நீங்கள் தற்போது எவ்வகையன நூல்களை திரும்பவும் வாசிக்க விரும்புகின்றீர்கள்?

எங்களது பழைய தேவார திருவாசகங்களில் ஈடுபாடு இருக்கிறது. திருவாசகத்தில் மிக ஆழம் இருப்பதாக உணர்கிறேன். 1987 வரை நான் சேர்த்து வைத்த புத்தகங்கள் ஷெல் தாக்குதல் காரணமாக அழிந்து விட்டன. இப்போது கடந்த 5 நாட்கள் யாழ்ப்பாணம் போய்விட்டுத் திரும்பும் போது 3 புத்தகங்களை எடுத்து வந்தேன். திருவாசகம், தாயுமானவர் மற்றது திருக்கோவையர் இந்த மூன்றையும் தான் வாசிப்பதற்கு என்று கொண்டு போகிறேன்.

(முடிந்தது)

தொடர்புடைய இடுகைகள்.
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 1
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 2
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 3

No comments:

Post a Comment

Blog Archive

Statcounter