வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 28, 2009

அவதார் (Avatar) - 3

அவதார் (Avatar) - 1
அவதார் (Avatar) - 2

'அவர்கள் ஒரு தேசத்துள் நுழைவார்கள்
யோனிகளைப் பிளப்பதற்கான பத்திரத்துடன்

ஆக்கிரமித்த நிலப் பெண்களின் காதலர்களின்

குறிகளை வெட்டும் அனுமதியுடன்..'

- கற்பகம் யசோதர


காலனித்துவம் என்பது தனியே நில ஆக்கிரமிப்புடன் மட்டும் பார்க்கப்பட முடியாதது. மூன்றாமுலக நாடுகளின் அனைத்து வாழ்வு முறைகளும் காலனித்துவ காலத்தில் மாற்றியமைக்கப்பட்டன. ஆங்காங்கே உதிரிகளாக இயற்கையுடன் வாழ்ந்து கொண்டிருந்த மூன்றாமுலக மக்கள் ஒன்றிணைக்கப்பட்டு 'தேசம்' என்னும் கருத்தியலுக்குள்ளும் அதன் முகாமைத்துவத்திற்குள்ளும் அடிமைப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் படிப்படியாக தம் வாழ்முறைகளையும் அறிவுப்பாரம்பரியத்தையும் இழந்து ஐரோப்பியர்களாக மாறிப்போனார்கள் - ஐரோப்பியர்களாக மாற்றப்பட்டார்கள். காலனித்துவ போராட்டங்கள் பெரும்பாலும் தந்தைமை நோக்கில் நிகழ்த்தப்பட்டவை. பின்காலனியச் சிந்தனைக்கு ஊன்றுகோலாக இருந்த ஃபிரான்ஸ் ஃபனான் இனது கருத்துக்களை ஐரோப்பிய காலனித்துவம் என்பது 'அந்நிய ஆண்களது' நில ஆக்கிரமிப்பு எதிரானது என்ற அளவில் மட்டுப்படுத்திவிட முடியும். ஆக்கிரமிப்பில் இருந்தான விடுதலைக்காக ஆண்களை நோக்கிய பார்வையாகவே கருதவேண்டியுள்ளது. பின்காலனியச் சிந்தனையின் பிறிதொரு முக்கியமான கருத்தாளர் எட்வார்ட் சைட் ஆவார். சைட் இனது கருத்தியலை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் மீதான பாலஸ்தீனர்களின் துயரம் - துயரத்தில் இருந்தும் நில ஆக்கிரமிப்பில் இருந்துமான விடுதலை என்பதாக நோக்க முடிகின்றது. எட்வார்ட் சைட் இனது மேற்கிற்கு எதிரான 'கீழைத்தேயவாதக்' கருதுகோள் ஒருவகையில் 'ஐரோப்பிய ஆண்களுக்கு' எதிரான 'கீழைத்தேய ஆண்களது' கருத்தாகப் பார்க்கக்கூடியது. நிலம் என்பதைப் பெண்ணுடனும் ஆக்கிரமிப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை ஆண்களுடனும் இணைத்துப் பார்க்கும் போது 'நிலம்' போராட்டங்களில் மௌனமாகவே இருக்கின்றது. நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக 'நிலம்' இன் குரலை நாம் ஆண் பிரதிகளில் இருந்து மீள்வாசிப்புச் செய்ய வேண்டிய காலத்தில் இருக்கின்றோம். நிலத்தின் மௌனம் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இவ்விடத்தில் காந்தியை மீள்வாசிப்புச் செய்ய வேண்டியுள்ளது.

காந்தி தன்னை ஆணாக உணர்வதைத் தவிர்த்தார். அவர் தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்தார் - பெண்ணாகப் பாவனை செய்து கொண்டார். அது மட்டுமல்லாது முதலீட்டியத்தின் மையப்பண்பான நுகர்வுக்கலாச்சாரத்திற்கு காந்தி எதிர்ப்புக் குறியீடாக இருந்தார். முதலீட்டியமும் சந்தை தொடர்பான கலாச்சாரமும் தந்தைமை நோக்கிலான பொருளாதார வெளிப்பாடுகளாகக் கருதப்படுகின்றது. காந்தியின் அரசியல் இதன் சகல அம்சங்களையும் எதிர்த்தது. காந்தியின் அரசியலை நாம் மேலும் விரிவாக்க முடியும். காந்தியின் அரசியல் காலனித்துவ எதிர்ப்பு, தந்தைமை ஆதிக்க எதிர்ப்பு, சூழலியல் மற்றும் வளங்கள் மீதான சுரண்டுலுக்கான எதிர்ப்பு, பால்நிலை சார் சமத்துவம், இயற்கையுடன் இணைந்த வாழ்வு என்று பன்மைத்துவ ஆய்வு முகங்களை உடையது. 'காலனிய எதிர்ப்பு அரசியல், தீவிர சமூக சீர்திருத்தம் இல்லாமல் மிகக்குறுகிய எல்லையில் நின்றுவிடும் என்ற முன்னுணர்வு காந்திக்கு இருந்தது. அவர் இந்திய சமூகத்தைச் சீர்திருத்த விரும்பினார். இந்திய சமூகத்தில் வேரோடியிருந்த சாதியம், சமூகப் பாலின அசமத்துவம், வெள்ளையர் ஆதிக்கம் ஆகியவற்றை ஒருங்கே எதிர்த்தார். அந்த அளவில் பின்காலனித்துவப் பெண்ணியச் செயற்பாட்டின் அரசியல் தந்திரங்களை, பெண்கள் உரிமைக்கான போராட்ட முறைகளை அவர் முன்கூட்டியே எதிர்நோக்கினார் எனலாம். அவரது அகிம்சைக் கோட்பாடு பிரிட்டிஷாரைச் சமாளிக்கும் தந்திரம் மட்டுமல்ல. அது ஆண் - பெண்ணுக்கிடையான சமபகிர்வு கொண்ட உறவின் அடிப்படை. சுற்றுச்சூழலின் நீடித்த பாதுகாப்பு வளையம். உணவு, இயற்கை மருத்துவம் போன்றவற்றால் போன்றவற்றால் ஏற்படும் உடல்நலம் ஆகியவற்றின் அடிப்படையிலான கோட்பாடு ஆகும்.' - என்று கூறுகிறார் ரொபேர்ட் ஜே.சி.யங்

மேற்கூறிய விடயங்களில் இருந்து நாம் சில முடிவுகளுக்கு வந்தடைய முடியும். ஆக்கிரமிப்பு - தந்தைமை ஆதிக்கம் - சூழலியல் சமநிலையைக் குலைத்தல் - காலனித்துவம் - முதலீட்டியம் - நுகர்வுக் கலாச்சாரம் ஆகிய புள்ளிகளுக்கிடையேயான தெளிவான கோட்டை வரைய முடிகின்ற அதே நேரம் அதற்கு எதிர்த்திசையில் ஆக்கிரமிப்பு மீதான எதிர்ப்புணர்வு - பெண்ணியல்பு - தாவரங்கள், நிலம், நீர் இணைந்த சூழலியல் சமநிலை, காலனித்துவ எதிர்ப்பு மனநிலை - சமவுடமை - தேவைகளின் அளவான நுகர்வு போன்ற புள்ளிகள் இணைந்ததான கோடொன்றையும் வரைய முடிகின்றது. இப்போது எமக்குத் தெளிவான வரைபடம் ஒன்று கிடைத்திருக்கின்றது. இவ்விடத்தில் மேற்கூறிய புள்ளிகள் சார்ந்து அவதார் திரைப்படத்தை நோக்க முடியும். இப்புவிக்கோளத் தொகுதியின் தற்போதைய நகர்வு முதலாவதாகக் கூறிய விடயங்கள் சார்ந்தது - ஐரோப்பியர்களது செயற்பாடுகள் சார்ந்தது. நகர்வு இருந்திருக்க வேண்டிய விதம் இரண்டாவதாகக் குறிப்பிட்ட விடயங்கள் சார்ந்தது - காந்தி உருவாக்க விரும்பிய உலகு சார்ந்தது. அவதார் சித்தரிக்கும் நாவிகளின் பண்டோரா கிரகத்தொகுதி நாம் தவறவிட்ட உலகாகி எம்முன் விரிகின்றது. கண்டங்கள் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற நோக்கோடு ஐரோப்பியர்களது கப்பல்கள் கிளம்பிய நேரமே இப்புவித் தொகுதி தனக்கான அழகிய வாழ்வைத் தொலைத்த முதல் கணமாகின்றது.

பண்டோராவினதும் நாவிகளினதும் வழிகாட்டும் தெய்வமாக Eywa அறியப்படுகின்றாள். பண்டோராவின் சூழலியல் சமநிலையை Eywa வே பேணுவதாக நாவிகள் நம்புகின்றார்கள். புவியில் இருந்து சென்ற விஞ்ஞானிகளின் கருத்துப்படி பண்டோராவில் உள்ள அனைத்து உயிரினங்களும் Eywa வுடன் உயிரியல் ரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ளன. Pandora கிரகத்தொகுதி ஊதா மற்றும் நீலம் சேர்ந்த உயிரியல் இராசயனக் கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி Pandora வின் ஈர்ப்புவிசை பூமியைவிடக் குறைந்தது. சில இடங்களில் பாறைகள் அந்தரத்தில் காணப்படக்கூடியளவு குறைவான ஈர்ப்புவிசை கொண்டது. அத்துடன் வித்தியாசமான காந்தப்புலத்தால் சூழப்பட்டுள்ளது. Tree of Souls தங்களையும் Eywa பிணைத்து வைப்பதாகக் கருதுகின்றார்கள். Tree of Souls இல் இருந்து வெளிவரும் பூ போன்ற உருவமுடைய விதையை - Woodsprites ஐப் புனிதமாகக் கருதுகின்றார்கள். Hometree என்பதே நாவிகளின் வாழ்வியல் ஆதாரமாக உள்ளது. பெரியளவான இம்மரங்களுக்கு கீழே நாவிகள் வாழ்கின்றதாகக் கூறப்படுகின்றது. நாவிகளின் Omaticaya சமூகம் Omaticaya என்ற பெரிய மரத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றது. அண்ணளவாக 1,500 இற்கும் மேற்பட்ட நாவிகள் Omaticaya என்ற Hometree இல் வாழ்கின்றன. ஒவ்வொரு Hometree இன் அடியிலும் Unobtainium என்ற விலைமதிக்க முடியாத தாதுப்பொருள் சேமிக்கப்பட்டிருக்கின்றது. இதைக் கொள்ளையடிப்பதே பூமியில் இருந்து வந்த மனிதர்களது நோக்கம். Mo'at என்னும் பெண்ணே நாவிகளின் ஆத்மீக ரீதியான தலைவராகச் செயற்படுகின்றார். இவரை தமது தாய்த்தெய்வமான Eywa விற்கிடையிலான பாலமாக நாவிகள் கருதுகின்றார்கள். இவரது கணவரே Omaticaya இன் தலைவர். இவர்களது மகளே Neytiri. Omaticaya சமூகத்தின் இளவரசி.

நாவிகள் மீதான ஆக்கிரமிப்பாளர்களான மனிதர்களுக்கு எதிரான போரில் நாவிகளுக்கு உதவியவர்கள் அடையாளம் சார்ந்து முக்கியமானவர்கள். ஒருவர் ஊனமானவர் Jake Sully. மற்றையவர் பெண் விஞ்ஞானி Dr. Grace Augustine. Dr. Grace Augustine மனிதர்களை விட தாவரங்களை அதிகம் விரும்புபவர் எனக்குறிப்பிடப்படுகின்றது. உண்மையில் ஆக்கிரமிப்பு மனநிலையில் இருந்து - தந்தைமை ஆதிக்க மனநிலையில் இருந்து விலகியவர்களே நாவிகளுக்கு உதவினார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

நாவிகள் உலகம் மனிதர்களது கையை விட்டுப் போன உலகத்தை எமக்கெடுத்தியம்புகின்றது. முக்கியமாக ஐரோப்பியர்கள் ஐரோப்பா அல்லாத பிறதேசங்களில் கண்டடைந்த மக்களையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் அவர்களுக்கு ஐரோப்பியர்கள் செய்த கொடுமைகளையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது. இயற்கையுடன் ஒன்றிய - தேவைக்கு அதிகமற்ற நுகர்வுடன் கூடிய வாழ்வு முறையில் போட்டிகள் இருக்கவில்லை. சமத்துவநிலை பேணப்பட்டிருக்கின்றது. நாவிகளது வாழ்வும் பண்டோராவின் அமைப்பும் தற்கால வாழ்வினதும் ஐரோப்பிய மையக்கருத்தியலினதும் அதன் தொடர்ச்சியினதும் எதிர்ப்பாகிக் குறியீடாகின்றது. பண்டோரா உயிர்த்தொகுதி முன்வைக்கும் வாழ்வு முறை கீழைத்தேய மக்களுக்கு அவர்களது மூதாதையருக்கு நெருக்கமாக இருந்திருக்கின்றது. இயற்கையுடன் ஒன்றிய வாழ்வும் கட்டுப்படுத்தப்பட்ட நுகர்வுக் கலாச்சாரமும் இயற்கை வழிபாடும் பெண்தெய்வங்கள் மீதான முதன்மைப்படுத்தலும் இதையே கூறுகின்றன. எமது மூதாதையரது தொன்மங்கள் மீதான மீள்வாசிப்பு நாம் செல்லவேண்டிய பாதையை இலகுபடுத்தும் என நிச்சயமாகவே நம்பலாம். அவ்வாசிப்பில் நாம் நிச்சயமாக Hometree ஐயும் Eywa வையும் Neytiri சந்திக்க முடியும்.


"The sky people have sent us a message,
That they can take whatever they want, and no one can stop them.

Well, we will send them a message.

You ride out as fast as the wind will carry you.

You tell the other clans to come.

You tell them Toruk Makto calls to them!

That you fly now, with me! My brothers! Sisters!

And we will show the sky people,

That they cannot take whatever they want!

And that this, this is our land!"

- Neytiri, Omaticaya Clan, Pandora

(முடிந்தது.)


No comments:

Post a Comment

Blog Archive

Statcounter