வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 27, 2009

அவதார் (Avatar) - 1

கடந்த வாரத்தில் ஜேம்ஸ் கெமரூன் இன் 'அவதார் (Avatar)' திரைப்படம் உலகமெங்கும் திரையிடப்பட்டது. வெகுஜன சினிமாவின் இயக்குநர்களில் கெமரூன் முக்கியமானவராகையால் அவதார் திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. பிரமிப்பூட்டும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால் அவதார் திரைப்படத்தின் தொழில்நுட்பத்தை முன்வைத்து பலவிதமான விமர்சனங்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாது தமிழிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தொழில்நுட்பத்தையும் பிரமாண்டத்தையும் மையப்படுத்தி அவதார் 'அம்புலிமாமா' ரகக் கதை என்ற கருத்தே பல இடங்களிலும் கூறப்படுகின்றது. ஜெயமோகன் மாத்திரம் அதன் பிறிதொரு பரிணாமம் சார்ந்து சிலவிடயங்களைக் கூறியிருந்தார். ஆயினும் ஜெயமோகன் மேலதிகமாகப் பலவிடயங்களைக் கூறியிருக்கலாம். 'ஐரோப்பமைய வாதம்' என்னும் கருதுகோளைத்தாண்டிப் பலவாசிப்புக்களை அவதார் இல் இருந்து மேற்கொள்ள முடியும் என்று தோன்றுகின்றது.

இன்று சூழலியல் நெருக்கடிகள் கவனம்பெறத் தொடங்கியுள்ளன. இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை வலுப்படுத்தும் நோக்கிலான கருத்தியல்கள் மேன்மைபெற்றுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் இத்திரைப்படம் வெளிவந்திருக்கின்றது. இத்திரைப்படம் ஒற்றைவாசிப்பிற்கு உட்படுவது தவிர்க்கப்பட வேண்டும். பன்முக வாசிப்பை மேற்கொள்வதற்கான அனைத்துவெளிகளையும் இத்திரைப்படம் கொண்டுள்ளது. உதாரணமாக ஐரோப்ப மையவாதம் - காலனித்துவம் - பின்காலனித்துவம் என்னும் தொடர்ச்சியில் இத்திரைப்படத்தை வாசிக்க முடியும். அவ்வாறே ஆக்கிரமிப்பு - ஏகாதிபத்தியம் என்னும் தொடர்ச்சியிலும், சூழலியல் - இயற்கை வழிபாடு என்னும் தொடர்ர்சியிலும் தந்தைமைச் சமூகம் - சூழலியல் பெண்ணியம் என்னும் தொடர்ச்சியிலுமென பலதளங்களில் அவதாரை முன்வைத்து வாசிப்புக்களை மேற்கொள்ள முடியும்.

அவதார் இன் கதைச்சுருக்கத்தைப் பார்ப்போமேயானால், இக்கதை 2154 ஆம் ஆண்டளவில் Pandora என்னும் கிரகத்தில் நிகழ்கின்றது. அங்கே 'நாவி' என்ற மக்கள்வகையினர் வாழ்கின்றார்கள். நாவிகள் மனிதர்களை விட உயரமானவர்கள் மட்டுமல்லாது கூரிய அறிவுத்திறன் கொண்டவர்கள். அதுமட்டுமல்லாது இயற்கையுடனான அவர்களது வாழ்வு அவர்களுக்கு இயற்கையுடனான ஊடாட்டத்தை அதிகப்படுத்தியிருக்கின்றது. மனிதர்களுடன் ஒப்பிடும் போது இயற்கையுடனான அவர்களது தொடர்புகொள்ளும் திறன் பலமடங்கு என்று கூறப்படுகின்றது. Pandora என்னும் கிரகமே அனைத்துடனும் தொடர்பாடக்கூடிய கட்டமைப்பாக இயங்குகின்றது. உயிரியல் ரீதியாக அனைத்தும் சிந்தனைத்திறன் மிக்கதாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றது. நீலநிற மேனி கொண்ட நாவிகள் இயற்கையையும் பூமியையும் குறியீடுகளாக்கித் தாய்த்தெய்வமாக வழிபடுகின்றார்கள்.

2154 அளவில் Pandora இன் சிலபகுதிகளைப் பூமியில் இருந்து சென்ற மனிதர்கள் ஆக்கிரமித்திருக்கின்றார்கள். அக்கிரகத்தில் உள்ள வளங்களைச் சுரண்டும் நோக்கில் நாவிகளைத் துரத்தியடிப்பதே மனிதர்களின் நோக்கமாக உள்ளது. அக்கிரகத்தில் மனிதர்களால் சுவாசிக்க முடியவில்லை. செயற்கை முறையிலேயே சுவாசிக்கின்றார்கள். ஆக்கிரமிக்கும் நோக்குடன் சென்ற மனிதர்கள் பிரமாண்டமான தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஆய்வுகூடங்களில் வாழ்கின்றார்கள். செயற்கையாக நாவிகள் உருவத்திலான உடல்களை உருவாக்கி அதை மனிதர்களின் மூளைகளை வைத்தே இயக்குகின்றார்கள். இதன்மூலம் நாவிகளுடன் ஊடாடி அவர்களைப்பற்றி அறிந்து கொள்வது மனிதர்களின் முக்கிய நோக்கமாகின்றது. அதன்மூலம் நாவிகளை வென்று வளங்களைச் சூறையாடுவதை இறுதி இலக்காகக் கொண்டுள்ளார்கள். ஆக்கிரமிப்பை நோக்கமாகக் கொண்ட மனிதர்கள் குழுவில் ஏராளமான ஆயுதங்களைக் கொண்ட படையணிகளும் அதற்கான ஆயத்தப்படுத்தல் மேற்கொள்ளும் நோக்கிலான ஆய்வுகூடமும் காணப்படுகின்றது. Colonel Miles Quaritch என்பவர் பாதுகாப்பு படையணிகளின் தலைவராக இருக்கின்றார். Dr. Grace Augustine என்னும் பெண் ஆய்வாளர் ஆய்வுகூடத்தின் தலைமைப்பொறுப்பில் இருக்கின்றார். நாவிகள் தொடர்பாக அவர்களது உயிரியல் பண்புகள் சார்ந்த ஆய்வுகளே இவரது முக்கிய கருப்பொருளாகின்றது.

Jake Sully என்னும் போலியோவால் பாதிக்கப்பட்டுப் பூமியில் வாழ்ந்துவரும் இளைஞனின் சகோதரன் பண்டோராவில் இருக்கும் ஆய்வுகூடத்தில் பணியாற்றியிருக்கின்றான். அவன் இறந்து விட்டதனால் அவனது மரபணுக்களைவைத்து உருவாக்கப்பட்ட நாவி உடலை இயக்குவதற்காக Jake Sully பூமில் இருந்து பண்டோரா ஆய்வுகூடத்திற்கு வருகின்றான். நாவி உருவத்தில் பண்டோராக் காடுகளுக்குச் சென்ற Jake Sully ஐ நாவிகளின் இளவரசி Neytiri காப்பாற்றுகின்றாள். அதன் மூலம் Jake Sully இற்கும் Neytiri உறவுவலுப்படுகின்றது. இவ்வுறவின் மூலம் நாவிகளைப் பற்றிய தகவல்களை அறிந்து Colonel Miles Quaritch இற்கு Jake Sully சொல்லிக்கொண்டிருக்கின்றார். நாவிகளைப் பற்றி அறியமுடியாமல் இருந்த மனிதர்களுக்கு Jake Sully இன் தகவல்கள் பெருமளவில் உதவிபுரிகின்றன. மனிதர்களுக்குத் தேவையான கனிமம் நாவிகளின் 'தாய்வீடு' என்னும் மரத்தின் அடியில் காணப்படுகின்றது. அதை நாவிகள் எப்போதுமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை Jake Sully, Colonel Miles Quaritch இற்குத் தெளிவுபடுத்துகின்றார். Colonel Miles Quaritch அதைச் செவிமடுக்காமல் நாவிகளின் ஆதாரமான அம்மரத்தை அழிக்கின்றார். ஒருகட்டத்தில் Jake Sully நாவிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதை olonel Miles Quaritch அறிந்து கொள்கின்றார். இதன்பின்பு Jake Sully சிறைவைக்கப்படுகின்றார். அதன்பின்பு அச்சிறையில் இருந்து தப்பும் Jake Sully யும் Dr. Grace Augustine உம் நாவிகளுடன் சேர்ந்து மனிதர்களை வெற்றிகொள்வதே அவதார் திரைப்படத்தின் சுருக்கமான கதையாகும்.

அவதார் திரைக்கதை மிக எளிய கதையாகத் தோன்றுகின்ற போதிலும் இக்கதையை நாம் பல்வேறு கோணங்களில் வாசிக்க முடியும். ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக, இயற்கை சார்பாக, காலத்தினித்துவ எதிர்ப்பு சார்பாக, தந்தைமைச் சமூகம் மீதான எதிர்ப்புணர்வு சார்பாக, சூழலியல் பெண்ணியம் சார்பாக, கீழைத்தேய வாதம் சார்பாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு சார்பாக என்பதாகப் பல்வேறு தளங்களில் குறியீட்டு ரீதியாக அணுகமுடியும். அவ்வகை வாசிப்புக்களை இனிவரும் பகுதிகளில் பார்க்கலாம்.

(இன்னும் வரும்)


1 comment:

  1. மிக நுட்பமாக எழுதப்பட்ட விமர்சனம் . சமகால நிலைகளை நன்றாக குறிப்பிட்டுளிர்கள். நன்றியும் பாராட்டுக்களும்.
    தொடருங்கள் . KRISH

    ReplyDelete

Blog Archive

Statcounter